Thursday, April 24, 2014

யார் பக்கம் நியாயம்?

சுன்னத்தான இல்லறம்: 

இங்கே ஒரு இளைஞர். வெளி நாடு சென்று சம்பாதித்து வந்தவர். அவர் தனது அனுபவத்தை நம்மிடம் பகிர்ந்து கொண்டார். அவர் சொன்னார்:

"கடந்த எழுபது எண்பதுகளில் (1970 - 1980) நான் முதன் முதலில் பயணம் சென்ற போது மாதா மாதம் இரண்டாயிரம் ரூபாய் பணம் அனுப்பி வைப்பேன் அம்மாவுக்கு. இரண்டு வருடம் கழித்து ஊருக்கு வந்து அம்மா எவ்வளவு பணம் பாக்கி வைத்துள்ளார் என்று பார்த்தால் எல்லாம் செலவாகி யிருக்கும்.


தந்தை தான் (இன்னொரு வெளி நாட்டிலிருந்து) குடும்ப செலவுக்குப் பணம் அனுப்புகிறார்களே, நாம் அனுப்பி வைப்பதை சேமிக்கலாமே என்றால் அது அம்மாவால் முடியாது.

"நான் வேறு திறமைகளை வளர்த்துக் கொண்டதால் பின்னர் எனது சம்பளம் உயர்ந்தது. மாதா மாதம் ஐந்தாயிரம் ரூபாய் அனுப்பிக் கொண்டிருப்பேன். மீண்டும் விடுமுறையில் ஊருக்கு வந்து பார்த்தால் அம்மா அவ்வளவையும் செலவு செய்து விட்டிருப்பார்.

"ஏனம்மா, ஐந்தாயிரத்தில் செலவுக்கு இரண்டாயிரம் போக மீதி மூவாயிரம் ரூபாயை சேமித்திருக்கலாம் தானே என்றால், அம்மா கணக்கு சொல்வார்கள்.

குடும்ப செலவுகள் போக - மீதமிருந்த பணத்தை, "மாமா மகன் கல்யாணத்துக்கு ஆயிரம் ரூபாய் வைத்தேன், மச்சி மகள் வயதுக்கு வந்ததுக்கு ஒரு பவுன் போட வேண்டியிருந்தது.....கொழுந்தனுக்கு பேரன் பிறந்து நாற்பதுக்கு அரை பவுன் போட்டேன், வீட்டிலே "இந்த" விருந்துக்கு நூறு பேருக்கு சாப்பாடு ஆக்கிப் போட்டதில் மூவாயிரம் செலவு.....

இப்படி - சேமித்து வைக்கத் தெரியாத பெற்றோருக்கு எல்லாவற்றையும் அனுப்பி வைத்த அவருக்கு - ஒரு முறை பணம் அனுப்ப இயலாமல் போய் விட்டது. அவருக்கே சில முக்கியமான செலவுகள். ஊருக்கு வரும் முன்னர் மூன்று மாத சம்பளத்தை சேர்த்து - "பயண சாமான்களை" வாங்கிக் கொண்டு ஊர் வந்து சேர்கின்றார் நமது உறவினர்.

பயணக் களைப்பு கூட நீங்கியிருக்காது. கணக்குக் கேட்கத் தொடங்கி விட்டனர் பெற்றவர்கள். அருகில் இருந்து கொண்டு மூட்டி விட்டுக் கொண்டிருக்கிறாள் தங்கை.

ஏன் இந்த விசாரிப்பு தெரியுமா? இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தான் இவருக்கு திருமணம் முடிந்திருந்தது! பெற்றோருக்கு வந்த சந்தேகம் - மகன் பணத்தை தங்களுக்கு அனுப்பி வைக்காமல், மனைவிக்கு அனுப்பி விட்டான்!!!

"இல்லையம்மா! நான் கன ரக வாகனங்களை ஓட்டுவதற்காக பயிற்சி எடுக்க வேண்டியிருந்தது; உரிமம் பெற வேண்டியிருந்தது. விசா புதுப்பிக்க வேண்டி "இவ்வளவு" பணம் தேவைப் பட்டது. அதற்கு முன்னர் நாற்பதாயிரம் அனுப்பி வைத்தேனே. ஊருக்கு வரும் முன்பு மூன்று மாத சம்பளத்தில் தான் பயண சாமான்கள் வாங்கி வந்துள்ளேன்... இது தானம்மா கணக்கு...."

பெற்றோர் இந்தக் கதையை நம்பிடத் தயாராக இல்லை!

"எல்லாப் பணத்தையும் எடுத்துக் கொண்டு வருவதாக இருந்தால் வீட்டுக்கு வா.... இல்லாவிட்டால் உன் மனைவி- குழந்தையை அழைத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி விடு...."

இரவு நேரம். கொட்டுகின்ற மழை. மனைவியையும், கைக்குழந்தையையும் அழைத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறுகிறான் நம் இளைஞன். மாமனார் வீட்டுக்குச் செல்கிறான். சில தினங்களில் வாடகை வீடு ஒன்றை பிடித்துக் குடியேறுகிறான். பயணம் சென்று தனக்கென்று புதியதொரு அத்தியாயத்தைத் தொடங்குகிறான்.

மகனைத் துரத்தியடித்த பெற்றவர்கள் தங்களது சொத்துக்களை மகள்கள் பேருக்கு எழுதி வைத்து விடுகின்றனர்....

இப்போது சொல்லுங்கள்! இதிலே யார் பக்கம் நியாயம்?

இதைப் போன்ற நிறைய "உண்மைச் சம்பவங்கள்" உங்களைச் சுற்றியே நிறைய நடந்து கொண்டிருக்கும். எல்லாவற்றையும் பற்றியும் உங்கள் பெற்றோர்களிடமும், சகோதரிகளுடனும் பேசிப்பாருங்கள். கலந்தரையாடுங்கள். விவாதமாக்குங்கள்.

கொஞ்ச நாட்களிலேயே அவர்களின் மன நிலையை நீங்கள் துல்லியமாக அறிந்து கொண்டு விடலாம்.

உங்கள் பெற்றோர்கள் நியாய உணர்வு மிக்கவர்களாக இருந்தால் அல்ஹம்துலில்லாஹ்!

ஆனால் அவர்களிடம் நியாய உணர்வு இல்லையெனில் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியது என்னவெனில் - "நம் பெற்றோர்கள் மற்றவர் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பவர்கள் அன்று"- என்பதைத் தான்!

உங்கள் பெற்றோர்கள் அடுத்தவர் உணர்வுகளை மதிப்பவர்களே இல்லை; அவர்களிடம் நியாய உணர்வும் இல்லை எனில் என்ன செய்வது?

No comments:

Post a Comment