Wednesday, April 2, 2014

நீங்கள் வலைதளங்களில் மூழ்கிக் கிடப்பவரா?

சுன்னத்தான இல்லறம்: 

இன்று மேற்குலகில் ஒரு விஷயம் மிக ஆழமாக விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப் பட்டிருக்கின்றது.

அந்த விஷயம் என்ன தெரியுமா?

அது தான் DISTRACTION எனும் கவனச் சிதறல்!

இது எதனால் ஏற்படுகின்றது?

நமது கம்ப்யூட்டர் மற்றும் அது வழங்கும் இணைய தள வசதிகளால் ஒரு விதமான கவனச் சிதறலுக்கு நாம் ஆளாகி இருக்கின்றோம் என்கிறார்கள் வல்லுனர்கள்.


கம்ப்யூட்டரும், இணைய தள வசதியும் நமக்கு வழங்கி இருக்கின்ற வசதிகள் எதனையும் நாம் மறுத்திடவில்லை!

ஆனால் அதே நேரத்தில் – எந்த ஒரு பயனும் இல்லாமல் எந்த ஒரு குறிப்பிட்ட வேலைக்கு என்றில்லாமல் கம்ப்யூட்டருக்கு முன்னால் அமர்ந்து கொண்டு (இப்போது லேப்டாப், ஐபாட், ஐஃபோன் – இவையும் அடங்கும்) மணிக்கணக்கில் – உணர்வற்றுப் போய் – நேரத்தை நம்மில் பலர் வீணடித்துக் கொண்டிருக்கின்றோமே – இது ஏற்படுத்தியிருக்கும் நவீன நோய் தான் DISTRACTION – கவனச் சிதறல் என்கிறார்கள்.

அதனை நாம் நோய் என்று சொல்வதற்குக் காரணம் இருக்கின்றது.

சற்றே கவனமாக இதனைப் படியுங்கள்:

நமது மூளை இருக்கின்றதே – அது ஒரு அற்புதமான மனித உறுப்பு. அதன் அற்புதங்களில் இரண்டை மட்டும் இங்கே பார்ப்போம்.

ஒன்று:

மனிதனின் இதயமும் மனிதனின் மூளையும் – அவைகளின் இயல்பிலேயே மற்றவர்களுடன் நல்லுறவு வைத்துக் கொள்ளும் தன்மையைப் பெற்றிருக்கின்றன! அப்படித்தான் அவைகளை வடிவமைத்திருக்கின்றான் வல்லோன் அல்லாஹ்! ”we are wired to connect with others” என்கிறது neuroscience. அதாவது மூளை நரம்பியல்.

இரண்டு:

மனித மூளை – தனது மூளை நரம்புகளை (neurons) வைத்து பல நுணுக்கமான இணைப்புகளைத் தனக்குள் ஏற்படுத்திக் கொள்கின்றது.

சற்றே புரியுமாறு சொல்வோம். வீடு ஒன்றைக் கட்டுகின்றோம். அதில் மின் இணைப்புகளை நம் வசதிக்கு ஏற்றவாறு அமைத்துக் கொள்கிறோம். பின்னர் அந்த இணைப்புகளின் அமைப்பினை வைத்தே நமது வசதிக்கேற்றவாறு மின்சாரத்தை நாம் பயன்படுத்திக் கொள்கிறோம். அது போலத்தான் நமது மூளை நரம்புகள் தமக்குள்ளே ஏற்படுத்திக் கொள்ளும் இணைப்புகளும்.

அதே நேரத்தில் – மனித மூளை – அதனை நாம் பயன்படுத்தும் விதத்துக்குத் தகுந்தாற்போல் தன்னுடைய நரம்பியல் இணைப்புகளை நெகிழ்ச்சியுடன் (neural plasticity) மாற்றிக் கொள்ளும் தன்மையும் அதற்கு உண்டு!

இப்போது வலைதளங்களில் அளவுக்கு அதிகமாகத் தங்களின் கவனத்தையும் நேரத்தையும் செலவழிப்பவர்களின் நிலை என்ன என்று பார்ப்போம்.

தங்கள் முழுக் கவனத்தையும் வலையிலே தொலைத்து விட்டு நிற்கும் ஒரு மனிதனின் மூளை – தனது நரம்பியல் இணைப்புகளையே மாற்றிக் கொள்கிறதாம்! அதுவும் அதி விரைவாக! Our brain maps are rapidly changing!

இதன் தவிர்க்க முடியாத மாபெரும் விளைவு என்ன தெரியுமா?

செய்கின்ற ஒன்றையே திரும்பவும் திரும்பவும் செய்திடத் தூண்டுகின்ற ஒரு கெட்ட பழக்கம் (compulsion)

இயல்பான மனித வாழ்க்கையிலிருந்து திசை திரும்பி விடுதல் (distraction from mainstream life)

மாய வலைக்கு வெளியே, மற்றவர்களுடன் நாம் நேருக்கு நேர் நல்ல முறையில் பழகுவதற்குத் தேவைப்படும் அழகிய திறமைகள் (relationship skills) எல்லாம் அடிபட்டுப் போய்விடுதல்!

எந்த ஒன்றையும் குறித்து தெளிவாக சிந்திக்க இயலாத குழப்பமான மனநிலை (scattered thinking)

முடிவெடுக்கும் திறனில் தெளிவற்ற நிலை (difficulties in making good decisions)

ஆம்! நமக்கு பல்வேறு “வசதிகளை” அள்ளித்தந்த அதே வலை தான் இப்படிப்பட்ட பின் விளைவுகளையும் சேர்த்தே நமக்கு வழங்கியிருக்கின்றது!

அதீதமான மின்னணுத் தொடர்பு சாதனங்களைச் சார்ந்து தங்களை அதற்கு அடிமைப்படுத்திக் கொள்பவர்கள் – மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு தங்களின் உறவுகளை செம்மைப்படுத்திக் கொள்ளும் திறனை இழந்து கொண்டிருக்கின்றார்கள் – அவர்களை அறியாமலேயே!

இதன் பாதிப்பு குடும்பத்துக்குள்ளேயே எனில் கணவன் மனைவி உறவு என்னவாகும்?

சான்று ஒன்றுடன் விளக்குவோம்.

சற்று கற்பனை செய்து கொள்ளுங்கள். ஒரு கணவன் - அவர் எப்போது பார்த்தாலும் வலைதளத்துக்கு உள்ளேயே வாழ்ந்து கொண்டிருப்பவர் என்று வைத்துக் கொள்வோம்.

அவரது மனைவி ஏதோ ஒன்றை (ஏங்க! வரும்போது குழந்தைக்கு “இது” வாங்கிட்டு வாங்க!) வாங்கி வரச் சொல்லியிருப்பார். அது “எது” என்று அவர் நினைவில் பதிந்தே இருக்காது! அவர் "தேமே" என்று வந்து நிற்பார் வெறுங்கையுடன். வருமே கோபம் அவரது மனைவிக்கு!

அது போலவே - குழந்தைகளை பள்ளியிலிருந்து வீட்டுக்கு அழைத்து வந்து விடுங்கள் என்று சொல்வார் மனைவி. OK என்று மனைவியிடம் போனில் சொல்வார் கணவர். ஆனால் கவனம் இருந்திருக்காது. வீட்டுக்கு வந்து சேர்வார். குழந்தைகளின் நிலைமை?

இது ஒரு சிறிய“வாக்குறுதி” (promise) தான்! இதனை கணவன் மறந்து விடும்போது கணவனின் சொற்களுக்கு என்ன மதிப்பு தருவாள் மனைவி? தன் மறதியை கணவன் நியாயப்படுத்தலாம். ஆனால் கணவன் தன் மனைவியின் “நம்பிக்கையை” (trust –அமானத்) இழந்து விடுவார்!

நாம் சொன்ன உதாரணங்கள் நமக்குச் சாதரணமாகத் தோன்றலாம். அடிப்படையான விஷயத்தையே எடுத்துக் கொள்வோமே. கணவன் மனைவி பாலியலின் நிலைமை (sexual intimacy) என்னவாகும்? அடி வாங்கியிருக்கின்றது என்பது தான் அதிர்ச்சித் தகவல்! ஏனெனில் தாம்பத்திய உறவுக்கும் கூட கவனக் குவிப்பு மிக மிக அவசியமாம்!

இவ்வளவு விளைவுகளுக்கும் அடிப்படைக் காரணம் வலை உலகம் நமக்களித்த distraction தான்!

சகோதரர்களைக் கேட்டுக் கொள்வது:

நீங்கள் வலைதளங்களில் மூழ்கிக் கிடக்கின்றீர்களா?

உங்கள் மனைவி உங்களுடன் அடிக்கடி வாக்குவாதங்களில் ஈடுபடுகின்றாரா?

உங்களுடைய தாம்பத்திய வாழ்வில் தொய்வு ஏற்பட்டிருக்கின்றதா?

இவை எல்லாவற்றுக்கும் உங்கள் பதில் “ஆம்!” எனில் உங்களுக்கு எமது ஆலோசனைகள்:

வலை உலகத்தை விட்டு சற்றே வெளியே வாருங்கள்!

மனித உறவுகளை பலப்படுத்திக் கொள்ளுங்கள்! குறிப்பாக குடும்ப உறவுகளை!

மனைவியுடனும், குழந்தைகளுடனும் சற்று அதிக நேரம் செலவிட முயற்சி செய்யுங்கள்!

நபிமொழி ஒன்றைக் கொண்டு நிறைவு செய்வோம்:

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ‘விடைபெறும் ஹஜ்’ஜின்போது ஆற்றிய பேருரையில், “பெண்கள் விஷயத்தில் அல்லாஹ்வை அஞ்சி நடந்துகொள்ளுங்கள். அல்லாஹ்விடம் உடன்படிக்கை செய்தே அவர்களைக் கரம் பிடித்துள்ளீர்கள்; அல்லாஹ்வின் ஆணையின் பேரிலேயே அவர்களின் கற்புக்கு உரிமை பெற்றுள்ளீர்கள்” என்று கூறினார்கள். (அபூதாவூத், இப்னு மாஜா)

No comments:

Post a Comment