Thursday, April 24, 2014

ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கும் செய்திகள் என்ன?

சுன்னத்தான இல்லறம்:

திருமணத்துக்குப் பின்னர் கொஞ்ச காலம் அவர்களை அப்படியே விட்டு விடுவோம்; அவர்களுக்காக நாம் உள்ளத்தின் ஆழத்திலிருந்து துஆ செய்வோம்.


"பாரகல்லாஹு லக வ பாரக 'அலைக்க வ ஜம'அனா பைனகுமா ஃபீ ஃக்ஹைர்!"

சரியாக ஒரு ஆண்டு கழித்து - மீண்டும் அவர்களை திருமண வழிகாட்டும் மையத்துக்கு தனித்தனியே அழைப்போம்.

இதற்கென ஒரு கேள்விப்படிவம் தயாரிக்கப்பட்டு அது அந்த தம்பதியரால் தனித்தனியாக நிரப்பப்பட வேண்டும்.

அந்தப் படிவங்களும் அமானத்தாக பாதுகாக்கப்பட வேண்டும்.

இவ்வாறு ஒரு சில ஆண்டுகளிலேயே நம்மிடம் பயிற்சி பெற்றுத் திருமணம் செய்து கொண்ட அனைவரின் இல்லற வாழ்க்கை குறித்த மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டு விடலாம்.

இறுதியாக நமது ஆய்வின் முடிவில் நமக்குத் தெரிய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?

திருமணம், இல்லறம் குறித்து வழிகாட்டப்பட்ட இளைஞர்கள், இளைஞிகளில் எத்தனை சதவிகிதம் பேர் - மிக்க மகிழ்ச்சியுடன் வாழ்கின்றார்கள்; ஒருவருடைய உரிமைகளை இன்னொருவர் மதித்து வாழ்கிறார்கள்; ஒருவருடைய உணர்வுகளை மற்றவர் மதித்து வாழ்கின்றார்கள்?

திருமணத்துக்குப் பின் எந்தெந்த விஷயங்களில் எல்லாம் அவர்களுக்குள் கருத்து வேறுபாடுகள் தோன்றின?

எத்தனை சதவிகிதம் பேர் தங்களுக்குள் தோன்றக்கூடிய கருத்துவேறுபாடுகளின் போது தொடர்ந்து பேசிக் கொண்டு கருத்து வேறுபாடுகளைத் தீர்க்க வேண்டிய முறையில் தீர்த்துக் கொண்டார்கள்?

மேலும் அவர்களுக்குள் சவாலாக விளங்கக் கூடிய பிரச்னைகள் என்னென்ன? (அந்தப் பிரச்னைகளுக்கு கவுன்ஸலிங் மூலம் தீர்வு காணவும் வழி வகை செய்யப்படலாம்).

இன்னும்... இன்னும்..

**

அதன் பின்னர் - நமது ஆய்வுகள் தெரிவிக்கின்ற செய்திகளை நமது முஸ்லிம் சமூகத்துடன் பரிமாறிக் கொள்ளலாம்.

இப்படிப்பட்ட ஆய்வுகளிலிருந்து முஸ்லிம்களின் புதிய தலைமுறை எண்ணற்ற பாடங்களை நிச்சயமாகப் படித்துக் கொள்ளும்! நல்லதொரு மாற்றம் ஏற்படும் இன்ஷா அல்லாஹ்!!

மேலும் எவர்கள் நம்முடைய வழியில் முயல்கின்றார்களோ நிச்சயமாக அவர்களை நம்முடைய நேரான வழிகளில் நாம் செலுத்துவோம்; நிச்சயமாக அல்லாஹ் நன்மை செய்வோருடனேயே இருக்கின்றான். (29:69)

எனது சொந்தக் கருத்து ஒன்று!

சுன்னத்தான இல்லறம்

திருமண ஆய்வு மையம் பற்றி எழுதி வருகிறோம் அல்லவா? தேர்வு செய்யப்பட்ட இளைஞர்கள் மற்றும் இளைஞிகளுக்கு திருமணப் பயிற்சி அளிப்பது குறித்தும் எழுதி வருகிறோம் அல்லவா? அவர்களுடைய ஆளுமை மதிப்பீடுகளையும் கோப்புகளில் தயாராக வைப்பது பற்றியும் எழுதியிருக்கிறோம் அல்லவா?


எல்லாவிதமான பயிக்சிகளையும் வழங்கிய பின்பு - அடுத்து என்ன செய்திட வேண்டும் என்றால் -

ஆய்வு செய்திடும் உயர்மட்ட மேலாண்மைக் குழு ஒன்று பதிவு செய்யப்பட்ட ஆண்களின் கோப்புகளையும் பெண்களின் கோப்புகளையும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு ஆணுக்குப் பொருத்தமான பெண் யார் யார் எல்லாம் நம்மிடம் இருக்கின்றார்கள் என்று பார்த்திட வேண்டும்; அது போலவே ஒரு பெண்ணுக்குப் பொருத்தமான மணமகன்கள் யார் யார் நம்மிடம் உள்ளார்கள் என்றும் பார்த்திட வேண்டும்.

பொருத்தப் பட்டு வரும் ஒரு பெண் பற்றிய தகவல்களை அவருடைய பெற்றோர் அனுமதியுடன் குறிப்பிட்ட இளைஞனுக்கு அறிமுகம் செய்து வைக்க வேண்டும். இரண்டு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் முன்னிலையில் இருவரும் ஒருவரை ஒருவர் சந்திக்க ஏற்பாடு செய்யப்படலாம். ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள அந்த சந்திப்பு உதவிட வேண்டும். இருவர் குடும்பங்கள் பற்றிய தகவல்களும் பரிமாறிக் கொள்ளப்பட வேண்டும்.

அந்தக் கருத்துப் பரிமாற்றம் திருமணத்தை நோக்கி அழைத்துச் சென்றால் அல்ஹம்து லில்லாஹ். இல்லாவிட்டால் - இப்படி ஒரு ஏற்பாடு நடந்தது என்று கூட யாருக்கும் தெரியாமல் (confidential) பார்த்துக் கொள்ள வேண்டும்.

ஆனால் நிபந்தனைகள்:

இது விஷயத்தில் யாருக்கும் எந்த ஒரு நிர்ப்பந்தமும் இருக்கக் கூடாது!

மிக மிக முக்கியமாக - இது விஷயத்தில் எடுக்கப்படும் முயற்சிகள் அனைத்தும் முற்றிலும் confidential - ஆக அமானத்தாக பாதுகாக்கப்பட வேண்டும்; மேலாண்மைக் குழு - இது விஷயத்தில் சம்பந்தப்பட்ட குடும்பத்தினர்களுக்கு உறுதியான வாக்குறுதியை வழங்கிட வேண்டும்.

இது எனது சொந்தக் கருத்து மட்டுமே!

"நல்ல தூய்மையுள்ள பெண்கள் நல்ல தூய்மையான ஆண்களுக்கும், நல்ல தூய்மையான ஆண்கள் நல்ல தூய்மையான பெண்களுக்கும் ( உரியவர்கள் ஆவார்கள்)". (24: 26)

திருமணத்துக்கு ஒருவர் தயாராவது எப்படி?

சுன்னத்தான இல்லறம்

ஒவ்வொன்றாகப் பார்ப்போம்:

இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படையில் திருமணம் என்றால் என்ன, அது கொண்டு வரும் பொறுப்புகள் யாவை என்பது குறித்து தெளிவான அறிவைப் பெற்றுக் கொள்தல்;


திருமணம் செய்து கொண்டு - இல்லற வாழ்வைத் தொடங்கி - இல்லறத்தின் அனைத்துப் பொறுப்புகளையும் நிறைவேற்றிடும் தகுதி தமக்கு முழுவதும் இருக்கின்றதா என்று சுய பரிசோதனை செய்து கொள்தல்;

தனது பலம் பலவீனம் குறித்த மதிப்பீட்டினை தெளிவாக உணர்ந்து கொள்தல்;

திருமணம் தாமதமானால் தனது கற்பைப் பாதுகாத்துக் கொள்தல்; கண் பார்வையைத் தாழ்த்திக் கொள்தல்; நஃபிலான நோன்புகளை வைத்துக் கொள்தல்; ஆண்களிடமிருந்து பெண்களும், பெண்களிடமிருந்து ஆண்களும் இயன்ற வரை ஒதுங்கியே இருத்தல்;

ஒருவரை திருமணம் செய்திட நமக்குப் பரிந்துரைக்கப்பட்டால் - அவர் நமக்குப் பொருத்தமானவர் தானா என்று அறிந்திட நேர்மையான முயற்சிகளை மேற்கொள்தல்; அவருடைய கல்வி பற்றி, மார்க்கம் பற்றி, பொருளாதார நிலை பற்றி, அவருடைய ஆளுமை பற்றி, அவருடைய குண நலன் பற்றி, அவர் மற்றவர்களுடன் பழகிடும் விதம் பற்றி - இயன்ற வரை தகவல்களை அறிந்து கொள்ள முயற்சி செய்தல்;

அவ்வாறு ஒருவர் நமக்குப் பொருத்தமானவர் தான் என்று நமக்குத் தோன்றி விட்டால் - அவரை - மற்ற உறவினர்கள் முன்னிலையில் சந்தித்து - மேலும் அவரைப்பற்றியும், அவருடைய ஆளுமை பற்றியும், அவருடைய எதிர்பார்ப்புகள் பற்றியும், அவர் பெற்றோர்களின் எதிர்பார்ப்புகள் பற்றியும், திருமணத்துக்குப்பின் எந்தெந்த விஷயங்களில் எல்லாம் கருத்து வேறுபாடுகள் தோன்றும் என்று சந்தேகம் வருகிறதோ - அவை அனைத்தையும் பற்றியும் - எந்த ஒரு தயக்கமும் இன்றி - கேட்டுத் தெளிவு பெற்றுக் கொள்தல்;

திருமண சட்டங்களையும், திருமண ஒப்பந்தம் குறித்த மார்க்க வழிகாட்டுதலையும் நன்றாக அறிந்து கொள்தல்;

இஸ்திஃகாரா நஃபில் தொழுது வல்லோன் அல்லாஹு தஆலாவிடம் உதவி கேட்டல்;

பின் திருமண ஏற்பாடுகளில் - அல்லாஹ்வின் மீது தவக்குல் வைத்து காரியமாற்றுதல்;

நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட இளைஞர் / இளைஞிகள் அனைவருக்கும் நாம் மேலே சொன்ன வழிகாட்டுதல்கள் அனைத்தையும் முழுமையாக வழங்குதல் அவசியம்!

http://salaamhearts.com/ - இணைய தளம் மிக விளக்கமாக வழிகாட்டுகிறது இவ்விஷயத்தில்!

திருமண வழிகாட்டும் ஆய்வு மையத்தை நிர்வகிப்பவர்கள் இந்த இணைய தளத்தை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளவும்.

இயன்றால் - இஸ்லாமிய அறிஞரும் ஆலோசகருமாகிய கமால் ஸஹ்ராவி அவர்களை வைத்தே - இப்பயிற்சியை நமது இளைஞர் இளைஞிகளுக்குத் தரலாம் என்பது என் கருத்து!

அவருடைய "Dwell in Tranquility: an Islamic roadmap to the vibrant marriage " - எனும் நூலையும் வாங்கிப் படிக்கலாம்.

ஒவ்வொருவரின் ஆளுமை குறித்த மதிப்பீடும் அவசியம்!

சுன்னத்தான இல்லறம்:


ஒவ்வொருவரின் ஆளுமை குறித்த மதிப்பீடும் அவசியம்!

http://salaamhearts.com/

இந்த இணைய தளம் 65 கேள்விகளைக் கொண்டு தனிப்பட்ட ஒருவரின் ஆளுமை பற்றிய மதிப்பீடு ஒன்றை (personality assessment) வழங்குகிறது. முன்னேற்றத்திற்கான வழிமுறைகளையும் சொல்லித் தருகிறது அந்த இணைய தளம்.


அது போலவே ஒவ்வொருவருடைய ஆளுமைகளை வகைப்படுத்தித் தரும் (personality types) இணைய தளங்கள் நிறைய இருக்கின்றன. பின் வரும் இணைய தளம் அவற்றுள் ஒன்று:

http://www.myersbriggs.org/my-mbti-personality-type/mbti-basics/

இவைகளைப் பயன்படுத்தி - நமது ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட இளைஞர்களின் ஆளுமைகளை தனித்தனியே மதிப்பீடு செய்து கோப்புகளில் சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

தனிப்பட்ட ஒருவரின் ஆளுமை மதிப்பீடு அவரை எப்படிப்பட்டவர் என்று தெளிவு படுத்திக் கொள்ள பெரிதும் உதவும்.

ஓருவர் தனிமை (introvert) விரும்பியா? அல்லது வெளியே சென்று (extrovert) மற்றவர்களுடன் பழகுவதை விரும்பக்கூடியவரா என்பதை மதிப்பீடு செய்து தரும்.

ஒருவர் உணர்வுக்கு (feeling oriented) மதிப்பளிப்பவரா? அல்லது அறிவின் (thinking oriented) அடிப்படையிலேயே செயல்படுபவரா என்பதை எடுத்துச் சொல்லும்!

ஒருவருடைய பலம் என்னென்ன, பலவீனங்கள் என்னென்ன என்பதை கோடிட்டுக் காட்டும்.

இப்படிப்பட்ட ஆளுமை மதிப்பீட்டின் அடிப்படையில் - ஒருவர் தன் பலங்களை வலுப்படுத்திக் கொண்டு பலவீனங்களை வெல்வது எப்படி என்பதை நமது பயிற்சிகளின் வழியே அவர்களுக்கு வழிகாட்டலாம்.

இவ்வாறு நமது ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட இளைஞர்கள் - குறிப்பிட்ட கால இடைவெளிக்கு ஒரு தடவை நேர்காணல் செய்யப்பட வேண்டும்; அவர்களின் முன்னேற்றம் குறித்த மதிப்பீடுகளும் கோப்புகளில் சேர்க்கபட வேண்டும். அவர்கள் மேலும் முன்னேறிச் சென்றிட ஊக்கப்படுத்தப்பட வேண்டும்.

இவ்வாறு ஒரு ஆண்டு கால பயிற்சிக்குப் பிறகே அவர்கள் திருமணத்துக்குத் தயாராக வேண்டும்.

தங்கள் பெயர்களை பதிவு செய்து கொண்ட இளைஞர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய பயிற்சிகள்:

சுன்னத்தான இல்லறம்:  

தங்கள் பெயர்களை பதிவு செய்து கொண்ட இளைஞர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய பயிற்சிகள் பற்றி பார்ப்போம்:

அ. இறையச்சப் பயிற்சி (tazkiyah and tarbiyyah);

ஆ. திருமணத்துக்கு அவர்களைத் தயார் படுத்தும் பயிற்சி (preparation for marriage)
இ. மனித உறவுகளை மேம்படுத்திக் கொள்ளும் பயிற்சி (developing inter-personal skills)

ஈ. கருத்துப் பரிமாற்றப் பயிற்சி (communciation skill)

உ. உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திடும் பயிற்சி (soft skills / emotional skills)

ஊ. கருத்து வேறுபாடுகளைத் தீர்த்துக் கொள்ளும் பயிற்சி (conflict resolution skill)

எ. மனித வள மேம்பாட்டுப் பயிற்சி மற்றும் வாழ்க்கையின் இலட்சியம் (human resource development and life goal)

இவை அனைத்தும் சொற்பொழிவுகளாக அல்லாமல் பயிலரங்கங்களாக வைத்து நடத்தப்பட வேண்டும்.

பயிற்சிகள் குறித்து மேலும் நாம் விரிவாக விவாதிக்க வேண்டியுள்ளது. பிறகு பார்ப்போம்.

அதனைத் தொடர்ந்த செயல்பாடுகள் குறித்து மேலும் சிந்திப்போம் இன்ஷா அல்லாஹ்.

திருமணத்துக்கு வழிகாட்டும் ஆய்வு மையத்தின் மிக முக்கியமான ஒரு செயல்பாடு!

சுன்னத்தான இல்லறம்:

திருமணத்துக்கு வழிகாட்டும் ஆய்வு மையத்தின் விரிவான செயல்பாடுகள் குறித்து பின்னர் நாம் சிந்திபோம்.

இப்பகிர்வில் மிக முக்கியமான ஒரு செயல்பாடு குறித்து மட்டும் பார்ப்போம்:

இது ஒரு ஆய்வுக்கான செயல் திட்டம்!


என்ன செய்திட வேண்டும்?

இஸ்லாத்தைத் தங்கள் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்ட அல்லது ஏற்றுக் கொள்ளத் தயாராக உள்ள திருமணம் ஆகாத இளைஞர்களுக்கு ஒரு அழைப்பு விடுங்கள். திருமணத்துக்கு வழிகாட்டும் ஆய்வு மையத்தின் நோக்கம் என்ன என்பதைக் குறித்து அவர்களுக்கு விளக்குங்கள்.

சுருக்கமாக மீண்டும் சொல்வோம்: ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை உள்ள திருமணம் ஆகாத இளைஞர்களை அழைக்கிறோம்; அவர்களைப் பதிவு செய்து கொள்கிறோம்; பயிற்சி அளிக்கிறோம்; திருமணத்துக்கு அவர்களைத் தயார் செய்கிறோம்; நல்லதொரு துணையைத் தேர்வு செய்திட வழிகாட்டுகிறோம்; திருமணத்துக்குப் பின் அவர்களின் வாழ்வின் திருப்தி குறித்து ஆய்வு செய்கிறோம்; மேலும் அவர்களுக்கு ஆலோசனை வழங்குகிறோம்; அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறோம். அவ்வளவு தான்!

ஆர்வத்துடன் முன் வருபவர்களை முறைப்படி பதிவு செய்து கொள்ளுங்கள். ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையுடன் நிறுத்திக் கொள்ளுங்கள்.

அடுத்து கேள்விப்படிவம் (Questionnaire) ஒன்று தயாரித்து வைத்துக் கொள்ளுங்கள்; அதில் பின் வரும் கேள்விகளை சேர்த்துக் கொள்ளுங்கள்:

இஸ்லாமிய மார்க்கம் குறித்த உங்கள் பார்வை என்ன?

நீங்கள் இஸ்லாத்தை முழுமையாகப் பின்பற்றிடத் தயாரா?

இஸ்லாமிய திருமணம் குறித்து உங்கள் கண்ணோட்டம் என்ன?

நீங்கள் இஸ்லாத்தைப் பின்பற்றும் ஒரு பெண்ணையே மனைவியாகத் தேர்வு செய்திடத் தயாரா?

உங்கள் கணவராக / மனைவியாக வர இருப்பவர் எப்படி இருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள்?

நீங்கள் விரும்பும் நற்பண்புகள் என்னென்ன?

என்னென்ன நற்பண்புகளை உங்கள் வருங்காலத் துணையிடம் நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்?

உங்கள் பெற்றோர்கள் மார்க்கத்தை முழுமையாகப் பின்பற்றுபவர்களா?

இஸ்லாத்தில் பெண்ணுரிமை குறித்து உங்கள் கருத்து என்ன?

எமது திருமண வழிகாட்டும் மையம் உங்களைப்போன்ற திருமணம் ஆகாதவர்களை வைத்து ஒரு ஆய்வை மேற்கொள்ள இருக்கின்றது. அந்த ஆய்வுக்கு முழு ஒத்துழைப்பு தரத் தயாரா?

மேலும் தேவைக்கேற்ப கேள்விகளை சேர்த்துக் கொள்ளலாம்.

படிவங்களை நிரப்பி வாங்கி கோப்புகளில் வரிசைப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள்.

இதே போன்று திருமணம் ஆகாத இளைஞிகளுக்கும் தனியே அழைப்பு அனுப்பப்பட்டு ஆர்வத்துடன் வருபவர்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

அடுத்து திருமணத்துக்கு முன் அவர்களுக்கு அளிக்க வேண்டிய பயிற்சிகள் குறித்து சிந்திப்போம் இன்ஷா அல்லாஹ்..

திருமணத்துக்கு வழிகாட்டும் ஆய்வு மையத்தின் நோக்கம் மற்றும் அமைப்பு விதிமுறைகள்

சுன்னத்தான இல்லறம்:

நோக்கம்:

அ. திருமணம் ஆகாதவர்களுக்கு

முறையான இஸ்லாமியத் திருமணம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல் (Bringing an awareness about Islamic Marriage)


இளைஞர்களுக்கு இஸ்லாமிய வாழ்க்கை நெறிப் பயிற்சி அளித்தல் ( Providing Tarbiyyah and Tazkiyah training )

இளைஞர்களையும் இளைஞிகளையும் திருமணத்துக்கு முன் தயார் படுத்துதல் (Preparing the youth before marriage)

பொருத்தமான திருமணத் தேர்வுக்கு வழிகாட்டுதல் (Guidance for making a compatible marital choice)

கணவன் மனைவி இல்லறம் குறித்த தெளிவான வழி காட்டுதலை வழங்குதல் (Guidance for a happy married life)

கருத்து வேறுபாடுகளின் போது நடந்து கொள்ள வேண்டிய முறை குறித்து கணவன் மனைவி இருவருக்கும் கவுன்ஸலிங் வழங்குதல் (Counselling for conflict resolution)

பயிற்சி பெற்று திருமணம் முடித்த தம்பதியர்களின் திருப்தியான இல்லற வாழ்வை ஆய்வு செய்தல் (Conducting surveys on the lives of couples who were trained)

குழந்தை வளர்ப்பில் வழிகாட்டுதல் (Guidance on Islamic parenting)

ஆ. திருமணம் ஆனவர்களுக்கு

கணவன் மனைவி இல்லறம் குறித்த தெளிவான வழி காட்டுதலை வழங்குதல் (Guidance for a happy married life)

குழந்தை வளர்ப்பில் வழிகாட்டுதல் (Guidance on Islamic parenting)

கருத்து வேறுபாடுகளின் போது நடந்து கொள்ள வேண்டிய முறை குறித்து கணவன் மனைவி இருவருக்கும் கவுன்ஸலிங் வழங்குதல் ம்(Counselling for conflict resolution)

அமைப்பு:

திருமணத்துக்கு வழிகாட்டும் ஆய்வு மையத்தின் அமைப்பு ஒரு இயக்கம் சாராத அமைப்பாக விளங்கிட வேண்டும். சமூகத்தின் அனைத்து அங்கத்தினர்களுக்கும் அது பயன்படக் கூடியதாக விளங்கிட வேண்டும். பல்கலைக்கழகம் ஒன்றுடன் இணைந்து செயல்படுதல் மிக நன்று! அல்லது பொதுவான சமூக நல அமைப்பு ஒன்றுடன் இணைந்து செயல்படலாம்.

இந்த ஆய்வு மையம் இரண்டு பிரிவுகளாக செயல் பட வேண்டும். ஆண்களுக்கு என்று ஒரு பிரிவு; பெண்களுக்கென்று ஒரு பிரிவு.

இவ்விரண்டு பிரிவுகளும் தனித்தனியே இயங்க வேண்டிய தளங்களில் தனித்தனியாகவே இயங்கிட வேண்டும்; ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய தளங்களில் - இஸ்லாமிய விழுமியங்களுக்கு உட்பட்டு ஒருங்கிணைந்து செயல்படலாம்.

இங்கே நாம் சில குறிப்புகளை மட்டுமே வழங்கியிருக்கின்றோம். இவைகளை களத்தில் இறங்குவோர் விரிவு படுத்திக் கொள்வார்களாக!

அடுத்து - திருமணத்துக்கு வழிகாட்டும் ஆய்வு மையத்தின் செயல்பாடுகள் குறித்து சிந்திப்போம் இன்ஷா அல்லாஹ்....

தேவை: திருமணத்துக்கு வழிகாட்டும் ஆய்வு மையம்!

சுன்னத்தான இல்லறம்:

முதலில் - ஒத்த கருத்துடைய, ஆய்வுக் கண்ணோட்டம் மிக்க, குடும்ப நல சீர்திருத்தத்தில் மிகுந்த ஆர்வமுடைய ஒரு சிலர் ஒன்று சேருங்கள்.

திருமண சீர்திருத்தம் குறித்த ஆழமான அறிவைப் பெற்றுக் கொள்ளுங்கள். நான் இங்கே நான்கு அறிஞர்களின் பெயர்களைப் பரிந்துரைக்கின்றேன்.


அ. யாஸிர் ஃபஸாகா (Yasssir Fazaga) எனும் இஸ்லாமிய அறிஞர்; இவருடைய சொற்பொழிவுகளை YouTube ல் சென்று கேளுங்கள். குறிப்பாக குடும்ப நலன் குறித்த இவரது பேச்சுக்களை அவசியம் கேளுங்கள்.

ஆ. யாவர் பைஃக் (Yawar Baig) எனும் அறிஞர். இவர் திருமணம் குறித்து எழுதிய நூல் ஒன்று இணைய தளத்தில் கிடைக்கிறது. அவசியம் படியுங்கள்.

Link: http://www.yawarbaig.org/yawarbaig/my-books/marriage-the-making-and-living-of-it

மேலும் இவருடைய சொற்பொழிவுகளையும் YouTube ல் சென்று கேளுங்கள்.

இ. கமால் ஸஹ்ராவி (Kamal Zahraawi) எனும் அறிஞர். இவர் நடத்தும் இணைய தளம்:

http://salaamhearts.com/

திருமணம் இல்லறம் குறித்த வழிகாட்டுதலுக்கு இது ஒரு மிக முக்கியமான இணையதளம் ஆகும்.

ஈ. ருகையா வாரிஸ் மக்ஸூத் (Ruqayya Warith Maqsood) எனும் அறிஞர். இவருடைய Marriage guide அவசியம் ஆய்வு செய்யப்பட வேண்டிய ஒன்று. இணைய தளத்தில் கிடைக்கிறது.

http://www.biharanjuman.org/MarriageGuide.pdf

எனக்குத் தெரிந்த பெயர்களை மட்டுமே குறிப்பிட்டுள்ளேன். ஆழ்ந்து படியுங்கள்; சிந்தியுங்கள்; ஒத்த கருத்துடையவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

அடுத்து ஒத்த கருத்துடைய நீங்கள் ஒன்று சேர்ந்து திருமணத்துக்கு வழிகாட்டும் ஆய்வு மையம் (Marriage Research and Guidance Centre) ஒன்றைத் துவங்குங்கள்; அதனை இஸ்லாமியக் கல்லூரி அல்லது பல்கலைக் கழகம் ஒன்றுடன் இணைத்தல் நலம்.

இந்த ஆய்வு மையத்தின் அமைப்பு மற்றும் செயல்பாடுகள் என்னென்ன?

சிந்திப்போம் இன்ஷா அல்லாஹ்! 

கையில் வெண்ணையை வைத்துக் கொண்டு....

சுன்னத்தான இல்லறம்:

இதற்கு முன்னர் நாம் எழுதிய பதிவுகளில் விவாதிக்கப்பட்ட பிரச்னைகளுக்கு தீர்வுகள் எதனையும் நீங்கள் முன் வைக்கவில்லையே என்று சிலர் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.


இந்த இருபத்தொன்றாம் நூற்றாண்டு என்பது "பிரச்னைகளின் உலகமாக" மாறி விட்டிருக்கின்றது.

எந்த ஒரு பிரச்னையை எடுத்துக் கொண்டாலும் அது தீர்க்கப்படவே முடியாத சிக்கலாக (crisis) மாறி மனித சமூகத்தை அலைக்கழித்துக் கொண்டிருக்கின்றது.

ஆனால் புதிய தலைமுறை ஒன்று முளைத்து வந்து இதோ பிரச்னைகளுக்கு நாங்கள் தீர்வு சொல்கிறோம் என்று புறப்பட்டு வந்து கொண்டிருக்கின்றது.

Critical thinking, creative thinking, lateral thinking, complex thinking, - என்று புதுப்புது வழிமுறைகளை எல்லாம் கையிலெடுத்துக் கொண்டு களத்தில் இறங்கியிருக்கின்றது இந்தப் புதிய தலைமுறை!

இறை வழிகாட்டுதல் என்றால் என்னவென்றே தெரியாத இந்தத் தலைமுறை, ஏதோ அவர்களுக்குத் தெரிந்த அறிவை வைத்துக் கொண்டு ஆய்வுகளை மேற்கொண்டு - எடுத்துக் கொண்ட பிரச்னைகளுக்குத் தீர்வும் சொல்கிறார்கள்; தீர்த்தும் வைக்கின்றார்கள் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?

அவர்கள் முன் வைக்கும் எல்லாத் தீர்வுகளுமே சரியானவை என்று நம்மால் சொல்ல முடியாது தான்! அதே நேரத்தில் அவர்களின் எல்லாத் தீர்வுகளுமே தவறானவை என்றும் சொல்லி விட முடியாது!

அவர்கள் தரும் தீர்வுகளுள் சிலவற்றை நாம் ஆய்வு செய்து பார்த்தால் அது அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கண்ட தீர்வுகளை ஒத்திருப்பது தெரிய வருகிறது!

ஆனால் - எங்களிடம் குர்ஆன் இருக்கின்றது, நபிவழி இருக்கின்றது என்று சொல்லிக் கொண்டு பிரச்னைகளுக்குத் தீர்வு காண இயலாதவர்களாக நாம் இருந்து கொண்டு இருக்கின்றோம்.

இது உண்மையா? இல்லையா?

இங்கே - நாம் எடுத்துக் கொண்டிருக்கும் பிரச்னை - சாதாரணமானதாக ஒன்றாக இருந்தால் - ஒரு வரியில் தீர்ப்பு சொல்லி விடலாம் தான்!

நாம் இங்கே பேசிக் கொண்டிருப்பது சாதாரணப் பிரச்னை அல்லவே! சமூகத்தில் புரையோடிப் போயிருக்கின்ற ஆழமான தீமை ஒன்றைப் பற்றியல்லவா நாம் விவாதித்துக் கொண்டிருக்கின்றோம்!

உன்னைப் பார்த்து நான், என்னைப்பார்த்து என் பக்கத்து வீட்டுக்காரன் என்று - தலைமுறை தலைமுறையாய் ஒரு தொடர்கதையாய்ப் போய் விட்ட தொற்று நோய் அல்லவா இது!

வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஒட்டு மொத்த சமூகத்தையும் அழிவின் விளிம்பிற்கு இட்டுச் சென்று "அடித்தளத்தில் ஓட்டை போடப்பட்ட கப்பலாய்" நம்மை மாற்றியிருக்கும் பிரச்னை தானே இது!

எனவே நாம் - குர் ஆன் மற்றும் நபிவழி ஆகியவற்றுடன் - Critical thinking, creative thinking, lateral thinking, complex thinking - போன்ற நவீன வழிமுறைகளையும் கையிலெடுத்துக் கொண்டு நடைமுறையில் சாத்தியப்படுத்திக் காட்டிடும் அழகிய தீர்வு ஒன்றை சுன்னத்தான இல்லறத்தில் எழுத உள்ளோம் இன்ஷா அல்லாஹ்.

இதற்கு ஆய்வுக் கண்ணோட்டம் மிக்க சகோதர சகோதரிகளின் கருத்து ரீதியான பங்களிப்பு மிகவும் அவசியம்.

நமது நோக்கமெல்லாம் நமது சகோதர சகோதரிகளின் இல்லற வாழ்வில் மகிழ்ச்சியையும், குதூகலத்தையும், மன நிம்மதியையும், நேசத்தையும், கருணையையும் மீண்டும் கொண்டு வந்து சேர்ப்பது தான்!

இதற்காகத் துவக்கப்பட்டதே சுன்னத்தான இல்லறம்!

தீர்வு - விரைவில்!! 

பெற்றவங்க சொல்லும் போது அத மீறி செயல்பட முடியுமா?

சுன்னத்தான இல்லறம்: 

(பெற்றோர்கள் பிள்ளைகளின் திருமண வாழ்வில் தலையிடலாமா?)

ஒரு வழியாக தங்கைகளுக்கெல்லாம் திருமணம் முடித்து, அடுத்து உங்கள் வீட்டில் இப்போது தான் உங்கள் திருமணத்தைப் பற்றிப் பேசத் தொடங்கியிருக்கிறார்கள்.


இப்போது தான் மிக முக்கியமான திருப்பு முனை உங்கள் வாழ்வில்! அல்லாஹு தஆலா உங்களுக்கு வைக்க இருக்கின்ற மகத்தான சோதனை இதோ!

மார்க்கம் காட்டியிருக்கின்ற வழியில் நீங்கள் மணம் முடிக்கப் போகின்றீர்களா? பெற்றோர் காட்டித் தருகின்ற வழியில் திருமணம் செய்யப் போகின்றீர்களா? இந்த இரண்டில் நீங்கள் எதனைத் தேர்வு செய்திடப் போகின்றீர்கள்?

இறை வழிகாட்டுதல் என்ன?

இறையச்சத்தின் அடைப்படையில் மணப்பெண்ணைத் தேர்வு செய்யுங்கள்! மஹர் கொடுத்துத் திருமணம் முடியுங்கள்! எளிமையாகத் திருமணத்தை நடத்திக் கொள்ளுங்கள்!

இவையே மிக முக்கியமான இறை வழிகாட்டுதல்கள்!

ஆனால் பெற்றோர் சொல்வதென்ன?

பொருளாதார வசதியின் அடிப்படையில் பெண்ணெடுப்போம்! முடியுமட்டும் வரதட்சணை வாங்கிக் கொள்வோம்! நன்றாக செலவு செய்து திருமணத்தை நடத்துவோம்!

"அவ்வளவு பணம் என்னிடம் இல்லையே!" என்று சொல்லிப் பாருங்கள். "சம்பாதித்துக் கொண்டு வா! அப்புறம் திருமணம் செய்து கொள்ளலாம்", என்பார்கள்.

"வரதட்சணையெல்லாம் கேட்க வேண்டாம் அம்மா!" என்று சொல்லிப் பாருங்கள். அதனை நியாயப் படுத்தி உங்களை சம்மதிக்க வைப்பார்கள்! நீங்களும் சம்மதித்து விடுவீர்கள்!

நாம் கேட்போம் இப்படிப்பட்ட மணமகன்களைப் பார்த்து: "ஏனப்பா வரதட்சணைக்கு ஒத்துக் கொண்டாய்?"

அவர்கள் சொல்வார்கள்: "என்னண்ணே செய்றது? பெற்றவங்க சொல்லும் போது அவங்களை மீறி நாம செயல்பட முடியுமா?"

இறுதியில் உங்கள் பெற்றோருக்கே வெற்றி! மார்க்கம் தோற்றுப் போய் விடுகிறது! (நஊது பில்லாஹி மின்ஹா!)

திருமணத்துக்கு முன்னரேயே உங்கள் திருமணத்தின் கடிவாளத்தை உங்கள் பெற்றோர்கள் உங்களிடம் இருந்து பிடுங்கிக் கொண்டு விடுகிறார்கள் என்பது ஏன் உங்களுக்குப் புரிவதில்லை?

ஏன் பெற்றோர் தோண்டிய படுகுழியில் போய் நீங்களாகவே வழுக்கி விழுந்து விடுகின்றீர்கள்?

நீங்கள் விழுந்து விட்டதை நீங்கள் உணராமல் இருக்கலாம்; ஆனால் உங்கள் பெற்றோர்கள் அதனை நன்றாக உணர்ந்திருக்கின்றார்கள்!

"பையன் நம்ம கையில் தான்!"

பிறகு என்ன நடக்கும்?

"ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா"

உங்கள் இல்லற வாழ்வின் சிறிய பெரிய விஷயங்கள் அனைத்திலும் உங்கள் பெற்றோர் சொல்வதே வேத வாக்கு! உங்கள் மனைவியின் உரிமைகள்??

இஸ்லாத்தில் பெண்களின் உரிமைகள்! - ஆம் - அது ஒரு அழகிய தலைப்பு! எங்களைப் போன்றவர்கள் அழகாக மேடையில் பேசிடுவதற்கு!!

பெற்றோர் விருப்பங்களின் அடிப்படையில் வரதட்சணை வாங்கி திருமணம் முடிக்கும் இளைஞர்கள் எப்படிப்பட்டவர்களாக விளங்குவார்கள்?

சாட்சாத் அவர்கள் பெற்றோர்களைப் போலவே உருவெடுப்பார்கள்! இவர்களும் அடுத்தவர் உணர்வைப் பற்றிக் கவலைப்பட மாட்டார்கள்! இவர்களிடத்திலும் நியாய உணர்வு இருக்காது! சுய நலம் மிகுந்திருக்கும்! நன்றி உணர்ச்சி அற்றுப் போய் விடும்! நயவஞ்சகம் குடிகொண்டு விடும்!! தவறுகளை நியாயப் படுத்திக் கொள்வார்கள்!

Exactly - இவர்களும் இவர்களுடைய பெற்றோர்களும் இப்போது ஒன்று போலத்தான்!

நியாய உணர்வற்ற, அடுத்தவர் உணர்வுகளைப் புரிந்து கொள்ள மறுக்கின்ற, lack of empathy எனும் மன நலக் குறையுடன் அடுத்த தலைமுறை இதோ தயார்!

இந்த இழி நிலையிலிருந்து இந்த சமூகத்தை மீட்டெடுப்பது எப்படி? சிந்தியுங்கள்!

மூன்று தங்கைகளுக்கும் திருமணம் முடிந்த பிறகே உனக்குத் திருமணம்!

சுன்னத்தான இல்லறம்:

(பெற்றோர்கள் பிள்ளைகளின் திருமண வாழ்வில் தலையிடலாமா?)

ஒரு இளைஞன். பெயர் பஷீர் அஹமத். அவனுக்கு மூன்று தங்கைகள். பஷீருக்கு பதினைந்து வயதாகும் போது தந்தை மாரடைப்பில் இறந்து விட்டார். சொத்துக்கள்? வீடு, கட்டிடம், வயல் என்று - அது ஒரு கோடிக்கு மேல் தேறும்.


பஷீருக்கு படிப்பு வரவில்லை. (எதிர்பார்த்தது தானே!). ஒரு சில ஆண்டுகளிலேயே பயணம் புறப்பட்டு விட்டான், அதாவது அனுப்பி வைக்கப் பட்டு விட்டான். துவக்கத்தில் மாதச் சம்பளம் குறைவாக இருந்தாலும், தொடர்ந்து வந்த ஆண்டுகளில் சம்பளம் கணிசமாக உயர்ந்து கொண்டே சென்றது. எல்லாவற்றையும் தன் அம்மாவுக்கு அனுப்பிக் கொண்டே இருந்தான் பஷீர். ஆண்டுகள் உருண்டோடுகின்றன.

பஷீருக்கு இருபத்து ஐந்து வயது ஆன போது மூத்த தங்கை பாத்திமா நஸ்ரினுக்குத் திருமணம் நடந்தேறியது. மாப்பிள்ளைக்கும் வயது இருபத்து ஐந்து தான்.

பஷீருக்குத் திருமணம் எப்போது? அம்மா அவர்கள் சொல்லி விட்டார்கள் - மூன்று தங்கைகளுக்கும் திருமணம் முடிந்த பிறகே பஷீருக்குத் திருமணம் என்று!

பாத்திமா நஸ்ரினுக்கு வேறு சில இடங்களில் இருந்து பெண் கேட்டு வந்த போது, "மாப்பிள்ளைக்கு முப்பது வயது இருக்கும்போல் தெரிகிறதே" என்று பஷீரின் தாயார் மறுத்து விட்டதெல்லாம் தனி விஷயம். ஏன் இந்த இரட்டை நிலை?

தங்கைகள் அனைவருக்கும் திருமணம் முடித்து விட்டுத் தான் அண்ணன் ஒருவன் தனது திருமணம் குறித்து சிந்தித்திட வேண்டும் என்பது என்ன நியாயம்?

"வயதுக்கு வந்த தங்கைகளை வீட்டில் வைத்துக் கொண்டு அண்ணன்காரனுக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்கிறீர்களா?" - என்பது பெற்றோரின் நியாயமற்ற வாதம்!

பெண்மக்களை எப்படி "குமரிகளாகப்" பார்க்கிறோமோ அதுபோல் ஆண்மகன்களை ஏன் நாம் "குமரர்களாகப்" பார்க்க மறுக்கின்றோம்? மகளுக்கு காலா காலத்தில் திருமணம் செய்து வைப்பதை எப்படி பெற்றோர்கள் விரும்புகிறார்களோ அது போலவே மகனுக்கும் காலா காலத்தில் திருமணம் செய்து வைப்பது தானே நியாயம்?

நியாய உணர்வற்ற பெற்றோர்கள் - இதற்கு சொல்கின்ற இன்னொரு காரணத்தைப் பாருங்கள்:

மகனுக்குத் திருமணம் செய்து வைத்து விட்டால், அதன் பிறகு அவன் தன் தங்கைகளுக்குத் திருமணம் செய்து வைப்பதில் அலட்சியம் வந்து விடுமாம்!?

ஒரு இளைஞனுக்கு வயது இருபத்தியேழு! அவன் தனது திருமணத்தைப் பற்றி சிந்தித்துக் கூட பார்ப்பதற்கு இயலாத சூழலாம்! ஆனால் நாம் கேட்பது என்னவென்றால் - அவனுக்குத் திருமண ஆசை இருக்குமா,இருக்காதா?

உளவியல் அறிஞர்கள் சொல்வது என்னவென்றால் - அந்த வயதில் ஆண்களுக்கான செக்ஸ் ஹார்மோனாகிய - டெஸ்டோஸ்டரோன் - இரண்டு மடங்கு (200%) சுரக்கின்றதாம்!

இப்படிப்பட்ட பாலியல் தூண்டல் (sexual urge) ஒரு இளைஞனுக்கு வந்து விட்டது என்று வைத்துக் கொள்ளுங்கள். அவன் அதை யாரிடம் போய் சொல்வான்? திருமணம் குறித்தெல்லாம் சிந்தித்திட முடியாத "சூழ்நிலை" குடும்பத்தில்!

அவன் தனது பாலியல் தூண்டல்களை எப்படித் தணித்துக் கொள்வான்? அவன் கெட்ட வழிகளை நாடுகிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள். அது பெற்றோர்களுக்குச் சம்மதம் தானா?

என்ன செய்கிறார்கள் நம் இளைஞர்கள்? நோன்பு வைத்துக் கொள்கிறார்கள்! பெற்றோர் பேச்சை மீற முடியாமல் முப்பது வயதைத் தாண்டியும் தன் கடைசித் தங்கைக்கு மாப்பிள்ளை தேடிக் கொண்டிருக்கின்றார்கள்!

தனது திருமணம் குறித்து வீட்டில் பேசத் தயங்குகின்றார்கள். மனம் புழுங்குகின்றார்கள்! வெளியே சொல்ல முடியவில்லை! பிரச்னை எதுவும் இல்லாதது போல் நடித்துக் கொண்டு தங்கள் இளமையை அழித்துக் கொண்டிருக்கின்றார்கள்!

என் அருமை இளைஞர்களே! நீங்கள் விரும்பியோ விரும்பாமலோ உங்கள் திருமணத்தை - ஒத்திப் போட்டு விடுவதன் மூலம் - உங்கள் பெற்றோர்கள் வெற்றி பெற்று விடுகிறார்கள்! நீங்களோ தோற்றுப் போய் விடுகிறீர்கள்!

YOU LOSE! THEY WIN!!

அப்படியானால் இப்பிரச்னைக்குத் தீர்வு என்ன?

யார் பக்கம் நியாயம்?

சுன்னத்தான இல்லறம்: 

இங்கே ஒரு இளைஞர். வெளி நாடு சென்று சம்பாதித்து வந்தவர். அவர் தனது அனுபவத்தை நம்மிடம் பகிர்ந்து கொண்டார். அவர் சொன்னார்:

"கடந்த எழுபது எண்பதுகளில் (1970 - 1980) நான் முதன் முதலில் பயணம் சென்ற போது மாதா மாதம் இரண்டாயிரம் ரூபாய் பணம் அனுப்பி வைப்பேன் அம்மாவுக்கு. இரண்டு வருடம் கழித்து ஊருக்கு வந்து அம்மா எவ்வளவு பணம் பாக்கி வைத்துள்ளார் என்று பார்த்தால் எல்லாம் செலவாகி யிருக்கும்.


தந்தை தான் (இன்னொரு வெளி நாட்டிலிருந்து) குடும்ப செலவுக்குப் பணம் அனுப்புகிறார்களே, நாம் அனுப்பி வைப்பதை சேமிக்கலாமே என்றால் அது அம்மாவால் முடியாது.

"நான் வேறு திறமைகளை வளர்த்துக் கொண்டதால் பின்னர் எனது சம்பளம் உயர்ந்தது. மாதா மாதம் ஐந்தாயிரம் ரூபாய் அனுப்பிக் கொண்டிருப்பேன். மீண்டும் விடுமுறையில் ஊருக்கு வந்து பார்த்தால் அம்மா அவ்வளவையும் செலவு செய்து விட்டிருப்பார்.

"ஏனம்மா, ஐந்தாயிரத்தில் செலவுக்கு இரண்டாயிரம் போக மீதி மூவாயிரம் ரூபாயை சேமித்திருக்கலாம் தானே என்றால், அம்மா கணக்கு சொல்வார்கள்.

குடும்ப செலவுகள் போக - மீதமிருந்த பணத்தை, "மாமா மகன் கல்யாணத்துக்கு ஆயிரம் ரூபாய் வைத்தேன், மச்சி மகள் வயதுக்கு வந்ததுக்கு ஒரு பவுன் போட வேண்டியிருந்தது.....கொழுந்தனுக்கு பேரன் பிறந்து நாற்பதுக்கு அரை பவுன் போட்டேன், வீட்டிலே "இந்த" விருந்துக்கு நூறு பேருக்கு சாப்பாடு ஆக்கிப் போட்டதில் மூவாயிரம் செலவு.....

இப்படி - சேமித்து வைக்கத் தெரியாத பெற்றோருக்கு எல்லாவற்றையும் அனுப்பி வைத்த அவருக்கு - ஒரு முறை பணம் அனுப்ப இயலாமல் போய் விட்டது. அவருக்கே சில முக்கியமான செலவுகள். ஊருக்கு வரும் முன்னர் மூன்று மாத சம்பளத்தை சேர்த்து - "பயண சாமான்களை" வாங்கிக் கொண்டு ஊர் வந்து சேர்கின்றார் நமது உறவினர்.

பயணக் களைப்பு கூட நீங்கியிருக்காது. கணக்குக் கேட்கத் தொடங்கி விட்டனர் பெற்றவர்கள். அருகில் இருந்து கொண்டு மூட்டி விட்டுக் கொண்டிருக்கிறாள் தங்கை.

ஏன் இந்த விசாரிப்பு தெரியுமா? இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தான் இவருக்கு திருமணம் முடிந்திருந்தது! பெற்றோருக்கு வந்த சந்தேகம் - மகன் பணத்தை தங்களுக்கு அனுப்பி வைக்காமல், மனைவிக்கு அனுப்பி விட்டான்!!!

"இல்லையம்மா! நான் கன ரக வாகனங்களை ஓட்டுவதற்காக பயிற்சி எடுக்க வேண்டியிருந்தது; உரிமம் பெற வேண்டியிருந்தது. விசா புதுப்பிக்க வேண்டி "இவ்வளவு" பணம் தேவைப் பட்டது. அதற்கு முன்னர் நாற்பதாயிரம் அனுப்பி வைத்தேனே. ஊருக்கு வரும் முன்பு மூன்று மாத சம்பளத்தில் தான் பயண சாமான்கள் வாங்கி வந்துள்ளேன்... இது தானம்மா கணக்கு...."

பெற்றோர் இந்தக் கதையை நம்பிடத் தயாராக இல்லை!

"எல்லாப் பணத்தையும் எடுத்துக் கொண்டு வருவதாக இருந்தால் வீட்டுக்கு வா.... இல்லாவிட்டால் உன் மனைவி- குழந்தையை அழைத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி விடு...."

இரவு நேரம். கொட்டுகின்ற மழை. மனைவியையும், கைக்குழந்தையையும் அழைத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறுகிறான் நம் இளைஞன். மாமனார் வீட்டுக்குச் செல்கிறான். சில தினங்களில் வாடகை வீடு ஒன்றை பிடித்துக் குடியேறுகிறான். பயணம் சென்று தனக்கென்று புதியதொரு அத்தியாயத்தைத் தொடங்குகிறான்.

மகனைத் துரத்தியடித்த பெற்றவர்கள் தங்களது சொத்துக்களை மகள்கள் பேருக்கு எழுதி வைத்து விடுகின்றனர்....

இப்போது சொல்லுங்கள்! இதிலே யார் பக்கம் நியாயம்?

இதைப் போன்ற நிறைய "உண்மைச் சம்பவங்கள்" உங்களைச் சுற்றியே நிறைய நடந்து கொண்டிருக்கும். எல்லாவற்றையும் பற்றியும் உங்கள் பெற்றோர்களிடமும், சகோதரிகளுடனும் பேசிப்பாருங்கள். கலந்தரையாடுங்கள். விவாதமாக்குங்கள்.

கொஞ்ச நாட்களிலேயே அவர்களின் மன நிலையை நீங்கள் துல்லியமாக அறிந்து கொண்டு விடலாம்.

உங்கள் பெற்றோர்கள் நியாய உணர்வு மிக்கவர்களாக இருந்தால் அல்ஹம்துலில்லாஹ்!

ஆனால் அவர்களிடம் நியாய உணர்வு இல்லையெனில் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியது என்னவெனில் - "நம் பெற்றோர்கள் மற்றவர் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பவர்கள் அன்று"- என்பதைத் தான்!

உங்கள் பெற்றோர்கள் அடுத்தவர் உணர்வுகளை மதிப்பவர்களே இல்லை; அவர்களிடம் நியாய உணர்வும் இல்லை எனில் என்ன செய்வது?

மற்றவர் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத மனநல நோயாளிகள் இவர்கள்!

சுன்னத்தான இல்லறம்: 

(பெற்றோர்கள் பிள்ளைகளின் திருமண வாழ்வில் தலையிடலாமா?)

சென்ற பதிவில் நாம் எழுதியிருந்த உதாரணச் சம்பவங்களை வைத்து எல்லாப் பெற்றோர்களுமே இப்படித்தானோ என்று நினைத்து விட வேண்டாம்! ஒரு சில நல்ல பெற்றோர்களும் நமக்கு மத்தியில் இருக்கவே செய்கிறார்கள். ஆனால் அப்படிப்பட்ட நல்ல பெற்றோர்கள் நம்மிடம் மிகக் குறைவு என்பதே வருத்தத்துக்குரிய கசப்பான உண்மை!


இறையச்சம் மிக்க ஒரு சில பெற்றோர்களை விட்டு விட்டு, நம் முகத்தை சற்றே திருப்பி நம் சமூகத்தில் இருக்கும் பெரும்பாலான தாய்மார்களைப் பார்த்தால் - ஒரு தாய் இப்படியெல்லாம் கூட நடந்து கொள்வாரா என்று வியக்கும் அளவுக்கு அவர்களின் செயல்பாடுகள் மனிதத்தன்மைக்கு அப்பாற்பட்டு அமைந்திருக்கின்றன! இத்தகைய மனிதத் தன்மையற்ற தாய்மார்களைப் பற்றித்தான் நாம் ஆய்வு செய்திட இருக்கின்றோம்.

இப்போது கொஞ்சம் உளவியல். அதாவது - psychology!

மகள்கள் விஷயத்தில் ஒரு விதமாக நடந்து கொள்ளும் தாய்மார்கள் மகன்கள் விஷயத்தில் மட்டும் வேறொரு விதமாக ஏன் நடந்து கொள்கிறார்கள்?

நாம் இதற்கு முன்னர் empathy பற்றி சில கட்டுரைகளில் எழுதியிருக்கின்றோம். அடுத்தவர் நிலையில் நம்மை வைத்து சிந்தித்தால் அவருடைய உணர்வுகளை நாம் புரிந்து கொள்ள முடியும். இதற்கு ஆங்கிலத்தில் empathy என்று பெயர்.

இவ்வாறு மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்து நடந்து கொள்வது நபி வழியாகும். நபியவர்கள் மற்றவர்கள் உணர்வுகளுக்கு எந்த அளவுக்கு மதிப்பளிப்பவர்கள் என்பதை சில நபிமொழிகளைக் கொண்டு ஆய்வோம்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவரிடம் அவரின் பணியாள் அவரின் உணவைக்கொண்டு வந்தால், அவர் அப்பணியாளைத் தம்முடன் (அமர வைத்துக்கொள்ளட்டும். அவ்வாறு) அமர வைத்துக் கொள்ளவில்லையென்றாலும் அவருக்கு ‘ஒரு பிடி அல்லது இருபிடிகள்’ அல்லது ‘ஒரு கவளம் அல்லது இரண்டு கவளங்கள்’ உணவு கொடுக்கட்டும். ஏனெனில், அவர் அதன் வெப்பத்தையும் அதன் சிரமத்தையும் சகித்துக் கொண்டார். (ஸஹீஹுல் புகாரி)

இன்னொரு நபிமொழியைப் பார்ப்போம்:

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு மஸ்வூது (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ”நீங்கள் மூவர் இருந்தால் ஒருவரைத் தவிர்த்து இருவர் மட்டும் உரையாட வேண்டாம், நீங்கள் மக்களுடன் கலக்கும்வரை. ஏனெனில் அது மூன்றாமவரைக் கவலையில் ஆழ்த்திவிடும்.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

இந்த மனநலம் சார்ந்த நற்பண்பை குழந்தைகளுக்கு ஊட்டி வளர்த்திட வேண்டியது பெற்றோர் கடமை!

இந்தப் பண்பு எப்படிப்பட்டவர்களை உருவாக்கிடும்?

இந்த நற்பண்பு அடுத்தவர் மீது அக்கரை காட்டுபவர்களை உருவாக்கிடும்! (care for others); இந்த நற்பண்பை உடையவர்கள் அடுத்தவர்களுக்கு எந்தத் தீங்கையும் செய்திட மாட்டார்கள்.

நியாய உணர்வு இவர்களிடத்தில் மிகைத்திருக்கும்; இவர்கள் - நியாய உணர்வு அற்றவர்களை - அவர்கள் தங்கள் நெருங்கிய உறவினர்களாக இருந்தாலும் - விரும்பிட மாட்டார்கள்! எதிரியாக இருந்தாலும் அவர்கள் பக்கம் உள்ள நியாயத்தை எடுத்துப்பேசிடத் தயங்க மாட்டார்கள். எப்போதும் இவர்கள் நியாயத்தின் பக்கமே நிற்பார்கள்!

இவர்கள் பொது நலம் மிக்கவர்களாக விளங்குவார்கள்! சமூக சேவை செய்பவர்களாக இருப்பார்கள்! நன்றி உடையவர்களாக இருப்பார்கள்!

அடுத்தவர் உணர்வைப் புரிந்து கொண்டு செயல் பட உதவுகின்ற empathy எனப்படும் இந்த நற்பண்பு இல்லாதவர்கள் எப்படிப்பட்டவர்களாக விளங்குவார்கள்?

நியாய உணர்வு சுத்தமாக இவர்களிடத்தில் இருக்காது; நியாயம் பேசுபவர்களை இவர்களுக்குப் பிடிக்காது! நியாயம் பேசுபவர்கள் நெருங்கிய உறவினர்களாக இருந்தாலும் அவர்களை இவர்கள் விரும்பிட மாட்டார்கள்.

குழு உணர்வே இவர்களிடத்தில் மிகைத்திருக்கும்! தாங்கள் செய்வதையெல்லாம் நியாயப் படுத்துவார்கள்!

சுயநலம் மிக்கவர்களாக விளங்குவார்கள்! இத்தகையவர்களிடம் "உண்மையான நட்பை" எதிர்பார்க்க முடியாது! நயவஞ்சகத்தனமே இவர்களிடத்தில் குடிகொண்டிருக்கும்!

இந்த நற்பண்பு இல்லாதவர்கள் அடுத்தவர்களுக்கு எந்தத் தீங்கையும் செய்திடத் தயங்க மாட்டார்கள். சில சமயங்களில் குற்றம் (crime) புரிவதற்குக் கூடத் தயங்க மாட்டார்கள். சதி செய்வார்கள்.

குற்றவாளிகளின் மனநிலையை ஆய்வு செய்பவர்கள் சொல்வது: lack of empathy leads to crimes! அதாவது அடுத்தவர் உணர்வுகளை ஒரு பொருட்டாகக் கருதாதவர்கள் தான் குற்றவாளிகளாக மாறுகிறார்கள்.

இத்தகையவர்கள் என்னென்ன குற்றங்களில் ஈடுபடுகிறார்கள் தெரியுமா?

கற்பழிப்புக் குற்றங்கள், குழந்தைகள் பலாத்காரம் (child molesters) மற்றும் குடும்ப வன்முறை (domestic violence) இவற்றில் ஈடுபடுபவர்கள் அனைவருமே அடுத்தவர் உணர்வைப் புரிந்து கொள்ள மறுப்பவர்கள் தாம்.

இவர்களால் பாதிப்புக்குள்ளானவர்கள் (victims) எப்படிப்பட்ட உணர்வுகளுக்கு ஆளாகிறார்கள் என்பதை புரிந்து கொள்ள இயலாதவர்கள்; அல்லது புரிந்து கொள்ள மறுப்பவர்கள்.

தங்களுக்குத் தாங்களே, தாங்கள் செய்கின்ற கொடுமையான குற்றங்களை நியாயப் படுத்திக் கொள்வார்களாம்.

குழந்தையை மானபங்கப் படுத்துபவன் அதனை எப்படி நியாயப் படுத்துகிறான் தெரியுமா?

"இதுவும் ஒரு விதமான அன்பு செலுத்துதல் தான்!" (just showing love!)

"அந்தக் குழந்தைக்கு நான் செய்வது பிடிக்கவில்லை என்றால் என்னைத் தடுத்திருக்கும் தானே? தடுக்கவில்லையே!"

வீட்டில் மனைவியையும் குழந்தைகளையும் அடித்து நொறுக்குபவன் கூட அதனை எப்படி நியாயப் படுத்துகிறான்?

"இது ஒரு வகையில் "அவர்களை சீர்திருத்திடத் தான்!" (this is just good discipline!)

இப்படிப்பட்டவர்கள் ஒரு விதத்தில் "மனநலக் குறைபாடு" உடையவர்களே!

சரி, இப்போது நம் விஷயத்துக்கு வருவோம். பெற்றோர்கள் தங்கள் மகனின் இல்லற விஷயங்களில் தேவையின்றித் தலையிடுவதை எவ்வாறு "நியாயப் படுத்திக்" கொள்கிறார்கள் தெரியுமா?

"என் மகள் மட்டும் அங்கே கொடுமைப் படுத்தப் படுகிறாளே! நான் இவளை அந்த அளவுக்கா கொடுமைப் படுத்துகிறேன்?"

"நம் மகளுக்கு நாம் வாரி வாரிக் கொடுத்திருக்கும்போது, நம் மகனுக்கு வாங்குவதில் என்ன தப்பு?"

"என் மகள் அவள் மாமியார் வீட்டில் எவ்வளவு வேலை பார்க்கிறாள் தெரியுமா? என் மருமகள் மட்டும் இங்கே சுகமா தூங்க விட்டு விடுவோமா?" (தனியொரு சம்பவமே இருக்கிறது; பின்னர் பகிர்ந்து கொள்வோம் இன்ஷா அல்லாஹ்)

இப்போது சொல்லுங்கள்! தங்கள் செயல்களை நியாயப் படுத்திக் கொண்டு பெரும் குற்றங்களைச் செய்பவர்கள் மன நலக் குறைபாடு உடையவர்கள் என்றால் - அதே போன்று தங்கள் செயல்களை நியாயப்படுத்திக் கொண்டு கணவன் மனைவியர் உரிமைகளைப் பறித்திடும் பெற்றோர்களும் மன நலக்குறைபாடு உடையவர்கள் தானே?

இது தான் நாம் எடுத்துக் கொண்ட பிரச்னையின் ஆணி வேர்!

அதாவது - அடுத்தவர் உணர்வுகளுக்கு எந்த மதிப்பும் அளிக்காத மனநலக் குறைபாடே (lack of empathy) பிரச்னையின் ஆணிவேர்!

சரி! நமது பெற்றோருக்கு இந்த empathy எனும் உணர்வு இருக்கிறதா இல்லையா என்பதை எப்படி அறிவது?

மகனின் இல்லற வாழ்வில் பெற்றோர் குறுக்கிடுவதன் பின்னணி என்ன?

சுன்னத்தான இல்லறம்:

(பெற்றோர்கள் பிள்ளைகளின் திருமண வாழ்வில் தலையிடலாமா?)

ஒரு குடும்பத்தில் தந்தைக்கு அடுத்த படி, குடும்பப் பொறுப்புகள் அனைத்தும் யார் மீது சுமத்தப் படுகிறது? அக்குடும்பத்தின் ஆண் மகன்களிடத்தில் தான்!

நன்றாக சம்பாதித்துக் கொண்டிருந்த தந்தை உடல் நலம் குன்றி விட்டாலோ, அல்லது அவரால் போதுமான அளவுக்கு பொருளீட்ட இயலாமல் போய் விட்டாலோ, அல்லது தந்தை இறந்து போய் விட்டாலோ - அக்குடும்பத்தின் எல்லாப் பொறுப்புகளையும் அவரது மகன் அல்லது மகன்கள் சுமந்து கொள்கிறார்கள்.


அந்த சுமையை ஒரு சுமையாகக் கருதாமல் ஒரு சுகமாகக் கருதுகின்ற பல இளைஞர்களை நாம் பார்க்கலாம்.

இப்படிப் பட்ட குடும்பப் பொறுப்பு, ஒரு இளைஞனுக்கு எந்த வயதில் வேண்டுமானாலும் வரலாம். பள்ளிக் கூடத்திலோ கல்லூரியிலோ படித்துக் கொண்டிருக்கும் போது கூட வரலாம். குடும்பப் பொறுப்புக்காக தன் படிப்பைக் கை விட வேண்டிய நிலை ஏற்படலாம்.

தந்தைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு விட்டது என்பதால், ப்ளஸ் டூ படித்து விட்டு மேற்படிப்புக் கனவைத் தூக்கி எறிந்து விட்டு ஜவுளிக்கடை வேலை ஒன்றுக்கு வருகிறான் ஒரு இளைஞன்.

தன் தந்தைக்கு அடுத்த படி ஒரு இளைஞன் தன் குடும்பத்துக்குச் செய்ய வேண்டிய "கடமைகள்" என்று எவைகளைத் தன் தலை மீது சுமத்திக் கொண்டிருக்கின்றான்?

- தன் தந்தை வாங்கிய கடனை அடைப்பது. (அவர் அடகு வைத்த சொத்துக்களை மீட்பது)

- குடும்பச் செலவுகளை கவனித்துக் கொள்வது.

- தன் கூடப் பிறந்த சகோதரிகளுக்குத் திருமணம் செய்து வைப்பது.

- குடும்பத்தின் இதர செலவுகளையும் கவனித்துக் கொள்வது.

இப்படி எந்த ஒரு சுய நலமும் இல்லாமல் - குடும்பத்தின் எல்லாப் பொறுப்புகளையும் தன் தலை மீது சுமந்து கொள்கின்ற அந்த மகனிடம் அவரது தாயும் சகோதரிகளும் - எப்படி நடந்து கொள்ள வேண்டும்?

நன்றாகவே நடந்து கொள்கிறார்கள்! "எங்கள் அண்ணனைப் போல் வருமா?" என்கிறார்கள்! குறிப்பாக அண்ணன் பயணம் போய் வருபவனாக இருந்து விட்டால் நன்றாக ஆக்கிப் போட்டு விழுந்து விழுந்து கவனிக்கிறார்கள்!

ஆனால் அது எது வரை? அந்த இளைஞன் தான் சம்பாதிப்பதை எல்லாம் தன் தாயையும் சகோதரிகளையும் "கவனித்துக் கொள்கின்ற" காலம் வரை தான்!

அவனுக்குத் திருமணம் ஆகி , குழந்தை குட்டிகள் பெற்றுக் கொண்ட பின்பு அவன் தன் எதிர் காலத்துக்கு என்று திட்டமிடத் தொடங்கி விட்டால் வந்து விடும் பேராபத்து!

பயணம் சென்றவன் முன்பு போல் பணம் அனுப்புவதில்லை என்றால் அவ்வளவு தான்! மனைவிக்கு ஏதாவது நகை செய்து போட்டு விட்டாலோ அவ்வளவு தான்! நிலைமை தலை கீழாக மாறி விடும்.

தாயைப் பார்க்க வந்தால், முகத்தைத் தூக்கி வைத்துக் கொள்ளுவார்கள். தந்தை வீட்டில் இருந்தால் மகனிடம் "கணக்குக்" கேட்கத் துவங்கி விடுவார்.

அப்படியானால் ஒரு தாய் தன் மகனிடம், இன்னும் என்ன தான் எதிர் பார்க்கிறாள்?

தன் மகன் "கடைசி வரைக்கும்" குடும்பத்தைக் கவனித்துக் கொள்ள வேண்டுமாம். சகோதரிகளுக்குத் திருமணம் செய்து வைத்து விட்டு தானும் திருமணம் செய்து கொண்டு வாழத் தொடங்கும் இளைஞன், தன் மனைவி மக்கள் குறித்து சிந்தித்திடக் கூடாது; தன் சகோதரிகளுக்கும், ஏன், இன்னும் ஒரு படி மேலே போய் சகோதரிகளின் குழந்தைகளுக்கும் "செலவு" செய்திட வேண்டும் என்று தாயும் சகோதரிகளும் எதிர் பார்க்கிறார்கள், இது எந்த விதத்தில் நியாயம்?

மகனிடமிருந்து காசு பறித்து அவற்றை தன் மகள்கள் வீட்டுக்கு சேர்த்து வைப்பதில் ஒரு தாய்க்கு இருக்கும் சுகம் அலாதியானது! அடடா!

மகன் சொத்து சேர்த்து விடக் கூடாது! அவன் சிறிது சேமித்து வைத்து விடக் கூடாது! மனைவிக்கு ஒரு நகை நட்டு செய்து விடக் கூடாது!

தன் எதிர் காலம் குறித்துத் திட்டமிடத் தொடங்கும் ஒரு மகனை - அவனது தாய் எப்படி "மூளைச் சலவை" செய்கிறாள் தெரியுமா?

இதோ - வெளி நாட்டில் இருக்கும் மகனிடத்திலிருந்து தொலைபேசி அழைப்பு. மனைவியிடத்தில் பேசலாம் என்று அழைக்கிறான் இளைஞன். ஆனால் போனை எடுத்துப் பேசுவது தாய்.....!

"தம்பீ! எப்படி இருக்கே! நல்லா இருக்கியா?" போன்ற நலம் விசாரிப்புகளுக்குப் பிறகு....

"தம்பீ! அவசரப் பட்டு ஊருக்கு இப்ப வந்துடாதேப்பா! அக்கா மகள் சமீமாவை பெண் கேட்டு வர்ராங்கப்பா! நல்ல இடமெல்லாம் நிறைய வருது. மச்சானைப் பத்தித் தான் உனக்குத் தெரியுமே! அவரை நம்ப முடியாதுப்பா! நம்ம தாம்ப்பா எப்படியாவது தோது செய்து ஒரு கல்யாணத்தைப் பண்ணி வைக்கணும்"

அடுத்து அக்கா போனை வாங்கி "ஆமாம் தம்பி, அல்லாஹ்வுக்கு அடுத்த படி, உன்னைத் தான் தம்பி நான் மலை போல் நம்பியிருக்கேன்.... எப்படியாவது தோது பண்ணி பணம் அனுப்பி வை தம்பி...... "

மனைவியிடம் பேசுவதை மறந்தே போய் போனை வைத்து விடுகிறான் நமது இளைஞன்!

மகனின் இல்லற வாழ்வில் பெற்றோர் குறுக்கிடுவதன் பின்னணி என்ன என்பது இப்போது புரிகிறதா?

இது நமது சமூகத்தில் புரையோடிப் போய் விட்ட ஆழமான ஒரு நோய்!

இந்த ஆழமான நோய்க்கு நாம் மருந்து கண்டு பிடித்தே ஆக வேண்டும்!

எப்படி கண்டுபிடிப்பது?

மகன் மருமகள் உறவுக்கு இடம் அளிக்க மறுத்த தாய்!

சுன்னத்தான இல்லறம்:

(பெற்றோர்கள் பிள்ளைகளின் திருமண வாழ்வில் தலையிடலாமா?)

புதிதாகத் திருமணம் முடித்த கணவன் மனைவியருக்கு இரு தரப்புப் பெற்றோர்களும் தாங்கள் பெற்ற அனுபவங்களிலிருந்து நேர்மையான நல்ல அறிவுரைகளை வழங்கி வழிகாட்டுதல் நல்லதே! நன்மையே!

ஆனால் .....
இங்கே பெரும்பாலான பெற்றோர்களின் நிலை வேறு விதமாகவே இருக்கின்றது! அளவுக்கு அதிகமான குறுக்கீடுகளையும், (interference), உள் நோக்கத்துடன் கொடுக்கப்படும் அறிவுறுத்தல்களையுமே இங்கே நாம் காண முடிகின்றது!

பெற்றோர்களின் இப்படிப்பட்ட தேவையற்ற குறுக்கீடுகள் - திருமண வாழ்வையே இறுக்கமானதாக (stressful) ஆக்கி விடுகின்றன! கணவன் மனைவி புரிந்துணர்வையே சிதைத்து விடுகின்றன!

இதனை எல்லோருக்கும் முன்னதாக கணவனும் மனைவி இருவருமே புரிந்து கொள்தல் அவசியம்.

கணவனும் மனைவியும் மிக அருகில் உள்ள நகரத்துக்குச் சென்று தாங்கள் புதிதாகக் குடியேற இருக்கும் வீட்டுக்கு ஜன்னல் திரைகளை வாங்கிடப் புறப்படுகின்றனர்!

"ஜன்னல் திரைகளை வாங்குவதற்கு ஆண்கள் போனால் போதாதா? நீ வேறு எதற்குப் போக வேண்டும்?"

துப்பட்டியைப் போட்டுக் கொண்டு புறப்பட்டு விட்ட மருமகள் - அப்படியே மனம் குன்றி அமர்ந்து விடுகிறார்!!

அருகில் உள்ள ஊரில் ஒரு விஷேசம்! அண்ணன், அண்ணன் மனைவி, தம்பி, தம்பி மனைவி, இரண்டு சகோதரிகள், குழந்தைகளுடன் காரில் புறப்பட இருக்கும் சமயம். திடீரென்று செல்போன் அழைப்பு அம்மாவிடமிருந்து.

"ஏன் இத்தனை பேர்? தம்பி மனைவி போக வேண்டாம்! மற்றவர்கள் போய் வந்தால் போதும்!"

அந்தத் தம்பி மனைவிக்கு எப்படி இருக்கும்? இத்தனைக்கும் இந்தத் "தம்பி" தான் காருக்கு வாடகை தருபவர்!

"இல்லையம்மா! நான் மனைவியை அழைத்துக் கொண்டுதான் போகிறேன்!" என்று அந்தத் தம்பி சொல்லலாம் அல்லவா?

ஏன் சொல்லவில்லை என்பதே நம் கேள்வி!

திருமணம் முடித்து பயணம் சென்று விட்டு, இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது தான் பயணத்திலிருந்து வருகிறார் பெற்ற மகன்! இரண்டு மாத விடுமுறை; இரு வீட்டாருக்கும் கொடுக்கல் வாங்கலில் பிரச்னை! மகனை மாமியார் வீட்டுக்கு (அதாவது மனைவியின் பெற்றோர் வீட்டுக்கு) அனுப்பவில்லை தாய்!

மனைவி வீட்டார் தங்கள் மகளை அனுப்பி வைக்கிறார்கள்;

ஆனால் மகன் மருமகள் உறவுக்கு இடம் அளிக்க மறுத்து விட்டார் அந்தத் தாய்!

தாய் பேச்சைத் தட்டாத அருமை மகன் - இரண்டு மாதங்களையும் கூடத்திலேயே பாய் போட்டுப் படுத்து விட்டு பயணம் புறப்பட்டுப் போய் விடுகிறார்! என்ன செய்வது? பெற்ற தாயின் பேச்சை எப்படி மீறுவது?

கணவன் வெளி நாட்டில் வேலை பார்க்கிறார்; குடும்பத்துடன் தங்குவதற்கு வீடும் கம்பெனியில் தருகிறார்கள்; மனைவியுடன் சேர்ந்து வாழவும், நல்ல உணவுக்காகவும் மனைவியை அங்கு அழைத்துக் கொள்ள கணவன் விரும்பினால் அதில் தலையிட பெற்றோர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது?

இங்கேயும் பெற்ற தாய்மார்களுக்குக் கட்டுப்பட்டு நடக்கின்றேன் என்று தாம் ஏதோ பெரிய தியாகம் செய்வதாக எண்ணிக் கொள்கின்றனர் ஆண்மகன்கள்!

மனைவியின் உரிமை? அது பற்றி யாருக்குக் கவலை?

தன் மகனுக்கு அழகான ஒரு பெண்ணைத் தேடுகிறார் ஒரு தாய்! உறவினர் ஒருவர் அந்தத் தாயிடம் கேட்ட கேள்வி: "நீ உனக்கு ஒரு மருமகளைப் பார்க்கிறாயா? உன் மகனுக்கு அழகு சுந்தரி ஒருவரைப் பார்க்கிறாயா?"

என்ன எச்சரிக்கை இது?

ஏன் இப்படி விளையாடுகிறார்கள் – பெற்றோர்களும் சகோதரிகளும்?

நீங்கள் இன்னும் சின்னஞ்சிறுசுகள் அல்ல!

சுன்னத்தான இல்லறம்:

(பெற்றோர்கள் பிள்ளைகளின் திருமண வாழ்வில் தலையிடலாமா?)

இஸ்லாமிய அறிஞர் ஒருவரிடம் பின் வருமாறு ஒரு கேள்வி முன் வைக்கப்பட்டது:

கணவனின் பெற்றோர்களும், மனைவியின் பெற்றோர்களும் எந்த அளவுக்கு தங்கள் பிள்ளைகளின் திருமண வாழ்வில் தலையிடலாம்?

ஒளிவு மறைவின்றி அந்த அறிஞரிடமிருந்து வந்த பதில் இதோ:


தலையிடுதல் கூடவே கூடாது! தங்களுடைய பிள்ளைகளின் திருமண வாழ்வில் தலையிடுவதற்கு இரு பெற்றோர்களுக்கும் எந்த ஒரு உரிமையும் கிடையாது! ஒரு திருமணத்தை நாசம் செய்வதற்கு இதனை விட வேறொன்றும் கிடையாது!

பெற்றோர்கள் தங்கள் திருமண வாழ்வில் (மட்டும்) கவனம் செலுத்தட்டும். உங்களுடைய "குழந்தைகளுக்கு" நீங்கள் திருமணம் செய்து வைத்து விட்டால் - அவர்கள் இன்னும் "சின்னஞ்சிறுசுகள்" அல்ல! அவர்களை அவர்கள் வழிக்கு விட்டு விடுங்கள்! அவர்களுடைய "திருமண மாளிகையை" அவர்களே கட்டி எழுப்பிக் கொள்ளட்டும்! அவர்களும் வயதுக்கு வந்து விட்ட பெரியவர்கள் (adults) தான்! அதனால் தானே நீங்கள் அவர்களுக்குத் திருமணமே செய்து வைத்தீர்கள்?

இங்கே நம் சமூகத்தில் உள்ள பெற்றோர்களுக்கு (குறிப்பாக அம்மாக்களுக்கு) ஒரு பெரிய "சங்கடம்" என்னவென்றால் - தங்களின் மகனுக்குத் திருமணம் ஆகி ஒரு மருமகள் வீட்டுக்கு வந்து விட்டால் - தான் "அவசியமற்ற ஒரு பிறவியாக" ஆகி விட்டது போல் அஞ்சுகிறார்கள்! இந்த அச்சத்தினால் - "தன் மகனிடமிருந்து தன்னைப் பிரிக்க வந்திட்ட எதிரியாக" தனது மருமகளைப் பார்க்கிறார்கள்.

மகனை உங்கள் பக்கம் வைத்துக் கொள்வதற்காக - நீங்கள் உங்கள் மருமகளையே ஒரு எதிரியாக்கி அதில் வெற்றி பெற்றாலும் நீங்கள் தோற்று விட்டீர்கள்! அதில் நீங்கள் தோற்று விட்டாலும் உங்களுக்குத் தோல்வி தான்! என்னவாயினும் தோல்வி உங்களுக்குத்தான்!

எனவே "அவர்களை அவர்கள் வழியே விட்டு விடுங்கள்! அவர்கள் திருமண வாழ்வில் குறுக்கிடாதீர்கள்! ஆறு மாதங்களுக்கு ஒரு முறை உங்கள் மகனையும் மருமகளையும் போய்ப் பார்த்து வாருங்கள்! வருடத்துக்கு ஒரு முறை என்றால் அது இன்னும் நல்லது! (என்ன விழிக்கிறீர்கள்?)

தொலைபேசியில் பேசினால் ஒரு ஐந்து நிமிடங்களுக்கு மேல் பேசாதீர்கள்! கம்ப்யூட்டர் உரையாடல்களை எல்லாம் குறைத்துக் கொள்ளுங்கள். மகளிடம் பேசினால், "சந்தோஷமாக இருக்கிறாயா?" என்று மட்டும் கேட்கவே செய்யாதீர்கள். "அவர் இன்னின்ன விஷயம் குறித்து என்னென்ன சொன்னார்?" என்றெல்லாம் துறுவிக் கொண்டிருக்காதீர்கள்.

இளம் மனைவியரே! உங்கள் அம்மாக்கள் இப்படி எதையாவது உங்களிடம் கேட்டால் - "சாரிம்மா! அவர் சொல்வதை எல்லாம் உன்னிடம் சொல்ல முடியாதம்மா!" என்று அழகாக மறுத்து விடுங்கள்! திருமணம் ஆன பின்னர், கணவனுக்கே முன்னுரிமையும் முதல் உரிமையும்! இப்படிச் சொல்வதால் உங்கள் பெற்றோர்களை உதாசீனப்படுத்துங்கள் என்று சொல்வதாக ஆகாது!
இளம் தம்பதியர்களுக்கு மேலும் நாம் சொல்வது:

உங்கள் பெற்றோர்கள் உங்கள் திருமண வாழ்வில் தேவையின்றி குறுக்கிட்டால் அதனை விவேகமான முறையில் தவிர்த்து விடுங்கள்! உங்கள் திருமண வாழ்வின் சின்னச் சின்னப் பிரச்னைகளுக்கெல்லாம், உங்கள் பெற்றோர்களிடம் ஓடிக் கொண்டிருக்காதீர்கள்!

உங்களுக்குத் திருமணம் செய்வதற்குத் தகுதி வந்து விட்டதென்றால், உங்கள் பிரச்னைகளைத் தீர்த்துக் கொள்வதற்கும் உங்களுக்குத் தகுதி இருக்கின்றது! உங்கள் பிரச்னைகளை உங்களால் தீர்த்துக் கொள்ள முடியாது என்றால், பின்னர் ஏன் திருமணம் செய்து கொண்டீர்கள்? (அதாவது நீங்கள் இன்னும் திருமணத்துக்குத் தயாராகவில்லை என்பதே அதன் பொருள்).

நாம் மேலே எழுதியிருப்பவை அனைத்தும் அந்த இஸ்லாமிய அறிஞரின் கருத்துக்களே!

(இக்கட்டுரை ஆசிரியரான எமக்கு இதில் முழு உடன்பாடு என்பதாலேயே தமிழில் மொழி பெயர்த்து இங்கே தந்திருக்கின்றோம்).

இந்தக் கருத்துக்களை என் உறவினர் வீட்டுப்பெண்மணி ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்த போது அவர் கேட்டார்:

அப்படியானால் பிள்ளைகளைக் கல்யாணம் பண்ணிக் கொடுத்து விட்டு எங்களைச் செத்துப் போகச் சொல்கிறீர்களா?

காலா காலமாகப் பின்பற்றப்பட்டு வருகின்ற "கலாச்சார" வாழ்வு தரும் "சுகத்தை" அனுபவித்துக் கொண்டு அடுத்த தலைமுறையையும் அதன் அடிப்படையிலேயே வார்த்தெடுக்க விரும்பும் இத்தகைய பெற்றோர்கள் இஸ்லாம் காட்டித் தரும் வழிகாட்டுதல்களை முற்றிலும் புறக்கணித்து விடுகிறார்கள்!

பிள்ளைகளுக்குத் திருமணம் செய்து வைத்த பிறகு பெற்றோர்கள் பிள்ளைகளிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்; பிள்ளைகள் பெற்றோர்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்; இதில் கணவன்-மனைவி உரிமைகள் எவ்வாறு பாதுகாக்கப் பட வேண்டும் - என்பதெல்லாம் இஸ்லாத்தின் அடிப்படையில் விரிவாக விவாதிக்கப்பட வேண்டிய விஷயங்கள்

இன்ஷா அல்லாஹ் விவாதிப்போம் - அழகிய முறையில்!

Saturday, April 19, 2014

இதற்கெல்லாம் ஒரு முடிவே இல்லையா?

சுன்னத்தான இல்லறம்: 

ஈமான் கொண்டு நல்லமல்கள் செய்தால் நற்பாக்கியங்கள் உண்டு என்கிறான் வல்லோன் அல்லாஹ்!

எவர்கள் ஈமான் கொண்டு நற்கருமங்கள் புரிகின்றார்களோ, அவர்களுக்கு (எல்லா) நற்பாக்கியங்களும் உண்டு; இன்னும் அழகிய இருப்பிடமும் உண்டு. (13:29)

நமது குடும்பங்களிலிருந்து எங்கே போனது (தூபா எனும்) நற்பாக்கியங்கள் அனைத்தும்?

**

இஸ்லாம் மார்க்கம் பின்பற்றுவதற்கு எளிதானது!

இந்த தீனில் (மார்க்கத்தில்) அவன் உங்களுக்கு எந்த சிரமத்தையும் ஏற்படுத்தவில்லை; (22:78)

இலகுவான (யுஸ்ர்) பாதையை நாம் உமக்கு எளிதாக்கித் தருவோம்! (87:8)

நம் இல்லற வாழ்க்கை இலகுவாகப் போய்க் கொண்டிருக்கின்றதா? அல்லது சிக்கல் நிறைந்து காணப்படுகின்றதா?

சிக்கலாக்கியது யார்? தெரிந்து தானே வைத்திருக்கின்றோம்! பின் ஏன் நாம் இஸ்லாத்தைப் பின்பற்றுவது போல் நடித்துக் கொண்டிருக்கின்றோம்?

**

அல்லாஹு தஆலா நம்மை ஆணாகவும் பெண்ணாகவும் படைத்ததன் நோக்கமே மன நிம்மதி, காதல் மற்றும் கருணைக்காகத் தான்!

இன்னும், நீங்கள் அவர்களிடம் ஆறுதல் பெறுதற்குரிய (உங்கள்) மனைவியரை உங்களிலிருந்தே உங்களுக்காக அவன் படைத்திருப்பதும்; உங்களுக்கிடையே அன்பையும், கருணையையும் உண்டாக்கியிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும்; சிந்தித்து உணரக்கூடிய சமூகத்திற்கு நிச்சயமாக, இதில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன.

எங்கே போனது சகீனா எனும் மன நிம்மதியும் ஆறுதலும்?

எங்கே போனது மவத்தத் எனும் காதலும் ரஹ்மத் எனும் கருணையும்?

**

எல்லாவற்றையும் சேர்த்துப்பார்த்தால் - நமது இல்லற வாழ்வில் மகிழ்ச்சி இல்லை! அமைதி இல்லை! கண் குளிர்ச்சி இல்லை! ஆறுதல் இல்லை! அன்பு இல்லை! கருணை இல்லை! நற்பாக்கியங்கள் இல்லை!

உள்ளத்தின் ஆழத்தில் ஒரு கேள்வி ஒலித்துக் கொண்டே இருக்கின்றது:

இதற்கெல்லாம் ஒரு முடிவே இல்லையா?

ஆதங்கம் ஒன்று இருக்கின்றது:

மீண்டும் நல் இல்லங்களில் மகிழ்ச்சியை, அமைதியை, கண் குளிர்ச்சியை, ஆறுதலை, அன்பை, கருணையை நம்மால் கொண்டு வர முடியாதா?

நம்மை நாம் மாற்றிக் கொள்வதற்கு இன்னுமா நேரம் வரவில்லை? 

குடும்பங்களில் எங்கே அமைதி?

சுன்னத்தான இல்லறம்: 

இஸ்லாம் என்றாலே அமைதி தரும் மார்க்கம் என்று தான் பொருள்!

மனிதர்களின் வாழ்வில் அமைதியையும், நிம்மதியையும், சாந்தியையும், சமாதானத்தையும் - கொண்டு வரவே - அல்லாஹு தஆலா தனது பேரொளி மிக்க திருமறையை நமக்கென இறக்கியருளினான்.


"அல்லாஹ்விடமிருந்து - பேரொளி மிக்க, சத்தியத்தைத் தெளிவாக எடுத்துரைக்கின்ற, திருமறை உங்களிடம் வந்துள்ளது. அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை விரும்புவோருக்கு அல்லாஹ் அதன்மூலம் அமைதிக்கான வழியைக் காண்பிக்கின்றான்;

மேலும் அவன் தன் கட்டளைகளைக் கொண்டு இருள்களிலிருந்து அவர்களை வெளியாக்கி ஒளியின் பக்கம் கொண்டு வருகின்றான்; இன்னும் அவர்களை நேர்வழியின் பக்கம் வழிகாட்டவும் செய்கின்றான்." (5:15-16)

மீண்டும் நாம் கேட்கும் கேள்வி என்னவெனில் - நம் குடும்பங்களில் எங்கே அமைதி? எங்கே நிம்மதி? எங்கே சாந்தியும் சமாதானமும்?

குடும்பங்களில் நிம்மதி குலைந்தது எதனால்? குலைத்தது யார்? கண்டு பிடிப்பதென்ன கடினமா?

தூங்குவது போல் ஏன் இன்னும் நடிப்பு?

கண் குளிர்ச்சி காணாமல் போனது எப்படி?

சுன்னத்தான இல்லறம்:

வல்லோன் அல்லாஹு தஆலா நம்மைக் கேட்கச் சொல்லும் ஒரு துஆ - நாம் அனைவரும் அறிந்த துஆ தான்

அது:


"மேலும் அவர்கள்: “எங்கள் இறைவா! எங்கள் மனைவியரிடமும், எங்கள் சந்ததியரிடமும் இருந்து எங்களுக்குக் கண்களின் குளிர்ச்சியை அளிப்பாயாக! இன்னும் பயபக்தியுடையவர்களுக்கு எங்களை இமாமாக (வழிகாட்டியாக)
ஆக்கியருள்வாயாக! என்று பிரார்த்தனை செய்வார்கள்." (25:74)

மேற்கண்ட இறை வசனத்தில் "அஸ்வாஜினா" என்ற ஒரு சொற்றொடர் வருகிறது. இதற்கு "எங்கள் மனைவியரிடமும்" என்று மொழிபெயர்க்கப் படுகிறது. ஆனால் "துணைவர்களிடமும்" என்று மொழிபெயர்ப்பதே சரியானது!    

ஸவ்ஜ் என்பது ஒருமை. அஸ்வாஜ் என்பது பன்மை.

ஸவ்ஜ் என்பதன் முழுமையான பொருள் என்ன?

ஆங்கிலத்தில் ஸவ்ஜ் என்பதற்கு  one of a pair, partner, couple, mate, husband, wife என்றெல்லாம் மொழிபெயர்க்கப்படுகின்றது.

“ஜோடி” என்பது பொருத்தமான மொழிபெயர்ப்பாக தெரிகிறது.

தமிழில் இதற்கு – துணை, துணைவர், துணைவி – என்றெல்லாம் மொழிபெயர்க்கலாம்.

மேற்கண்ட திருமறை வசனத்தை -

மேலும் அவர்கள்: “எங்கள் இறைவா! எங்கள் துணைவர்களிடமும், எங்கள் சந்ததியரிடமும் இருந்து எங்களுக்குக் கண்களின் குளிர்ச்சியை அளிப்பாயாக! இன்னும் பயபக்தியுடையவர்களுக்கு எங்களை இமாமாக (வழிகாட்டியாக) ஆக்கியருள்வாயாக! என்று பிரார்த்தனை செய்வார்கள்.” -

என்று மொழி பெயர்ப்பதே சரியானது.  (அல்லாஹ்வே மிக அறிந்தவன்.)

முஹம்மது அஸத் அவர்கள் தமது ஆங்கில மொழிபெயர்ப்பில் azwaaj என்பதற்கு spouses என்று மொழி பெயர்த்துள்ளார்கள்.

“and who pray: “O our Sustainer! Grant that our spouses and our offspring be a joy to our eyes, and cause us to be foremost among those who are conscious of Thee!”

Spouses  என்பதற்கு துணைவர்கள் என்பதே சரியான மொழிபெயர்ப்பு!

எனவே – கணவர்கள் துஆ செய்திடும்போது “எங்கள் இறைவா! எங்கள் மனைவியரிடமும், எங்கள் சந்ததியரிடமும் இருந்து எங்களுக்குக் கண்களின் குளிர்ச்சியை அளிப்பாயாக!”  – என்றும்,

அது போலவே – மனைவியர் துஆ செய்திடும்போது “எங்கள் இறைவா! எங்கள் கணவர்களிடமும், எங்கள் சந்ததியரிடமும் இருந்து எங்களுக்குக் கண்களின் குளிர்ச்சியை அளிப்பாயாக!” – என்றும் பொருள் எடுத்துக் கொள்ளலாம்.

ஆனால் நாம் இங்கே இதனை எடுத்து எழுதுவதன் நோக்கம் - நல்லதொரு மொழிபெயர்ப்புக்காக அன்று!

நாம் இதனை இங்கே எழுதுவதன் நோக்கம் கேள்வி ஒன்றை உங்களிடம் கேட்டிடத்தான்:

அது என்ன கேள்வி?

கணவன் மூலம் மனைவிக்கும், மனைவி மூலம் கணவனுக்கும் கண் குளிர்ச்சி என்பது - இருக்கிறதா என்ன?

அது கானல் நீராகிப் போய் விட்டதா என்ன? அதனைக் காணாமல் அடித்தது யார்?

யார் என்று தெரிந்த பின்னும் ஏன் இன்னும் நாம் விழித்துக் கொள்ளவில்லை! 

நமது குடும்பங்களில் மகிழ்ச்சி தொலைந்து போனது ஏன்?

சுன்னத்தான இல்லறம்:

இஸ்லாமிய இல்லறம் என்பது இறைவழிகாட்டுதலின் அடிப்படையில் அமைந்தது. வழிகாட்டும் திருமறை குர்ஆனை நமக்கென்று அனுப்பி வைக்கப்பட்டதை நினைத்து "அவர்கள் மகிழ்ச்சியடையட்டும்!" என்கிறான் வல்லோன் அல்லாஹு தஆலா!


"மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு நிச்சயமாக ஒரு நல்லுபதேசமும் வந்துள்ளது. (உங்கள்) இதயங்களிலுள்ள நோய்களுக்கு அருமருந்தும் (வந்திருக்கிறது; ) மேலும் (அது) முஃமின்களுக்கு நேர்வழிகாட்டியாகவும், நல்லருளாகவும் உள்ளது.

“அல்லாஹ்வின் அருட்கொடையினாலும், அவனுடைய பெருங்கிருபையினாலுமே (இது வந்துள்ளது, எனவே) - இதில் அவர்கள் மகிழ்ச்சியடையட்டும் (rejoice!);  அவர்கள் திரட்டி வைத்திருக்கும் (செல்வங்களை) விட இது மிக்க மேலானது” என்று (நபியே!) நீர் கூறும். (10: 57-58)

மகிழ்ச்சி அடையுங்கள் என்றால் என்ன பொருள்?

மார்க்கத்தைப் பின்பற்றி மகிழ்ச்சியாக வாழுங்கள் என்பது தானே?

மார்க்கத்தில் பாதி என்பது நல்லதொரு பெண்ணைத் திருமணம் முடித்து வாழ்வது தானே?

“யாருக்கு அல்லாஹ் நல்ல மனைவியைக் கொடுக்கின்றானோ அவனது மார்க்கத்தின் பாதி நிறைவுபெற அல்லாஹ் உதவி விட்டான் அடுத்த பாதியில் அல்லாஹ்வை அவன் பயந்து நடந்து கொள்ளட்டும்.” (தபரானி, பைஹகி, ஹாகிம்)

ஆனால் நமது குடும்பங்களில் மகிழ்ச்சியைக் காண முடியவில்லையே? ஏன்?

காணாமல் அடித்தது யார்? ஷைத்தானின் வலையில் விழுந்தது யார்?

நாம் இன்னும் விழித்துக் கொள்ளாமல் இருப்பது ஏன்?

Friday, April 18, 2014

மார்க்கத்தை சிரைத்து விடும் என்றால் என்ன பொருள்?

சுன்னத்தான இல்லறம்

ஆதாரப்பூர்வமான நபிமொழி ஒன்று:

'கவனியுங்கள்! நான் உங்களுக்கு தொழுகையை விடவும், நோன்பை விடவும், தர்மம் செய்வதை விடவும், அந்தஸ்தில் ஒரு படி மேலான ஒன்றை உங்களுக்குச் சொல்லித் தரட்டுமா?' என்று நபியவர்கள் கேட்டார்கள். நபித் தோழர்கள் ஆம் என்றார்கள்.
"உங்களுக்குள் உள்ள உறவுகளை சரியான விதத்தில் சீர் திருத்திக் கொள்ளுங்கள்; ஏனெனில் உங்கள் நல்லுறவில் குறைகள் ஏற்பட்டால், அது ஒரு பொருளை சிரைத்து விடும்!"

அபூ ஈஸா அவர்கள் இது ஆதாரப் பூர்வமான ஹதீஸ் என்று சொல்லி மேலும் அறிவிக்கிறார்கள்:

நபியவர்கள் சொன்னார்கள்: உறவுகளில் குறை இருந்தால் அது முடியை சிரைத்து விடும் என்று நான் சொல்லவில்லை; மாறாக அது உங்கள் உங்கள் மார்க்கத்தை சிரைத்து விடும்!' (சுனன் அத்-திர்மிதி)

கேள்வி ஒன்று : உங்கள் மார்க்கத்தை சிரைத்து விடும் என்றால் என்ன பொருள்?

கேள்வி இரண்டு: "உங்களுக்குள் உள்ள உறவுகளை சரியான விதத்தில் சீர் திருத்திக் கொள்ளுங்கள்!" - என்கிறார்கள் நபியவர்கள்; இது கணவன் மனைவி உறவையும் சேர்த்துத் தானே?

மிகப்பெரும் குழப்பமாக - கணவன் மனைவியரைப் பிரித்து வைப்பதை இப்லீஸ் தேர்வு செய்தது ஏன்?

சுன்னத்தான இல்லறம்: 

மிகப்பெரும் குழப்பமாக - கணவன் மனைவியரைப் பிரித்து வைப்பதை இப்லீஸ் தேர்வு செய்தது ஏன்?

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : இப்லீஸ், தனது சிம்மாசனத்தை (கடல்) நீரின் மீது அமைக்கிறான். பிறகு தன் பட்டாளங்களை (மக்களிடையே) அனுப்புகிறான்.

அவர்களில் மிகப் பெரும் குழப்பத்தை ஏற்படுத்துகின்ற (ஷைத்தான் எவனோ அ)வனே இப்லீஸிடம் மிகவும் நெருங்கிய அந்தஸ்தைப் பெறுகிறான்.

அவனிடம் ஷைத்தான்களில் ஒருவன் (திரும்பி)வந்து "நான் இன்னின்னவாறு செய்தேன்'' என்று கூறுவான். அப்போது இப்லீஸ், "(சொல்லிலிக்கொள்ளும் அளவுக்கு) நீ எதையும் செய்யவில்லை'' என்று கூறுவான்.

பிறகு அவர்களில் மற்றொருவன் வந்து, "நான் ஒரு மனிதனுக்கும் அவனுடைய மனைவிக்கும் இடையே பிரிவை ஏற்படுத்தாமல் அவனை நான் விட்டுவைக்கவில்லை'' என்று கூறுவான். அப்போது இப்லீஸ், அவனை அருகில் வரச் செய்து, "நீதான் சரி(யான ஆள்)'' என்று (பாராட்டிக்) கூறுவான். அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி) நூல் : முஸ்லிம் (5419)

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அறிவிப்பாளர்களில் ஒருவரான அஃமஷ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (எனக்கு இந்த ஹதீஸை அறிவித்த) அபூசுஃப்யான் தல்ஹா பின் நாஃபிஉ (ரஹ்) அவர்கள், "அப்போது அந்த ஷைத்தானை இப்லீஸ் கட்டியணைத்துக்கொள்கிறான் (பிறகு அவ்வாறு பாராட்டுகிறான்)" என்று கூறியதாகவே நான் கருதுகிறேன்.

கேள்வி:

மிகப்பெரும் குழப்பமாக - கணவன் மனைவியரைப் பிரித்து வைப்பதை இப்லீஸ் தேர்வு செய்தது ஏன்? 

Thursday, April 17, 2014

விழித்துக் கொள்ள வேண்டியது இளைய ஆண் வர்க்கமே!

சுன்னத்தான இல்லறம்:

பாலுறவு குறித்து வெளிப்படையாகப் பேசிட நமக்கு மிகப்பெரிய தயக்கங்கள் உண்டு!

நமது இறையச்சம் தான் இதற்குக் காரணமா என்றால் நிச்சயமாக இல்லை! நாம் ஒன்றும் நபியவர்களின் மனைவியர்களான நமது அன்னையர்களை விட இறையச்சம் உடையவர்களா என்ன?


அடுத்து நமது வெட்க உணர்ச்சி தான் காரணமா என்றால் – அதனை நாம் உடைத்துத் தான் ஆக வேண்டும்.

“பெண்களில் அன்ஸார்களின் பெண்களே நல்லவர்கள். அவர்கள் மார்க்கத்தைக் கேட்டு தெளிவு பெறுவதிலிருந்து அவர்களது வெட்கம் அவர்களை தடுக்கவில்லை” என ஆயிஷா (ரளி) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

அல்லது – சொல்லித்தெரிவது அல்ல இந்தக் கலை – என்ற அலட்சியமா என்றால் – ஆம்! அந்த அலட்சியம் தான்!

ஆனால் இந்த அலட்சியம் தான் நமது சமூகத்தின் கணவன் மனைவியர் உறவுகளை மிகுந்த அளவுக்கு பாதித்திருக்கின்றது! இதனை நாம் உணர்ந்து தான் ஆக வேண்டும்.

நாம் ஒன்றும் பாலியல் கல்வியை “சொற்பொழிவு மன்றங்களில்” ஒலிபெருக்கி வைத்து பரப்புங்கள் என்று சொல்லவில்லை! அது தேவையும் இல்லை. நாம் சொல்ல வருவது – இது குறித்த “கல்வியறிவை” மஸ்ஜித்களில் வைத்து நமது இளைய சமூகத்துக்கு ஊட்டுங்கள் என்பது தான்.

அடுத்து நாம் நமது இளைய தலைமுறை கணவன்மார்களுக்கும், மனைவியருக்கும் வலியுறுத்திச் சொல்வது என்னவென்றால் - கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் தங்களின் பாலுறவுத் தேவைகள் குறித்து மனம் திறந்துப் பேசிக் கொள்ளுங்கள் என்பது தான்.

இது விஷயத்தில் – பெண்கள் தயங்குவதற்குக் காரணம் இருக்கிறது. அது அவர்களின் இயல்பான வெட்க உணர்ச்சி. இந்த வெட்கத்தையும் கணவன்மார்களே உடைத்தெறிந்திட வேண்டும். இதனை நாம் வலியுறுத்துவதற்குக் காரணம் – மனைவியின் பாலுறவுத் தேவைகள் சரிவர நிறைவேறாத நிலையில் தமது அளவுக்கு மீறிய வெட்க உணர்ச்சியினால் அது குறித்துக் கணவனிடம் பேசத் தயங்குவதால் என்னென்ன விளைவுகள் ஏற்படுகின்றன?

மண முறிவு! அல்லது திருப்தியற்ற இல்லற வாழ்க்கை! அல்லது கணவனுக்கே துரோகம்!

ஆனால் இன்றைய பெண்களோ – இந்த விஷயத்தை வெளியே கொண்டு வரத் தொடங்கி விட்டார்கள். அவர்கள் பெண் கவுன்ஸலர்களை அணுகுகிறார்கள். ஒரு இஸ்லாமியப் பெண் அறிஞரே இது குறித்து விரிவாக – குறிப்பாக இளைஞர்களுக்கு பாலியல் அறிவுரைகளை விரிவாகவும் வெளிப்படையாகவும் எழுதியிருக்கிறார்கள். அவர் பெயர்: ருகையா வாரிஃத் மக்ஸூத் அவர்கள்.

விழித்துக் கொள்ள வேண்டியது இளைய ஆண் வர்க்கமே!

குறிப்பாக நாம் இங்கே கணவன்மார்களுக்கு வலியுறுத்தும் பாலுறவுப் பாடங்கள்:

1. முத்தமிடுங்கள் – உங்கள் மனைவியை! அடிக்கடி முத்தமிடுங்கள்! எத்தனை ஆண்டுகள் ஆனாலும் முத்தமிடுங்கள்! ஒரு ஐந்து வினாடியாவது தொடரட்டும் உங்கள் முத்தம்.

2. முன் விளையாட்டு இன்றி பாலுறவு வேண்டாம்! முத்தமும் இன்சொற்களும் – பாலுறவுக்கு முன் மிக அவசியம். முன் விளையாட்டின் மூலமே மனைவி நனைகிறார் (becoming wet). பாலுறவுக்குத் தயாராகிறார். முன் விளையாட்டு இன்றி பாலுறவைத் துவக்கினால் – மனைவியருக்கு அது சிரமம் ஆகி விடும். மேலும் மனைவியின் தேவை நிறைவேற்றபடாமலேயே கணவன் தன் தேவையை முடித்துக் கொண்டு விடுவான். எச்சரிக்கை!

3. நேரம் வாய்க்கும்போதெல்லாம் – மனைவியைக் கட்டிப்பிடித்துக் கொள்ளுங்கள். – அது சமையல் அறையாக இருந்தாலும் சரியே! தனிமை கிடைக்கும்போதெல்லாம் கட்டியணைத்துக் கொஞ்சுங்கள்!

4. பாலுறவில் உங்கள் துணைக்கு என்னென்னவெல்லாம் பிடிக்கும் என்பதை வெளிப்படையாகப் பேசித்தெரிந்து கொள்ளுங்கள். தயக்கம் வேண்டாம் என்று உங்கள் துணையை ஊக்கப் படுத்துங்கள்.

5. நான்கு மாதங்களுக்கு மேலாக உங்கள் மனைவியைப் பிரிந்து செல்ல வேண்டாம்! அது எவ்வளவு பெரிய வேலையாக இருந்தாலும் சரி! ஷரீஅத்தில் அதற்கு இடமில்லை!

6. சந்தேகங்களை – உடனுக்குடன் மார்க்க அறிஞர்கள் அல்லது திருமண ஆலோசகர்களை அணுகி – விளக்கம் பெற்றுக் கொள்ளுங்கள். பாலுறவு குறித்து பல தவறான “நம்பிக்கைகள்” குறிப்பாக கணவன்மார்களிடத்தில் உண்டு. இவை களையப்பட வேண்டும்.

7. ஆண்மைக்குறைவை ஏற்படுத்தும் உணவுப்பழக்கங்களைக் கை விடுங்கள். குறை ஏற்படின் தகுந்த மருத்துவரை மட்டும் அணுகுங்கள்.

8. உடலை எப்போதும் தூய்மையாக வைத்துக் கொள்ளுங்கள். மனைவியர் தம் கணவன்மார்களுக்காகத் தங்களை அலங்கரித்துக் கொள்ளுங்கள். எத்தனை வயதானாலும் சரியே! அலட்சியம் வேண்டாம்.

9. படுக்கையறையில் விவாதங்கள் வேண்டாம்! ஒரே ஒரு மிகச்சிறிய சொல் கூட ஒரு இரவையே வீணாக்கி விடும்.

10. பாலுறவு – உங்கள் இல்லறத்தின் பிரிக்க முடியாத ஒரு அங்கம் என்பதை எப்போதும் மறந்து விட வேண்டாம்.

11. அனைத்து விஷயங்களிலும் கணவன் மனைவி இருவரும் நெருக்கமான நண்பர்களாக (intimate friendship) வாழுங்கள்.

12. திருமண உறவுக்கு அப்பால் பாலுறவை நாடி விடாதீர்கள்; ஏனெனில் அது வெறும் இரண்டு உடல்களின் சேர்க்கை மட்டுமே! ஆனால் திருமண வரம்புக்குட்பட்ட உறவு என்பது இரண்டு உடல்களை மட்டும் சேர்த்து வைப்பது அல்ல! இரண்டு இதயங்களையும் சேர்த்து வைப்பது தான்!

Wednesday, April 16, 2014

பாலுறவு குறித்து மனம் திறந்து பேசுங்கள்!

சுன்னத்தான இல்லறம்:

அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் மிகுந்த அறிவு நுட்பத்துக்குச் சொந்தக்காரர்! Super Intellect! நபி (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களை மிகவும் நேசித்ததற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.


நபியவர்கள் ஒரு முறை சொன்னார்கள்: “ஆயிஷாவின் படுக்கையில் (நான் இருக்கும் போதே தவிர) வேறெந்த மனைவியின் படுக்கையிலும் வஹீ (வேத வெளிப்பாடு) எனக்கு வருவதில்லை….” (புகாரி)

அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் எந்த ஒன்றையும் "வடிகட்டிப் பேசுவதில்" வல்லவர்கள். எதைப் பேச வேண்டும்; எதனை மறைத்து விட வேண்டும். எதனை சூசகமாக உணர்த்திட வேண்டும் என்பதில் கை தேர்ந்தவர்கள்.

இரண்டு சான்றுகள்:

ஓன்று: ஸஹீஹுல் புகாரியில் உள்ள ஒரு நீண்ட நபிமொழியிலிருந்து...

அண்ணலார் (ஸல்) அவர்கள் அன்னை ஆயிஷாவின் வீட்டில் இருக்கும் நேரத்தில் - குடும்பப் பிரச்னை ஒன்றை விவாதிக்க நபியவர்களின் இன்னொரு மனைவியான ஸைனப் பின்த்து ஜஹ்ஷ் அவர்கள் வருகின்றார்கள். அவர்கள் குரலை உயர்த்தி ஆயிஷா அவர்களைக் குறை கூறிக் கடுமையாகப் பேசி விடுகின்றார்கள்.

இந்த நபிமொழியை அறிவிக்கும் அன்னை ஆயிஷா அவர்கள் கூறுகின்றார்கள்: "உடனே, நான் ஸைனபுக்கு பதில் சொல்லி, இறுதியில் அவரை வாயடைக்கச் செய்து விட்டேன்!"

ஸைனப் பின்த் ஜஹ்ஷ் அவர்கள் அன்னை ஆயிஷா பற்றி என்ன குறை கூறினார்கள்? ஆயிஷா அவர்கள் ஸைனப் அவர்களுக்கு என்ன பதில் சொன்னார்கள்? எப்படி வாயடைக்கச் செய்தார்கள்? – என்பதையெல்லாம் வெளிப்படையாகப் பேசாமல் மறைத்து விட்டார்கள்!

இரண்டு:

இதுவும் ஸஹீஹுல் புகாரியில் உள்ள ஒரு நீண்ட நபிமொழியிலிருந்து தான்:

அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் சொல்கிறார்கள்: என் தந்தை அபூபக்ர் (ரலி) என்னருகே வந்தபோது நபி (ஸல்) அவர்கள் தங்களின் தலையை என்னுடைய மடி மீது வைத்துத் தூங்கிக் கொண்டிருந்தார்கள். என் தந்தை "நபி (ஸல்) அவர்களையும் மக்களையும் தங்க வைத்துவிட்டாயே? அவர்கள் தங்கிய இடத்திலும் தண்ணீர் இல்லை; அவர்களிடமும் தண்ணீர் இல்லை" என்று கூறினார்கள்.

அவர்கள் எதைச் சொல்ல அல்லாஹ் நாடினானோ அதையெல்லாம் சொல்லிவிட்டு, தங்களின் கையால் என்னுடைய இடுப்பில் குத்தினார்கள்.

அபூபக்ர் அவர்கள் அன்னை ஆயிஷாவை எப்படியெல்லாம் விமர்சித்தார்கள் என்பதை வெளிப்படையாகச் சொல்லாமல் – “அவர்கள் எதைச் சொல்ல அல்லாஹ் நாடினானோ அதையெல்லாம் சொல்லிவிட்டு” – என்கிறார்கள். எவ்வளவு அறிவு நுட்பம் பார்த்தீர்களா?

ஆனால் – அதே அன்னை ஆயிஷா அவர்கள் அண்ணலாருடன் தனது பாலுறவு வாழ்க்கையை பற்றிய குறிப்புகளை ஏன் மறைக்காமல் இந்த உம்மத்துக்கு வெளிப்படுத்திக் காட்டினார்கள் என்பது நாம் அனைவரும் சிந்திக்க வேண்டிய விஷயம்.

பின் வரும் நபிமொழிகளைக் கவனியுங்கள்:

அன்னை ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள்: “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் மனைவியர்களில் ஒருவரை முத்தமிட்டுவிட்டு, ஒளூச்செய்யாமலே தொழச் சென்றார்கள். (ஆயிஷா அவர்களிடமிருந்து அறிவிக்கும்) உர்வா கூறுகிறார், “நான் ஆயிஷாவிடம் ‘அது நீங்களாகத்தான் இருக்கும்?’ என்றேன். அதற்கு அவர்கள் புன்னகைத்தார்கள்:.” (ஆதாரம் ஸுனன் திர்மிதீ, ஸுனன் அபூதாவூத்)

தன் கணவர் தன்னை முத்தமிட்டதை மறைமுகமாக ஏன் அறிவிக்கின்றார்கள்? உர்வா அவர்களும் விடாமல் அது அன்னை ஆயிஷா அவர்கள் தாம் என்பதை விளக்க வைத்து விட்டார்களே!

நபி அவர்கள் நோன்பு நோற்ற நிலையில் (தம் மனைவியை) முத்தமிடுவார்கள். மேலும், நோன்பு நோற்ற நிலையில் கட்டியணைப்பார்கள். ஆனால், அவர்கள் தம் இச்சையைக் கட்டுப்படுத்திக் கொள்ளும் சக்தியுடையவராக இருந்தார்கள் என, ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார்கள். (புகாரி, முஸ்லிம்)

நான் மாதவிடாய் வந்த நிலையில் (ஒரு பாத்திரத்தில்) பருகிவிட்டு பிறகு நபி (ஸல்) அவர்களுக்கு அப்பாத்திரத்தைக் கொடுப்பேன். நான் எங்கு வாய் வைத்தேனா அதே இடத்தில் தங்களது வாயை வைத்து குடிப்பார்கள். எலும்புடன் ஒட்டியிருக்கும் இறைச்சியை நான் கடித்துவிட்டு நபி (ஸல்) அவர்களிடம் கொடுப்பேன். நான் எங்கு வாய் வைத்திருந்தேனோ அங்கேயே வாயை வைப்பார்கள் என ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். (முஸ்லிம்)

அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடம் ‘அதா’வு என்பவர் கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா என்று நேரடியாக கேட்ட போது, பார்ப்பதற்கு அனுமதி உள்ளதாக சூசகமாக உணர்த்தினார்கள் என்ற ஹதீஸ் இப்னு ஹப்பானில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அண்ணலார் அவர்கள் – தம்மை முத்தமிடுவது பற்றி, கட்டியணைத்துக் கொள்வது பற்றி, உடலுறவு கொள்வது பற்றி, குளிப்பது பற்றி, மாத விலக்கு நேரத்தில் நபியவர்களின் செயல்கள் பற்றியெல்லாம் ஏன் அவர்கள் வெளிப்படையாகப் பேசிட வேண்டும். இவை அனைத்தும் அவர்களது தனிப்பட்ட “இல்லற விஷயங்கள்” என்று மூடி மறைத்திருக்கலாமே? ஆனால் அப்படி செய்யவில்லை! அதற்குக் காரணம் இருக்கின்றது!

இந்த உம்மத் – பாலுறவு குறித்து அலட்சியம் செய்து விடக்கூடாது என்பதே அதற்கான வலுவான காரணமாக இருக்க முடியும்.

ஆனால் நமது நிலை என்ன?

சுன்னத்தான ஆறு அறிவுரைகள்!

சுன்னத்தான இல்லறம்: 

(இது கணவன்மார்களுக்கு)

1. பொதுவாகவே பெண்கள் “உணர்வுகளுக்கு” அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்கள் என்பதை கணவன்மார்கள் புரிந்து கொள்ள வேண்டும்! பெண்கள் உணர்ச்சிகளைப் புரிந்து கொள்வதில் ஆண்களை விட மிகச் சிறப்பானவர்கள்.


அது போலவே அந்த உணர்ச்சிகளுக்கு சொல் வடிவம் தந்து விலாவாரியாக வர்ணிப்பதிலும் பெண்கள் கெட்டிக்காரர்கள். ஆனால் பரிதாபம்! ஆண்களின் நிலை இதற்கு நேர் மாறானது! அவர்களால் உணர்ச்சிகளைச் சரிவர புரிந்து கொள்ளவே முடியாது! அது போல உணர்ச்சிகளை அவர்களால் விவரித்துச் சொல்லிடவும் முடியாது!

எனவே உங்கள் மனைவி உணர்வு ரீதியாக பாதிக்கப்பட்டிருந்தால் - அந்த உணர்வுகளை முதலில் புரிந்து கொள்ளமுயற்சி செய்யுங்கள்! (try to understand their feelings).

2. அவர் தங்கள் உணர்வுகளை உங்களிடம் பகிர்ந்து கொள்ள வந்தால் - அமைதியாக உள் வாங்கிக் கொள்ளுங்கள்! அது போதும் அவர்களுக்கு! கேள்வியாக ஏதாவது ஒன்றைக் கேட்டால் கூட ஓரிரு வார்த்தைகளில் பதிலைச் சுருக்கி விடுங்கள்!

3. உங்கள் மனைவியின் உணர்வுகளை அங்கீகரியுங்கள் (recognize and validate their feelings); மதியுங்கள்! (respect their feelings); ஏனெனில் உணர்வுகள் அனைத்தும் முற்றிலும் இயல்பானவை! இயற்கையானவை! எல்லோருக்கும்
பொதுவானவை! "உன் கோபம் எனக்குப் புரிகிறது ஆமினா!" - என்று சொல்லிப் பாருங்கள்! கோபம் எல்லாம் அடங்கிப் போய்விடும்!

4. உணர்வு ரீதியான கலந்துரையாடல்களில் - புத்திமதி (advice) சொல்லத் தொடங்கி விடாதீர்கள்! கோபம் வரும் அவர்களுக்கு! மனைவி தன் உணர்வுகளை வெளிப்படுத்திப் பேசத்தொடங்கினால் – அவசரப்பட்டு – ஒரு தீர்வை (solution) வழங்கி விடாதீர்கள்! (do not offer any solutions!). ஏனெனில் அவர்கள் உங்களிடம் எதிர்பார்ப்பது தீர்வுகள் அல்ல! புரிந்துணர்வைத் தான்!

5. அவர்கள் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பும் செய்தியை நீங்கள் மிக அற்பமானது என்று நினைக்கலாம். உங்களுக்கு அவர்கள் பேசுவது bore அடிக்கிறது என்று பேச்சைத் திசை திருப்பப் பார்க்காதீர்கள். இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருக்க எனக்கு நேரம் இல்லை என்று உதறி விடாதீர்கள்! நாளைக்குப் பேசிக் கொள்ளலாமே ப்ளீஸ்! என்று கேட்டுக் கொள்ளுங்கள். அதன்படி நேரம் கொடுத்து விடுங்கள்!

6. ஆனால் உங்கள் மனைவி சொல்கின்ற செய்தியில் எந்த நியாயமும் இல்லை என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்போதும் கூட = விவாதம் (argument) ஒன்றில் இறங்கி விட வேண்டாம். உணர்ச்சிவசப்பட்ட சூழலில் விவாதங்கள் எடுபடாது என்பதால் அமைதியாக இருந்து விடுங்கள்! பின்னர் அமைதியான சூழல் ஒன்றில் வைத்து மனைவியிடம் உங்கள் நிலையை எடுத்துச் சொல்லிக் கொள்ளலாம்!

பின்பற்றிப் பாருங்களேன்!

Tuesday, April 15, 2014

கணவன் என்றால் இப்படியல்லவா இருக்க வேண்டும்!

சுன்னத்தான இல்லறம்:

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவித்திருக்கும் நபி மொழி ஒன்றை இங்கே சுருக்கமாகப் பார்ப்போம்:

(முற்காலத்தில்) பதினொன்று பெண்கள் (ஓரிடத்தில் கூடி) அமர்ந்து கொண்டு ஒவ்வொருவரும் தத்தம் கணவர் குறித்த செய்திகளில் எதையும் மூடி மறைக்காமல் (உள்ளதை உள்ளபடி) எடுத்துரைப்பதென உறுதிமொழியும் தீர்மானமும் எடுத்துக்கொண்டனர்.


பின்பு - ஒவ்வொரு பெண்ணும் தத்தம் கணவர் குறித்து சொல்லிக் கொண்டே வந்தனர்.

இறுதியாக பதினொன்றாவது பெண் கூறினார்:

என் கணவர் (பெயர்) அபூ ஸர்உ. அபூ ஸர்உ எத்தகையவர் தெரியுமா?

ஆபரணங்களை அவர் என் காதுகளில் ஊஞ்சலாடச் செய்திருக்கிறார்.

(ஆசையாசையாக உணவளித்து) என் கொடுங்கைகளை கொழுக்கச் செய்துள்ளார். அவர் என்னைப் பூரிப்படையச் செய்திருக்கிறார். என் மனம் நிறைந்திருக்கிறது.

ஒரு மலைக் குகையில் (அல்லது) 'ஷிக்' எனுமிடத்தில்) சிறிது ஆடுகளுடன் (திரிந்துகொண்டு) இருந்த குடும்பத்தில் என்னைக் கண்ட அவர், என்னை (மனைவியாக ஏற்று) குதிரைகளும் ஒட்டகங்களும் உள்ள, தானியக் களஞ்சியமும் கால்நடைச் செல்வங்களின் அரவமும் நிறைந்த (அவரின் பண்ணை) வீட்டில் என்னை வாழச் செய்தார்.

நான் அவரிடம் எதையும் பேசுவேன்; நான் அலட்சியப்படுத்தப்பட்டதில்லை. நான் தூங்கினாலும் (நிம்மதியாக) முற்பகல் வரைத் தூங்குகிறேன். (என் தூக்கத்தை யாரும் கலைப்பதில்லை.) நான் (உண்டாலும்) பருகினாலும் பெருமிதப்படும் அளவிற்கு (உண்ணுகிறேன்) பருகுகிறேன்.

எனது குறைகள் எல்லாவற்றையும் அவர் மறைத்து விடுவார். அவர் உளப்பூர்வமாக எனக்கு முற்றிலும் கட்டுப்பட்டு விட்டார்! எந்த அளவுக்கு எனில், நான் (அவ்வளவு சிறப்பானவளா என்று) என்னையே நான் விரும்பத் தொடங்கி விட்டேன்! ( "I LOVE MYSELF!")

ஆயிஷா(ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

(என்னருமைக் கணவரான) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (என்னிடம்), '(ஆயிஷாவே!) உம்மு ஸர்விற்கு அபூ ஸர்உ எப்படியோ அப்படியே உனக்கு நானும் (அன்பாளனாக) இருப்பேன்' என்றார்கள்.

இந்த நபிமொழியிலிருந்து நாம் கற்க வேண்டிய பாடங்கள்:

1. மனைவிக்கு இயன்ற வரையில் தாராளமாகச் செலவு செய்யுங்கள்.

2. வசதிக்குத் தகுந்தவாறு மனைவிக்கு நன்றாக உணவளியுங்கள்.(எல்லாரும் உண்ட பின்பு மீதம் இருக்கும் உணவை சாப்பிடும் மனைவியா உங்கள் மனைவி?)

3. ஒரு பெண்ணை உங்களுக்குப் பிடித்து விட்டால் , அவள் பொருளாதாரத்தில் உங்களை விட மிகவும் குறைந்த நிலையில் இருந்தாலும் அதனைப் பொருட்படுத்த வேண்டாம்.

4. உங்கள் வீட்டினிலே முழுமையான சுதந்திரம் கொடுங்கள் உங்கள் மனைவிக்கு . அந்த சுதந்திரத்தில் உங்கள் பெற்றோர் மற்றும் சகோதரிகள் தலையிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

5. மனைவியைப் பேச விட்டுக் கேளுங்கள்; காது கொடுத்துக் கேளுங்கள்; முகம் பார்த்துக் கேளுங்கள்; கேட்டுக் கொண்டே இருங்கள். நீங்கள் பேசுவதை விட அவரைப் பேச விடுங்கள்.

6. உங்கள் மனைவியின் குறைகளையும் தவறுகளையும் பொருட்படுத்தாதீர்கள்.

7. உங்கள் மனைவியிடம் உங்களை முழுமையாக ஒப்படைத்து விடுங்கள்.

8. உங்கள் மனைவியை நீங்கள் ஒரு பொக்கிஷமாக மதிப்பதை அவர் உணரும்படி நடந்து கொள்ளுங்கள்.

"உங்களில் சிறந்தவர்கள் தங்கள் மனைவியரிடம் நல்லபடி நடந்து கொள்பவர்களே!"(அபூஹுரைரா (ரலி); நூல்: திர்மிதி)

கணவன் மனைவியருக்குள் அசைக்க முடியாத நம்பிக்கை! எவ்வாறு?

சுன்னத்தான இல்லறம்: 

கணவன் மனைவியருக்குள் அசைக்க முடியாத நம்பிக்கை என்பது இனிக்கும் இல்லற வாழ்வுக்கு மிக அவசியமான ஒன்று!

கணவன் மனைவியரின் நம்பகத் தன்மை குறைந்து விடும்போது அது உடல் நலத்தையும் கெடுக்கின்றது! மன நலத்தையும் கெடுக்கின்றது. மன அழுத்தத்துக்கு ஆளாகிறார்கள் அவர்கள்.


இதுவே ஒரு தொடர்கதையானால் அது நமது மூளையில் ஏற்படுத்தும் பாதிப்பு லேசானதல்ல! ஹார்மோன்கள், இதயம், இதய நாளங்கள், நரம்பு மண்டலம் அனைத்தையும் பாதிப்புக்குள்ளாக்கி விடுகிறது இந்த மன அழுத்தம். வாழ்நாள் அருகி விடுகிறது அவர்களுக்கு.

அதே நேரத்தில் இன்னொரு உண்மையையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். நம்பிக்கைக்குரிய கணவன் மனைவியர் – உடல் நலமும் பாதுகாக்கப்படுகிறது; மன நலமும் பாதுகாக்கப்படுகிறது என்பது தான் அது. நீண்ட நாள் வாழ்கிறார்கள் அவர்கள் – அதுவும் மகிழ்ச்சியுடன்.

எனவே நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவெனில் – என் துணையின் நம்பிக்கையை நான் பெறுவது எப்படி? நம்பிக்கை மோசம் எப்படி உருவாகிறது? அப்படி ஒன்று உருவானால் அதனை முளையிலேயே கிள்ளி எறிவது எப்படி? – ஆகியவற்றைத்தான்!

ஐந்து விஷயங்களைச் சொல்வோம்:

ஒன்று: நிறையப் பேசிட வேண்டும். மனம் திறந்து பேசிட வேண்டும். கருத்து வேறுபாடுகள் வரும்போது கூட நம் துணையின் கண்ணோட்டம் என்ன என்பதை– தெளிவான மன நிலையுடன் கேட்கத் தயாராக இருக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் பேச்சு (communication) தடைபடக்கூடவே கூடாது.

இரண்டு: ஒருவரை ஒருவர் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். நம் துணை எப்படிப்பட்டவர்? நம் துணையின் விருப்பங்கள் என்னென்ன? அவரது கவலைகள் என்ன? அவருக்கு மகிழ்ச்சி அளிக்கக் கூடிய விஷயங்கள் என்னென்ன? பாலுறவு விஷயம் உட்பட! எல்லாவற்றையும் தெரிந்து கொள்வது அவசியம்.

மூன்று: உங்கள் துணையின் சிறப்புகளை நீங்களும் அங்கீகரிக்க வேண்டும். பாராட்ட வேண்டும். ஊரே பாராட்டும் உங்கள் துணையை! ஆனால் நீங்கள் பாராட்டா விட்டால்? உங்கள் துணையின் சிறப்புகளை நீங்கள் அங்கீகரிக்காவிட்டால், அலட்சியப் படுத்தினால், இந்நிலை தொடர்ந்து கொண்டே இருந்தால் - கணவன் மனைவியர் நம்பகத்தன்மை பறிபோய் விடும்!

நான்கு: சின்னச் சின்ன ஆசைகள் ஒவ்வொரு கணவனுக்கும் உண்டு! மனைவிக்கும் உண்டு! அன்றாடம் உண்டு! துணையின் ஒவ்வொரு ஆசையையும் தெரிந்து வைத்துக் கொண்டு – அதனை இருவரும் போட்டி போட்டுக் கொண்டு நிறைவேற்றுவதில் ஆர்வம் காட்டிட வேண்டும். அதுவும் அன்றாடம்! உங்கள் துணைக்குச் செய்திட வேண்டிய “கடமைகளை” நிறைவேற்றினால் மட்டும் போதாது.

ஐந்து: கருத்து வேறுபாடுகள் தலை தூக்கும் தான்! கடுமையான திட்டல்கள் கூடாது; அவமானப்படுத்தும் சொற்கள் கூடவே கூடாது; பேசிப் பயனில்லை என்று ஒதுங்கி விடவும் கூடாது! நேரம் காலம் பார்த்து – பொறுமையைக் கையாண்டு, உங்கள் துணையின் நிலையில் உங்களை வைத்து சிந்தித்து, விட்டுக் கொடுக்க வேண்டியவற்றை விட்டுக் கொடுத்து ஒரு முடிவுக்கு வருவதே சாலச் சிறந்தது!

இவைகளையெல்லாம் உளவியல் அறிஞர்கள் ஒரு பக்கம் அழுத்தி அழுத்திச் சொல்லிக் கொண்டிருந்தாலும் – வருத்ததுடன் ஒன்றை நாம் சொல்ல வேண்டியுள்ளது:

மருத்துவம் படித்தோம், பொறியியல் படித்தோம். வணிகம் படித்தோம். ஆனால் கணவன் மனைவியாக மகிழ்ச்சியாக இல்லறம் நடத்துவது எப்படி என்று படித்துக் கொடுக்காமலேயே – பொருள் பார்த்து, அழகு பார்த்து, “படிப்பையும்” பார்த்து – திருமணம் செய்து கொடுத்து விடுவோம். கஷ்டப் படுவோம்.

நிலைமை எப்போது மாறும்?

Monday, April 14, 2014

மனைவிக்குத் தேவை சகிப்புத் தன்மை!

சுன்னத்தான இல்லறம்: 

அரபியில் ஒரு சொல்: ஹில்ம்! இதற்கு மென்மை - Gentleness; இரக்கம் - Clemency; சகிப்புத் தன்மை Forbearance என்றெல்லாம் பொருள் படும்.

இந்த குணத்தை உடையரைக் குறிப்பிடும் – ஹலீம் – என்ற சொல்லுக்கு மென்மையானவர், சாந்த குணம் உடையவர், இரக்க குணம் உடையவர், சகிப்புத்தன்மை உடையவர் என்று பொருள் கொள்ளலாம். .
அல்லாஹு தஆலாவுக்கு அல்-ஹலீம் என்ற பெயரும் உண்டு. மிக்க பொறுமை உடையவன் என்று மொழிபெயர்க்கப்படுகிறது. .

இந்த ஹில்ம் எனும் அருமையான பண்புக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர்கள் – ஹள்ரத் இப்ராஹிம் (அலை) அவர்கள்! ( பார்க்க இறைவசனங்கள் 9: 114 மற்றும் 11:75)

அதே போன்று ஹள்ரத் இஸ்மாயில் (அலை) அவர்களும் இந்த அருங்குணத்துக்குச் சொந்தக்காரராக விளங்கினர்கள். இஸ்மாயில் (அலை) அவர்களை – “குலாமுன் ஹலீமுன்” (சகிப்புத்தன்மை உடைய குழந்தை) என்று குறிப்பிடுகிறான் வல்லோன் அல்லாஹ். (பார்க்க இறை வசனம் 37: 101).

சற்றே உற்று நோக்கினால் அன்னை ஹாஜரா அவர்களிடத்திலும் இந்தப் பண்பு நிறைந்து காணப்படுவதை நாம் உணர்ந்து கொள்ள முடியும். அன்னை ஹாஜரா அவர்களின் வாழ்க்கை அனுபவங்களை சற்றே அசைபோட்டுப் பாருங்கள். புரியும்.

சகிப்புத் தன்மை உடையவராக அன்னை ஹாஜரா அவர்கள் விளங்கியதால் தானோ என்னவோ சகிப்புத் தன்மை உடைய இஸ்மாயில் எனும் குழந்தையை அவர் பெற்றெடுக்கின்றார்.

ஒட்டு மொத்தத்தில் இந்தக் குடும்பமே – ஹில்ம் – எனும் சகிப்புத்தன்மைக்கு ஒரு இலக்கணமாகத் திகழ்ந்திருக்கின்றது.

அதைப்போலவே – தன் மகன் இஸ்மாயிலின் மனைவியாக வருபவருக்கு இந்த அருங்குணம் இருந்திட வேண்டும் என்று தந்தை இப்ராஹிம் அவர்கள் எதிர்பாத்திருக்கிறார்கள் என்பதை வரலாறு பதிவு செய்துள்ளது!

பார்க்க ஹதீஸ்: (புகாரி ஹதீஸ் எண் 3364)

இஸ்மாயில் (அலை) அவர்களின் முதல் மனைவியிடம் இந்த சகிப்புத் தன்மை இல்லை! அந்த மனைவி "நாங்கள் மோசமான நிலையில் உள்ளோம். நாங்கள் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறோம்; நாங்கள் பெரும் சிரமத்திலும் கஷ்டத்திலும் இருக்கிறோம் என்று இப்ராஹீம் (அலை) அவர்களிடம் முறையிடுகிறார்! அந்த மனைவியை "மாற்றி விடுமாறு" மறைமுகமாகச் சொல்லி விட்டுச் செல்கிறார் இப்ராஹிம் (அலை) அவர்கள்.

இஸ்மாயில் (அலை) அவர்களின் இரண்டாவது மனைவி சகிப்புத் தன்மை உடையவராக விளங்குகிறார். அவர், இப்ராஹிம் (அலை) அவர்களிடம் "நாஙகள் நலத்துடனும் வசதியுடனும் இருக்கிறோம்" என்று சொல்கிறார்; உயர்ந்தவனும் வல்லவனுமாக அல்லாஹ்வைப் புகழ்கிறார்! எனவே இந்த மனைவியை "நிறுத்தி வைத்துக் கொள்ளுங்கள்; மாற்றிட வேண்டாம்" என்று மறைமுகமாக அறிவித்துச் சென்று விடுகிறார்கள்.

இந்த ஹதீஸ் தரும் குறிப்புகள் நமக்கு உணர்த்துவது என்னவென்றால் – இப்ராஹிம் (அலை) அவர்கள் தன் மகனின் மனைவியாக வரக்கூடியவர் சகிப்புத் தன்மை உடையவராகத் தான் இருந்திட வேண்டும் என்பதை வஸிய்யத்தாகவே தன் மகனுக்கு ஆக்கிச் சென்றிருக்கின்றார்கள்.

நன்கு கவனியுங்கள்:

தன் மனைவி ஹாஜரா அவர்களைப் போலவே தன் மகனின் மனைவியும் சகிப்புத்தன்மை உடையவராக விளங்கிட வேண்டும் என்று இப்ராஹிம் (அலை) அவர்கள் எதிர்பார்த்தது ஏன்?

தன் சந்ததியில் உள்ள நல்லோர்களுக்கு – தலைமைப்பொறுப்பு வழங்கப்படும் என்ற இறைவன் வாக்களித்திருந்தனால் (பார்க்க இறை வசனம் 2: 124) அந்த சந்ததிகளைப் பெற்றுத் தரும் தாய்மார்களிடம் இப்ராஹிம் (அலை) அவர்கள் எதிர்பார்த்தது – இந்த ஹில்ம் எனும் ஒரே ஒரு நற்பண்பை மட்டுமே!

நபி இப்ராஹிம் அலை அவர்களின் துஆ (பார்க்க இறை வசனம் 2: 129) வையும் - சேர்த்துப் பார்த்தால் - ஹள்ரத் இஸ்மாயில் அவர்களின் வழித்தோன்றல்களுக்கும், குறிப்பாக - எதிர்காலத்தில் வர இருக்கின்ற அந்த இறைத்தூதரைப் - (முஹம்மத் ஸல் அவர்களைப்) - பெற்றெடுக்கும் - தாய்மார்களுக்கும் - இந்த பொறுமையும் சகிப்புத் தன்மையும் அவசியம் என்பதை அவர்கள் உணர்ந்திருந்தார்கள் என்பதையே இது காட்டுகிறது.

நபியவர்கள் ஹில்ம் எனும் சகிப்புத் தன்மை உடையவர்கள் என்பதை நாம் அனைவரும் அறிந்தே இருக்கின்றோம்.

அன்னை பாத்திமா (ரலி) அவர்கள் சகிப்புத் தன்மை உடையவர்களே!

நவீன ஆய்வுகள் தெரிவிப்பது என்னவெனில் – ஆண் குழந்தைகள் தாயின் குணத்தை அப்படியே எடுத்துக் கொள்ளுமாம். பெண் குழந்தைகள் தந்தையின் குணங்களை அப்படியே காப்பியடிக்குமாம்.

தந்தையின் குணங்களை மகள்கள் உள்வாங்கிக் கொள்கிறார்கள் என்ற ஆய்வு அன்னை பாத்திமா அவர்கள் விஷயத்தில் அப்படியே ஒத்துப் போகின்றது.

ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : பாத்திமா ரலி அவர்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களைப் போலவே (குணாதிசயங்களைப் பெற்று) இருந்தார்கள். அவர்களது பேச்சு, உட்காரும் முறை, எழுந்திருக்கும் முறை மற்றும் நடக்கும் முறை – இன்னும் வேறு வார்த்தைகளில் சொல்வதாக இருந்தால் அவர்களது அனைத்து குணநலன்களும் மற்றும் பாவனைகளும் (இறைத்தூதர் (ஸல்)) அவர்களைப் போலவே இருந்தது.

பாத்திமா (ரலி) அவர்கள் எப்பொழுதும் பொறுமையுடையவராகவும், படைத்தவனுக்கு நன்றியுடைய நல்லடியாராகவும் வாழ்ந்து காட்டினார்கள். எத்தகைய கஷ்டமான சூழ்நிலையிலும் கூட எந்த முனுமுனுப்பும் காட்டாதவர்களாக இருந்தார்கள். இந்த உலகமும், அதன் அலங்காரங்களும் எந்த வகையிலும் அவரது வாழ்வை திசை மாற்றிடவில்லை.

அன்னை பாத்திமா அவர்களின் இந்த சகிப்புத் தன்மை அவர்களது குழந்தைகள் ஹஸன் மற்றும் ஹுஸைன் – இருவரது வாழ்விலும் பிரதிபலிப்பதை அவர்கள் வாழ்க்கை வரலாற்றிலும் நாம் காண்கிறோம்.

நாம் விளங்கிக் கொள்ள வேண்டியது என்னவென்றால் - ஒரு பெண் சகிப்புத் தன்மை உடையவராக இருந்தால் – அவருடைய சந்ததி நன்றாக விளங்கும். சகிப்புத்தன்மை உடைய தாய்மார்களின் குழந்தைகளே நல்ல தலைவர்களாக உருவாவார்கள்.

எனவே -

இளைஞிகளே! பொறுமையையும், சகிப்புத்தன்மையையும், இரக்க குணத்தையும் - உங்கள் குணங்களாக ஆக்கிக் கொள்ளுங்கள்!

இளைஞர்களே! சகிப்புத் தன்மை உள்ள பெண்ணையே தேர்ந்தெடுத்து மணம் முடியுங்கள்!

பெற்றோர்களே! உங்கள் மகனுக்கு பொறுமையும் சகிப்புத் தன்மையும் உள்ள பெண்ணையே தேர்ந்தெடுங்கள்!

உன்னுடைய கோபத்தை என்னால புரிஞ்சுக்க முடியுது டியர்!

சுன்னத்தான இல்லறம்: 

சூழ்நிலை ஒன்றை கவனியுங்கள்: (பாத்திரங்கள் அனைத்தும் கற்பனையே)

இங்கே ஒரு மனைவி – காமிலா. கணவன் ஜமால்.

ஜமாலின் சகோதரி – நபீலா.


காமிலாவுக்கு தன் கணவனின் சகோதரி நபீலாவின் பல செயல்பாடுகள் எரிச்சலை உண்டாக்கும். சூழ்நிலை அறிந்து பேசத் தெரியாதவர்.

ஒரு தடவை நபீலா தனது அண்ணன் ஜமால் வீட்டுக்கு வருகிறார். வீட்டில் ஜமால் இல்லை. காமிலா மட்டுமே வீட்டில். உரையாடல் நபீலாவுக்கும் காமிலாவுக்கும் தான்.

நபீலா: காமிலா! நேற்று ஆஸ்பிட்டல் போயிருந்தேனா, ஒரே கூட்டம். அம்மாவுக்கு முதுகு வலி. ஆஸ்பிட்டல் வர இயலவில்லை; லேடி டாக்டரிடம் மருந்து எழுதி வாங்கி வா என்று என்னை அனுப்பி விட்டார்கள். டோக்கன் போடச் சொன்னார்கள். கூட்டம் அதிகமாக இருந்ததால் – ஒரு ஐடியா வந்தது. உன் வாப்பா பெயரைச் சொல்லி டக்கென்று உள்ளே நுழைந்து விட்டேன். (காமிலாவின் வாப்பாவுக்கு அந்த டாக்டர் குடும்பம் மிகவும் பழக்கமான குடும்பம்.) டாக்டர் டோக்கன் கேட்கவில்லை. ஒரு மாதிரி பார்த்து விட்டு மருந்து எழுதித் தந்தார். உடனே திரும்பி விட்டேன். இல்லாவிட்டால் மணிக்கணக்கில் யார் அங்கே காத்திருப்பது?

காமிலா: (சற்றே எரிச்சல் அடைந்தவராக) – ஏன்? என் வாப்பா பெயரை நீங்க தப்பா பயன் படுத்தினீங்க? அதுவும் டோக்கன் வாங்காமலேயே?

நபீலா: அதுவெல்லாம் ஒரு அர்ஜென்டுக்குத் தான் காமிலா; இதுக்கு ஏன் உனக்கு இப்படி கோபம் வருது? இதுவெல்லாம் ஒரு தப்பா? ஒரு சமயத்துக்கு இப்படி செய்றதெல்லாம் தப்பே கிடையாது! தேவைப்பட்டா உங்க வாப்பா பெயரையும் பயன்படுத்துவேன்; உங்க உம்மா பெயரையும் பயன்படுத்துவேன்!

காமிலாவுக்குக் கோபம் தலைக்கேற – பேச்சு வாக்குவாதமாக மாற – நபீலா காமிலாவைத் திட்டிக் கொண்டே வீட்டை விட்டு வெளியேறி விடுகிறார்.

என்ன திமிர் இவளுக்கு? – என்று மனதுக்குள்ளேயே புழுங்குகிறார் காமிலா.

கணவர் வீட்டுக்கு வந்ததும் மனைவியைக் கவனிக்கிறார். மனைவியின் முகத்தில் ஒரு வாட்டம்.

காமிலா தன் கணவனிடம் அனைத்தையும் சொல்கிறார். "காலையிலே உங்க தங்கை வந்திருந்தாங்களா…. டாக்டர்கிட்ட மாமிக்கு மருந்து எழுதி வாங்குவதற்கு – டோக்கன் வாங்காமலேயே – என் வாப்பா பெயரை பயன்படுத்தி மருந்து வாங்கிட்டு வந்தாங்களாம். ஏங்க என் வாப்பா பெயரைத் தவறாக பயன்படுத்தினீங்கன்னு கேட்டா – இதுவெல்லாம் ஒரு தப்பா? ஒரு சமயத்துக்கு இப்படி செய்றதெல்லாம் தப்பே கிடையாது! தேவைப்பட்டா உங்க வாப்பா பெயரையும் பயன்படுத்துவேன்; உங்க உம்மா பெயரையும் பயன்படுத்துவேன் – என்று அவங்க இஷ்டத்துக்குப் பேசுறாங்க! இது நல்லாவா இருக்கு?"

ஜமால்: நபீலாவப் பத்தித் தான் உனக்கு நல்லா தெரியுமில்ல? ஏன் அவளிடம் போய் வாயைக் கொடுத்து வாங்கிக் கட்டிக்கிற! விடும்மா அத! போய் நல்லா ரெண்டு டீ போட்டு எடுத்துக்கிட்டு வா! குடிப்போம்!

இந்த பதில் காமிலாவுக்கு திருப்தி அளிக்குமா?

நிச்சயமாக அளிக்காது! இங்கே கணவன் மனைவிக்குச் சொன்னது “அறிவுரை!”. மனைவியின் உள் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் வழங்கப்பட்ட அறிவு+உரை!

காமிலா என்ன பதில் சொல்வார்?

“உங்க அட்வைஸ்க்காகவா இதனை நான் உங்களிடம் சொன்னேன்?”

விருட்டென்று எழுந்து அடுக்களைக்குச் சென்று விடுகிறார். “இவருக்குத் தேவையெல்லாம் டீயும் சாப்பாடும் தான்!”

ஆனால் ஜமால் இப்படிப் பேசியிருந்தால்?

“ஏன் இப்படி நபீலா நடந்துக்கிறா? ஒருவருடைய பெற்றோர் பெயரைத் தவறாகப் பயன்படுத்தினால் யாருக்குத் தான் கோபம் வராது? உன்னுடைய கோபத்தை என்னால புரிஞ்சுக்க முடியுது டியர்! உன் பெற்றோர்களை நீ எப்படி மதிக்கிறாய் என்பது எனக்கு நன்றாகவே தெரியும்.

காமிலா சற்றே ஆறுதல் அடைகிறார்.

“சரி, விட்டுத் தள்ளுங்க! என்ன, டீ போட்டு எடுத்துக்கிட்டு வரவா?

இங்கே என்ன நடந்தது?

கணவன் முற்றிலும் தன் மனைவியின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு உரையாடியதால் – அந்த விஷயம் அத்துடன் ஒரு முடிவுக்கு வந்து விடுகிறது.

மனைவி என்ன நினைக்கிறார்? என் கணவன் என்னைப் புரிந்து வைத்திருக்கின்றார்! என் உணர்வுகளைப் புரிந்து வைத்திருக்கிறார். என்னையும் என் பெற்றோர்களையும் மதிக்கிறார். நான் ஏதாவது எதிர்மறை உணர்வுகளுக்கு ஆட்பட்டால் நான் ஆறுதல் அடைய என் கணவன் எப்போதுமே எனக்கென்று இருக்கின்றார்!!

இங்கே கவனித்திட வேண்டியது என்னெவென்றால் – கணவன் ஜமால் தன் மனைவி காமிலாவுக்கு “அறிவுரை” வழங்கவே இல்லை! மனைவி அப்படிப்பட்ட ஒரு அறிவுரையை எதிர்பார்க்கவும் இல்லை!

இது தான் விவேகம் பொதிந்த சுன்னத்!

Sunday, April 13, 2014

என்ன இருந்தாலும் உனக்கு பத்திரிகை வைக்காதது தப்பு தான்!"

சுன்னத்தான இல்லறம்:

இங்கே ஒரு கணவன் - மனைவி: கணவன் - நாசர்; மனைவி - ஷாகிரா;

ஷாகிரா மிகவும் நல்லவர்; ஆனால் சற்றே உணர்ச்சி வசப்படுபவர்; குறிப்பாக உறவினர்கள் வருகை விஷயத்தில்; யாராவது ஒரு உறவினர் - இவர் இருக்கும் பகுதிக்கு வந்து விட்டு - ஆனால் இவர் வீட்டுக்கு மட்டும் வராமல் போய் விட்டால் அவ்வளவு தான்!

"ஏங்க! இதப் பாருங்க! சாபிரா மாமி இன்னைக்கு சாயங்காலம் வந்திருந்தாங்களா! உங்க அக்கா வீட்டுக்கு வந்தவங்க நம்ம வீட்டுக்கு வராம போயிட்டாங்கங்க!"

இது போன்ற "சாதாரண" விஷயங்களையெல்லாம் மிகச் "சீரியஸாக" தன் மனைவி எடுத்துக் கொள்வதை நாசர் தொடர்ந்து கவனித்தே வந்திருக்கின்றார். ஒரு நாள். ஷாகிரா ஓடி வந்து கணவன் நாசரிடம் இன்னொரு ஆற்றாமை சம்பவத்தை விவரிக்கின்றார்:

"ஏங்க! முப்பது வருஷமா இந்த "மீன்காரம்மா" கிட்ட நாம் மீன் வாங்கிக் கிட்டிருக்கோம்; அவங்க மகனுக்குக் கல்யாணமாங்க! தோழி சுமையா வீட்டுக்குப் போயிருந்தேனா! அங்க அவங்க கல்யாணப் பத்திரிகை வைத்து அழைச்சிருக்காங்கங்க! நமக்கும் ஒரு பத்திரிகை வைக்கிறதுக்கென்னங்க! அவங்க வரட்டும்; பேசிக்கிறேன்!"

இப்போது புரிந்துணரிவுள்ள கணவன் நாசர் தன் மனைவி ஷாகிராவுக்கு என்ன பதில் சொல்வார்?

சிந்தியுங்கள் முதலில்!

*****

பிறகு படியுங்கள் இதனை:

மனைவியின் உணர்வுகளைப் புரிந்து கொள்வது எப்படி?

1. முதலில் ஒன்றை நினைவில் வைப்போம். அது - ஒரே நாளில் ஒருவர் தன் துணையின் உள் மனத்து உணர்வுகளையெல்லாம் புரிந்து கொள்வது என்பது சாத்தியமில்லாத ஒன்று! நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாகத் தான் கணவன் மனைவியருக்குள் இந்தப் புரிந்துணர்வு (attunement) ஏற்படும்!

2. தினமும் உங்கள் துணைவிக்கென்று செலவிட தனியொரு நேரத்தை ஒதுக்குங்கள்! ( to spend quality time with your spouse - on a daily basis); நீங்கள் பணி நிமித்தம் வெளியூர் சென்றிருக்கும் நேரங்கள் தவிர்த்து மற்ற காலங்களில் - இதனை ஒரு வழக்கமாகவே ஆக்கிக் கொண்டிட வேண்டும்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அஸ்ர் தொழுகை முடிந்தவுடன் தம் துணைவியரிடம் செல்வார்கள். அப்போது அவர்களில் சிலருடன் நெருக்கமாக இருப்பார்கள். அவ்வாறே (ஒருநாள்) தம் துணைவியாரான ஹஃப்ஸாவிடம்
சென்று வழக்கமாகத் தங்கும் நேரத்தைவிட அதிக நேரம் தங்கினார்கள். (புகாரி – 5216)

3. உங்கள் துணையின் பக்கம் நீங்கள் முழுமையாகத் திரும்பிட வேண்டும்! உங்கள் துணைவர் எதையாவது சொல்ல முன் வந்தால் அவர் பேசுவதைக் காது கொடுத்துக் கேட்டிட வேண்டும். நபியவர்களிடம் யாராவது பேசினால் – அவர் பேசி முடியும் வரை – அமைதியாகக் காது கொடுத்துக் கேட்பார்கள் என்பது நபிமொழி; உங்கள் துணை பேசும்போது – குறுக்கிட்டுப் பேசக்கூடாது. அவர் கருத்துக்களை மறுத்துப் பேசிடக்கூடாது. பேச்சைத் திசைத் திருப்பிடக் கூடாது.

4. உங்கள் துணை உங்களிடம் பகிர்ந்து கொள்ள எடுத்துக் கொள்ளும் விஷயம் உங்களுக்கு “அற்பமானதாக” இருக்கலாம்! ஆனால் அதனை அப்படியே அலட்சியப் படுத்தி விடக்கூடாது. “இதற்குப்போய் ஏன் அலட்டிக் கொள்கிறார் இவர்?” – என்று எண்ணி விடக் கூடாது. மாறாக – அந்தச் சின்ன விஷயம் உங்கள் துணையை எப்படிப் பாதித்திருக்கின்றது என்பதையே நீங்கள் கவனித்திட வேண்டும்.

5. உங்களவருடைய உணர்வுகளை உதாசீனம் செய்திடக் கூடாது. அவர் நிலையில் உங்களை வைத்து (empathy) – அவர் தம் மன நிலையைப் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். புரிந்துணர்வுக்கு இது மிகவும் அவசியம்.

6. உங்கள் துணையின் முக பாவனை, பேச்சின் தொனி, கண்கள் சொல்லும் சேதி, உடல் மொழி (body language) – அனைத்தையும் உற்றுக் கவனித்திட வேண்டும். மேலோட்டமாக அல்லது அலட்சியமாகக் கவனித்தால் - சொல்லுகின்ற அந்தச் செய்திக்குப் பின்னே மறைந்திருக்கின்ற அவரது உணர்வுகளைப் புரிந்து கொள்ளத் தவறி விடுவீர்கள்.

7. இவ்வாறு தொடர்ந்து செய்திட்டால் – எந்த ஒரு சூழலிலும் - உங்கள் துணை ஒரு குறிப்பிட்ட உணர்வின் பின்னணியில் என்ன பேசுவார் அல்லது என்ன செய்திடுவார் என்பதை உங்களால் மிகத் துல்லியமாகக் கணித்திட முடியும். அதற்குத் தக நடந்து கொள்ளவும் முடியும்.

(RAS - என்றழைக்கப்படும் Reticular Activating System என்று ஒன்று இருக்கின்றது. இது நமது மூளையில் அமைந்துள்ள ஒரு அமைப்பு. எந்த ஒரு தூண்டுதலையும் (impulse) ஒருவர் எவ்வாறு எதிர்கொள்வார் (response) என்பதைத் தீர்மானிப்பது இந்த RAS தான். இது பற்றி பின்னர் இன்ஷா அல்லாஹ் எழுதுவோம்.)

***

இப்போது சொல்லுங்கள்!

புரிந்துணரிவுள்ள கணவன் நாசர் தன் மனைவி ஷாகிராவுக்கு என்ன பதில் சொல்வார்?

"இதுக்குப் போய் ஏம்மா அலட்டிக்கிறே! விட்டுத் தள்ளு!" - என்று சொல்வாரா?

அல்லது -

"ஆமாம்ல! உங்க வாப்பா காலத்துலேந்து இவங்க கிட்ட தானே மீன் வாங்கிக்கிட்டுருக்கோம்! என்ன இருந்தாலும் உனக்கு பத்திரிகை வைக்காதது தப்பு தான்!" - என்று சொல்வாரா?

உங்கள் மனைவியை நீங்கள் புரிந்து வைத்திருக்கின்றீர்களா?

சுன்னத்தான இல்லறம்:

நமது வாழ்க்கைத்துணையின் உள் உணர்வுகளைப் புரிந்து கொள்தல் சிறப்பானதொரு இல்லற வாழ்க்கைக்கு மிக அவசியம்.

நமது துணை – கோபமாக இருக்கின்றாரா?

கவலையுடன் இருக்கின்றாரா?


அவர் மனம் புண்பட்டிருக்கின்றதா?

- என்பதையெல்லாம் மிகத்துல்லியமாகக் கணித்து விடுதல் – கணவன் – மனைவி உறவை மிக அழகாக்கி விடும்.

அழகான நபிமொழி ஒன்றை வைத்து இதனைப் புரிந்து கொள்வோம்.

அன்னை ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

என்னிடம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , ‘எப்போது நீ என்னைக் குறித்து திருப்தியுடன் இருக்கிறாய்; எப்போது நீ என் மீது கோபத்துடன் இருக்கிறாய் என்று (உன்னைப் பற்றி) நான் நன்றாக அறிந்து வைத்துள்ளேன்” என்று கூறினார்கள்.

அதற்கு நான், ‘எப்படி நீங்கள் அறிந்துகொள்வீர்கள்?’ என்று கேட்டேன்.

அதற்கவர்கள், ‘என்னைக் குறித்து நீ திருப்தியுடன் இருக்கும்போது (பேசினால்), ‘முஹம்மதுடைய அதிபதி மீது சத்தியமாக’ என்று கூறுவாய்!

என் மீது கோபமாய் இருந்தால், ‘இப்ராஹீம்(அலை) அவர்களின் அதிபதி மீது சத்தியமாக’ என்று கூறுவாய்” என்று கூறினார்கள்.

நான், ‘அல்லாஹ்வீன் மீதாணையாக! ஆம் (உண்மைதான்,) இறைத்தூதர் அவர்களே! நான் தங்களின் பெயரைத்தான் கோபித்துக் கொள்வேன். (தங்களின் மீதுன்று)” என்று கூறினேன். (புகாரி – 5228)

இந்த நபிமொழி நமக்கு உணர்த்தும் பாடம் என்னவெனில் – கணவன்-மனைவியர் ஒவ்வொருவரும் – தம் துணையின் உள் மனத்து உணர்வுகளை மிகச்சரியாக புரிந்து வைத்திருக்க வேண்டும் என்பதுதான்!

இவ்வாறு புரிந்து கொள்வதை ஆங்கிலத்தில் attunement என்று சொல்கிறார்கள். தமிழில் “புரிந்துணர்வு” என்று சொல்லலாம்.

உணர்வுகளைப் புரிந்து கொள்வது தான் புரிந்துணர்வு!

நாம் இங்கே சொல்ல வருவது – உங்கள் கணவருக்குப் பிடித்த கலர் எது? உங்கள் மனைவிக்குப் பிடித்த உணவுப் பண்டம் எது? என்பன போன்ற சாதாரண விஷயங்கள் குறித்து அன்று.

நாம் இங்கே வலியுறுத்திச் சொல்ல வருவது – “உணர்வுகள்” சம்பந்தப்பட்ட ஒரு சூழலை – உங்கள் துணைவர் எவ்வாறு எதிர்கொள்வார்? அவர் எப்படி நடந்து கொள்வார் என்பது குறித்துத் தான்.

உணர்வு சம்பந்தப்பட்ட ஒரு குறிப்பிட்ட சூழலில் உங்கள் துணைவர் ஒன்றைப் பேசிட நினைக்கிறார். அவர் என்ன பேசுவார் என்பது உங்களால் ஊகித்து விட இயல வேண்டும்.

ஒரு விஷயம் உங்கள் துணையை எவ்வாறு பாதிக்கும் என்பதைத் தெளிவாகத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

ஒரு தோல்வியை அவர் எவ்வாறு எடுத்துக் கொள்வார்?

ஒருவரால் அவமானப்படுத்தப் படுவதை (hurt) எவ்வாறு எதிர்கொள்வார்?

எந்த விஷயங்கள் எல்லாம் அவரைக் கோபப்படுத்தும்? – இவை எல்லாம் உங்களுக்குத் தெள்ளெனத் தெரிந்து இருக்க வேண்டும்.

ஆனால் பெரும்பாலான கணவன் மனைவியருக்கு இப்படிப்பட்ட புரிதல் இல்லை என்பது கசப்பான ஒரு உண்மை.

கணவன் மனைவியருக்கு இடையே இப்படிப்பட்ட புரிந்துணர்வு இல்லாமல் போய் விட்டால் – அது அவர்களின் உறவில் விரிசலை நிச்சயம் ஏற்படுத்தும்!

சரி, அப்படியானால் ஒருவர் தன் துணையின் உள் மன உணர்வுகளை புரிந்து கொள்ள என்ன செய்திட வேண்டும்?

அடுத்து வரும் கட்டுரையில் பார்ப்போமே! – இன்ஷா அல்லாஹ்

நபி (ஸல்) அவர்கள் ஏன் தன் மனைவியைக் கடிந்து கொள்ளவில்லை?

சுன்னத்தான இல்லறம்: 

நபியவர்கள் அவர்கள் தங்களின் மனைவியர்களில் ஒருவரிடம் இருந்தார்கள். இறைநம்பிக்கையாளர்களின் அன்னையரில் இன்னொருவர் உணவுப் பண்டமுள்ள தட்டு ஒன்றை (நபியவர்களுக்காகப் பணியாள் ஒருவரிடம்) கொடுத்தனுப்பினார்கள்.


(அப்போது) நபி(ஸல்) அவர்கள் எவருடைய வீட்டில் தங்கியிருந்தார்களோ அந்தத் துணைவியார் (ரோஷத்தில்) அந்தப் பணியாளரின் கையைத் தட்டிவிட்டார். அந்தத் தட்டு (கீழே விழுந்து) உடைந்துவிட்டது.

உடனே (ஆத்திரப்படாமல்) நபி(ஸல்) அவர்கள் அந்த உடைந்த தட்டின் துண்டுகளை ஒன்று சேர்த்தார்கள். பிறகு தட்டிலிருந்த உணவை (மீண்டும்) அதிலேயே ஒன்று சேர்க்கலானார்கள். மேலும், (அங்கிருந்த தோழர்களை நோக்கி), 'உங்கள் தாயார் ரோஷப்பட்டுவிட்டார்'' என்று கூறினார்கள்.

பின்னர் அந்தப் பணியாளை (அங்கேயே) நிறுத்திவிட்டு தாமிருந்த துணைவியாரிடமிருந்து மற்றொரு தட்டைக்கொண்டு வரச் செய்து, உடைபட்ட தட்டுக்குரியவரிடம் நல்ல தட்டை (மாற்றாக)க் கொடுத்து அனுப்பிவிட்டார்கள். உடைந்த தட்டை உடைக்கப்பட்ட வீட்டிலேயே வைத்துவிட்டார்கள். (புகாரி 5225)

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்கள் வீட்டில் இருந்த போது தான் இச்சம்பவம் நடந்தது. நபியவர்களுக்கும், நபியவர்களின் தோழர்கள் சிலருக்கும் - ஆயிஷா அவர்களே உணவு சமைத்துக் கொண்டிருந்த நேரம் அது. அந்நேரத்தில் இன்னொரு மனைவியின் வீட்டிலிருந்து உணவு வந்ததும் ஆயிஷா அவர்களுக்குக் கோபம் வந்து விட்டது.

இந்தச் சமயத்தில் நபியவர்களின் செயலை சற்று கூர்ந்து கவனியுங்கள்.

உணவுத் தட்டை தட்டி விடுகின்றார்கள் அன்னை ஆயிஷா அவர்கள். தட்டு உடைகிறது. உணவுப்பண்டம் சிதறுகிறது. நபியவர்கள் அமைதியாக அதை ஒன்று சேர்க்கிறார்கள். தோழர்களை உண்ணச் செய்கின்றார்கள். உடைந்த தட்டுக்குப் பதிலாக நல்ல தட்டு ஒன்றை கொடுத்து அனுப்புகிறார்கள். அவ்வளவு தான் நடந்தது!

"என்ன செய்கிறாய் நீ?" என்று அன்னை ஆயிஷா அவர்களை நபியவர்கள் கடிந்து கொள்ளவில்லை!

"நபித்தோழர்கள் வீட்டுக்கு விருந்தினர்களாக வந்திருக்கும் சமயத்தில் இப்படித்தான் நடந்து கொள்வதா?" - என்று கோபப்படவும் இல்லை!

வாயைத் திறந்து ஒரு வார்த்தை பேசிடவும் இல்லை! அமைதி காக்கிறார்கள் நபியவர்கள்!

அதே நேரத்தில் மனைவி அவ்வாறு நடந்து கொண்டதற்குக் காரணம் அவர்களது ரோஷ உணர்வே என்பதனை நபித்தோழர்களிடம் பகிர்ந்து கொள்கிறார்கள் நபியவர்கள். அவ்வாறு அவர்கள் ரோஷப்பட்டது தவறு என்று கூடச் சொல்லிடவில்லை!

அந்த ரோஷ உணர்வை அன்னையவர்கள் வெளிப்படுத்திய விதம் தான் தவறு என்பதைத் தனது வாயினால் சொல்லாமல் - உடைந்த தட்டை வைத்துக் கொண்டு நல்ல தட்டை கொடுத்தனுப்புவதன் மூலம் - தனது அமைதியான செயலாலேயே அன்னைக்கு உணர்த்துகிறார்கள் நபியவர்கள்!

கணவன்மார்களுக்கு மிக நுட்பமான படிப்பினைகள் இருக்கின்றன இந்த ஒரு நபிமொழியில்!

செயலை விமர்சியுங்கள்! செய்தவரை விமர்சிக்க வேண்டாம்!

சுன்னத்தான இல்லறம்: 

சுற்றுலா ஒன்றுக்குத் திட்டமிடுகிறார் கணவர். மனைவி எல்லா முன்னேற்பாடுகளையும் செய்து விடுகிறார். ஆனால் எதிர்பாராத விதமாக பயணம் மேற்கொள்ள இயலாமல் போய் விடுகிறது!


ஊர் முழுவதும் ஒரே அரசியல் போராட்டம். வாகனங்களின் மீது கல்லெறிகின்றார்கள்! ஒரு பயணி இறந்தும் போய் விடுகின்றார். பலருக்குக் காயம். பேருந்துகள் எரிக்கப்படுகின்றன! ஒரு பதற்றமான சூழ்நிலையில் வேண்டாமே ஒரு சுற்றுலா என்று கணவன் தன் முடிவை மாற்றிக் கொண்டு விடுகிறார்!.

அவ்வளவு தான்! மனைவிக்கு வந்ததே கோபம்.

“போடுகின்ற எந்த திட்டத்தையாவது நீங்கள் உருப்படியாகச் செய்து முடித்ததுண்டா? எத்தனை தடவை இது போல ஏற்பாடு செய்து பின்பு அதனை கேன்ஸல் செய்திருக்கிறீர்கள்! உங்களை நம்பி நான் எல்லா ஏற்பாடுகளையும் செய்தேனே! எனக்கு வேண்டும்! – என்று பேசுவதற்கு பதிலாக,

“ஏங்க! பிள்ளைகள் எல்லாம் ஆசையாக ரெடியாகி விட்டார்கள்; நானும் எல்லா ஏற்பாடுகளையும் செய்து விட்டேன்; ஊரில் போராட்டங்கள் நடந்து கொண்டு தான் இருக்கும்; மற்றவர்கள் எல்லாம் போய்க் கொண்டு தானே இருக்கிறார்கள்! இப்படி திடீரென்று நீங்கள் வேண்டாம், பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று சொல்வது எனக்குச் சரியாகப் படவே இல்லைங்க! உங்கள் முடிவை மாற்றிக் கொண்டு நீங்கள் புறப்பட்டால் எனக்கும் பிள்ளைகளுக்கும் மகிழ்ச்சி தானே!” – என்று பேசிடலாம் அல்லவா?

முதல் விமர்சனத்துக்கும் இரண்டாவது விமர்சனத்துக்கும் என்ன வேறுபாடு?

முதல் விமர்சனத்தில் கணவனின் ஆளுமையே (personality) அவமானப் படுத்தப்பட்டது! அவரது கண்ணியம் குத்திக் கிழிக்கப்பட்டது. கூனிக் குறுகிப் போய் விடுவார்கள் கணவர்கள்.

ஆனால் இரண்டாவது விமர்சனத்தில் கணவனின் முடிவு மட்டுமே தவறு என்று சுட்டிக்காட்டப் பட்டது! அவர் மனம் புண்படும்படியாக எதுவுமே சொல்லப்படவில்லை!

எனவே தான் சொல்கிறோம்: கணவனின் எந்த செயல் உங்களுக்குப் பிடிக்கவில்லையோ, உங்களுக்கு எது உறுத்தலாக இருக்கிறதோ – அந்த செயலை மட்டுமே விமர்சியுங்கள்!

கணவனின் அந்தச் செயலால் நீங்கள் எப்படி பாதிக்கப்படுகிறீர்கள் என்பதை உணர்த்திடுங்கள்! ஆனால் – அதனை விமர்சிக்கும்போது அந்தச் செயலைச் செய்திட்ட உங்கள் கணவனை கடுமையான சொற்களால் (harsh criticism) விமர்சித்திட வேண்டாம்!

எனவே மீண்டும் சொல்கிறோம்:

செயலை விமர்சியுங்கள்! செய்தவரை விமர்சிக்க வேண்டாம்! அது உறவுகளைக் கெடுத்து விடும்!

எது எதற்கெல்லாம் கணவன் தன் மனைவி மீது கோபப்படலாம்?

சுன்னத்தான இல்லறம்:

பின் வரும் சூழ்நிலைகளில் – எது எதற்கெல்லாம் கணவன் தன் மனைவி மீது கோபப்படலாம்.?

1. வெளியூர் புறப்பட வேண்டும். வாசலில் கால் டாக்ஸி காத்திருக்கிறது. மனைவி புறப்பட தாமதிக்கிறார்.


2. நீங்கள் வெளியூர் பயணம் புறப்படுகிறீர்கள். ரயிலுக்கு நேரமாகிக் கொண்டிருக்கிறது. டின்னர் இன்னும் ரெடியாகவில்லை என்கிறார் மனைவி.

3. முதல் நாள் இரவே சட்டையை அயர்ன் பண்ணி வைக்கச் சொல்லியிருந்தீர்கள். காலையில் புறப்படும்போது எங்கே சட்டை என்கிறீர்கள். மறந்து விட்டது என்கிறார் மனைவி.

4. சரியான பசியுடன் நீங்கள். தீய்ந்து போன தோசையைப் பரிமாறுகிறார் மனைவி.

5, ஒரு செல்ஃபோன் அழைப்பை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். மனைவி உங்கள் செல்ஃபோனை எடுத்து உறவினர் ஒருவரிடம் நீண்ட நேரம் பேசுகிறார். நீங்கள் செல்ஃபோனைக் கேட்கிறீர்கள். இருங்கள் கொஞ்ச நேரம் என்கிறார். நேரம் ஆகிக் கொண்டிருக்கிறது.

6. பீரோவில் முக்கிய ஆவணம் ஒன்றை நீங்கள் அவசரமாக எடுத்திட வேண்டும். சாவி எங்கே என்று மனைவியைக் கேட்கிறீர்கள். “எங்கே வைத்தேன் என்று தெரியவில்லைங்க!” – என்கிறார் அவர்.

7. விருந்தினர் வந்திருக்கின்றனர். மனைவி சமைத்த உணவில் உப்பு மிக அதிகம். வந்த விருந்தினர்கள் – ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டே சாப்பிடுகின்றனர்.

8. எண்ணை பாட்டில் கீழே தவறி விழுந்து உடைந்து விடுகிறது. அவ்வளவு எண்ணையும் வீணாகி விட்டது.

9. உங்கள் மீதுள்ள கோபத்தில் – குரலை உயர்த்திப் பேசுகிறார் மனைவி.

10. உங்கள் தம்பி மனைவி அருகில் இருக்கும்போதே – உங்களைத் திட்டுகிறார் மனைவி.

மேற்கண்ட சூழ்நிலைகளில் எது எதற்கெல்லாம் கணவன் கோபப்படுவது “நியாயம்” என்று நினைக்கிறீர்களோ அந்த எண்ணைச் சுற்றி ஒரு சிறிய வட்டமிடுங்கள்.

என்ன? பயிற்சியை முடித்து விட்டீர்களா?

________________

இப்போது கீழ்வரும் நபிமொழியைப் படியுங்கள்:

நாங்கள் ஒரு பயணத்தில் நபி(ஸல்) அவர்களுடன் சென்றோம். ‘பைதாவு’ அல்லது ‘தாத்துல் ஜைஷ்’ என்ற இடத்தை வந்தடைந்ததும் என்னுடைய கழுத்தணி அறுந்து (தொலைந்து)விட்டது.

அதைத்தேடுவதற்காக நபி(ஸல்) அவர்களும் மற்றவர்களும் அந்த இடத்தில் தங்கினோம். நாங்கள் தங்கிய இடத்தில் தண்ணீர் இல்லை.

அப்போது அபூ பக்ர்(ரலி) அவர்களிடம் சிலர் வந்து, ‘(உங்கள் மகளான) ஆயிஷா செய்ததை நீங்கள் பார்த்தீர்களா? நபி(ஸல்) அவர்களையும் மக்களையும் இங்கே தங்கச் செய்துவிட்டார். அவர்கள் தங்கிய இடத்திலும் தண்ணீர் இல்லை; அவர்களுடனும் தண்ணீர் எடுத்து வரவில்லை’ என்று முறையிட்டனர்.

அபூ பக்ர்(ரலி) (என்னருகே) வந்தபோது நபி(ஸல்) அவர்கள் தங்களின் தலையை என்னுடைய மடி மீது வைத்துத் தூங்கிக் கொண்டிருந்தார்கள். ‘நபி(ஸல்) அவர்களையும் மக்களையும் தங்க வைத்துவிட்டாயே?

அவர்கள் தங்கிய இடத்திலும் தண்ணீர் இல்லை; அவர்களிடமும் தண்ணீர் இல்லை’ என்று கூறினார்கள். அவர்கள் எதைச் சொல்ல அல்லாஹ் நாடினானோ அதையெல்லாம் சொல்லிவிட்டு, தங்களின் கையால் என்னுடைய இடுப்பில் குத்தினார்கள்.

நபி(ஸல்) அவர்களின் தலை என் மடியின் மீது இருந்ததால் நான் அசையாது இருந்தேன். நபி(ஸல்) அவர்கள் காலையில் விழித்தெழிந்தபோதும் தண்ணீர் கிடைக்கவில்லை. அப்போது அல்லாஹ் தயம்மும் பற்றிய வசனத்தை அருளினான். எல்லோரும் தயம்மும் செய்தார்கள்.

இது பற்றிப் பின்னர் உஜைத் இப்னு ஹுளைர்(ரலி) ‘அபூ பக்ரின் குடும்பத்தார்களே! உங்களின் மூலமாக ஏற்பட்ட பரக்கத்துக்களில் இது முதலாவதாக இல்லை. (இதற்கு முன்பும் உங்களின் மூலம் எத்தனையோ பரக்கத்துக்கள் ஏற்பட்டுள்ளன)’ எனக் கூறினார். அப்போது நான் இருந்த ஒட்டகத்தை எழுப்பியபோது அதனடியில் (காணாமல் போன) என் கழுத்தணி கிடந்ததைக் கண்டோம்”என ஆயிஷா(ரலி) அறிவித்தார். (புகாரி 334).

என்ன புரிகிறது?