Sunday, April 13, 2014

இஸ்லாத்தில் ஆண் ஆதிக்கம் உண்டா? - பகுதி 2

சுன்னத்தான இல்லறம்:

ஆண்கள் என்ன அதிகாரிகளா?

காலாகாலமாகவோ அல்லது தலைமுறை தலைமுறையாகவோ ஒரு தவறை முஸ்லிம் கணவன்மார்கள் தொடர்ந்து செய்து வருகிறார்கள். அது - உயர்ந்தோன் அல்லாஹ் - பெண்களுக்கு அளித்திருக்கும் கண்ணியத்தையும், உரிமைகளையும் அவர்களுக்குத் தர மறுப்பது தான்!


ஏனோ தெரியவில்லை. முஸ்லிம் கணவன்மார்கள் தங்களின் மனைவியர்களுடன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதனை இன்னும் கற்றுக் கொள்ளவே இல்லை!

தங்களின் உரிமைகளைப் பெறுவதில் கண்ணும் கருத்துமாக இருக்கும் கணவன்மார்கள், தங்களின் மனைவியரின் உரிமைகளைக் காற்றில் பறக்க விட்டு வேடிக்கைப் பார்க்கிறார்கள்.

திருமணம் முடித்து கணவன் வீட்டுக்கு வந்த பிறகு கணவன் மனைவியிடம் என்ன எதிர்பார்க்கின்றார் தெரியுமா? தன் மனைவி தனது தாய்க்கும், சகோதரிகளுக்கும் (அதாவது அவளது மாமியாருக்கும், நாத்தனார்களுக்கும்) அடங்கிய பெட்டிப் பாம்பாக இருந்திட வேண்டும் என்று கட்டளை பிறப்பிக்கின்றார்.

இளம் மனைவி ஒருவர் சொல்கிறார்:

"நான் சொல்வதை என் கணவன் கேட்பதில்லை. அவரின் அக்காள், தங்கை, குடும்பத்தார் பேச்சை மட்டுமே கேட்கிறார். என்னுடைய பெற்றோரிடம் பேசுவதை வெறுக்கிறார். பெற்றோர் வேண்டுமா, கணவன் வேண்டுமா நீயே தீர்மானித்துக்கொள் என்று என் கணவன் கூறுகிறார். யாரைத் தேர்வு செய்வது என்ற குழப்பத்தில் நான் இருந்து வருகிறேன்."

கணவனும் மனைவியும் இப்படித்தான் வாழ்ந்திட வேண்டும் என்று அல்லாஹ் கற்றுத் தந்திருக்கின்றானா?

இவ்வாறு குழப்பத்தில் இருக்கின்ற மனைவியிடம் கணவன் நடத்தும் இல்லறம் இனிக்குமா?

ஆண்கள் பெண்களை நிர்வகிக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர்......... (4:34).

ஆனால் இந்தத் திருமறை வசனத்தை, புரிந்து கொள்ள வேண்டிய விதத்தில் புரிந்து கொள்ளாமல் நமது கணவன்மார்கள் காலா காலமாக தமது மனைவிமார்களுக்கு அநீதி இழைத்து வந்திருக்கிறார்கள். இந்த அநீதி இன்றும் தொடர்கிறது! அதுவும் மார்க்கத்தைப் பின்பற்றுகிறோம் என்ற பெயரிலேயே!?

உயர்ந்தோன் அல்லாஹ் கூறுவது என்ன?

ஆண்களே பெண்களை நிர்வகிப்போர் ஆவர். அவர்களில் சிலரை விட வேறு சிலரை அல்லாஹ் மேன்மையாக்கி இருப்பதும், ஆண்கள் தங்கள் செல்வங்களை பெண்களுக்காகச் செலவு செய்வதுமே இதற்குக் காரணம். (4: 34)

முஹம்மத் அஸத் என்ற அமெரிக்க இஸ்லாமிய அறிஞர் இவ்வசனத்தின் இப்பகுதிக்கு இவ்வாறு மொழி பெயர்த்துள்ளார்கள்:

"MEN SHALL take full care of women with the bounties which God has bestowed more abundantly on the former than on the latter, and with what they may spend out of their possessions.

இதன் கருத்து என்னவெனில் அல்லாஹ் பெண்களை விட ஆண்களுக்கு எந்தெந்த விஷயங்களில் மேன்மையைத் தந்துள்ளானோ அவைகளைக் கொண்டு பெண்களை ஆண்கள் முழுமையாகப் பாதுகாத்திட வேண்டும்;

அது போலவே ஆண்கள் தங்கள் செல்வங்களை பெண்களுக்காகச் செலவு செய்வதைக் கொண்டும் பெண்களை முழுமையாகப் பாதுகாப்பவர்களாக விளங்கிட வேண்டும்; இவற்றைத்தான் வல்லோன் அல்லாஹ் ஆண்களிடம் எதிர்பார்க்கின்றான்.

இவ்வசனத்தில் - "ஆண்களே பெண்களை நிர்வகிப்போர் ஆவர். " - என்ற சொற்றொடருக்கான அரபிச் சொற்றொடர் - "அர்ரிஜாலு கவ்வாமூன 'அலன்-னிஸாஇ".

இதில் உள்ள கவ்வாமூன என்ற அரபிச்சொல்லுக்கு என்ன பொருள்?

The expression qawwam is an intensive form of qa'im ("one who is responsible for" or "takes care of" a thing or a person).

அதாவது - கவ்வாமூன என்பதற்கு "பொறுப்பேற்றிட வேண்டிய ஒருவர்" என்றும் " ஒன்றை அல்லது ஒருவரைப் பாதுகாப்பவர் என்றும் பொருள் படும்.

பொறுப்பேற்றுக் கொள்ளும் ஒருவரையே நாம் தலைவர் என்கிறோம். இவ்வாறு பெண்கள் விஷயத்தில்; அவர்களைப் பாதுகாத்திடும் பொறுப்பேற்றுக் கொண்ட ஆண்கள் தாங்களே குடும்பத்தின் தலைவர்கள் என்று மட்டும் எண்ணிக் கொள்கிறார்கள். ஆனால் அது ஒரு மகத்தான பொறுப்பு என்பதனை வசதியாக மறந்து விடுகிறார்கள்!!

சரி, அவ்வாறே எண்ணிக் கொள்ளட்டும்! தலைவன் என்பதால் தன்னை ஒரு "சர்வ அதிகாரி" என்று அவர் நினைத்துக் கொண்டால் அந்தக் குடும்பம் எப்படி இருக்கும்? அங்கே மனைவியின் கண்ணியம் என்னவாகும்? மனைவியின் கருத்துக்களுக்கு அங்கே என்ன மதிப்பு இருக்கும்?

ஒரு நபி மொழியை இங்கே நினைவூட்டுவது பொறுத்தமாக இருக்கும்.

"உங்களில் தலைவன் என்பவன் மக்களுக்கு சேவை செய்பவனே!" - இது அண்ணலார் வாக்கு அல்லவா?

அண்ணலார் அவர்கள் தமது குடும்பத்தாரிடம் வந்து விட்டால், ஒரு சர்வாதிகாரியைப் போலவா தங்கள் மனைவியரிடம் நடந்து கொண்டார்கள்?

உமர் (ரலி) அவர்கள் பற்றி அவரது குடும்பத்தார் சொல்வது என்ன தெரியுமா? உமர் (ரலி) அவர்கள் மிக உறுதியான மனிதர் தான்; ஆனால் அவர் எங்களிடம் வந்து விட்டால், அவர் ஒரு குழந்தையைப் போலவே நடந்து கொள்வார்!

கணவன்மார்களே! உடனே வீட்டுக்குச் செல்லுங்கள்! அண்ணலாரின் முன்மாதிரியைச் செயல்படுத்திப் பாருங்கள். சிரித்த முகத்துடன் மனைவியைச் சந்தியுங்கள். போகும்போது உங்கள் மனைவிக்குப் பிடித்த ஏதாவது ஒரு பொருளை பரிசாக வாங்கிச் செல்லுங்கள்.

மனைவி ஒரு பொக்கிஷம் என்றார்கள் நபியவர்கள். அந்தப் பொக்கிஷம் உங்களுக்காகக் காத்திருக்கும். உங்களை வரவேற்கும். அதன் அளப்பரிய செல்வங்களை உங்கள் காலடியில் கொண்டு வந்து கொட்டும்.

வீணடித்து விடாதீர்கள் உங்கள் பொக்கிஷத்தை!

உங்கள் தாயும் உங்கள் சகோதரிகளும் அந்தப் பொக்கிஷத்தை நீங்கள் அடைவதிலிருந்து உங்களைத் தடுத்திட அனுமதிக்காதீர்கள்!

இல்லறம் இனிக்கட்டும்!

No comments:

Post a Comment