Thursday, December 26, 2013

மனைவி ஒரு பொக்கிஷம்! – பயிற்சி பற்றிய கருத்துகள்

காரைக்கால் IIWF சார்பாக நடை பெற்ற - மனைவி ஒரு பொக்கிஷம்! – பயிற்சி முகாமில் கலந்து கொண்டோர் கருத்துக்கள்:

அல்ஹம்துலில்லாஹ்! எங்கள் வாழ்க்கைக்குத் தேவையான எஸென்ஸ். உள் மனதில் உள்ள விஷயங்களை அசைபோடச் செய்தீர்கள்; சில விஷயங்கள் எங்கள் வாழ்க்கையின் பிரதிபலிப்பு. சில விஷயங்கள் என் எதிர்கால் லட்சியம்; 15 வருட என் திருமண வாழ்க்கையை திரும்பிப் பார்க்க வைத்தது. சே! இத்தனை வருடம் வீணடித்து விட்டோமோ என்று வருந்துகிறேன்; நான் யார் என்பதை சில கேள்விகளில் என்னை உணர வைத்தீர்கள். -  ஒரு சகோதரி


இது போன்ற நிகழ்ச்சிகளை அடிக்கடி நடத்துவதின் மூலம் குடும்பத்தை சீராக நடத்த உதவும். எல்லா பெண்களும் இது குறித்து மற்றவரிடம் ஆலோசனை கேட்க மாட்டார்கள். அதனால் இது போன்ற நிகழ்ச்சி அவசியம். இந்தப் பயிற்சி வகுப்பில் எனக்குப் பிடித்த விஷயம்: சொல்வதை உணர்வு பூர்வமாக சொன்னது; சொல்வதோடு நில்லாமல் செயல் படுத்தத் தூண்டிய விதம்;  அல்ஹம்துலில்லாஹ்! நிறைவாக இருந்தது! – ஒரு சகோதரி

இது எனக்கு சுய பரிசோதனை போல் இருந்தது. இந்தப் பயிற்சி வகுப்பில் எனக்குப் பிடித்த விஷயம்: மிக எளிமையாக எங்களிடமிருந்து கேட்டு பதிலளித்தது. – ஒரு சகோதரி

Masha Allah, It is amazing, interesting and extra ordinary. I have gathered more information to make my married life more beautiful. Jazakallah – One sister

இல்லற வாழ்க்கை, கணவன் மனைவி உறவு முறை பற்றி இவ்வளவு விரிவாக யாரும் பேசியது இல்லை; அதை பற்றி பேசிய விதம் நிறைவாக இருந்தது. – ஒரு சகோதரி

இந்த வகுப்பு மிகவும் உபயோகமாக இருந்தது. திருமணத்தைப் பற்றியும் இல்லறத்தைப் பற்றியும் பல விஷயங்களை அறிந்து கொண்டோம். மென்மேலும் இத்தகைய வகுப்புகள் நடை பெற வேண்டும் என விரும்புகிறோம். – ஒரு சகோதரி

இந்த பயிற்சி வகுப்பில் எங்களை மனம் விட்டு பேச வைத்தது எங்களுக்கு மிகவும் பிடித்தது. – ஒரு சகோதரி

அல்ஹம்துலில்லாஹ்! பெண் சமுதாயத்துக்கு ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தக் கூடிய நிகழ்ச்சியாக உள்ளது. எப்போதும் சொற்பொழிவுகளுக்குச் செல்வோம், சொல்வதை கேட்போம் என்றில்லாமல் எல்லோரும் சிந்திக்கும் விஷயம் மிகவும் பிடித்திருந்தது. – ஒரு சகோதரி

இது மிகவும் உபயோகமான ஒரு நிகழ்ச்சி.  இதன் மூலமாக நான் என் வாழ்க்கையை தீர்மானிக்க எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும் என்று புரிந்து கொண்டேன். அல்ஹம்துலில்லாஹ்! – ஒரு சகோதரி

இந்த பயிற்சி எங்களுக்கும் எங்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் நிறைய பயன் அளித்தது; மாஷா அல்லாஹ். இது போன்ற நிகழ்ச்சியில் எனது கணவர் கல்ந்து கொள்ள ஆசைப் படுகின்றேன். – ஒரு சகோதரி

இதில் பல நல்ல கருத்துக்கள் நிறைந்திருந்தன.  அல்ஹம்துலில்லாஹ்! இது போன்ற நிகழ்ச்சி அடிக்கடி நடக்க வேண்டும் என விரும்புகிறோம்.

The way you explain the topic was very effective and useful. – One sister

திருமண வாழ்க்கையைப் பற்றிய நல்ல விழிப்புணர்வு கிடைத்தது. – ஒரு சகோதரி

அனைத்தும் அருமை! இருவருக்கும் ஏற்படக்கூடிய பிரச்னைகள் பற்றிய தெளிவான விவரங்கள் கிடைத்தது. – ஒரு சகோதரி

நாம் அன்றாட வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டது மிகவும் பயனுள்ளதாக இருந்தது. – ஒரு சகோதரி

அல்ஹம்துலில்லாஹ்! மிக மிக பயனுள்ளதாக இருந்தது. எவ்வளவோ அறியாத நபர்கள் இருக்கிறார்கள். அனைவருக்கும் இந்த பயிற்சி வகுப்பு சென்றடைய வேண்டும். இதே போல் இன்னும் நமக்கு தெரியாத பல விஷயங்களை இன்ஷா அல்லாஹ் இந்த வகுப்பு மூலம் தெரிந்து கொண்டு பயனடைய அல்லாஹ் கிருபை செய்வானாக. ஆமீன். – ஒரு சகோதரி

இந்த கால கட்டத்திற்கு அவசியமான ஒரு பயிற்சி. மிகவும் பயனுள்ள பயிற்சி. நான் என்னை புரிந்து கொண்டேன், மாற்றிக் கொள்வேன் இன்ஷா அல்லாஹ். – ஒரு சகோதரி

இது போன்ற வகுப்புகள் பெண்களுக்கு மிகவும் பயனுள்ளவை. இதன் மூலம் தன்னைத் தானே சோதித்து ஆராய்ந்து கொள்ள ஒரு வழியாக உள்ளது. – ஒரு சகோதரி

அல்லாஹ்வின் கிருபையால் தங்களின் மூலம் பல தெளிவுகளைப் பெற்றுக் கொண்டேன். என் கணவனை புரிந்து கொள்ள உதவியாக இருந்தது இந்த வகுப்பு  – ஒரு சகோதரி

அல்லாஹ்வின் கிருபையால் மிகவும் நன்றாக இருந்தது. மனதில் இருந்த குழப்பத்திற்கு ஒரு தீர்வு கிடைத்தது. – ஒரு சகோதரி

Monday, December 23, 2013

பாவம் ஒரு பக்கம் பழி இன்னொரு பக்கம்!

சமையலறையில் கணவனும் மனைவியும்.

கணவனுக்கு இரவு உணவு பரிமாறுகிறார் மனைவி.

அப்படியே பேச்சுக் கொடுக்கிறார் கணவனிடம்.

பேசிக் கொண்டிருக்கும்போதே அடுப்பில் பால் பொங்கி வழியத் தொடங்குகிறது!

யார் தவறு?

அடடா, உங்க கிட்ட போய் பேசிக்கிட்டு இருந்தேனே?  தேவையா இது எனக்கு?

பாவம் ஒரு பக்கம் பழி இன்னொரு பக்கம் என்பது இது தானோ?

Saturday, December 21, 2013

மனைவியை மன்னியுங்கள்!

பணியாளரின் குற்றங்குறைகளையே ஒவ்வொரு நாளும் நாம் எழுபது தடவை மன்னித்திட வேண்டும் என்றால் - நமது மனைவியை ஒவ்வொரு நாளும் ஒரு சில தடவைகளேனும் நாம் மன்னித்திடக் கூடாதா? முடியாதா?

இதோ உமர் (ரலி) அவர்கள் கூறுவதைக் கேளுங்கள்:

ஒரு மனிதர் கலீஃபா உமர் (ரலி) அவர்களை சந்தித்து தன் மனைவியைப் பற்றி புகார் கொடுக்க வந்து கலீஃபா வீட்டு வாசலை அடைந்தார். வீட்டுக்குள்ளே கலீஃபாவின் மனைவி சப்தமிட்டுக் கொண்டிருந்தார். இதனால் அம்மனிதர் திரும்பிய போது கலீஃபா உமர் (ரலி) அவர்கள், அவரை அழைத்து விசாரித்து விட்டு கூறினார்கள்.

"என் மனைவி எனக்காக பல சேவைகள் செய்வதால் அவளை நான் மன்னித்து விடுகிறேன். என் வீட்டில் காவல்காரியாக இருக்கிறாள். என் துணிகளை துவைத்துப் போடுகின்ற வண்ணாத்தியாக இருக்கிறாள். என் குழந்தைகளுக்கு செவிலியராக இருக்கிறாள். சுவையாக சமைக்கும் சமையல்காரியாக இருக்கிறாள்.

எல்லாவற்றுக்கும் மேலாக என் உடல் வேட்கையை தணித்து, பாவமான வழிகளின் பக்கம் என்னைப் போக விடாது தடுக்கும் திரையாக, கேடயமாகத் திகழ்கிறாள். இவ்வாறு பற்பல வடிவங்களில் எனக்கு என் மனைவி பணி செய்வதால் அவள் செய்யும் தவறுகளை மன்னித்து விடுகிறேன். இதைக்கேட்ட அந்த மனிதர் நானும் அவ்வாறு நடந்து கொள்கிறேன்" என விடை பெற்றார். (நூல்: தன்பீஹுல் காஃபிலீன்)

மனைவியை மன்னிக்கும் தன்மை எப்போது வரும்?

மேற்கண்ட உமர் (ரலி) அவர்களின் அறிவுரையைப் பார்க்கும்போது - மனைவியின் நேர்மறையான (positive) விஷயங்களைக் கணக்கில் எடுத்துக் கொண்டால் - மன்னிக்கும் மனப்பான்மை தானாகவே ஊற்றெடுக்கும் என்பது புரிகிறது. உமர் (ரலி) அவர்களிடன் அறிவுரை பெற வந்தவரின் மன மாற்றத்துக்கு அதுவே காரணம்.    

மறுக்க வேண்டாம்!

நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்: "தன் உடலைக் கணவனுக்கு விலக்கி வைக்காமலிருப்பது ஒரு மனைவியின் கடமையாகும். அது சிறிய ஒட்டகப் பல்லக்கில் அமர்ந்திருந்தாலும் சரி. கடமையான நோன்பைத்தவிர. கணவனின் அனுமதியின்றி நோன்பு நோற்காதிருப்பதும் அவள் மீது கடமையாகும். அதாவது அவள் அவ்வாறு செய்தால் குற்றவாளி ஆவாள். அந்த நோன்பு அவளிடமிருந்து ஏற்றுக்கொள்ளப்படாது.


கணவனின் அனுமதி இல்லாமல் மனைவி அவனது வீட்டை விட்டு வெளியே செல்லக் கூடாது. அவள் அவ்வாறு செய்தால் அவள் பாவமன்னிப்பு கோரி திரும்பும் வரையில் அல்லாஹ்வும், வானவர்களும் சபித்துக் கொண்டே இருப்பார்கள். கணவன் ஓர் அநியாயக்காரனாக இருப்பினும் சரி." (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) - நூல்: அபூதாவூத்)

கணவனுக்கே முதல் இடம்!

அன்னை ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள். "பெண்களுக்கு அதிகமான கடமைகள் யார் மீது உள்ளன?" என நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்ட போது அவளது கணவனிடத்தில் என்றார்கள். நான் கேட்டேன், "ஆண்களுக்கு மிக அதிகமான கடமைகள் யார் மீது உள்ளன?". நபி (ஸல்) அவர்கள், "அவனது தாயிடம்" என்றார்கள். (நூல்: ஹாக்கிம்)


ஒரு முறை நபி (ஸல்) அவர்கள் "ஹுஸைன் இப்னு முஹ்ஸினின் தந்தை வழிச் சகோதரியிடம் "உமது கணவன் உமக்கு சுவர்க்கமாகவும் நரகமாகவும் இருக்கிறான்" என்றார்கள். (நூல்: அஹ்மத்)

பிரிவும் ஏக்கமும்

கலீஃபா உமர் (ரலி) அவர்கள் வழக்கம் போல் மக்களின் நிலைமைகளை அறிய இரவில் உலா வருகிறார்கள். அப்போது ஒரு பெண்மணி வீட்டுக்குள்ளிருந்து சோகமான ஒரு பாடலைப் பாடுகிறாள்.

"முற்றுலும் கருத்துச் சூழ்ந்திருக்கும் கும்மிருட்டு!
முற்றிலும் தனிமையான ஏக்கத்தில் நான்!
கூட்டுத் தோழன் இல்லாததால்
என் மனக்கூடு திறந்து நித்திரை பறந்து போனதே!


இறைவன் மீது ஆணையாக!
என் தேகம் வதைப்பட்டு தவிப்பதால்
அதன் பொருட்டு ஆடுகிறதே இக்கட்டில்!"

இக்கவிதையைக் கேட்ட கலீஃபா அவர்கள் மறுநாள் அப்பெண்ணைப் பற்றி விசாரித்தார்கள். "ஒரு போர் வீரரின் மனைவி" என்று அவர்களிடம் சொல்லப்பட்டது. தனது மகள் ஹஃப்ஸாவிடம் "கணவனை விட்டுப்பிரிந்து ஒரு பெண்ணால் எத்தனை நாட்கள் தனியாக பொறுமையுடன் இருக்க முடியும்? - என்று கேட்க - "அதிக பட்சம் நான்கு மாதங்கள் தான்" - என்று ஹள்ரத் ஹஃப்ஸா (ரலி) அவர்கள் வெட்கத்துடன் கூறினார்கள்.

உடனே "இறைப்பாதையில் போர்புரிய கள்ம் புகும் வீரன் தன் மனைவியைப் பிரிந்து நான்கு மாதங்களுக்குமேல் யுத்த் களத்தில் தங்கியிருக்கக் கூடாது" என கலீஃபா உமர் (ரலி) அவர்கள் கட்டளையிட்டார்கள்.

நெருங்குவது உறவுக்கு மட்டும் தானா?

சுன்னத்தான இல்லறம் - 5

அனஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: யூதர்கள் மாதவிடாய்க்காரியுடன் வீட்டில் சேர்ந்து அமர மாட்டார்கள், பருக மாட்டார்கள். இது பற்றி நபி (ஸல்) அவர்களிடமும் கூறப்பட்டது. அப்போது, ‘மாதவிடாய் பற்றி உம்மிடம் கேட்கின்றனர். அது தொல்லை தரும் தீட்டு ஆகும். எனவே மாதவிடாய் சமயத்தில் பெண்களை விட்டு விலகி இருங்கள்’ என்ற 2:222 வசனம் இறங்கியது. 

அதை நபி (ஸல்) அவர்கள் விளக்கும் போது, ‘உடலுறவைத் தவிர மற்ற அனைத்தையும் செய்து கொள்ளுங்கள்’ என்றார்கள். (நூல்கள்: முஸ்லிம், திர்மிதி, நஸயீ, இப்னுமாஜா, அபூதாவூது)

"மற்ற அனைத்தையும்" என்று எவ்வளவு அழகாக சொல்லித் தருகிறார்கள் - பார்த்தீர்களா?

கணவன் மனைவி என்பவர்கள் நெருக்கமான நண்பர்கள் என்பதை மறக்க வேண்டாம்!

ஊட்டி விடுங்கள்!

சுன்னத்தான இல்லறம் - 4 

“நீங்கள் அல்லாஹ்வின் திருப்தியை நாடிச் செலவழிக்கிற எதுவாயினும் அதற்குரிய பலன் உங்களுக்கு அளிக்கப்பட்டே தீரும். உங்கள் மனைவியின் வாயில் ஊட்டும் (ஒரு கவளம்) உணவாயினும் சரியே” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி)

பொதுவாகவே - கணவன் சாப்பிட்ட பின்னரே மனைவி சாப்பிடும் வழக்கத்தைப் பின்பற்றுகிறார்கள். இது தேவையில்லை! 

இதிலும் சுன்னத்தையும் கடைபிடிக்கலாம் தானே?

வணக்க வழிபாடுகளைக் கூட சேர்ந்து நிறைவேற்றலாமே!

சுன்னத்தான இல்லறம் - 3

‘ஒரே பாத்திரத்தில் இருந்து நானும் நபி (ஸல்) அவர்களும் உலூச் செய்யும் போது எனது கையும் ரஸுல் (ஸல்) அவர்களின் கையும் போட்டி போட்டுக் கொள்ளும்’ என்று உம்மு சுமைய்யா (ரளி) அறிவிக்கிறார்கள். (அபூதாவுது)

இதனை ஆங்கிலத்தில் - SPIRITUAL INTIMACY - என்கிறார்கள்!!
சேர்ந்து உளூ செய்யுங்கள்!

சேர்ந்து தொழுங்கள்!

சேர்ந்து குர் ஆன் ஓதுங்கள்!

சேர்ந்து மார்க்கம் குறித்து உரையாடுங்கள்!














சேர்ந்து குளிப்பதுண்டா?

சுன்னத்தான இல்லறம்: 

இந்த நபிமொழியைப் படியுங்கள்! செயல் படுத்துங்கள்!

நானும் அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்களும் குளிப்புக் கடமையானவர்களாக இருக்கும் போது ஒரே பாத்திரத்தில் சேர்ந்து குளிப்போம் என அன்னை ஆயிஷா (ரளி) அறிவிக்கிறார்கள். (அபூதாவுது, முஸ்லிம், நஸயீ, அஹ்மது)
"நீங்க வேற ஒன்னு! அதெல்லாம் கல்யாணமான புதுசுல தான்..." - என்கிறீர்களா?

நபியவர்கள் - தனது மனைவி ஆயிஷா அவர்களுடன் சேர்ந்து குளித்த போது நபியவர்களின் வயது ஐம்ப்துக்கும் மேல்!!

மனைவிக்கு செல்லப்பெயர் வைத்து விட்டீர்களா?

நபியவர்கள் தம் மனைவி ஆயிஷா (ரலி) அவர்கள் மீது தமக்கிருக்கும் அன்பை வெளிப்படுத்திக் காட்டிட சிறப்பான பெயரொன்றைச் சூட்டி அவர்களை அழைப்பார்கள்.

நீங்கள் உங்கள் மனைவிக்கும், உங்கள் மனைவி உங்களுக்கும் இவ்வாறு அழகிய பெயர்களை சூட்டி அவர்களை அழைத்து உங்கள் அன்பை பரஸ்பரம் வெளிப்படுத்திக் கொள்ளலாம் தானே!


உறவினர் ஒருவர். அவர் மனைவியின் பெயரில் வரும் ஒரு எழுத்தை வைத்து செல்லமாக - ஜி- என்று அழைப்பார். 

நீங்களும் இந்த சுன்னத்தைப் பின்பற்றலாம் தானே! 

Friday, December 20, 2013

மகிழ்ச்சி என்பது மலிவானதே!

வசதி வாய்ப்புகள் மகிழ்ச்சியைத் தந்து விடாது!

நபி ஸல் அவர்கள் குடும்பம் வசதி வாய்ப்பில் திளைத்ததில்லை. அறுபது நாட்களுக்கு வெறும் பேரிச்சையும், தண்ணீரும் தான். வசிப்பிடம் என்பது   கூரை வேயப்பட்ட வீடுகள் தான். தண்ணீருக்கு சில மைல் தூரமாவது கால் வலிக்க நடந்து போய் வந்திட வேண்டிய நிலை. திருகையில் மாவு அரைத்துத் தான் ரொட்டி; தொட்டுக் கொள்வதற்கு குழம்பு என்பது எப்போதாவது தான்!

ஆனால் அங்கே மகிழ்ச்சிக்குப் பங்கமில்லை!




மகிழ்ச்சிக்கு இலக்கணமே எளிமை தான்! எளிமை போனால் மகிழ்ச்சி போய்விடும்.

சொல்லப்போனால் - உள்ளதைக் கொண்டு போதுமாக்கிக் கொள்கின்ற கணவனும் மனைவியும் தான் மகிழ்ச்சிக் கடலில் நீந்திட முடியும். இருவரில் ஒருவர் அப்படிப்பட்டவராக இல்லையெனில் இல்வாழ்வில் முதலில் அடிபடுவது மகிழ்ச்சி தான்.

எனவே இஸ்லாத்தைப் பின்பற்றுகின்ற முஸ்லிம் இளைஞர்கள் தனக்கு மனைவியாக வரக்கூடியவருக்கு உள்ளதைக் கொண்டு போதுமாக்கிக் கொள்கின்ற தன்மை இருக்கின்றதா என்று பார்த்துக் கொள்தல் மிக அவசியம்.

தன் மகன் இஸ்மாயிலின் மனைவியாக வருபவருக்கு இந்த அருங்குணம் இருந்திட வேண்டும் என்று தந்தை இப்ராஹிம் அவர்கள் எதிர்பாத்திருக்கிறார்கள் என்பதை முன்னரே நாம் பார்த்தோம். அதை மீண்டும் இங்கே சுருக்கமாகப் பதிவு செய்வோம்,

இஸ்மாயீல் (அலை) அவர்கள் மணம் புரிந்துக் கொண்ட பின்பு ஒரு தடவை இப்ராஹிம் (அலை) அவர்கள்  மகனைச் சந்திக்க மக்காவுக்கு வந்திருந்தார்கள். அப்போது இஸ்மாயில் வீட்டில் இல்லை; அவரது மனைவியிடம் அவர்களுடைய வாழ்க்கை நிலைப் பற்றியும் பொருளாதாரம் பற்றியும் விசாரித்தார்கள். அதற்கு அவர் நாங்கள் மோசமான நிலையில் உள்ளோம். நாங்கள் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறோம் என்று இப்ராஹீம் (அலை) அவர்களிடம் முறையிட்டார். உடனே இப்ராஹீம் (அலை) அவர்கள் உன் கணவர் வந்தால் அவருக்கு (என் சார்பாக) சலாம் சொல்; அவரது நிலைப்படியை மாற்றி விடும்படி சொல் என்று சொன்னார்கள்.

இஸ்மாயீல் (அலை) அவர்கள் வீட்டிற்கு வந்தபோது - தந்தை வந்து விட்டுப்போன செய்தியையும், தந்தையின் அறிவுரையையும் கேட்டுத் தெரிந்து கொண்ட பிறகு  அந்த் மனைவியை விவாகரத்து செய்துவிட்டார்.

பின்னர் ஜுர்ஹும் குலத்தாரிலிருந்தே வேறொரு பெண்ணை மணமுடித்துக் கொண்டார்கள். பிறகு இப்ராஹீம் (அலை) மீண்டும் ஒரு தடவை அவர்களிடம் வந்தார்கள். அப்போதும் இஸ்மாயீல் (அலை) அவர்கள் வீட்டில் இல்லை.  இஸ்மாயீல் (அலை) அவர்களுடைய புதிய துணைவியாரிடம் இஸ்மாயீலைப் பற்றியும் அவர்களுடைய பொருளாதார நிலை குறித்தும் மற்ற நிலைமைகள் குறித்தும் அவரிடம் விசாரித்தார்கள். அதற்கு இஸ்மாயீலின் துணைவியார் நாஙகள் நலத்துடனும் வசதியுடனும் இருக்கிறோம் என்று சொல்லிவிட்டு உயர்ந்தவனும் வல்லவனுமாக அல்லாஹ்வைப் புகழ்ந்தார்…….. இப்ராஹீம் (அலை) அவர்கள் உன் கணவன் வந்தால் அவரது வீட்டு நிலைப்படியை உறுதிபடுத்தி வைக்கும்படி சொல் என்று சொல்லி விட்டுச் சென்றார்கள்.

இஸ்மாயீல் (அலை) அவர்கள் வீட்டிற்குத் திரும்பி வந்ததும், தந்தை இப்ராஹிம் (அலை) அவர்கள் வந்து சென்ற செய்தியையும் அவருடைய அறிவுரையையும் கேட்டுத் தெரிந்து கொண்டார்கள். வந்திருந்தது தம் தந்தை தான் என்று மனைவியிடம் சொல்லி விட்டு அவர் சொன்ன அந்த நிலைப்படி நீ தான் என்றும், உன்னை அப்படியே மனைவியாக வைத்துக் கொள்ளும்படி எனக்கு உத்திரவிட்டுள்ளார்கள் என்றும் விளக்கினார்கள்….. ( விரிவாகப் பார்த்திட புகாரி ஹதீஸ் எண் 3364)

இப்போது நமது சூழ்நிலையை எடுத்துக் கொள்வோம். நாம் இங்கே எடுத்துக் கொள்வது நடுத்தர நிலையில் உள்ள முஸ்லிம் குடும்பங்களைத் தான். உள்ளதைக் கொண்டு போதுமாக்கிக் கொள்வதற்குப் பதிலாக - ஒருவரைப் பார்த்து ஒருவர் போட்டி போட்டுக்கொண்டு - பொன்னையும் பொருளையும் சேர்த்து வைத்து அடுக்கி வைத்து அழகு பார்க்கின்ற நிலையைத்தான் வேதனையுடன் நாம் பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.

இந்நிலை மாறாமல் - மகிழ்ச்சியை குடும்பத்துக்குள் கொண்டு வர முடியாது.

பல கணவன்மார்கள் - விலை உயர்ந்த பொருட்களை வாங்கிக்கொடுப்பதன் மூலமே - தங்கள் மனைவியைத் திருப்திப் படுத்திட முடியும் என்று எண்ணுகிறார்கள்.

ஒரு தடவை - நாங்கள் ஹஜ் சமயத்தில் - மக்காவில் தங்கியிருந்தோம். அப்போது ஒரு கணவன் மனைவி இருவரும் ஜித்தாவுக்குச் சென்று தங்க வளையல்கள் சிலவற்றை வாங்கி வந்தனர். மறு நாளே அதன் டிசைன் நன்றாக இல்லை என்று யாரோ சொல்லிட - மீண்டும் ஜித்தா சென்று - டிசைனை மாற்றிக்கொண்டு வந்தார்கள். இந்த டிசைன் வளையல்களில் இலகுவாக அழுக்கு சேர்ந்து கொள்ளும் என்று எவரோ சொல்லிட மீண்டும் ஜித்தாவுக்குப் படையெடுப்பு! ஒவ்வொரு தடவையும் மாற்றும்போது எவ்வளவு பொருட்செலவு? ஆனால் மகிழ்ச்சி? அது எத்தனை நாட்களுக்கு?

ஆனால் - செலவே இன்றி உங்கள் மனைவிக்கு நீங்கள் மகிழ்ச்சி அளித்திடலாம்! சில நபிவழிகளை மட்டும் பின்பற்றினாலே போதும்.

கணவனும் மனைவியும் சேர்ந்து குளியுங்கள். என்ன செலவாகி விடும்?

எதிர்பாராமல் ஒரு முத்தம் கொடுங்கள். என்ன செலவாகி விடும்?

வீட்டுக்குள்ளேயே - ஓடிப்பிடித்து விளையாடுங்கள்! என்ன செலவாகி விடும்?  

வீட்டை விட்டு வெளியே காலாற நடந்து சென்று வாருங்கள் - உங்கள் மனைவியுடன்! என்ன செலவாகி விடும்?

வெளியூர்களுக்கு உங்கள் மனைவியையும் கூடவே அழைத்துச் செல்லுங்கள். பெரிய செலவு ஒன்றும் ஆகி விடாது! வழக்கமான வேலைகளில் இருந்து விடுதலை என்பதால் மனைவிக்கு ஆறுதலும் மகிழ்ச்சியும்!

அவ்வளவாக செலவு வைக்காத - சின்னச் சின்ன ஆசைகள் நிறைய இருக்கும் உங்கள் மனைவிக்கு. ஒரு முழம் பூ, தலைக்கு வைத்துக் கொள்ளக் கூடிய சின்னச் சின்ன அலங்காரப் பொருட்கள். உங்கள் மனைவிக்குப் பிடித்த ஒரு இனிப்புப் பண்டம்.....

மனைவிக்குச் செலவு செய்திடும்போது - அதன் " உயர்ந்த விலை" மகிழ்ச்சியை உறுதிப்படுத்திடாது! மாறாக அது சில சமயங்களில் சோகப்படுத்தி விடுவதும் உண்டு!

மாறாக நீங்கள் செலவு செய்வதன் பின்னணியில் உள்ள உங்களின் அன்பு, அக்கரை மற்றும் உங்கள் துணையின் உணர்வுகளுக்கு நீங்கள் அளிக்கும் மதிப்பு - இவைகளே மகிழ்ச்சியை உறுதிப்படுத்தும்.

இந்த அன்பையும், அக்கரையையும், மதிப்பையும் தான் அண்ணலாரின் குடும்ப அமைப்பில் நாம் காண்கிறோம்.

மகிழ்ச்சி என்பது மலிவானதே! 

திருமணத்துக்கு முன் வழிகாட்டும் ஆலோசனை – பகுதி 1


தாயின் மடியில் மகள்!

அது வரை வெகுளியாக துள்ளிக் குதித்து ஓடியாடி விளையாடிக் கொண்டிருந்த சிறுமி – இப்போது அவள் பருவமடைந்த ஒரு பெண்!

உடல் வளர்ச்சியிலே சில மாற்றங்கள். மனத்தளவிலும் பல மாற்றங்கள்.

அது வரை பெற்ற தாயிடம் அனைத்தையும் பேசித்தீர்த்து விடுகின்ற அவள் இப்போதெல்லாம் சற்றே அம்மாவிடமிருந்து விலகுகின்றாள். தாய்க்கு ஒன்றும் புரிவதில்லை! பேச்சு கொடுத்தாலும் ஒரு வரி பதில் தான்!


என்ன ஆயிற்று என் அன்பு மகளுக்கு என்று திகைக்கின்றாள் தாய்!

பொதுவாகவே தாய் மகள் உறவு என்பது ஒரு அற்புதமான உறவாகும். ஒரு தாய்க்கும் மகனுக்குமான உறவிலிருந்து முற்றிலும் வேறுபட்டது.

தாயும் ஒரு பெண். மகளும் ஒரு பெண். எனவே இருவருக்குமே பொதுவான இயல்புகள்!

பெண் உணர்வு மயமானவள். உணர்வுகளைப் புரிந்து கொள்பவள். உணர்வுகளுக்கு மொழி வடிவம் கொடுத்து பேசுவதில் சிறந்தவள். (ஆண்களுக்கு இது கஷ்டம்!). எனவே ஒருதாய் தன் மகளின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு நடப்பது எளிது!

அது போலவே பெண்கள் உணர்ச்சி வசப்பட்டு விடுபவர்கள். எது அவர்களுக்கு பலமோ அதுவே அவர்களின் பலவீனமும் கூட! அவர்கள் சில சமயங்களில் சிந்தனை ஏதுமின்றி உணர்ச்சி வசப்பட்டு ஏதாவது செய்து விடுவார்கள். ஆனால் பின்னர் வருந்துவார்கள்!

எனவே பருவமடைந்த தன் மகளுக்கு அவள் தன் உணர்வுகளைக் கையாள்வது குறித்து ஒரு தாயின் வழிகாட்டுதல் அவசியம்.

இப்படிப்பட்ட தாய்க்கு சில இங்கே சில குறிப்புகள்:

உங்கள் (அதாவது பெற்றோர்களின்) இல்லற வாழ்வு மகிழ்ச்சியாக விளங்கட்டும். மகளின் முன்னால் சண்டையிட வேண்டாம்.

குடும்பத்தில் இஸ்லாமிய சூழல் அவசியம். தொழுகை, குர்ஆனை ஓதுதல் மட்டுமல்ல; உடை விஷயம், ஹலால்- ஹராம் விஷயம் அனைத்திலும் மார்க்கத்தின் வழிகாட்டுதல்கள் பேணப்பட வேண்டும்.

குடும்பத்தில் நெகிழ்ச்சிக்கு இடமளிக்கின்ற கட்டுப்பாடுகள் அவசியம். பொருள்களை ஒழுங்கு படுத்தி வைத்தல் மற்றும் ‘இந்த நேரத்தில் இது தான்’ எனும் நேரக்கட்டுப்பாடு – இவை அனைத்தும் பேணப்பட வேண்டும்.

இப்படிப்பட்ட சூழலில் பருவமடைந்த ஒரு முஸ்லிம் பெண் வளர்ந்து வரும்போது அவளுக்கு ஒரு பிரச்னை! அது என்ன?

பருவமடைந்த பெண்களை நாம் படிக்க வைக்க பள்ளிக்கோ கல்லூரிக்கோ அனுப்பி வைக்கின்றோம். ஆனால் அங்கே வேறு ஒரு சூழ்நிலை. அங்கே மாணவர்களும் மாணவிகளும் சேர்ந்து படிக்கின்ற சூழல். பெரும்பாலான மாணவர்களும் மாணவிகளும் முஸ்லிம் அல்லாதவர்கள். இன்றைய பள்ளிக்கூடங்கள் மற்றும் கல்லூரிகளில் இஸ்லாத்தின் இயல்புகளுக்கு முற்றிலும் வேறுபட்ட ஒரு கலாச்சாரச் சூழல். அது மேற்கத்திய கலாச்சாரத்தைத் தழுவியதொரு புதிய கலாச்சாரம்.

அங்கே ஒரு மாணவனும் ஒரு மாணவியும் தனிமையில் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருப்பார்கள். இருவரும் சேர்ந்து தேநீர் அருந்த செல்வார்கள். அவர்கள் இருவரும் தங்களை “நண்பர்கள்” (boy friend-girl friend) என்று அறிமுகப்படுத்திக் கொள்வார்கள்.

இந்தச் சூழலில் ஒரு முஸ்லிம் பெண் தன்னைத் தனிமைப் படுத்திக் கொள்கிறாள். மற்ற மாணவிகளோ – “ஏன் ஒதுங்கிச் செல்கிறாய்? ஏங்களோடு கலந்து பழகிட வேண்டியது தானே? ஏன் தயக்கம்?” – என்று அழைப்பு விடுக்கின்றார்கள். இதற்குப் பெயர் தான் – peer pressure!

நமது முஸ்லிம் பெண்ணுக்கு சற்றே மனக்குழப்பம்!

இப்படிப்பட்ட ஆண்-பெண் கலந்துறவாடும் கலாச்சாரத்துக்கு இஸ்லாத்தில் அனுமதி இல்லை என்பது அவளுக்கு நன்றாகவே புரிகின்றது. ஆனால் அதே நேரத்தில் மற்ற மாணவிகளிடமிருந்து முற்றாக விலகிச் செல்வதையும் அவள் மனம் ஏற்க மறுக்கின்றது! தான் தனித்து விடப்பட்டதைப் போல உணர்கிறாள் அவள்.

இந்த மனப்போரட்டத்தை அவள் யாரிடம் பகிர்ந்து கொள்வாள்?

தன் தாயிடம் தானே!

இதோ ஓடி வருகின்றாள் நீங்கள் பெற்ற உங்கள் அருமை மகள்! தன் உள்ளத்தில் கிடப்பதை அள்ளிக் கொட்டுகின்றாள் அவள்.

தாயின் மடியில் மகள்!

அவளுக்கு நீங்கள் தரப்போவது என்ன?


என் தாய் என்னைப் புரிந்து கொள்வதே இல்லை!

பெண்கள் உணர்ச்சிமயமானவர்கள் என்பதை முன்னரேயே சொல்லியிருக்கின்றோம் அல்லவா?

உங்கள் பருவமடைந்த மகளும் அப்படித்தான் என்பதை முதலில் ஒரு தாய் அவசியம் புரிந்து கொண்டிருக்க வேண்டும்.

இது நாள் வரை நன்றாகப் பழகிக் கொண்டிருந்த ஒரு தோழி திடீரென்று தன்னுடன் பேசுவதை நிறுத்திக் கொண்டு விட்டால் உணர்ச்சிவசப்படுவாள் பெண்!

அக்கம்பக்கத்தில் உள்ள பெண்கள் எல்லாம் சேர்ந்து கூட்டாஞ்சோறு ஆக்கப்போகிறார்களாம்; சென்ற தடவை தன்னைச் சேர்த்துக் கொண்டவர்கள் இந்தத்தடவை என்னவோ தெரியவில்லை – சேர்த்துக் கொள்ளவில்லை என்றால் சோகமயமாகி விடுவாள் பெண்!

இது போன்ற தருணங்களில் தனது உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ள முதலில் ஒரு பெண் நாடுவது தன் தாயைத்தான்!

ஆனால் – ஒரு தாய் – தன் மகள் தன்னிடம் வந்து – தனது உள்ளக் கிடக்கைகளைப் பகிர்ந்து கொள்ள முற்படும்போது – “ஆமாம்! இதுவெல்லாம் ஒரு பிரச்னையா? அவர்கள் கிடக்கின்றார்கள்! நீ போய் வேறு வேலையைப் பார்!” என்று சொல்லி விட்டால்…..?

மகள் என்ன நினைப்பாள் தெரியுமா?

என் தாய் என்னைப் புரிந்து கொள்வதே இல்லை!

ஒரு தடவை, இரண்டு தடவை என்று தன் தாயிடம் ஒரு மகள் தன் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ள முற்படும்போது – தன் தாய் அதற்கு சரியாக செவி சாய்க்கவில்லை எனில் என்ன செய்வாள் மகள்?

தன் தாயிடம் பேசுவதைப் படிப்படியாக குறைத்துக் கொண்டு விடுவாள் மகள்!

இது தான் முதல் ஆபத்து!

எனவே தான் சொல்கின்றோம்: உங்கள் மகள் உங்களிடம் வந்து தன் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ள வரும்போது – உங்கள் தலைக்கு மேலே என்ன வேலை இருந்தாலும் – அவைகளை அப்படியே வைத்து விட்டு – உங்கள் மகளுக்காக நேரம் ஒதுக்கி அவள் சொல்வதை காது தாழ்த்தி முழுமையான கவனத்துடன் கேளுங்கள்!

இப்படி நேரம் ஒதுக்குவதை – Quality time – என்று சொல்கிறார்கள் உளவியல் அறிஞர்கள்.

அவர்கள் சொல்வதை நீங்கள் அக்கரையுடன் கேட்பது ஒன்றே கூடப் போதும் அவர்களுக்கு! அவர்களின் பிரச்னைகளுக்கு நீங்கள் தீர்வு சொல்லிட வேண்டிய அவசியம் கூட இல்லை! தன்னைப் புரிந்து கொள்கிறாளா தன் தாய் என்பதே மகளின் எதிர்பார்ப்பு!

தன் மகள் தன்னிடம் ஏதோ சொல்ல வருகின்றாள் என்றால் ஒரு தாய் என்ன செய்திட வேண்டும்; என்னவெல்லாம் செய்திடக்கூடாது என்பதைப் பார்ப்போம்.

தன் மகள் சொல்ல வருவதை தான் காது கொடுத்துக் கேட்கத் தான் தயார் என்பதை அவளுக்கு உணர்த்திட வேண்டும். அந்த சமயத்தில் அந்த ஒரு வேலையை விட வேறு எந்த வேலையும் தனக்கு முக்கியம் இல்லை என்பதை அவர்கள் புரிந்து கொள்ளச் செய்திட வேண்டும்.

தன் மகளுடன் உரையாடும் போது – அந்த உரையாடல் – ஒரு நெகிழ்ச்சியான சூழலாக (relaxed atmosphere) அமைந்திட வேண்டும். இருக்கமான சூழலாக மாற விட்டு விடக்கூடாது!

மகள் சொல்வதை உன்னிப்பாக கவனித்துக் கேட்டிட வேண்டும். (active listening);

அடிக்கடி குறுக்கிட்டு இடை மறித்துப் பேசிடக் கூடாது.

அதனை ஒரு விவாதமாக மாறிட அனுமதித்திடக் கூடாது.

அந்த சமயத்தில் போய் உங்கள் மகளின் குறைகளைச் சுட்டிக்காட்டிக் கொண்டிருக்கக் கூடாது.

மாறாக உங்கள் மகளின் நற்குணங்களைப் பாராட்டிட இந்த வாய்ப்பைப் பயன் படுத்திக் கொள்ள வேண்டும்.

நீங்கள் பேசிடும் போது மென்மையைக் கடைபிடிக்க வேண்டும்.

உங்கள் மகளின் உணர்வுகளைத் தாம் புரிந்து கொள்வதாக அவளிடம் தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு நீங்கள் தொடர்ந்து உங்கள் மகளிடம் ஒரு கருத்துப் பரிமாற்றத்தை (open communication) வைத்துக் கொள்தல் மிக மிக அவசியம். இது ஒன்றே உங்கள் மகள் தனது உணர்ச்சிப் போராட்டங்களைத் திறமையுடன் கையாள்வதற்கு மிகச் சிறந்த துணையாக அமைந்திடும்.

அப்படிப்பட்ட ஒரு தாய் தனக்கு இல்லாதபோது அல்லது தன் தாய் தனது உணர்வுகளை உதாசீனப்படுத்தும்போது ஒரு மகள் என்ன செய்வாள்? எங்கே செல்வாள்?

யோசிக்க வேண்டிய விஷயம் இது!


மகளே! நீ ஒரு பொக்கிஷம்!!

“மனிதர்கள் சுரங்கங்கள்! தங்கத்தைப் போல, வெள்ளியைப் போல!” – என்றார்கள் நபியவர்கள்.

மனிதர்கள் அனைவருமே தங்கத்தைப் போல வெள்ளியைப் போல் எனும் போது நீங்கள் பெற்றெடுத்த செல்வங்கள் அனைவருமே விலை மதிப்பற்ற சுரங்கங்கள் தானே! They are so precious!

நபி மொழி ஒன்று உண்டு:

“உங்கள் குழந்தைகளை கண்ணியப்படுத்துங்கள்!” – (இப்னு மாஜா)

இந்த நபி மொழியின் படி உங்கள் மகளை நீங்கள் கண்ணியப்படுத்திட வேண்டும்!

எப்படி கண்ணியப்படுத்துவீர்கள்?

இதோ இன்னொரு நபி மொழி:

“பெண்கள் பொக்கிஷங்கள்!”

இந்த நபிமொழியை மனதில் வைத்து – பெற்றோர்கள் தங்கள் மகள்களிடம் – “நீ ஒரு பொக்கிஷம்… நீ ஒரு பொக்கிஷம்!” – என்று வலியுருத்திக் கொண்டே இருந்திட வேண்டும்!

ஆங்கிலத்தில் ஒரு சொற் பிரயோகம் உண்டு: அதனை Self Esteem என்று சொல்கிறார்கள். இதற்கு “சுய மதிப்பு” என்று பொருள் கொள்ளலாம். அதாவது – நமக்கு நாமே போட்டுக் கொள்கின்ற மதிப்பு!! அதாவது நமது மதிப்பை நாம் தான் நிர்ணயம் செய்து கொள்கிறோம். இந்த Self Esteem நமது வாழ்க்கையின் வெற்றிக்கு மிக அவசியம்.

நம்மைப் பற்றிய நமது மதிப்பீடு குறைவாக இருக்கிறது என்றால் இதனை Low Self Esteem என்கிறார்கள். இப்படி குறைவாக தங்களை மதிப்பிட்டுக்கொள்பவர்கள் தான் தங்கள் வாழ்வை நாசப் படுத்திக் கொண்டு விடுகிறார்கள். இது ஏனெனில் தங்களைப் பற்றி உயர்வான எண்ணம் அறவே இல்லாத காரணத்தினால் – தவறுகளில் வீழ்வது ஒன்றும் அவர்களுக்குப் பெரிய இழப்பாகத் தோன்றுவதில்லை!

எனவே பெற்றோர்கள் செய்திட வேண்டியது எல்லாம் தங்கள் குழந்தைகளின் – குறிப்பாக தங்கள் மகள்களின் – சுய மதிப்பீட்டை “கட்டி எழுப்பிட வேண்டும்”. (to build a strong self esteem).

எப்படி கட்டி எழுப்புவது நமது மதிப்பீட்டை?

இதற்கு இரண்டு வழிகள் தான் உண்டு?

ஒன்று – உங்களுக்கும் உங்களைப் படைத்த இறைவனுக்கும் ஒரு உறவுப் பாலத்தை அமைத்துக் கொள்வது.

இரண்டு – என்னால் இவ்வுலகுக்கு “எனது திறமைகளைக் கொண்டு நல்லதொரு பங்களிப்பைச் செய்திட முடியும் என்று கருதும் போது!

இரண்டு: என்னால் இவ்வுலகுக்கு “எனது திறமைகளைக் கொண்டு நல்லதொரு பங்களிப்பைச் செய்திட முடியும்!” – என்று ஒருவர் கருதும் போது அவரின் சுய மதிப்பு உயர்கிறது! இது எப்போது சாத்தியம் என்றால் – ஒருவன் தனது உள்ளாற்றல்களைக் கண்டு பிடித்திடும் போது தான். இதனை ஆங்கிலத்தில் Self discovery என்கிறார்கள். இது குறித்து நாம் பின்னர் பார்ப்போம்.

இப்போது முதல் வழியை மட்டும் இங்கே ஆய்வுக்கு எடுத்துக் கொள்வோம்:

என்னைப் படைத்த இறைவனை நான் ஏற்றுக் கொள்ளும் போது – எனக்குள் அது ஏற்படுத்தும் மாற்றம் என்ன தெரியுமா?

நாம் கொள்ளும் இறை நம்பிக்கை – நமக்கும் இறைவனுக்கும் இடையே ஓர் உறவுப் பாலத்தை அமைத்து விடுகிறது!

அவனே என்னைப் படைத்தவன்! அவனே என்னை பரிபாலிப்பவன்! அவனே என் தேவைகள் அனைத்தையும் கவனித்துக் கொள்பவன்! அவனே என் எஜமானன்! நான் என்னைப் படைத்த என இறைவனின் அடிமை!

இப்படி நாம் சிந்திப்பதால் எனது மதிப்பீடு எப்படி உயரும் என்று ஒருவர் கேட்கலாம்?

நான் என் இறைவனின் அடிமை எனில் நான் என் இறைவனைத் தவிர வேறு யாருக்கும் நான் அடிமை இல்லை என்பதும் பொருள்!

“நான் என் இறைவனைத் தவிர் வேறு யாருக்கும் அடிமை இல்லை!” – என்று நான் சிந்திக்கும் போது எனது மதிப்பீடு உயருகிறதா இல்லையா?

எனவே பெற்றோர்கள் செய்திட வேண்டியதெல்லாம் – தங்கள் மகள்களிடம் பேசும்போதெல்லாம் – “அம்மா! நீ அல்லாஹ்வை ஈமான் கொண்ட பெண்! அவன் உன்னைக் கண்ணியப்படுத்தியிருக்கின்றான்! உன்னை ஒரு பொக்கிஷம் என்கிறான் அவன்! நீ விலை மதிப்பற்றவள்! மகளாக, மனைவியாக, தாயாக – என்று அல்லாஹுத ஆலா – உன்னை எல்லா நிலைகளிலும் சிறப்பாக்கி வைப்பான்!” – என்கின்ற முறைகளில் தான் பேசிட வேண்டும்!

அவர்களை ஒருக்காலும் நீங்களே குறைத்து மதிப்பிட்டு விடக் கூடாது!

தன்னை உயர்வாக எண்ணுகின்ற ஒரு பெண் – தன்னை இறைவனின் அடிமை என்று நம்புகின்ற ஒரு பெண் – தவறான சூழ்நிலைகளில் எப்படி நடந்து கொள்வாள்?

நம்பிக்கை கொண்ட ஒரு பெண் – ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில், ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் – “மற்றவர்கள்” எப்படி செயல் படுகின்றார்கள் என்று பார்க்கவே மாட்டாள்! அல்லாஹு தஆலா என்ன சொல்லியிருக்கின்றான் என்றே அவள் பார்த்திடுவாள்!

சக மாணவிகள் அனைவரும் ஒரு வழியில் சென்றாலும் – தன்னைப் பற்றிய உயர்வான எண்ணத்தைக் கட்டியெழுப்பிக் கொண்ட ஒரு பெண் – மற்றவர்கள் வழி சென்றிடவே மாட்டாள்!

இறை நம்பிக்கை கொண்ட ஒரு பெண்மணி – இஸ்லாமிய வழிகாட்டுதலின் படி உறுதியுடன் நடந்திடும்போது  அதனைக் குறித்து மற்றவர்கள் கேள்வி எழுப்பினால் – அதனை எவ்வாறு எதிர்கொள்வாள்?

சான்றுக்கு ஒன்று:

நோபல் பரிசுப் பெற்ற யெமன் நாட்டின் தவக்குல் கர்மானிடம் ஒரு பத்திரிகையாளர் கேள்வியொன்றை எழுப்பினார்!

“ஏன் நீங்கள் ஹிஜாபை அணிகின்றீர்கள் ? அது எவ்வாறு உங்களுடைய கல்விக்கும், அறிவுக்கும் பொருந்துகிறது ?” என்று.

தவக்குல் கர்மான் இவ்வாறு பதிலளித்தார்: “ஆதி மனிதர்கள் நிர்வாணமாக இருந்தார்கள். அவர்களுடைய அறிவு வளர்ச்சி அடைந்த பொழுது ஆடையை அணியத் துவங்கினார்கள். நானும், எனது ஆடை முறையும் பிரதிபலிப்பது மனிதன் பெற்ற மிகவும் உன்னதமான கலாச்சாரத்தை ஆகும். மனிதன் மீண்டும் நிர்வாணமாக மாறுவது அவன் தனது துவக்க காலத்தை நோக்கி செல்வதன் அடையாளமாகும்.” என்றார்!

இதற்குப் பெயர் தான் நெத்தியடியோ?

சமூக அக்கரை உடையவர்களாக – நமது குழந்தைகள்!


ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ”ஒருவர் நடந்து வரும் பாதையில் ஒரு முள் மரக்கிளை கிடப்பதைக் கண்டு, அதை அந்தப் பாதையைவிட்டும் அகற்றும் பணியில் ஈடுபட்டார். அப்பணி அவரை (தொழுவதை விட்டும்) பிற்படுத்திவிட்டது. இப்படிப்பட்ட அந்த மனிதருக்கு அல்லாஹ் நன்றி செலுத்துகிறான். அவருக்குப் பாவமன்னிப்பும் அளிக்கிறான்.” என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். (புகாரி)


வல்லோன் அல்லாஹு தஆலா நாம் அனைவருமே சமூக அக்கரை உடையவர்களாக விளங்கிட வேண்டும் என்றே எதிர்பார்க்கின்றான்.

இந்த அடிப்படையில் நாம் சமூக அக்கரை உடையவர்களாக விளங்குவதுடன் நமது பிள்ளைகளையும் சமூக அக்கரை உடையவர்களாக வார்த்தெடுக்க வேண்டியது நமது கடமை.

இறைவன் தனது திருமறையிலே கூறுகிறான்:

மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத்தில்) சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள்; (ஏனெனில்) நீங்கள் நல்லதைச் செய்ய ஏவுகிறீர்கள்; தீயதை விட்டும் விலக்குகிறீர்கள்; இன்னும் அல்லாஹ்வின்மேல் (திடமாக) நம்பிக்கை கொள்கிறீர்கள். (3:110)

இன்னும் சொல்லபோனால் சமூக அக்கரை என்பது நமது நம்பிக்கையுடன் பின்னிப் பிணைக்கப்பட்டுள்ளது என்பதை நாம் அறிந்தே இருக்கின்றோம்.

‘”நம்பிக்கைக்கு (ஈமானுக்கு) எழுபது கிளைகள் உள்ளன: அதில் மிக உயர்ந்தது லா இலாஹ இல்லல்லாஹ் (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறுயாருமில்லை) என்பதாகும், அதில் மிக தாழ்ந்தது பாதையில் மக்களுக்குத் தொல்லை தருபவைகளை அகற்றுவதாகும், வெட்கமும் நம்பிக்கையின் ஒரு கிளையாகும்’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), புஹாரி).

பொதுவாகவே பெற்றோர்கள் – தங்கள் பிள்ளைகள் – சமூக விஷயங்களில் ஈடுபடுவதை – அது அவர்களுக்குத் தேவையற்ற ஒரு தலையீடாகவே கருதும் போக்கு ஒன்று நிலவுகிறது. தான் உண்டு; தன் வேலை உண்டு; தன் படிப்பு உண்டு; தன் குடும்பம் உண்டு என்று மட்டுமே இருந்திட வேண்டும் என்று தங்கள் பிள்ளைகளின் சிந்தனை வட்டத்தைச் சுருக்கி விடுகின்றார்கள் பல பெற்றோர்கள்.

விளைவு? சமூகம் சுயநலம் மிக்கவர்ளால் நிரம்பி வழிகின்றது! நபி (ஸல்) அவர்கள் தனது இளமைப் பருவத்திலேயே சமூக அக்கரை உடையவர்களாகத் திகழ்ந்தார்கள் என்பது நாம் அறிந்த விஷயமே!

பெற்றோர்கள் சிந்திப்பார்களாக!

வீட்டுக்குள்ளே விண்மீன்கள்!


இன்னும், (இறைவன்) எல்லாப் (பொருட்களின்) பெயர்களையும் ஆதமுக்கு கற்றுக் கொடுத்தான்; (2:31)

அறிவு என்பது மனிதனின் முதன்மையான மனித வளம் ஆகும்.

ஆனால் பிறக்கும்போதெ மனிதன் அறிவாற்றல் மிக்கவனாகப் பிறப்பதில்லை. தாயின் வயிற்றிலிருந்து பிறக்கும் எந்த ஒரு குழந்தையும் எந்த ஒன்றையுமே அறியாத நிலையிலேயே பிறக்கின்றது.


உங்கள் தாய்மார்களின் வயிறுகளிலிருந்து நீங்கள் ஒன்றுமே அறியாதவர்களாக இருந்த நிலையில் உங்களை அல்லாஹ் வெளிப்படுத்துகிறான்; அன்றியும் உங்களுக்குச் செவிப்புலனையும், பார்வைகளையும், இதயங்களையும் – நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டு – அவனே அமைத்தான். (16:78)

மனிதர்கள் தங்களின் அறிவை வளர்த்துக் கொள்வதற்காகத்தான் ஐந்து புலன்களையும், சிந்திகின்ற இதயத்தையும் வழங்கியிருக்கின்றான் வல்லோன் அல்லாஹு தஆலா.

புலன்களின் மூலமாக அறிவை வளர்த்துக் கொள்வதற்கு, குழந்தைகள் வளர்கின்ற சூழல் மிக முக்கியம்! அப்படிப்பட்ட சூழலை குழந்தைகளுக்கு வழங்கிட வேண்டியது ஒவ்வொரு பெற்றோரின் நீங்காக் கடமையாகும்.

ஆதிபிதா ஆதம் (அலை) அவர்கள் காலம் தொடங்கி, இன்றைய நவீன அறிவியல் யுகம் வரை மனிதனின் அறிவு எப்படி வளர்ந்தது? நாம் மேலே குறிப்பிட்ட படி ஐந்து புலன்களின் வழியே தான் தன் அறிவை வளர்த்துக் கொள்கிறான் மனிதன்.

உதாரணமாக கண்களால் உற்று நோக்கி (observation) மனிதன் கற்றுக் கொண்ட ஒரு சம்பவம் பற்றி திருமறை குர்ஆன் நமக்குச் சொல்லிக்காட்டுகிறது.

ஆதத்தின் இரு மகன்கள் வரலாறு நமக்குத் தெரியும். ஆபில் அவர்களை அவருடைய சகோதரர் காபில் கொன்று விட்டார். இச்சம்பவம் திருமறையிலே விளக்கப் பட்டுள்ளது.

(இதன் பின்னரும்) அவருடைய மனம் தம் சகோதரரைக் கொன்றுவிடுமாறு தூண்டிற்று; ஆகவே அவர் (தம்) சகோதரரைக் கொலை செய்துவிட்டார்; அதனால் அவர் நஷ்டமடைந்தவர்களில் ஒருவர் ஆகிவிட்டார். (5:30)

இது உலகில் நடந்த முதல் கொலை. சரி, பிரேதத்தை என்ன செய்வது?

பின்னர் தம் சதோதரரின் பிரேதத்தை (அடக்குவதற்காக) எவ்வாறு மறைக்க வேண்டுமென்பதை அவருக்கு அறிவிப்பதற்காக அல்லாஹ் ஒரு காகத்தை அனுப்பினான்; அது பூமியை தோண்டிற்று (இதைப் பார்த்த) அவர் “அந்தோ! நான் இந்த காகத்தைப் போல் கூட இல்லாதாகி விட்டேனே! அப்படியிருந்திருந்தால் என் சகோதரனுடைய பிரேதத்தை நான் மறைத்திருப்பேனே!” என்று கூறி, கை சேதப்படக் கூடியவராகி விட்டார். (5: 31)

மனித இனம் இப்படித் தான் தனது அறிவை வளர்த்துக் கொண்டு வருகிறது – ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் காலத்திலிருந்து.. இன்று வரை!

பறவையைக் கண்டான் விமானம் படைத்தான் என்பதும் உண்மையே!

மண்டை ஓட்டினை உதைத்து விளையாடியத் துவங்கிய மனிதன் தான் பின்னர் அதனை கால் பந்தாக மாற்றியிருக்கிறான்.

மாதிரிக் கணக்கு ஒன்றை விளக்கிக் காட்டித்தான் மற்ற கணக்குகளைப் போடச் சொல்கிறார் கணித ஆசிரியர்.

வல்லோன் இறைவன் உதாரணங்கள், உவமைகளைக் கூறுவதன் நோக்கமும் – மனிதனின் இயல்பு அறிந்து தான்! நாம் கண்களால் பார்த்து ரசிக்கின்ற தோட்டம் எனும் சொல் மூலமாகத் தான் நாம் பார்க்காத சுவனத்தை அறிமுகப்படுத்துகிறான் வல்லோன் அல்லாஹ்!

நபியவர்களை அழகிய முன்மாதிரியாக நமக்கு ஆக்கியிருப்பதுவும், நபியவர்களைப் பார்த்து நாம் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான்.

என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே நீங்கள் தொழுங்கள் என்பதுவும் நபிமொழி. ஹஜ் கடமைகளை நிறைவேற்றுவதும் இதே வழிமுறையைப் பின்பற்றித்தான்.

குழந்தைகளும் அப்படித்தான் ஒவ்வொன்றையும் கற்றுக் கொள்கின்றன.

எங்கள் ஊரில் ஒரு ஆசிரியர். ஒரு முறை அவர் வீட்டில் நடந்த நிகழ்ச்சி ஒன்றைச் சொன்னார். அவரது சிறிய மழலைக் குழந்தைக்கு ஒவ்வொன்றாக இது என்ன, அது என்ன – என்று ஒவ்வொன்றாகச் சொல்லிக் கொடுத்து வந்தாராம்.

“கைக்குழந்தைக்கு” ஆங்கிலச் சொல் இலகுவாக இருக்கும் என்று BABY என்று சொல்லிக் கொடுத்திருக்கிறார். வீட்டில் வளர்க்கப் பட்டு வந்த கோழிகளை “BO-BO” என்றும் சொல்லிக் கொடுத்தாராம். ஒரு நாள் அவர் வீட்டுக் கோழி குஞ்சு பொரித்த போது கோழிக் குஞ்சுகளைப் பார்த்த அந்த மழலை எப்படி அழைத்திருக்கும் என்கிறீர்கள்?

“BABY-BOBO” என்று அழைத்ததாம்!

ஒரு உணவுப் பண்டத்தைத் தயாரிக்கிறான் ஒருவன். இன்னொருவன் வந்து அதில் புதிதாக ஒன்றை சேர்த்து அல்லது ஒன்றுக்கு பதிலாக இன்னொன்றைப் போட்டு புதியதொரு உணவுப் பண்டத்தை செய்து தருகிறான்.

நவின் கிருஷ்ணா என்ற மாணவன் ஒருவன் – பூச்சிகளைக் கொல்லும் பூச்சிக் கொல்லி மருந்து மனிதனையும் கொல்லும் என்றால் மனிதனுக்கு விஷமான நிகோடினை வைத்து பூச்சிகளைக் கொல்ல முடியுமா என்று சிந்தித்தான். விளைவு – நமக்கு அவ்வளவாகத் தீங்கு விளைவிக்காத தாவர-பூச்சிக் கொல்லி மருந்து தயார்!

நம்மைப் போன்ற சாமானியர்களுக்கும், இது போன்று பல சிந்தனைகள் உதிக்கத் தான் செய்யும். நமக்கும் கண்டுபிடிப்பாளர்களுக்கும் உள்ள ஒரே வேறுபாடு, நாம் சிந்திப்பதோடு நிறுத்திக் கொள்வோம். அவர்கள் செய்து பார்த்து விடுவார்கள். அவ்வளவு தான்!

இதில் பெற்றோர்களுக்கும் மற்றும் ஆசிரியர்களுக்கும் சொல்ல வேண்டியது ஒன்று இருக்கிறது.

நம் குழந்தைகள், இப்படி ஏதாவது ஒன்றைச் செய்து பார்க்க முயற்சிப்பார்கள். நாம் செய்ய வேண்டியது எல்லாம் அவர்களை ஊக்குவிப்பது தான்.

ஆனால் இதற்கு நேர்மாறாக அல்லவா நாம் நடந்து கொள்கிறோம்! நம் நாட்டில் அறிவியலாளர்கள் அதிகம் தோன்றாமைக்கு இதுவே காரணமாக இருக்கலாம் அல்லவா?

உங்கள் வீட்டுக்குள்ளும் “விண்மீன்கள்” இருக்கலாம். அவைகளைக் கண்டு பிடித்து ஒளி வீசிப் பிரகாசிக்கச் செய்வதெல்லாம் உங்கள் கரங்களில் தான் இருக்கின்றது!

புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். வீட்டுச் சூழல் உங்கள் குழந்தைகளின் ஆராய்ச்சிக்குத் தோதுவான ஆய்வுக்கூடங்களாக மாறட்டும்!!

அறிவியல் அறிஞர்களை வீட்டுக்கு வெளியில் தேட வேண்டாம். அவர்கள் உங்கள் இல்லங்களில் தான் இருக்கின்றார்கள்!

குழந்தையின் முகத்தில் வாட்டமா? உடன் கவனம் செலுத்துங்கள்!


ஆங்கிலத்தில் ஒரு சொல். Depression. இதற்கு ஆங்கிலத்தில் இப்படி பொருள் கொள்கிறார்கள்: “The state of feeling very sad (and anxious) and without any hope. தமிழில் இதனை – “ஆழ்ந்த கவலையில் மூழ்கியிருக்கும் நிலை” என மொழி பெயர்க்கலாம். அந்தக் கவலைக்குக் கண்ணுக்கெட்டிய தூரத்தில் ஒரு விடிவு தெரியாத நிலையில் விரக்தியும் சோகமும் நிலை கொள்வதால் இதனை மனச் சோர்வு என்றும் பொருள் கொள்கிறார்கள். இப்படிப்பட்ட ஆழ்ந்த கவலை எதனால் ஏற்படுகின்றது, இந்நிலை ஏற்படுத்தும் பாதிப்புகள் என்னென்ன என்பதை ஆய்வதற்கு முன்பு சில தகவல்கள்…


இந்த ஆழ்ந்த கவலை என்பது நவீன உலகம் நமக்களித்த “பரிசு” என்றால் அது மிகையில்லை! நமது இந்த இருபத்தொன்றாம் நூற்றாண்டை – “The Age of Meloncholy” – அதாவது மனிதர்களை விரக்திக்கு இட்டுச் செல்லும் காலம் என்று வர்ணிக்கிறார்கள். (கடந்த இருபதாம் நூற்றாண்டை – “The Age of Anxiety” – அதாவது பதற்றத்தின் காலம் என்று வர்ணித்தார்களாம்.)

நவீன வாழ்க்கை முறையைத் தேர்ந்தெடுத்த எல்லா நாட்டு மக்களையும் தொற்றிக் கொண்டிருக்கின்ற ஒரு நோய் தான் இது!

கட்டுக்கோப்பான, கட்டுப்பாடான குடும்ப அமைப்பு சிதறிப் போனமை, அதிகரித்துக் கொண்டே செல்கின்ற திருமண முறிவுகள். குழந்தை வளர்ப்பில் பெற்றோர்களின் அலட்சியம்; வேலைப் பளுவின் காரணம் காட்டி – குழந்தைகளுக்கு நேரம் ஒதுக்காமை. இறை நம்பிக்கையின் அடிப்படையில் வாழத் தவறியமை. மற்றவர்களைப் பற்றிய அக்கரையற்ற சமூகச் சூழல். மனதுக்கு ஆறுதல் அளிக்க என்று எந்த ஒரு அமைப்பும் இல்லாத நிலை. இப்படிப்பட்ட காரணங்களாலேயே குழந்தைகள் சோக மயம் ஆகிறார்கள்.

இதில் வேதனைக்குரிய விஷயம் என்னவென்றால் – இந்த ஆழ்ந்த கவலை தொற்றிக் கொள்கின்ற வயது என்ன தெரியுமா? பத்து வயதிலிருந்து பதிமூன்று வயதுக்குள்! அதாவது நமது சிறுவர்களுக்கும் சிறுமிகளுக்கும்.

கவலைப் படுவது என்பது வாழ்க்கையின் பிரிக்க முடியாத ஒரு அம்சம் தானே – இதற்குப் போய் ஏன் கவலைப் படுகிறீர்கள் என்று கேட்கப் படலாம். சின்னச் சின்னப் பிரச்னைகள் ஏற்படுவதும், அது பற்றிக் கவலைப் படுவதும், பின்னர் பிரச்னை தீர்ந்து விட்டால் அதிலிருந்து விடுபட்டு விடுவதும், வாழ்க்கையின் யதார்த்தமே. ஆனால் நாம் இங்கே சொல்ல வருவது ஆழ்ந்த கவலை குறித்து. அதுவும் சிறிய வயதிலேயே தொற்றிக் கொள்கின்ற ஒரு எதிர்மறை மன நிலை குறித்து.

சிறு வயதிலேயே ஆழ்ந்த கவலைக்கு ஆட்பட்டு விடுபவர்கள் தான் – பின்னாட்களில் மனச் சோர்வாளர்களாக ஆகி விடுகிறார்கள் என்பதும் ஆய்வுகள் தெரிவிக்கும் செய்தியாகும். அப்படியானால் இந்த Depression குறித்து நாம் நிறைய தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது.

குழந்தைகளுக்கு கவலை எப்படி ஏற்படுகிறது?

குறிப்பாக இரண்டு சூழல்களில் தான் குழந்தைகள் கவலைக்கு ஆளாகிறார்கள்:

ஒன்று: தன் முயற்சியில் தோல்வி அடைந்திடும் போது.

ஒரு காரியத்தில் இறங்குகிறான் ஒரு சிறுவன். அதில் தோல்வி அடைகின்றான். அல்லது ஒன்றை அடைந்திட முயற்சி செய்கின்றான். அது அவனுக்கு கிட்டிடவில்லை. அடுத்து என்ன செய்தால் தான் நினைத்தது கைகூடும் என்று அவனுக்குத் தெரியவில்லை. தான் எதற்கும் இலாயக்கில்லை என்று எண்ணத் தொடங்குகிறான். அப்போது தான் அவனை கவலை தொற்றிக் கொள்கிறது!

இரண்டு: மற்றவர்களோடு பழகுவது எப்படி என்பது புரியாத போது.

கவலைக்கு இன்னொரு காரணம் அவன் மற்றவர்களோடு பழகும் போது ஏற்படுகின்றது. ஏதோ ஒரு தேவைக்காக மற்ற ஒருவனை அணுகுகின்றான். அதை அவன் மறுத்து விடுகின்றான். இவன் அவனை விட்டு விலகி விடுகின்றான். தொடர்பை முறித்துக் கொள்கின்றான். மறு படி அவன் வந்து “சமாதானம்” பேசினாலும் அதனை இவன் ஏற்பதில்லை. அவன் எதிரே வந்தாலும் தலையைத் திருப்பிக் கொண்டு விலகிச் சென்று விடுகின்றான். இப்படியாக அவன் தன்னைத் தனிமைப் படுத்திக் கொள்கின்றான். விளைவு: கவலை!!!

இப்படிப்பட்ட இரண்டு சூழ்நிலைகளில் இருந்தும் இத்தகைய சிறுவர்களைக் காப்பாற்றிட வேண்டியது யார் பொறுப்பு?

பள்ளிக்கூட ஆசிரியர்களுக்கு இதில் நீங்காப் பொறுப்பு இருக்கிறது என்கிறார்கள் வல்லுனர்கள்.

சோக வயப்பட்ட குழந்தைகள் – படிப்பில் கவனம் செலுத்திட இயலாது! இப்படிப்பட்ட குழந்தைகள் பள்ளியிலிருந்து இடையிலேயே நின்று விடும் நிலையும் (drop out) ஏற்பட்டு விடுகிறது. எனவே – ஆசிரியர்கள் அன்றாடம் நடத்துகின்ற பாடங்களோடு சேர்த்து – தோல்வியைச் சந்திப்பது எப்படி என்றும், அடுத்தவர் உணர்வுகளைப் புரிந்து கொண்டு நடப்பது எப்படி என்றும் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுத்திட வேண்டும். (மேலை நாடுகளில் சில பள்ளிகளில் இவ்வாறு சொல்லிக் கொடுக்கத் தொடங்கி விட்டனர்).

அடுத்து பெற்றோர்கள்.

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் விஷயத்தில் அலட்சியம் காட்டினால்? தந்தை எப்போதும் வேலை வேலை என்று தனது தொழிலில் பிஸியாக இருந்து விட்டால்? தாய்க்கு தன் பிள்ளைகளைப் புரிந்து கொள்ளத் தெரியவில்லை என்றால்? கணவனும் மனைவியும் பிரிந்து வாழ்ந்தால்? கணவனும் மனைவியும் அடிக்கடி சண்டையிட்டுக் கொண்டிருந்தால்……..? என்னவாகும் குழந்தைகள்?

குழந்தைகளின் கவலைகளை நீக்கிடப் போதுமான விழிப்புணர்வு இன்னும் ஏற்படாத காரணத்தினால் தான் உலக அளவில், சோகத்துக்கு ஆளாகின்ற குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கின்றதாம். இதற்கு வழி ஒன்றை நாம் கண்டே ஆக வேண்டும் தானே!

குழந்தைகளின் கவலைகளைப் போக்கிட இஸ்லாம் என்ன தீர்வு தருகின்றது?

ஒன்று:

மகிழ்ச்சிகரமான குடும்ப வாழ்வை இறைவன் கற்றுத் தருகின்றான். குழந்தைகள் மகிழ்ச்சியாக இருந்திட வேண்டும் எனில் பெற்றவர்கள் முதலில் மகிழ்ச்சியாக இருந்திட வேண்டும்.

இரண்டு:

போதும் என்ற மனப்பான்மையுடன் வாழ்ந்திடக் கற்றுத் தருகின்றான் இறைவன். பொருள்களை வாங்கி வாங்கிக் குவிப்பதில் மகிழ்ச்சி இல்லை என்பதை பெற்றோர்கள் புரிந்து கொள்ள வேண்டும். குழந்தைகளுக்குப் புரிய வைத்திட வேண்டும்.

மூன்று:

மற்றவர்களுடன் மகிழ்ச்சியோடு பழகுவது எப்படி என்று கற்றுத் தருகின்றான் இறைவன். சிரித்த முகத்தோடு அணுகுவது, கை குலுக்குவது, சலாம் சொல்வது, அன்பளிப்புகளைப் பகிர்ந்து கொள்வது, மற்றவர்களுக்கு முன்னுரிமை தருவது, விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை, மன்னிக்கும் மனப்பான்மை, வீணான சந்தேகங்களைத் தவிர்த்தல், கோள் சொல்லாமை, மற்றவர்க்கு உதவி செய்தல் மற்றும் துஆ செய்தல் – இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.

மற்றவர்களோடு பழகுவது எப்படி என்பதை குழந்தைகளுக்கு பெற்றோர் கற்றுத் தந்திட வேண்டும். பெற்றோர்களின் முன்மாதிரியை அப்படியே பின்பற்றுவார்கள் என்பதால், பெற்றோர்கள் மற்றவர்களுடன் இனிமையாகப் பழகுவதை வழக்கமாக ஆக்கிக் கொள்ள வேண்டும். அடுத்தவர் உணர்வுகளைப் புரிந்து கொள்ளவும் அதற்குத் தக நடந்து கொள்வது எப்படி என்பதையும் பெற்றோர்கள் குழந்தைகளுக்குப் புரிய வைத்திட வேண்டும்.

குழந்தைகள் கவலை தோய்ந்தவர்களாக ஆவதிலிருந்து காப்பதே சாலச் சிறந்தது. ஏனெனில் ஒரு முறை அவர்கள் சோக வயப் பட்டு விட்டால், காலம் முழுவதும் அது தொடருமாம்!

குழந்தைகளை மகிழ்ச்சியுடன் வைத்திருத்தல் சமூகக் கடமை. ஏனெனில் அவர்களே எதிர்கால சமூகத்தின் மகிழ்ச்சிக்கு காரணமாக இருக்கப் போகிறவர்கள் என்பதை நாம் மறந்து விடக் கூடாது!

நான் பட்ட கஷ்டங்கள் என் பிள்ளைகள் படக்கூடாது…??


“நான் பட்ட கஷ்டங்கள் என் பிள்ளைகள் படக்கூடாது என்று பெற்றோர்கள் சொல்வது ஒன்றும் சரியான கருத்தாக இருக்க முடியாது.

பெற்றோர்களுக்கு – குறிப்பாக தந்தை மார்களுக்கு நாம் சொல்வது இது தான்:

நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து பல் வேறு முயற்சிகளையும் மேற்கொண்டு, பல இடங்களுக்கும் அலைந்து திரிந்து பல தரப்பு மக்களையும் சந்தித்து உதவி கேட்டு, மூட்டை தூக்கி, பல இரவுகள் கண் விழித்து காத்திருந்து, பதற்றம், பயம், சோகம், மன அழுத்தம் போன்ற மன உளைச்சல்களுக்கு ஆளாகி, வெற்றியை சந்திப்பதற்கு முன் பல தோல்விகளை சந்தித்து, ……. ஒரு கட்டத்தில் அல்லாஹு தஆலா உங்களைக் கைத்தூக்கி விட நீங்கள் இப்போது சற்றே ஆசுவாசபடுத்திக் கொள்ளும் அளவுக்கு முன்னேற்றம் அடைந்த பிறகு… என்ன சொல்கிறீர்கள்?


“அப்பப்பா! நான் பட்ட கஷ்டங்கள் என் பிள்ளைகள் படக்கூடாது!”

இது உங்கள் குழந்தைகளைப் “பறக்க” விடாமல் தடுப்பதற்கு நீங்கள் செய்கின்ற முதல் தவறு! மகா தவறு!

கதை ஒன்று சொல்வார்கள்: வண்ணத்துப்பூச்சி ஒன்று அது பறந்து திரிவதற்கு முன் அது தனது கூட்டுக்குள் (cocoon) இருந்து வெளியே வர படு முயற்சி செய்து கொண்டிருந்ததாம். இதைக் கவனித்த சிறுவன் ஒருவன் அதன் மீது இரக்கப்பட்டு அந்தக் கூட்டை ஒரு கத்தரிக்கோலால் உடைத்து விட்டானாம். அவன் எதிர்பார்த்தது அந்த வண்ணத்துப்பூச்சி பறக்கும் என்று! ஆனால் அதனால் பறக்க முடியவில்லையாமல் கீழே விழுந்து அப்படியே செத்துப் போனதாம்!

படிப்பனை பெற வேண்டியது பெற்றோர்கள்.

பொதுவாகவே நமது குழந்தைகளைப் பள்ளிக்கூடத்தில் சேர்த்த பிறகும் சரி, அவர்கள் வளர்ந்ததும் கல்லூரிக்கு அனுப்பும் காலத்திலும் சரி, பல பெற்றோர்கள் செய்கின்ற தவறு என்னவெனில் – “பிள்ளைகள் கஷ்டப்பட்டு படிக்கின்றார்கள். வீட்டுப்பாடம் எழுதுகின்றார்கள். தேர்வுக்கு தயார் செய்கின்றார்கள். எனவே அவர்களை மேலும் நாம் வேலை வாங்குவது தவறு” – என்று விட்டு விடுகின்றார்கள்.

இது எதில் போய் முடியும் என்றால் – கூடு உடைக்கப்பட்டு வெளியில் வந்து விழுந்த வண்ணத்துப்பூச்சியின் நிலைக்கே கொண்டு போய் விடும்!

படிப்பு படிப்பு என்று புத்தகப்புழுவாக படித்து படிப்பு ஒன்றில் மட்டுமே தங்கள் முழுக் கவனத்தையும் செலுத்தி வேறு எந்த ஒரு திறமையையும் வளர்த்துக் கொள்ளாமல், பள்ளியிலும் கல்லூரியிலும் பல தங்க மெடல்களை வாங்கிக் குவித்த பெரும்பாலோர் – வாழ்க்கையில் வெற்றி பெற்றதில்லை என்பது வாழ்க்கை கற்றுத்தரும் பாடம்!

தனது வாழ்வில் வெற்றிக்கொடி நாட்டிய – ஒரு வன விலங்கு வீடியோகிராஃபர் சொல்கிறார்: “என் வாழ்க்கைக்குத் தேவையான பாடங்கள் பெரும்பாலானவற்றை நான் பள்ளிக்கும், கல்லூரிக்கும் வெளியில் தான் கற்றுக் கொண்டேன்!”

பள்ளிகளும் கல்லூரிகளும் படிப்பு ஒன்றை மட்டும் தான் கற்றுத்தரும். ஆனால் வாழ்க்கையில் வெற்றி பெறத்தேவையான பல விஷயங்களை நாம் கல்விக்கூடங்களுக்கு வெளியில் தான் கற்றுக் கொள்ள வேண்டியுள்ளது.

சிந்திக்கும் திறமை, கருத்துப் பரிமாற்றத் திறமை, மற்றவர்களுடன் கலந்து பழகும் திறமை, தலைமைத்துவத் திறமை, குழுவில் ஒரு அங்கமாக இருந்து மற்றவர்களுடன் சேர்ந்து ஒரு காரியத்தை முடித்துத் தரும் திறமை, உணர்ச்சிகளை ஒழுங்கு படுத்திக் கொள்ளும் திறமை, தொழில் நுட்பத்திறமைகள், தன்னை ஒழுங்கு படுத்திக் கொள்ளும் திறமை – இவை அனைத்தும் வாழ்க்கையின் வெற்றிக்குத் தேவையான அடிப்படைத் திறமைகளாகும்.

ஒரு ஆய்வின் படி – கல்லூரிகளில் படித்து விட்டு வெளி வருகின்ற மாணவர்களில் 90% – க்கு மேற்பட்ட மாணவர்களுக்கு “பணியாற்றும் திறமை” இல்லையாம்! They are unemployable! – என்று சொல்கிறார்கள்!

விழித்துக் கொள்ள வேண்டியது பெற்றோர்களே!

நீங்கள் என்ன தான் சொல்ல வருகின்றீர்கள் என்கிறீர்களா?

குறித்துக் கொள்ளுங்கள்:

உங்கள் வீட்டை சுத்தப் படுத்தும் பணிகளில் உங்கள் பிள்ளைகளையும் ஈடுபடுத்துங்கள். குறிப்பாக கழிவறைகளை சுத்தப்படுத்துவதிலும் அவர்களை ஈடுபடுத்துங்கள்! குழந்தைகள் தானே என்று விட்டு விட வேண்டாம்!

உங்கள் பிள்ளைகளுக்கென்று தனி இடம் ஒன்றைக் கொடுத்து அவர்களது பொருள்களை ஒழுங்காக அடுக்கி வைக்கச் சொல்லி ஆர்வமூட்டுங்கள்.

அவர்கள் துணிகளை அவர்களே துவைத்திடச் செய்திடுங்கள். யந்திரத்தில் (washing machine) துவைப்பதாக இருந்தாலும் அதனை அவர்களே செய்து கொள்ள வேண்டும் என்று விதியுங்கள். சிறு குழந்தைகளுக்குக் கூட அவர்களது அழுக்குத்துணிகளை இங்கு தான் போட வேண்டும் என்றும் துவைக்கப் பட்ட துணிமணிகளை இப்படித்தான் அடுக்கி வைத்திட வேண்டும் என்றும் பயிற்சி கொடுங்கள்.

வீட்டுக்குத்தேவையான மளிகை, காய்கறிகள் வாங்குவது எப்படி என்ற பயிற்சியும் அவசியமான பயிற்சியாகும். ஒரு பொருளில் சிறந்ததை தேர்வு செய்வது எப்படி, விலையை சரிபார்ப்பது எப்படி, பொருள் கொடுத்து ஒரு பொருள் வாங்குவது எப்படி, (தேவையேற்படின்) பேரம் பேசுவது எப்படி – போன்ற திறமைகள் தானாகவே வளரும்.

மற்றவர்களுடன் பழகுவது எப்படி என்று கற்றுக் கொள்ளுங்கள். சிரித்த முகம் காட்டுவதன் அவசியத்தை உணர்த்துங்கள். நலம் விசாரித்தலைப் பழக்குங்கள்.

பேச்சுத்திறமையை வளர்த்துக் கொள்ள வீட்டிலேயே பயிற்சி அளியுங்கள். அழகாகப் பேசுவது எப்படி என்று கற்றுக் கொடுங்கள். மற்றவர்கள் பேசும்போது காது தாழ்த்திக் கேட்பதன் அவசியத்தை உணர்த்துங்கள். அன்றைய செய்திகளை விவாதப் பொருளாக்குங்கள். கேள்விகள் கேளுங்கள். பதில் தராதீர்கள். அவர்களின் சிந்திக்கும் திறனை வளர்த்திடுங்கள்.

மின் சாதனங்களையும், மின்னணு சாதனங்களையும் பொருத்துவது எப்படி, அவைகளைப் பழுது பார்ப்பது எப்படி, தண்ணீர்க் குழாய்களைச் சரி செய்வது எப்படி, சின்னச் சின்ன கொத்தனார் வேலைகள், ஆசாரி வேலைகள் செய்வது எப்படி, கிழிந்த துணிகளைத் தைப்பது எப்படி, பொத்தான்களைத் தைப்பது எப்படி, சிறு தோட்டங்களைப் பராமரிப்பது எப்படி, – போன்ற தொழில் நுட்பங்களைக் கொஞ்சமேனும் அவர்கள் கற்றுக் கொள்ள வகை செய்யுங்கள்.

தலைமைத்துவத் திறமைகளைக் கொஞ்சம் கொஞ்சமாக கற்றுக் கொடுங்கள். ஒரு விஷயத்தில் மிகச் சரியானதைத் தேர்வு செய்வது (decision making) எப்படி என்ற பயிற்சியும் தாருங்கள். ஒரு பிரச்னையைத் தீர்ப்பது எப்படி என்ற பயிற்சியும் அவசியம். மற்றவர்கள் நமது கருத்தை ஏற்க வைப்பது என்ற பயிற்சியும் தேவை.

தோல்விகளைச் சந்திப்பது எப்படி என்று கற்றுக் கொடுங்கள்; கோபம், பதற்றம் – போன்ற உணர்ச்சிகளை ஒழுங்கு படுத்துவது எப்படி; அவைகளை பொருத்தமாக வெளிப்படுத்துவது எப்படி என்றும் பயிற்சி அளியுங்கள். (பொறியியல், மருத்துவம் படிக்கும் மாணவர்களும் மாணவிகளும் கூட ஏன் தற்கொலையை நாடுகின்றார்கள்?)

உங்கள் பிள்ளைகள் கல்லூரிப் படிப்பை முடித்து வெளியே வருவதற்குள் நாம் மேலே குறிப்பிட்டுள்ள திறமைகளை கொஞ்சமேனும் வளர்த்துக் கொண்டிருந்தால் - அவர்கள் எதிர்காலம் மிகவும் பிரகாசமாக இருக்கும் என்பதில் சந்தேகமே கிடையாது!

உங்கள் குழந்தைகளின் ஆர்வங்களைப் பட்டியலிடுங்கள்!


உங்கள் குழந்தைகளின் ஆர்வங்கள் என்னென்ன என்று நீங்கள் அறிந்து வைத்திருப்பது அவர்களின் ஆளுமை வளர்ச்சிக்கு மிகவும் அவசியமாகும். எனவே உங்கள் குழந்தைகள் எவற்றிலெல்லாம் ஆர்வத்துடன் ஈடுபடுகின்றார்கள் என்று அவர்களை உற்று நோக்குங்கள்.

உங்கள் குழந்தைக்கு ஒரு விஷயத்தில் ஆர்வம் இருக்கின்றது என்பதற்கு என்ன அளவுகோல்? அக்குழந்தை அந்த ஒன்றில் எவ்வளவு நேரம் செலவிட்டாலும் அது அக்குழந்தைக்கு அலுத்துப் போவதில்லை! that will not be boring! அது அவரது சிந்தனையையும் செயல்பாட்டையும் ஆக்கிரமித்திருக்கும். மீண்டும் மீண்டும் அதன் பக்கமே அதன் கவனம் சென்று கொண்டிருக்கும். அது தான் அளவுகோல்!


நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் -

உங்கள் மகனுக்கென்று / மகளுக்கென்று ஒரு டைரியை தனியே எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அவர்கள் ஆர்வத்துடன் ஈடுபடுகின்ற காரியங்கள் அனைத்தையும் அதில் பட்டியலிடுங்கள். அவர்களை ஆர்வப்படுத்துகின்ற விஷயம் எதுவாயினும் அவையனைத்தையும் – அது பத்து அல்லது பதினைந்து அல்லது இருபது என்று இருந்தாலும் தவறில்லை – பட்டியலில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

சரி, அனைத்தையும் பட்டியலிட்டு விட்டீர்களா?

அடுத்தது நீங்கள் செய்ய வேண்டியது:

அந்தப் பட்டியலில் – இறைவன் தடை செய்துள்ள ஏதாவது இடம் பெற்றுள்ளதா என்று பாருங்கள். உதாரணமாக – உங்கள் மகன் drums வாசிப்பது போல் அல்லது guitar வாசிப்பது போல் சமிக்ஞை செய்து கொண்டிருக்கின்றான் என்று வைத்துக் கொள்ளுங்கள். அதனை நீங்கள் பட்டியலில் சேர்த்திருந்தால் அதனை நீக்கி விடுங்கள். இது போன்று மார்க்கத்தில் ஹராம் ஆக்கப்பட்டுள்ள விஷயங்கள் எதுவாயினும் அவற்றை நீக்கி விட்டு – இரண்டாவது பட்டியல் ஒன்றை அதற்குக் கீழே தயாரித்துக் கொள்ளுங்கள். உங்கள் குழந்தைகளுக்கு ஹராம் – ஹலால் பற்றிய விழிப்புணர்வை கொஞ்சம் கொஞ்சமாக ஏற்படுத்துங்கள்.

அடுத்தது -

அந்தப் பட்டியலில் – உங்கள் செல்வங்கள் ஆர்வத்துடன் ஈடுபடுகின்ற ஏதாவது விஷயம் ஒன்றில் அவர்களுக்கு எந்த ஒரு பயனும் அளிக்காத காரியம் ஏதாவது இருந்தால் அதனையும் நீக்கி விடவும். சான்றாக உங்கள் குழந்தைகளுக்கு தொலைக்காட்சியில் கிரிக்கெட் விளையாட்டைப் பார்த்துக் கொண்டிருப்பது பிடிக்கும்; கார்ட்டூன் கதைகளை மணிக்கணக்கில் பார்த்துக் கொண்டிருப்பது மிகவும் பிடிக்கும் என்று எழுதியிருந்தால் இவைகளையும் பட்டியலிலிருந்து நீக்கி விடுங்கள். “உங்களுக்கு எது பயன் அளிக்குமோ அதில் ஆர்வம் காட்டுங்கள்” – என்பது நபிமொழியாகும். எனவே பயனற்ற விஷயங்களை நீக்கி விட்டு அதற்குக் கீழே மூன்றாவது பட்டியல் ஒன்றைத் தயாரியுங்கள். இப்பட்டியலில் உங்கள் குழந்தைகளை ஆர்வப்படுத்தும் விஷயங்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்திருக்கும். பரவாயில்லை!

அடுத்தது -

இந்த மூன்றாவது பட்டியலில் நீங்கள் எழுதியிருப்பவற்றுள் – உங்கள் குழந்தைகளுக்கு எது மிக மிக அதிகமான விருப்பமாக இருக்குமோ அதற்கு முன்னுரிமை தந்து அதன் அடிப்படையில் அவைகளை வரிசைப்படுத்தும் நான்காவது பட்டியல் ஒன்றைத் தயாரியுங்கள். இது தான் உங்களுடைய குழந்தைகளின் இப்போதைய ஆர்வப் பட்டியல்!

அடுத்தது -

ஒரு வாரம் அல்லது ஒரு மாதம் கழித்து மீண்டும் அந்த டைரியைப் புரட்டுங்கள். உங்கள் குழந்தைகளின் ஆர்வப்பட்டியலைப் பார்வையிடுங்கள். இப்போது அப்பட்டியலில் ஏதாவது புதிதாக சேர்க்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா; சேருங்கள். அதிலிருந்து ஏதாவது ஒன்றை நீக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா, நீக்கி விடுங்கள். புதிய பட்டியல் ஒன்றைத் தயாரித்து வைத்துக் கொள்ளுங்கள்.

இவ்வாறு ஒரு வருடம் கழித்தும் புதிய பட்டியல் ஒன்றைத் தயாரித்து வைத்துக் கொள்ளுங்கள்.

அடுத்து – நீங்கள் பட்டியலிட்ட விஷயங்களுக்கு முன்னுரிமை அளித்து அவற்றில் உங்கள் குழந்தைகள் தங்களின் திறமைகளை வளர்த்துக் கொள்வது எப்படி என்பது குறித்து சிந்தியுங்கள். தகவல்களை சேகரியுங்கள். களத்தில் இறக்கி விடுங்கள் உங்கள் குழந்தைகளை! அது போலவே உங்கள் குழந்தைகள் தங்கள் எதிர்கால் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும் களம் ஒன்றைப் பற்றியும் சிந்தியுங்கள். சிந்தித்துக் கொண்டே இருங்கள்.

இறைவன் உங்கள் குழந்தைகளுக்கு மகத்தான வாய்ப்புகளைத் திறந்து விடுவான் – இன்ஷா அல்லாஹ்!

“மேலும் எவர்கள் நம்முடைய வழியில் முயல்கின்றார்களோ நிச்சயமாக அவர்களை நம்முடைய நேரான வழிகளில் நாம் செலுத்துவோம்; நிச்சயமாக அல்லாஹ் நன்மை செய்வோருடனேயே இருக்கின்றான். (29: 69)

குழந்தைகளின் திறமைகளை வளர்ப்பதில் கவனம் செலுத்துங்கள்!


ஒரு திறமை ஒருவருக்குள் மொட்டு விட்டு மலர்ந்திட இரண்டு விஷயங்கள் அமைந்திட வேண்டும். ஒன்று: குறிப்பிட்ட ஒரு திறமையை வளர்த்துக் கொள்ள அதில் அளவு கடந்த ஆர்வம் ஒருவருக்கு இருந்திட வேண்டும். இரண்டு: அந்தத் திறமையை வளர்த்துக் கொள்ளும் வாய்ப்புகளை அவரது பெற்றோர்களும், அவர் வாழ்கின்ற சமூகம் தங்கு தடையின்றி வழங்கிட வேண்டும்.

மனிதர்களுக்குள் புதைந்திருக்கின்ற பல விதமான திறமைகளுள் ஒன்று தான் மொழியாற்றல். ஒரு மொழியை மிக இலாகவமாகக் கையாள்வதற்கென்று ஒரு திறமை வேண்டும். இதனை ஆங்கிலத்தில் linguistic intelligence என்று அழைக்கிறார்கள்.


இப்படிப்பட்ட திறமைக்கு நாம் ஸைத் பின் தாபித் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை ஒரு முன்மாதிரியாக எடுத்துக் காட்டலாம். அவருடைய வரலாற்றை நாம் சற்றே ஊன்றிப் படித்துப் பார்த்தால் – ஒரு மகனை வெற்றியாளனாக்கிப் பார்ப்பதில் ஒரு தாய்க்கு எந்த அளவு பங்கு இருந்திட வேண்டும் என்பது தெள்ளெனப் புரியும்.

அப்போது ஸைத் பின் தாபித் ரலி அவர்களுக்கு பதின்மூன்று வயது மட்டுமே. பத்ர் போரில் கலந்து கொள்ள அளவு கடந்த ஆர்வம். அவரை பெருமிதத்துடன் அண்ணலாரிடம் அழைத்துச் சென்றது அவரது தாயார் அந்நவ்வார் பின்த் மாலிக் அவர்களே! ஆனால் அனுமதி கிடைக்கவில்லை. காரணம் வயது! மிகவும் ஏமாற்றமடைந்தார் அந்தச் சிறுவர்.

வயது ஒரு குறையென்று போரில் பங்கெடுக்கும் பாக்கியம்தான் கிட்டவில்லை, வேறென்ன செய்யலாம்? சிந்தித்தார் சிறுவர். யோசனையொன்று பளிச்சிட்டது. திருமறை வசனங்களைப் படித்து உய்த்துணரும் மாணவனாய் ஆகிவிட்டால்? அதுவே சரியென்று தோன்றியது. மீண்டும் ஓடினார் தாயிடம். திட்டம் அறிந்த தாய்க்கு அளவிலா மகிழ்ச்சி. “சபாஷ்! சரியான முடிவு” என்று தட்டிக் கொடுத்தவர் உடனே தன்னுடைய உறவினர்களிடம் இது குறித்துப் பேசினார். “என் மகன் அல்லாஹ்வின் வேதம் கற்றவனாய் ஆக விரும்புகிறான். உதவி செய்யுங்கள்”.

அவரது உறவினர்கள் சிறுவர் ஸைது இப்னு தாபித்தை நபியவர்களிடம் அழைத்துச் சென்று சிபாரிசு செய்தார்கள்.

“அல்லாஹ்வின் தூதரே! இந்த எங்களின் சிறுவன் ஸைது இப்னு தாபித், பனூ நஜ்ஜார் கோத்திரத்தைச் சேர்ந்தவன். நன்றாய் எழுதப் படிக்கத் தெரிந்தவன், புத்திக்கூர்மையுள்ளவன். குர்ஆனின் பதினேழு அத்தியாயங்களை மனனம் செய்து வைத்துள்ளான். தங்களுக்கு அருளப்பட்ட அதே நேர்த்தியுடன் அதை ஓதக்கூடியவனாகவும் இருக்கிறான். தங்களுடனிருந்து மேலும் மேலும் ஞானம் பெருக்கிக் கொள்ள விழைகிறான் அவன். தாங்களே அவனை ஓதச் சொல்லிக் கேட்டுப் பாருங்களேன்!”

“எங்கே நீ மனனம் செய்து வைத்துள்ளதை ஓது, கேட்கிறேன்” என்றார்கள் முஹம்மது நபியவர்கள். ஓதினார் ஸைது இப்னு தாபித் ரலியல்லாஹு அன்ஹு. அழகாய், தெளிவாய், நேர்த்தியுடன் அவரது நாவிலிருந்து வெளிவந்தன குர்ஆன் வசனங்கள். புரிந்துவிட்டது நபியவர்களுக்கு. அவருடைய உறவினர்கள் விவரித்ததைவிட ஸைது திறமைசாலி என்பது தெளிவாய்த் தெரிந்தது. அதையும் தாண்டி நபியவர்களை உவகையில் ஆழ்த்திய விஷயம் ஒன்றிருந்தது – ஸைது சிறப்பாய் எழுத, படிக்கக் கூடியவர் என்பது.

யாருக்கு என்ன திறமை இருக்கிறதோ அதை முற்றிலும் பயன்படுத்திக் கொள்ளும் தேர்ச்சி முஹம்மது நபியவர்களிடம் இருந்தது. எனவே ஸைதை எப்படி உருவாக்கிட வேண்டும் என்பது அவர்களுக்கு அக்கணமே உறுதியாகிவிட்டது.

“ஸைது! யூத கோத்திரத்தினர் நான் கூறுவதை சரியாகத்தான் எழுதிக் கொள்கிறார்களா என்பதை அறியும் வாய்ப்பு எனக்கில்லை. எனவே நீ உடனே யூதர்களின் ஹீப்ரு மொழியைக் கற்றுக்கொள்!

அவ்வளவுதானே, இதோ “தங்களது உத்தரவிற்கு அடிபணிந்தேன் நபியவர்களே” என்று உடனே காரியத்தில் இறங்கினார் ஸைது. இராப் பகல் என்று அயராது முனைந்து உழைத்து இரண்டே வாரங்களில் ஹீ்ப்ரு மொழியைக் கற்றுத் தேர்ந்தார் அவர். அதன் பிறகு யூதர்களுக்கு எழுதக் கூடிய கடிதம், அவர்களிடமிருந்து வரும் தகவல் என்று எதுவாய் இருந்தாலும் படிப்பது மொழிபெயர்ப்பது எழுதுவது எல்லாம் ஸைது பொறுப்பிற்கு வந்து சேர்ந்தது.

அதைத் தொடர்ந்து, “உனக்கு சிரியாக் மொழி தெரியுமா?” என்று கேட்டார்கள் நபிகள். “தெரியாது” என்றார் ஸைது. “சென்று அதைக் கற்று வா ஸைது”. அதையும் உடனே பயின்றார். அதுவும் எத்தனை நாட்களில்? பதினேழே நாட்களில். நபியவர்கள் இட்ட கட்டளைக்காக மிக இளவயதினர் ஒருவர் இரு வாரங்களில் ஒரு மொழியினைக் கற்று, தயாராய் வந்து நிற்கிறார்.

இவ்வாறாக – இளைஞர் ஸைது இப்னு தாபித் ஆழ்ந்த அறிவுள்ள ஒரு மொழி வல்லுநராய் வளர்ந்து வரலானார். நபியவர்களுக்கு அவரே அதிகாரபூர்வமான மொழிபெயர்ப்பாளராக ஆகிப்போனார். அவரிடமிருந்த புத்திசாதுர்யம், செய்யும் செயல்களில் நேர்த்தி, துல்லியம் எல்லாமாய்ச் சேர்ந்து ஸைதின் திறமையின்மேல் ஆழ்ந்த நம்பிக்கை ஏற்பட்டது முஹம்மது நபியவர்களுக்கு.

அவ்வப்போது அருளப்பெறும் இறைவசனங்களை எழுதிவைத்துக் கொள்வதற்காகவே சிலரை நியமித்து வைத்திருந்தார்கள் நபியவர்கள். அவர்களுள் ஸைதும் பிரதானமான ஒருவராய் ஆகிப்போனார். இறைவசனம் புதிதாய் வந்திறங்கியதும் ஸைதை அழைத்துவரச் சொல்வார்கள். பிறகு அவர்கள் உச்சரிக்க உச்சரிக்க கவனமாய் எழுதிக் கொள்வார் ஸைது. எத்தகைய பாக்கியம் அது?

அது மட்டுமல்லாமல் மன்னர்களுக்கு நபியவர்கள் அனுப்பிவைத்த கடிதங்களை எழுதும் பணியும் ஸைதிற்கு அமைந்தது.

நபியவர்களின் மறைவுக்குப் பின்னர் – ஹள்ரத் அபூபக்ர் ரலி அவர்களின் காலத்தின் குர் ஆனைத் தொகுக்கும் மாபெரும் பணியையும் சுமந்து கொண்டவர்கள் ஸைத் அவர்கள் தான்! கலீஃபா உத்மான் ரலி அவர்கள் காலத்தில் திருமறையின் மூலப் பிரதிலிலிருந்து நகல்கள் எடுக்கும் மகத்தான பொறுப்பையும் செவ்வனே நிறைவேற்றியவர்கள் ஸைத் அவர்கள் தான்!

இப்பொழுது புத்தக வடிவத்தில் – அன்று அருளப்பெற்ற அதே துல்லியத்துடன் ஓர் எழுத்துகூட பிழையின்றி இன்று நம் கைகளில் தவழும் குர்ஆன் நூலிற்குப் பின் ஸைதின் உழைப்பு மகத்தானது என்பது மறுக்க முடியாத உண்மை!

இந்த அருமையான நபித்தோழரின் வரலாற்றில் பெற்றோர்கள் படித்துக் கொள்ள வேண்டிய பாடங்களை மட்டும் இங்கே பார்ப்போம்:

1. ஸைத் அவர்கள் தனது மொழித்திறமையைக் கண்டுணர்ந்து அதனை வளர்த்துக் கொள்ளத் துவங்கிய காலம் அவரது மிக இளமைப் பருவம் ஆகும் (adolescence). அதாவது அவரது – பதினான்கு பதினைந்து வயதிலிருந்தே – அவரது திறமைகள் வெளிப்படத் துவங்கி விட்டன. இதனைத் தான் இன்றைய சிறுவர்களின் பெற்றோர்கள் நன்கு கவனித்திட வேண்டும். அதாவது உங்கள் குழந்தைகள் எட்டாவது, ஒன்பதாவது வகுப்புகளில் படிக்கும் கால கட்டம் மிக முக்கியமானது. உங்கள் குழந்தைகளின் ஆர்வத்தின் அடிப்படையில் அவர்களுக்குத் தேவையான திறமைகளை வளர்த்துக் கொள்ளும் வாய்ப்புகளை நீங்கள் தவறாமல் வழங்கிட வேண்டும்.

2. இன்றைய தாய்மார்களுக்கெல்லாம் ஒரு அழகிய முன்மாதிரியாக இங்கே ஸைத் அவர்களின் தாயார் – அந்நவ்வார் பின்த் மாலிக் அவர்களைப் பார்க்க முடிகிறது. மகன் தனது ஆர்வத்தை வெளிப்படுத்தும் போதெல்லாம் – உடனே களத்தில் இறங்கி ஆவன செய்யத் தொடங்கி விடுகிறார் அவர். இப்படித் தான் ஒவ்வொரு தாயும் தான் பெற்ற செல்வங்களின் திறமைகளுக்கு வழி அமைத்துக் கொடுத்திட ஆர்வத்துடன் முயற்சிகள் மேற்கொண்டிட வேண்டும்,

3. பெற்றோர்களே! உங்கள் குழந்தைகளின் திறமைகளை வளர்ப்பதில் கண்ணும் கருத்துமாக இருங்கள். உங்கள் குழந்தைகளின் “பட்டப் படிப்பு” வாழ்க்கைக்குப் பயன்படக்கூடிய “திறமைகளை” வழங்குவதில்லை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். மொழியாற்றல் (language skill), சிந்திக்கும் திறமை (thinking skill), கருத்துப் பரிமாற்றத் திறமை (communication skill), மற்றவர்களுடன் நல்லுறவு வைத்துக் கொண்டு அவர்களுடன் சேர்ந்து பணியாற்றும் திறமை (human relationship skill), இவற்றோடு சேர்ந்து சில தொழில் நுட்பத் திறமைகள் (technical skills) – இவைகளை உங்கள் குழந்தைகள் வளர்த்துக் கொள்ள உருதுணையாக விளங்கிடுங்கள்.

4. ஸைது அவர்களின் வாழ்வில் உங்களுக்குப் படிப்பினை என்னவென்றால் – அபரிமிதமான திறமை உங்கள் பிள்ளைகளிடம் இருந்தால் வாய்ப்புகள் தானாக உங்கள் குழந்தைகளைத் தேடி வரும் என்பது தான். இப்படித் தான் திருக்குர்ஆனைத் தொகுக்கும் அருமையான வாய்ப்பு ஸைது அவர்களை வந்தடைந்தது என்பதை நீங்கள் மறந்து விடக் கூடாது.

திட்டமிட்டுச் செயலாற்ற பயிற்சி கொடுங்கள்!


அண்ணல் நபி (ஸல்) அவர்கள் சொல்கிறார்கள்: “உங்களில் மிகச் சிறந்தவர் எவர் எனில் – யார் ஒருவர் எந்த ஒரு செயலையும் மிகச் சிறந்த முறையில் (with perfection) செய்து முடிக்கின்றாரோ அவரே!” (அல் -பைஹகி – ஷுஅபுல் ஈமான்)

நம்மில் பெரும்பாலான பெற்றோர்கள் – திட்டமிட்டு செயல் படுவதில்லை. எல்லாமே அரைகுறை வேலைகள் தான். எந்த ஒரு மிகச் சிறிய ஒரு செயலாக இருந்தாலும் சரி, அல்லது பெரிய காரியமாக இருந்தாலும் சரி – ஒன்றை எப்படி துவங்குவது, எப்படி தொடர்வது, எப்படி அழகாக முடிப்பது – என்று நாம் இன்னும் கற்றுக் கொள்ளவில்லையோ என்றே தோன்றுகிறது.


வீட்டில் – அது சமையலாக இருக்கட்டும், துணி துவைப்பதாக இருக்கட்டும், வீட்டைத் தூய்மைப் படுத்துவதாக இருக்கட்டும் – எல்லாமே அரைகுறை வேலைகள் தான். இங்கே நாம் சொல்ல வருவது நமது குழந்தைகளுக்கு திட்டமிட்டு செயலாற்ற எப்படி பயிற்சி அளிப்பது பற்றித்தான்.

இதனை ஆங்கிலத்தில் Good Work Habit என்கிறார்கள். அதாவது எந்த ஒன்றையும் சிறப்பாகச் செய்திடும் பழக்கம் என்று இதனைச் சொல்லலாம். இதனைக் கற்றுத் தருவதில் பெற்றோருக்கு பெரும் பொறுப்பு இருக்கிறது.

அது என்ன? எப்படி?

Good work habit என்பது பின் வரும் 5 அம்சங்களையும் கொண்டது:

1. எந்த ஒரு காரியத்திலும் இறங்குவதற்கு முன்பு – அதற்குத் தேவையான எல்லாப் பொருட்களையும் சேகரித்து நம் முன் வைத்துக் கொள்தல்.

2. குறிப்பிட்ட நேரத்தில் அந்தச் செயலைத் துவக்கி விடுதல்.

3. அந்தச் செயலைத் தொடர்வதில் ஏதாவது சிக்கல் ஏற்பட்டால் அதனை அரைகுறையாக விட்டு விட்டுச் சென்று விடாமல் அதனைத் தொடர்தல் (persistence)

4. அந்தச் செயலைத் தொடர்வதற்கு நமக்கு மற்றவரின் உதவி தேவைப்படின், தயங்காமல் அந்த உதவியை நாடிப் பெற்றுக் கொள்தல்.

5. குறித்த நேரத்தில் எடுத்துக் கொண்ட எந்த ஒரு செயலையும் முடித்து விடுதல்.

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் அன்றாட வீட்டுப் பணிகளில் இப்படிப்பட்ட பயிற்சியைத் தொடர்ந்து அளித்து வந்தால் – குழந்தைகள் வளர்ந்து ஆளாகி அவர்கள் ஈடுபடுகின்ற எல்லாச் செயல் பாடுகளிலும் இந்த Good work habit அவர்களுக்குக் கை கொடுக்கும்.

சரி தானே?

படிப்பு வராத குழந்தைகளைப் படிக்க வைப்பது எப்படி?


எல்லாக் குழந்தைகளையுமே அல்லாஹு தஆலா சுரங்கங்களாகவே தான் படைத்து இவ்வுலகுக்கு அனுப்பி வைக்கிறான். குழந்தைகளில் சிலரை இயல்பிலேயே “திறமை உள்ளவர்களாகவும்” வேறு சிலரை “திறமை அற்றவர்களாகவும்” படைப்பதில்லை இறைவன். எல்லாக் குழந்தைகளுமே சில அல்லது பல உள் ஆற்றல்களுடன் தான் பிறக்கின்றன.

ஆனால் – நாம் நமது குழந்தைகளைப் பள்ளிக்கூடங்களில் சேர்த்த பின்பு, சில காலம் கழித்து பள்ளிகளின் பொறுப்பாளர்கள் நம்மை அழைத்துச் சொல்வார்கள்:


“உங்கள் குழந்தைக்கு படிப்பு வரவில்லை!” சிறப்பு வகுப்புகள் எல்லாம் எடுத்த பிறகும் எந்த முன்னேற்றமும் இல்லை!

எனவே – Your child is unfit for our school! – என்று சொல்லி TC கொடுத்து நம்மை அனுப்பி விடுவார்கள்!!

இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் பெற்றோர்கள் திகைத்து விடுகிறார்கள்.

படிப்பு வராத குழந்தை என்று முத்திரை குத்தப்பட்ட குழந்தைக்கு அடுத்து நாம் என்ன செய்திட வேண்டும் என்று புரியாதவர்களாக – வேறு சில பள்ளிக்கூடங்களை நோக்கிச் செல்கிறார்கள். அங்கு சேர்த்த சில காலத்துக்குப் பின் அதே அழைப்பு…. அதே விளக்கம்… அதே நீக்கம்…..

இக்கட்டுரை குறிப்பாக அத்தகைய குழந்தைகளின் பெற்றோர்களுக்காக எழுதப்படுகிறது.

ஒரு குழந்தைக்கு படிப்பு “வராமல் போவதற்கு” பலப்பல காரணிகள் உண்டு!

எனவே எந்த ஒரு குறிப்பிட்ட காரணத்தினால் குழந்தைக்கு படிப்பு வரவில்லை என்பதைக் கண்டறியும் பொறுப்பு பெற்றோர்களுக்கு இருக்கிறது.

படிப்பு வராமல் போவதற்கான காரணங்களில் சிலவற்றை கீழே தருகின்றோம்:

மகிழ்ச்சியான, குதூகலமான, பாதுகாப்பான சூழலில் தான் குழந்தைகள் நன்றாகக் கல்வி கற்கிறார்கள் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

குழந்தைக்கு “பாதுகாப்பற்ற” உணர்வு (insecure) இருந்தால் அக்குழந்தைக்கு படிப்பு வராதாம். Very strict ஆன பெற்றோர்களும், குழந்தைகளை அடிக்கும் பெற்றோர்களும் சற்று கவனிப்பார்களாக.

கவலை மற்றும் மனச்சோர்வுக்கு (depression) ஆளான குழந்தைகளுக்கு மண்டையில் எதுவுமே ஏறாதாம். மனச்சோர்வுக்குக் காரணம் கண்டு அதனை நீக்கினாலே – குழந்தை படிக்கத் துவங்கும். அதற்குத் தேவை குழந்தையின் மீது அக்கரை காட்டும் பெற்றோர்கள்.

பதற்றப்படும் (anxiety) குழந்தைகளும் கற்றுக் கொள்ளவியலாது. குழந்தைகளுக்கு நிதானத்தைக் கற்றுக் கொடுத்தல் பெற்றோர் பெற்றோர் கடமை!

மனத் தூண்டலுக்கு (impulsiveness)ஆளாகும் குழந்தைகளும் சரிவரக் கற்பதில்லையாம். தொலைக்காட்சிப் பெட்டியின் முன் அதிக நேரம் செலவிடும் குழந்தைகள், தான் ஆசைப்படும் எந்த ஒன்றையும் உடனேயே அடைந்திடத் துடிக்கும் குழந்தைகள், செல்லம் கொடுக்கப் படும் குழந்தைகள் எல்லாம் இப்பிரிவில் அடங்குவர். கவனிக்க வேண்டியது பெற்றோர் கடமை!

திட்டப்படும் குழந்தைகள் படிப்பதேயில்லை! “உனக்குப் படிப்பே வராது!” என்றால் “தனக்குப் படிப்பே வராது!” என்று குழந்தை முடிவெடுத்து விடும்!

எனவே பெற்றோர்களே! உங்கள் குழந்தைகளுக்குப் படிப்பு வரவில்லை என்றால் அவர்களை மக்குப் பிள்ளை என்று முத்திரை குத்தி விட வேண்டாம்!

இன்னொன்றையும் பெற்றோர்கள் கவனித்திட வேண்டும். அதாவது உங்கள் குழந்தைகளை நீங்கள் எந்தப் பள்ளியில் சேர்த்திருக்கின்றீர்களோ அந்தப் பள்ளியின் ஆசிரியர்கள் நம் குழந்தைகளுடன் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதையும் பார்த்துக் கொள்ள வேண்டும்.

எல்லாக் குழந்தைகளும் பாடங்களை ஒரே மாதிரியாக கற்றுக் கொள்வதில்லை! குழந்தைகளின் “கற்கும் பாணிகளில்” (learning styles) பல விதங்கள் உண்டு. “காதால் கேட்டு கற்றுக் கொள்தல்” , கண்களால் பார்த்துக் கற்றுக்கொள்தல், எந்த ஒன்றையும் செய்து காட்டுவதன் மூலம் கற்றுக் கொள்தல் – என்பவை அவற்றுள் முக்கியமானவை. உங்கள் குழந்தைகளின் பள்ளியில் பாடங்கள் நடத்தப் படும் முறைகள் குறித்தும் அறிந்து கொள்வதும் நலம்.

எதற்கெடுத்தாலும் அவசரப்படுகிறார்களா குழந்தைகள்?


ஏதாவது ஒன்றை அடைந்திட வேண்டும் என்று மனம் விரும்புகிறது! அந்த ஒன்றை உடனேயே அடைந்திடத் துடிக்கும் தன்மைக்குப் பெயர் தான் மனத் தூண்டல்!

மனத்தூண்டலை ஆங்கிலத்தில் Impulse என்றும் அதனைக் கட்டுப் படுத்துவதை Impulse control என்றும் அழைக்கிறார்கள். பின்விளைவைப் பற்றி யோசிக்காமல் ஒன்றை செய்து விடுவதைத் தான் ஆங்கிலத்தில் Impulsiveness என்று குறிப்பிடுகின்றார்கள்.


குழந்தைகள் இயல்பிலேயே இப்படிப்பட்ட மனத்தூண்டலுக்கு ஆளாகக்கூடியவர்கள் தான்! இந்த அவசரப்படும் தன்மை – குழந்தைக்குக் குழந்தை வேறுபடும்! பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் அவசரப்படும் தன்மை எத்தகையது என்பதைத் தெரிந்து கொள்தல் நல்லது.

மனத்தூண்டலுக்கு ஆளாகி அவசரப்பட்டு ஒன்றை உடனேயே அடைந்திடத் துடிக்கின்ற தன்மை – உங்கள் குழந்தைகளின் வளர்ச்சிக்கு உகந்ததல்ல! இத்தன்மை கட்டுப்படுத்தப் பட்டாக வேண்டும். ஏனெனில் மனதூண்டலின் படி செயல் படும் குழந்தைகளுக்கு தன்னம்பிக்கை சுத்தமாக இருக்காது. தான் எதற்கும் இலாயக்கில்லை என்ற தாழ்வு மனப்பான்மை தவறாது குடி கொண்டிருக்கும். எனவே மற்றவர் மீது இத்தகைய குழந்தைகள் பொறாமைப்படுவார்கள். இத்தகையவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுவது மிக மிகக் கடினம்!

மனக்கட்டுப்பாடு இல்லாத குழந்தைகள் – கல்வியிலும் பின் தங்கி நிற்கிறார்கள் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும் – இவர்கள் வளர்ந்து ஆளானதும் – வன்முறையாளர்களாக மாறுவதற்குக் காரணமே மனக் கட்டுப்பாடு இல்லாமல் போனது தான் என்றும் ஆய்வாளர்கள் கணக்கெடுத்துச் சொல்கிறார்கள்.

மனக் கட்டுப்பாடு மிக்க குழந்தைகள் துணிச்சல் மிக்கவர்களாக விளங்குவார்கள். எடுத்த காரியத்தை முடித்துக் காட்டுவார்கள். மற்றவர்களுடன் இனிமையாகப் பழகுவார்கள். இவர்களே வெற்றியாளர்கள். எனவே குழந்தைகளுக்கான மனக் கட்டுப்பாட்டுப் பயிற்சியினை குழந்தைப் பருவத்திலேயே தொடங்கி தொடர்ந்திட வேண்டியது அவசியமான ஒன்று. இதில், பெற்றோருக்கும், பள்ளிக்கூட ஆசிரியர்களுக்கும் பெரும் பொறுப்பு இருக்கின்றது. மனத்தைக் கட்டுப்படுத்தும் பயிற்சிகளை துவக்கப் பள்ளியிலேயே வைத்து அளித்திட வேண்டும் என்கிறார்கள் உளவியல் வல்லுனர்கள்.

குழந்தைகளின் மனதூண்டலைக் கட்டுப்படுத்த சில வழிமுறைகள்:

1. முதலில் பெற்றோர்கள் – தங்களை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். தாங்களே – குழந்தைகளுக்கு முன்மாதிரியாக – எவ்வித மனத்தூண்டலுக்கும் ஆளாகாதவர்களாக விளங்கிட முயற்சிக்க வேண்டும். எந்த ஒரு காரியத்தையும் அவசரப்பட்டு அவசரப்பட்டு செய்திடாமல் எந்த ஒன்றையும் நிதானமாக செயல் படுத்துகின்ற சூழ்நிலை இல்லங்களில் நிலவிட வேண்டும். குழந்தைகளும் அவ்வாறே செயல்படக் கற்றுக் கொண்டு விடுவார்கள். வீடுகளை ஒழுங்கு படுத்தி வைத்தால் மட்டுமே எந்த ஒன்றையும் நிதானமாக செய்திட முடியும். இன்ன நேரத்தில் இதைச் செய்திட வேண்டும், இன்ன இடத்தில் இது இருந்திட வேண்டும் என்பன போன்ற கட்டுப்பாடுகள் மிக்க இல்லங்களில் தான் (organized family) குழந்தைகள் மிக இலகுவாக மனக்கட்டுப்பாட்டைக் கற்றுக் கொள்கிறார்கள்.

2. மனத்தூண்டலைக் கட்டுப் படுத்திட தொழுகை ஒரு பயிற்சியாகும். ஏழு வயதிலிருந்தே நாம் குழந்தைகளைத் தொழுகைக்குப் பழக்கப் படுத்தக் கூடியவர்களாக விளங்கினால், குழந்தைகள் “கட்டுப்பாடு” (disciplined) மிக்கவர்களாக விளங்குவார்கள். ஐந்து வேளை அனுதினமும் தொழுது வந்தால் – மனோ இச்சையைக் கட்டுக்குள் வைத்திருக்கலாம் என்பதை எளிதில் நம்மால் புரிந்து கொள்ள முடியும். மனக்கட்டுப்பாட்டிற்கான மிகச் சிறந்த பயிற்சி தொழுகையாகும்!

3. சில குழந்தைகள் மனத்தூண்டலுக்கு ஆட்பட்டு விட்டால் அடம் பிடிக்கத் தொடங்கி விடுவார்கள். தொண்டையில் சதை வளர்ந்திருக்கும். மருத்துவர் ஐஸ் போன்ற குளிர் பொருட்களைக் கொடுத்திட வேண்டாம் என்று கட்டுப்பாடு விதித்திருப்பார். ஆனால் குழந்தையோ, ” எனக்கு ஐஸ்கிரீம் வேண்டும், அதுவும் இப்போதே வேண்டும்” என்று அடம் பிடிக்கும். அப்போது பெற்றோர்கள் உறுதியுடன் நடந்து கொண்டிட வேண்டும். எப்போதெல்லாம் குழந்தைகள் இச்சைப்படி நடக்க முயற்சிக்கிறார்களோ – அப்போதே அதனைத் தடுத்திடுவதில் உறுதி காட்டிட வேண்டும்.

உங்கள் குழந்தைகளை நீங்களே குறைத்து மதிப்பிட்டு விடாதீர்கள்!


“மக்கள் சுரங்கங்கள்” – எனும் இந்த நபி மொழியை நாம் திரும்பவும் இங்கே ஆய்வுக்கு எடுத்துக் கொள்கிறோம். இக்கட்டுரையில் இன்னும் ஒரு பாடத்தைப் படித்துக் கொள்வோம்.

மனிதர்கள் அனைவருமே தங்கத்தைப் போல வெள்ளியைப் போல் எனும் போது நீங்கள் பெற்றெடுத்த செல்வங்கள் அனைவருமே விலை மதிப்பற்ற சுரங்கங்கள் தானே! They are so precious!


ஆங்கிலத்தில் ஒரு சொற் பிரயோகம் உண்டு: அதனை Self Esteem என்று சொல்கிறார்கள். இதற்கு “சுய மதிப்பு” என்று பொருள் கொள்ளலாம். அதாவது – நமக்கு நாமே போட்டுக் கொள்கின்ற மதிப்பு!! அதாவது நமது மதிப்பை நாம் தான் நிர்ணயம் செய்து கொள்கிறோம். இந்த Self Esteem நமது வாழ்க்கையின் வெற்றிக்கு மிக அவசியம்.

நம்மைப் பற்றிய நமது மதிப்பீடு குறைவாக இருக்கிறது என்றால் இதனை Low Self Esteem என்கிறார்கள். இப்படி குறைவாக தங்களை மதிப்பிட்டுக் கொள்பவர்கள் தான் தன்னம்பிக்கை உடையவர்களாக விளங்கிட இயலாது! எனவே பெற்றோர்கள் செய்திட வேண்டியது எல்லாம் தங்கள் குழந்தைகளின் சுய மதிப்பீட்டை “கட்டி எழுப்பிட வேண்டும்”. (to build a strong self esteem). எப்படி கட்டி எழுப்புவது உங்கள் குழந்தைகளின் சுய மதிப்பீட்டை?

இதற்கு இரண்டு வழிகள் தான் உண்டு!

ஒன்று – உங்கள் குழந்தைகளுக்கும் உங்களைப் படைத்த இறைவனுக்கும் ஒரு உறவுப் பாலத்தை அமைத்துக் கொடுப்பதன் மூலம்.

இரண்டு – தன்னால் இவ்வுலகுக்கு தனது திறமைகளைக் கொண்டு நல்லதொரு பங்களிப்பைச் செய்திட முடியும்! - என்று உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் நம்பிக்கை ஊட்டுவதன் மூலம்.

இது எப்போது சாத்தியம் என்றால் – ஒருவன் தனது உள்ளாற்றல்களைக் கண்டு பிடித்திடும் போது தான். இதனை ஆங்கிலத்தில் Self discovery என்கிறார்கள்.

இப்போது முதல் வழியை மட்டும் இங்கே ஆய்வுக்கு எடுத்துக் கொள்வோம்:

என்னைப் படைத்த இறைவனை நான் ஏற்றுக் கொள்ளும் போது – எனக்குள் அது ஏற்படுத்தும் மாற்றம் என்ன தெரியுமா?

அவனே என்னைப் படைத்தவன்! அவனே என்னை பரிபாலிப்பவன்! அவனே என் தேவைகள் அனைத்தையும் கவனித்துக் கொள்பவன்! அவனே என் எஜமானன்! நான் என்னைப் படைத்த என் இறைவனின் அடிமை! – என்ற சிந்தனை கிளர்ந்தெழுகின்றது!

இப்படி ஒரு குழந்தை சிந்திப்பதால் அவனது மதிப்பீடு எப்படி உயரும் என்று ஒருவர் கேட்கலாம்?

நான் என் இறைவனின் அடிமை எனில் நான் என் இறைவனைத் தவிர வேறு யாருக்கும் நான் அடிமை இல்லை என்பதும் பொருள்!

“நான் என் இறைவனைத் தவிர் வேறு யாருக்கும் அடிமை இல்லை!” – என்று ஒரு குழந்தை சிந்திக்கும் போது அவனது மதிப்பீடு உயருகிறதா இல்லையா?

நபி மொழி ஒன்று உண்டு:

“உங்கள் குழந்தைகளை கண்ணியப்படுத்துங்கள்!” – (இப்னு மாஜா)

இந்த நபி மொழியின் படி உங்கள் மகளை நீங்கள் கண்ணியப்படுத்திட வேண்டும்! எப்படி கண்ணியப்படுத்துவீர்கள்?

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் – “நீ மதிப்பு மிக்கவன்! நீ உயர்வானவன்! நீ ஆற்றல் மிக்கவன்! நீ சிறந்தவன்! நீ நல்லவன்! நீ ஒரு பொக்கிஷம்! நீ ஒரு சுரங்கம்! நீ அல்லாஹ்வை ஈமான் கொண்டவன்! அவன் உன்னைக் கண்ணியப்படுத்தியிருக்கின்றான்! உன்னை ஒரு பொக்கிஷம் என்கிறான் அவன்! நீ விலை மதிப்பற்றவன்! அல்லாஹு தஆலா உன்னை எல்லா நிலைகளிலும் சிறப்பாக்கி வைப்பான்!” – என்றெல்லாம் நாளும் பொழுதும் சொல்லி சொல்லியே வளர்த்திட வேண்டும்! அவர்களை ஒருக்காலும் நீங்களே குறைத்து மதிப்பிட்டு விடக் கூடாது!

பெற்றோர்களே நீங்கள் ஏழையாக இருக்கலாம்! உங்கள் குழந்தைகளுக்கு மற்றவர்களைப்போல் தாராளமாக செலவு செய்திட இயலாமல் போகலாம். அதனால் என்ன? நீங்களும் ஒரு சுரங்கம் தான்! உங்கள் குழந்தையும் ஒரு சுரங்கம் தான்!

உங்கள் குழந்தை கருப்பாக இருக்கலாம். அல்லது குட்டையாக இருக்கலாம். அதனால் என்ன? அப்போதும் உங்கள் குழந்தைகள் சுரங்கங்கள் தான்!

அதே நேரத்தில் உங்கள் குழந்தைகளின் திறமைகள் கண்டுபிடிக்கப் பட்டாக வேண்டும். இல்லாவிட்டால் அவர்களுக்குள் தாழ்வு மனப்பான்மை ஏற்படுவதைத் தவிர்த்திட இயலாது! இது குறித்து நாம் பின்னர் பார்ப்போம்.

இன்னொரு மிக முக்கியமான பாடம்:

தாங்கள் மதிப்பு மிக்கவர்கள் என்பதை உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் உணர்த்துவது போலவே – மற்ற குழந்தைகளும் மதிப்பு மிக்கவர்களே என்றும் அவர்கள் அனைவரையும் அவ்வாறே “மதித்திட வேண்டும்” என்பதையும் சேர்த்தே கற்றுக் கொடுங்கள்.

யாரையும் அவர்கள் மட்டம் தட்டிப் பேசிட அனுமதிக்காதீர்கள். உங்கள் வீட்டு வேலைக்காரருக்குக் கூட உங்கள் குழந்தைகள் மதிப்பளிக்கக் கற்றுக் கொடுங்கள். நீங்களும் மதிப்பளியுங்கள்.

யாரும் யாரையும் இழிவாகக் கருதிட வேண்டாம் என்பது நபிமொழி.

நபி (ஸல்) அவர்கள் வரலாற்றில் காணக் கிடைக்கின்ற ஒரு நிகழ்ச்சி இது:

மக்களால் அவ்வளவாக மதிக்கப்படாத அடிமை ஒருவர். இவர் நபி ஸல் அவர்களை சந்திக்க அவ்வப்போது மதினா வருவார். வரும்போதெல்லாம் தவறாமல் நபியவர்களுக்கு ஏதேனும் ஒரு அன்பளிப்பு ஒன்றை வாங்கி வரத் தவறுவதில்லை.

ஒரு முறை – அவர் நபியவர்களை சந்திக்க மதினா வந்து அன்பளிப்புப் பொருள் ஒன்றை வாங்க அங்காடி ஒன்றுக்கு சென்றிருந்தார். இவரைக் கண்ட மற்ற நபித்தோழர்கள், அவருடைய வருகை குறித்து நபியவர்களிடம் தெரிவித்து விட்டனர். உடனே நபியவர்கள் அந்த அங்காடிக்குச் சென்று, அவரை பின் பக்கமாகச் சென்று கட்டிப் பிடித்துக் கொண்டு, “இவரை விலைக்கு வாங்குவார் யாரும் உண்டா?” – என்று கேட்டார்கள்.

தன்னைக் கட்டிப்பிடித்தது நபியவர்கள் என்று அறியாத அவர், தன்னை விடுவித்துக் கொண்டு திரும்பிப் பார்த்திட அது நபியவர்கள் தான் என்பதைக் கண்ட அவர், “யார் இந்த அடிமையை விலை கொடுத்து வாங்குவார்கள் நபியே?” என்று கேட்க, அல்லாஹ்விடத்தில் உமது மதிப்பு மிக மிக அதிகமே” என்றார்களாம்.

இதுவே நமது மற்றும் நமது குழந்தைகளின் மனப்பாங்காக அமைந்திட வேண்டும்!

ஒவ்வொரு குழந்தையும் ஒரு தனிப்பிறவியே!


“மக்கள் சுரங்கங்கள்! தங்கத்தைப் போல! வெள்ளியைப் போல!” – இந்த நபி மொழியில் நாம் பெற்றோர்கள் இன்னும் ஒரு பாடத்தையும் படித்துக் கொள்ள வேண்டியுள்ளது!

தங்கச் சுரங்கத்தில் நமக்குத் தங்கம் தான் கிடைக்கும். வெள்ளிச் சுரங்கத்தில் நமக்கு வெள்ளி மட்டும் தான் கிடைக்கும். வெள்ளிச் சுரங்கத்தில் தங்கம் கிடைப்பது அரிது! தங்கச் சுரங்கத்தில் பெட்ரோலியம் கிடைப்பது அரிது! இப்படித் தான் ஒவ்வொன்றும்.


அது போலத் தான் மனிதனும் அவன் வளங்களும்! இறைவனின் படைப்பில் மனிதம் ஒரு அற்புதமான படைப்பு! மனிதப் படைப்பில் எல்லா மனிதர்களுக்கும் பொதுவான அம்சங்கள் பல இருந்தாலும், இரண்டு மனிதர்கள் கூட வெவ்வேறானவர்களே!

ஒருவர் முகம் போன்று இன்னொருவர் முகம் இருப்பதில்லை! ஒருவர் குரல் போன்று இன்னொருவர் குரல் அமைவதில்லை. அது போலவே அறிவாற்றலில் மனிதர்கள் வெவ்வேறானவர்களே! அழகிய பண்புகளைப் பெற்றிருப்பதில் மனிதர்கள் வெவ்வேறானவர்களே! ஆன்மிக உணர்வுகளிலும் இரண்டு மனிதர்கள் ஒரே மாதிரியானவர்கள் அன்று! மன வலிமை சார்ந்த அம்சங்களிலும், இரண்டு மனிதர்கள் ஒன்று படுவதில்லை!

அப்படியானால் என்ன பொருள்? ஒவ்வொரு மனிதனும் ஒரு தனிப்பிறவியே! இந்த முடிவுக்கு நாம் வந்தால், நம்மில் பல மாற்றங்கள் தானாகவே ஏற்படும்.

“எதிர் வீட்டுக் குழந்தை அடம் பிடிக்காமல் ஐந்து நிமிடங்களில் சாப்பிட்டு விடுகிறது; ஆனால் எனது குழந்தை மட்டும் பாடாய்ப் படுத்துகிறது” – என்று பேசுவது அறிவீனம்.

“பக்கத்து வீட்டுப் பையன் ஓடி ஓடி வேலை பார்ப்பதில் படு சுறுசுறுப்பு; ஆனால் என் பையன் மட்டும் வீட்டை விட்டு அசையவே மாட்டேன்கிறான்” – என்று ஒப்பிடுவது மிகத் தவறு.

“கணக்கில் உன் நண்பன் நூற்றுக்கு நூறு வாங்கும் போது உனக்கென்ன கேடு” – என்று மகனைத் திட்டுவதும் சரியன்று.

அது போலவே – மனிதர்கள் குணங்களிலும் வேறு பட்டு நிற்கிறார்கள்.

நபி மொழி உணர்த்தும் செய்தி:

நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கிடையே (ரிஸ்கை) வாழ்வாதாரங்களை பங்கிட்டது போல நற்குணங்களையும் உங்களுக்கிடையே பங்கிட்டுள்ளான். (நூல்: அஹ்மது)

ஆம்! நபித் தோழர்களின் குண நலன்களை நாம் ஆய்ந்தோம் என்றாலே தெள்ளென இது விளங்கும்.

அபூ பக்ர் சித்தீக் (ரலி) – உண்மையாளராகிறார்.

உமர் (ரலி) – நீதிக்கு ஒரு உமர் என்று பெயர் எடுக்கிறார்.

உத்மான் (ரலி) – வெட்க உணர்வை முழுமைப் படுத்தியவர் எனப் பெயர் பெறுகிறார்.

அலீ (ரலி) – வீரத்துக்கு முன்னுதாரணமாய்த் திகழ்கிறார்.

வணிகத் திறமையில் அப்துர் ரஹ்மான் பின் அஃவ்ப் (ரலி) முன்னிலையில் நிற்கிறார்.

இனிய குரலுக்குச் சொந்தக் காரராக பிலால் (ரலி) – இடம் பெற்றுக் கொள்கிறார்.

பறவைகளைக் கொஞ்சி வளர்க்க நுஃகைர் (ரலி) என்ற ஒரு நபித் தோழர் முன் வருகிறார்.

உடல் வலிமையை வெளிப் படுத்திக் காட்டுவதில் சில நபித் தோழர்கள் சிறந்து விளங்குகிறார்கள்.

இந்த ஒரு பாடத்தை இன்று உலகமே ஏற்றுக் கொண்டுள்ளது; எனவே இப்போது கேள்விகள் பல எழுந்துள்ளன:

ஒரே ஒரு திறமையை வைத்து அளவிடப் படுகின்ற IQ Test , எல்லாருடைய அறிவுத் திறனையும் கணித்துச் சொல்வது எப்படி சரியான அளவீடாக இருக்கும் என்ற கேள்வி இப்போது Multiple Intelligence எனும் புதிய கோட்பாட்டை முன்னிருத்தி யிருக்கின்றது.

மாணவர்கள் ஒவ்வொருவரும் தனித்தன்மை வாய்ந்தவர்கள் எனும்போது – அனைவருக்கும் ஒரே பாடத்திட்டம் என்பது எப்படி சரியாகும் என்று கேள்வி கேட்கத் தொடங்கி விட்டார்கள் நவீன கல்வியாளர்கள். ஒரே விதமான தேர்வு முறையில் (Examination) மாணவர்களின் வெற்றி தோல்வியை எப்படி தீர்மானிக்க முடியும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

குழந்தை வளர்ப்பில் – குழந்தைகளின் ஏதாவது ஒரே ஒரு பிரச்னைக்குக் கூட பொதுவான ஒரு தீர்வை (solution) முன் வைத்து விட முடியாது; ஏனெனில் ஒரு குழந்தைக்கு அது சரி வரலாம்; இன்னொரு குழந்தைக்கும் அதே வழி முறை சரி வரும் என்று எதிர்பார்க்க முடியாது.

இதில் இன்னொரு முக்கியமான பாடத்தையும் மாணவர்களுக்கு நாம் முன் வைக்கலாம்:

இன்னொரு மாணவனோடு ஒருகாலமும் உங்களை ஒப்பிட்டுக் கொள்ள வேண்டாம். “அவனைப் போல் என்னால் படிக்க முடியவில்லையே, அவன் அரை மணி நேரம் படித்து விட்டு, எண்பது மதிப்பெண் பெறுகிறான்; ஆனால் நான் இரண்டு மணி நேரம் படிக்கிறேன், எனக்கு மதிப்பெண் ஐம்பதைத் தாண்ட மாட்டேன் என்கிறதே!” – என்றெல்லாம் ஒப்பிடும் போது விளைவு தாழ்வு மனப்பான்மையே!

இது குறித்து இன்னும் நாம் இன்ஷா அல்லாஹ் விரிவாக எழுதுவோம்.

மறைந்து கிடக்கின்றன – குழந்தைகளின் திறமைகள்!


“மக்கள் சுரங்கங்கள்! தங்கத்தைப் போல! வெள்ளியைப் போல!” – இந்த நபி மொழியில் பெற்றோர்கள் படித்துக் கொள்ள வேண்டிய பாடங்கள் நிறைய உண்டு. ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.


முதல் பாடம்:

அது தங்கச் சுரங்கமோ அல்லது வெள்ளிச் சுரங்கமோ அல்லது பெட்ரோலியச் சுரங்கமோ – இவை அனைத்தும் மறைந்தே கிடக்கின்றன! அவை ஒரு காலத்தில் கண்டு பிடிக்கப் படுகின்றன! பின்னரே அங்கிருந்து அவை அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாகத் தோண்டி எடுக்கப் படுகின்றன.

அது போலத் தான் மனித வளங்களும். நமது எல்லா வளங்களும் மறைந்தே கிடக்கின்றன. அதாவது – குழந்தையாக நாம் பிறக்கும் போது – உடலளவில் மிகவும் பலவீனமாகவும், அறிவைப் பொறுத்தவரை ஒன்றுமே அறியாத நிலையிலும் தான் பிறக்கின்றோம். என்னென்ன குணங்களுடன் நாம் பிறக்கின்றோம், என்னென்ன திறமைகள் நம்மிடம் ஒளிந்திருக்கின்றன – ஒன்றுமே நமக்குத் தெரியாது!

“உங்கள் தாய்மார்களின் வயிறுகளிலிருந்து நீங்கள் ஒன்றுமே அறியாதவர்களாக இருந்த நிலையில் உங்களை அல்லாஹ் வெளிப்படுத்துகிறான்; அன்றியும் உங்களுக்குச் செவிப்புலனையும், பார்வைகளையும், இதயங்களையும் – நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டு – அவனே அமைத்தான். (16:78)

அப்படியானால் அவை அனைத்தும் கண்டுபிடிக்கப் பட்டாக வேண்டும். எப்படி?

பெற்றோர்களே! குழந்தை வளர்ப்பில் உங்களுக்கு மகத்தான பொறுப்பு ஒன்று இருக்கிறது. அது உங்கள் குழந்தைகளின் மனித வளங்கள் என்னென்ன என்று நீங்களே கண்டு பிடிப்பது தான்!

அதற்காக நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் – அவர்களை நீங்கள் சற்றே உற்று கவனியுங்கள்! அவ்வளவு தான்! Obeserve your children!

இங்கே மூன்று சம்பவங்கள் உங்கள் சிந்தனைக்காகத் தரப் படுகின்றன:

ஒன்று:

நபி ஸல் அவர்கள் பெரிய தந்தை அப்பாஸ் (ரலி) அவர்களின் மகனார் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள். அவர் சிறு வயதாக இருக்கும்போது, அண்ணலார் வீட்டில் இரவுத் தங்குவார்கள். அவர்களின் சிறிய தாயார் மைமூனா (ரலி) அவர்களை அண்ணலார் மண முடித்திருந்தார்கள்.

ஒரு நாள் பின் இரவில் அண்ணலார் தஹஜ்ஜுத் தொழுகைக்காக எழுந்த போது, சிறு நீர் தேவைக்காக சென்றார்கள். அப்போது வெளியில் உளூ செய்ய தண்ணீர் தயாராக எடுத்து வைக்கப் பட்டிருந்தது. அவ்வாறு தண்ணீர் எடுத்து வைத்தது யார் என்று பார்த்த போது, சிறுவர் இப்னு அப்பாஸ் தான் எனத் தெரிய வந்தது.

இரவில் தான் கண் விழிப்பதை எதிர்பார்த்து, தமக்குத் தெரியாமல் பணிவிடை செய்வதைப் பார்த்த பெருமானார் மன மகிழ்வடைந்தார்கள். அதற்காக சிறுவர் இப்னு அப்பாஸை பாராட்டி, “அல்லாஹும்ம ஃபக்கிஹ்-ஹூ ஃபித்தீனி வ ‘அல்லிம்ஹுத் – தஃவீல் – யா அல்லாஹ்! இவருக்கு மார்க்க சட்ட விளக்கத்தைத் தருவாயாக! திருக் குர் ஆனின் விரிவுரையை இவருக்குக் கற்றுத் தருவாயாக! – என்று பிரார்த்தனையும் செய்தார்கள்.

இரண்டு:

நபிகள் (ஸல்) அவர்கள் ஒரு சமயம் கடைத்தெருவுக்குச் சென்றார்கள். அங்கு அப்துல்லாஹ் பின் ஜஃபர் (ரலி) என்ற சிறுவர் குழந்தைகளின் விளையாட்டுச் சாமான்கள் விற்றுக் கொண்டிருப்பதைப் பார்த்து அவரை அண்ணலார் பாராட்டினார்கள். “அல்லாஹும்ம பாரிக் லஹூ ஃபீ பை-இ-ஹீ!” – யா அல்லாஹ்! இவரின் வியாபாரத்தில் பரக்கத் செய்வாயாக! – என்று பிரார்த்தனையும் செய்தார்கள். (நூல்: அபூ தாவூத்)

மூன்று:

உமைர் (ரலி) என்ற சிறுவரபொரு குருவி வளர்த்து வந்தார். அவர் வீட்டு வழியாக அண்ணலார் செல்ல நேர்ந்தால், ” யா உமைர்! மா ஃபஅலன் நுஃகைர் – உமைரே! உனது சின்னக் குருவி என்ன செய்கிறது? என்று அக்கரையுடன் விசாரிப்பார்கள்.

இந்த மூன்று சம்பவங்களில் இருந்து நாம் பெற வேண்டிய பாடங்கள்:

ஒன்று: குழந்தைகளை அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று சற்றே கவனியுங்கள்.

இரண்டு: அவர்களை மனம் திறந்து பாராட்டுங்கள். அவர்களுக்காக துஆவும் செய்யுங்கள்.

மூன்று: அவர்கள் செய்யும் செயல் மிகச் சாதாரணமானது தானே என்று விட்டு விடாதீர்கள். அவற்றில் தான் உங்கள் குழந்தைகளின் மனித வளங்கள் பொதிந்து கிடக்கின்றன!

உங்கள் குழந்தைகள் சுரங்கங்கள்!


“மனிதர்கள் சுரங்கங்கள் – தங்கத்தைப் போல, வெள்ளியைப்போல!” – என்றார்கள் இறைத்தூதர் முஹம்மது நபி(சல்) அவர்கள்.

சுரங்கம் என்றால் என்ன? தங்கம், வெள்ளி போன்ற விலை மதிப்பிற்கரிய பொருட்கள் கனிமங்களாக, தாதுப் பொருட்களாக தோண்டத் தோண்டக் கிடைத்துக் கொண்டே இருக்கும் இடம் தானே சுரங்கம் எனப்படுவது. சுரங்கங்களில் பல வகைகள் உண்டு. தங்கச் சுரங்கம், வெள்ளிச் சுரங்கம், நிலக்கரிச் சுரங்கம் – அவற்றுள் சிலவாகும். சுரங்கங்களிலுள்ள தாதுப் பொருட்களைத் தோண்டி எடுத்துத் தூய்மைப் படுத்தினால் நமக்குச் சுத்தமான தங்கம் கிடைக்கும், வெள்ளி கிடைக்கும், நிலக்கரி கிடைக்கும். அவை மக்களுக்குப் பயன் படும்.


அது போலவே மனிதனும் ஒரு சுரங்கம் தான். ஒவ்வொரு மனிதனுக்குள்ளேயும் பொதிந்து கிடக்கின்ற கருவூலங்கள் – மனித வளங்கள் – ஏராளம். அந்த மனித வளங்களைத் தோண்டித் தோண்டி, அள்ளி அள்ளி எடுக்கலாம். தூய்மைப் படுத்தலாம். பத்தரை மாற்றுத் தங்கங்களாக மிளிரச் செய்யலாம். அப்படிச் செய்திடும்போது மனிதன் உண்மை மனிதனாக மாற்றப் படுகின்றான். அப்படி என்ன வளங்கள் தான் மனிதனுக்குள் பொதித்து வைக்கப் பட்டிருக்கின்றன என்பதைத் தொடர்ந்து வரும் கட்டுரைகளில் அலசுவோம்.

இங்கே நாம் பெற்றோர்களுக்குச் சொல்ல விரும்புவது இது தான்: பெற்றோர்களே! உங்கள் குழந்தைகள் அனைவருமே சுரங்கங்கள் தாம்! இந்த நபிமொழியின் அடிப்படையில் – பெற்றோர்களுக்கு ஒரு மிகப் பெரிய பொறுப்பு இருக்கின்றது. அது என்னவெனில் – உங்கள் குழந்தைகள் எப்படிப்பட்ட சுரங்கங்கள் என்பதைக் கண்டுபிடிப்பது; அந்த சுரங்கங்களில் உள்ள “பொக்கிஷங்களை” வெளியில் கொண்டு வந்து வளர்த்தெடுப்பது; உங்கள் குழந்தைகளை வெற்றியாளர்களாக மாற்றிக் காட்டுவது! -இதுவே உங்களின் அந்த மகத்தான பொறுப்பாகும்.

அந்தப் பொறுப்பை செவ்வனே நிறைவேற்றிட ஒவ்வொரு பெற்றோரும் அறிந்து வைத்திருக்க வேண்டிய மிக முக்கியமான ஒன்று தான் – இஸ்லாத்தில் மனித வள மேம்பாடு குறித்த அறிவு! எனவே இதைத் தொடர்ந்து வருகின்ற இஸ்லாத்தின் பார்வையில் மனித வள மேம்பாடு குறித்த கட்டுரைகளை சற்றே நிதானமாகப் படித்து சிந்தியுங்கள். அந்த சிந்தனை – உங்கள் குழந்தைகளை சிறப்பாக வளர்த்திட நிச்சயம் உதவும் இன்ஷா அல்லாஹ்!

எப்படித் திருத்துவது குழந்தைகளை?


பெற்றோர்களிடமும் ஆசிரியர்களிடமும் – குழந்தைகளையும் மாணவர்களையும் திட்டாதீர்கள், அடிக்காதீர்கள் என்று சொன்னால் – பின்பு எப்படித் தான் அவர்களைத் திருத்துவது என்று கேட்கிறார்கள்.

குழந்தைகளை திட்டுவதனாலும் அடிப்பதனாலும் ஏற்படுகின்ற பாரதூரமான விளைவுகளைப் பற்றி நாம் முன்னரே விளக்கியுள்ளோம்.


இப்போது நமது அறிவுரைகளை மீறுகின்ற குழந்தைகளை எப்படி அடிக்காமலும் திட்டாமலும் திருத்துவது என்பதைப் பார்ப்போம்.

குழந்தைகள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமானவர்களே. எல்லாக் குழந்தைகளும் ஒன்று போலவே இருக்க மாட்டார்கள், ஒன்று போலவே செயல் பட மாட்டார்கள்.

எனினும் பெரும்பாலான குழந்தைகள் பெரியவர்களின் அறிவுறுத்தல்களுக்கு கட்டுப்பட்டு நடப்பவர்களாகவே தான் இருப்பார்கள். ஒரு ஆய்வின் படி சுமார் 85% குழந்தைகள் இப்படிப்பட்டவர்கள் தானாம். இவர்களை compliant children என்று அழைக்கிறார்கள்,

ஆனால் மீதி சுமார் 15% குழந்தைகள் தான் எந்த அறிவுறுத்தல்களுக்கும் அப்படியே கட்டுப் படுவதில்லையாம். இவர்களை deviant children என்று அழைக்கிறார்கள்,

பள்ளிக் கூடங்களில் ஏற்படுகின்ற பெரும்பாலான பிரச்னைகள் இத்தகைய குழந்தைகளால் தான் ஏற்படுகின்றனவாம்.

இத்தகையவர்கள் பெற்றோர்களின் எந்த அறிவுறுத்தல்களுக்கும் கட்டுப் பட மாட்டார்கள். சட்டங்களை மீறுவார்கள். பெற்றோர்களுக்கு பெரும் சோதனையாக விளங்குவார்கள். எங்களுக்கு ஏன் இப்படி ஒரு பிள்ளை வந்து பிறந்துள்ளதோ என்று கூட பெற்றவர்கள் அங்கலாய்ப்பது உண்டு.

ஒன்றைச் செய்யாதே என்றால் அதனைச் செய்தே காட்டுவார்கள். ஒன்றைச் செய் என்றால் செய்யவே மாட்டார்கள்.

“வீட்டுக்குள் சிறிய குழந்தைகள் இருக்கின்றனர். பந்து விளையாடுவதாக இருந்தால் வெளியே போய் விளையாடுங்கள் என்பார் தாய். ஆனால் தாய் கொஞ்சம் அங்கே இங்கே போயிருக்கும் நேரம் பார்த்து வீட்டுக்குள்ளேயே விளையாடத் தொடங்கி விடுவார்கள். கேட்டால் நாங்கள் குழந்தைகள் மீது படாமல் விளையாடுவோம் என்று சமாளிப்பார்கள். பொறுமை இழப்பார் தாய்! இத்தகைய குழந்தைகளை strong willed children என்றும் அழைக்கிறார்கள்.

இது போன்ற சூழல்களில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது பெரும்பாலான பெற்றோர்களுக்குத் தெரிவதில்லை. ஒவ்வொரு பெற்றோரும் அவரவர் விருப்பம் போல ஒவ்வொரு வழிமுறையைப் பின் பற்றுவார்கள்.

ஒரு சில பெற்றோர்கள் திட்டுவது, அடிப்பது என்று “கடினமாக தண்டிக்கும்” வழிமுறையைப் பின்பற்றுவார்கள்.

வேறு சில பெற்றோர்களோ – “குழந்தைகள் என்றால் இப்படித் தான் இருப்பார்கள், அவர்களை அப்படியே விட்டு விட வேண்டியது தான்” – என்று விட்டு விடுவார்கள்!

இந்த இரண்டு வழி முறைகளுமே தவறு!

அப்படியானால் என்ன செய்வது?

பொதுவாக குழந்தைகளைத் திருத்துவதில் ஆசிரியர்களும், பெற்றோர்களும் செய்கின்ற தவறு ஒன்று இருக்கின்றது. அதாவது குழந்தைகள் என்ன செய்திட வேண்டும், என்னவெல்லாம் செய்திடக் கூடாது என்பதனை “வாய் மொழி” வழியே அறிவுறுத்துவது மட்டுமே போதும் என்று எண்ணுகிறார்கள். இதனை ஆங்கிலத்தில் verbal step என்று அழைக்கிறார்கள். ஆனால் இந்த வாய்மொழி அறிவுறுத்தல் மட்டுமே இப்படிப்பட்ட குழந்தைகளுக்குப் போதாது.

இன்னொரு படி நாம் மேலே செல்ல வேண்டும். அதற்குப் பெயர் தான் – “செயல் வழி அறிவுறுத்தல்”. அதாவது – Action step!

அது என்ன – செயல் வழி அறிவுறுத்தல் – என்கிறீர்களா?

மேலே சொல்லப் பட்ட அதே உதாரணத்துடன் விளக்குவோம்:

தாய் சொல்கிறார்; “வீட்டுக்குள்ளே பந்து விளையாடக் கூடாது. கைக்குழந்தை தூங்கிக் கொண்டிருக்கிறது.”

ஆனால் குழந்தையின் அண்ணன்மார்கள் இரண்டு பேரும் வீட்டுக்குள்ளேயே பந்தை எடுத்து விளையாடத் தொடங்கி விடுகிறார்கள்.

தாய் இதனை கவனித்து விடுகிறார். “என்ன? நான் முன்பே சொல்லியிருக்கின்றேனே, வீட்டுக்குள் பந்து விளையாடக் கூடாது என்று; வெளியே போய் விளையாடுங்கள்; அடுத்த தடவை நீங்கள் உள்ளே பந்து விளையாடுவதைப் பார்த்தால் பந்தை எடுத்து உள்ளே வைத்து விடுவேன், சரிதானே?” என்று சொல்லி விட்டு நகர்கிறார். இது தான் வாய் மொழி அறிவுறுத்தல்.

ஆனால் அந்த பெரிய குழந்தைகள் இருவரும் மீண்டும் பந்தைப் போட்டு வீட்டுக்குள்ளேயே விளையாட்டைத் தொடர்கிறார்கள். சற்று நேரத்தில் தாய் அங்கு வந்து சேர்கிறார்.

உடனே அவர்கள் அருகில் சென்று அந்த பந்தை அவர்களிடமிருந்து பறித்துக் கொண்டு – இன்று உங்களுக்கு பந்து விளையாட்டு அவ்வளவு தான்; சொன்ன பேச்சைக் கேட்பீர்கள் என்றால் நாளை பார்த்துக் கொள்ளலாம் என்று உறுதியாகச் சொல்லி விட்டு பந்தை பத்திரமாக எடுத்து அலமாரியில் வைத்து மறக்காமல் பூட்டி சாவியை எடுத்துச் சென்று விடுகிறார். .

இது தான் செயல் வழி அறிவுறுத்தல்.

அதாவது தான் செய்த தவறுக்கான விளைவை இப்போது அவர்கள் அனுபவிக்கின்றார்கள். அவ்வளவு தான்!

இது போன்று ஒவ்வொரு தடவையும் குழந்தைகள் கட்டுப் பாடுகளை மீறி நடக்கும் போதும் இதே வழி முறையைப் பின்பற்றினால் வீட்டுக்குள் கட்டுப்பாடு தானே வரும்.

தவறுகள் செய்கின்ற மனிதர்களைத் திருத்துவதற்கு இறைவன் கடை பிடிக்கும் நியதியும் இதுவே தான்!

பின் வரும் இறை வசனத்தை சற்று ஆழமாக நோக்குங்கள்:

மனிதர்களில் கைகள் தேடிக்கொண்ட (தீச் செயல்களின்) காரணத்தால் கடலிலும் தரையிலும் (நாசமும்) குழப்பமும் தோன்றின; (தீமைகளிலிருந்து) அவர்கள் திரும்பிவிடும் பொருட்டு அவர்கள் செய்தார்களே (தீவினைகள்) அவற்றில் சிலவற்றை (இவ்வுலகிலும்) அவர்கள் சுவைக்கும்படி அவன் செய்கிறான். ( அல் குர்ஆன் 30: 41)

சிந்தனைக்குரிய வசனம் தானே இது!

ஆய்வுகள் தெரிவிப்பது என்னவென்றால் இது போன்று குழந்தைகள் செய்கின்ற சிறு சிறு தவறுகளுக்கெல்லாம் இவ்வாறு “விளைவுகளை அனுபவிக்க வைத்திடும்” பயிற்சியைத் தொடர்ந்து வழங்கிடும் போது விளைவுகளைக் குறித்து அஞ்சி தவறுகளிலிருந்து பின் வாங்கிடும் மன நிலை ஒன்று – அவர்களின் மூளை நரம்புகளின் நுணுக்கமான பிணைப்புகளில் ஆழமாகப் பதிவு செய்யப் படுகிறது,

பின்பு தவறு ஒன்றைச் செய்ய நினைக்கும்போது மூளை அவனுக்கு அதன் விளைவு குறித்து எச்சரிக்கத் துவங்கி விடும். பின்னர் தானாகவே இப்படிப்பட்ட குழந்தைகள் கட்டுப்பாடுகளைக் கடை பிடிப்பவர்களாக மாறி விடுவார்கள்.

இதுவே இப்படிப்பட்ட குழந்தைகளுக்கு பெற்றோர்கள் வழங்குகின்ற மிகப்பெரிய நன்கொடை (gift) ஆகும் என்றால் அது மிகையாகாது!

பெற்றோர்களே! தவறு செய்கின்ற குழந்தைகளிடம் நமது அணுகுமுறையை மாற்றிக் கொள்வோமா?