Monday, March 31, 2014

மாற்றத்துக்கு இதுவே நேரம்!

சுன்னத்தான இல்லறம்: 

ஒரு கணவனும் அவர் மனைவியும் திருமண ஆலோசகர் ஒருவரிடம் ஆலோசனைக்கு வந்திருந்தனர். அவர்களுக்குத் திருமணம் ஆகி ஒரு சில ஆண்டுகளே ஆகியிருந்தன.

அந்தக் கணவர் சொன்னார்: நான் என் நண்பர்களுடன் பழகுவது அவர்களுடன் நேரம் செலவழிப்பது, அளவளாவுவது - இவை எதுவுமே என் மனைவிக்குப் பிடிக்கவில்லை! வெளியே சென்று சற்றுத் தாமதமாக வீடு திரும்பினாலே - என் மனைவி கேள்வி கேட்கிறார்;


மனைவியின் ஆளுமை என்பது வேறு; கணவனின் ஆளுமை என்பது வெவ்வேறு தானே (அவர் wave length என்ற சொல்லைப் பயன் படுத்தினாராம்!).

மனைவியுடன் ஓரளவுக்குத் தானே பேசிட முடியும்; நம்மை ஒத்த நண்பர்களுடன் தானே எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்ள முடியும்; அவ்வாறு பகிர்ந்து கொள்வதற்காக வெளியே சென்று வரும்போது சில சமயங்களில் தாமதம் ஆகத் தானே செய்யும்; இதனைப் போய் ஏன் என் மனைவி சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டும்?

மனைவி சொன்னார்: எல்லாவற்றையும் என்னிடம் பகிர்ந்து கொள்ள வேண்டியது தானே? ஏன் இவர் நண்பர்களிடம் ஓடுகின்றார்; நேரத்துக்கு வீட்டுக்கு வந்து சேர்ந்து விட வேண்டியது தானே?

மேலோட்டமாகப் பார்த்தால் - இது மிக சாதாரணமான ஒரு பிரச்னையாகத் தோன்றலாம். இதற்குப் போய் ஏன் இந்த மனைவி இப்படி அலட்டிக் கொள்கிறார் என்று கூட பல கணவன்மார்கள் நினைக்கலாம். ஆனால் அது அப்படியல்ல!

ஒரு மனைவியின் எதிர்பார்ப்புகள் எல்லாம் மிக மிக எளிமையானவை! தன் கணவன் தன்னோடு இருக்க வேண்டும்; தன்னுடனேயே அனைத்தையும் பகிர்ந்து கொள்ள வேண்டும்; தான் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருக்க வேண்டும்; தன் மனதுக்குப் பிடித்த சின்னச் சின்ன தேவைகள் எல்லாவற்றையும் நிறைவேற்றித் தந்து கொண்டிருக்க வேண்டும்....!

அவ்வளவு தான்!

இதனைப் பல கணவன்மார்கள் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள்! அவர்களுக்கு அவர்களுடைய வெளி வேலை தருகின்ற மன அழுத்தமான சூழ்நிலைகளில் இருந்து தங்களை ஆசுவாசப் படுத்திக் கொள்ள (relaxation) அவர்கள் நாடுவது தங்கள் நண்பர்களையே!

அவர்கள் மனைவிக்கென்று ஒதுக்கும் நேரம் எது?

அந்தக் கணவரே சொல்கிறார்: "அது தான் - இரவு முழுவதும் மனைவியிடம் தானே சார் தங்கி இருக்கின்றோம்! பகலில் என்னை விட்டு விட வேண்டியது தானே!"

வீட்டுக்கு வெளியே நண்பர்களுடன் சில கணவன்மார்கள் அதிக நேரத்தை செலவிட விரும்புவது எதனை உணர்த்துகிறது?

கணவன் மனைவியருக்குள் நெருங்கிய நட்பு மலர்ந்திடவில்லை என்பதைத் தான்!

கணவன்மார்கள் தங்களை சுய பரிசோதனை செய்து கொள்வது அவசியம்! ஏனெனில் கணவன் மனைவியருக்குள் நெருங்கிய நட்பு மலரவில்லை எனில் - அது ஏற்படுத்தும் பாரதூரமான பாதிப்புகளுள் ஒன்று - தாம்பத்திய வாழ்வில் தடுமாற்றம்!

இதனை நாம் சொல்லவில்லை! நவீன கால ஆய்வுகள் அவ்வாறு தான் சொல்கின்றன!

மாற்றத்துக்கு இதுவே நேரம்!

"அவர்களுடன் நீங்கள் நெருங்கிய நண்பர்களாக நடந்து கொள்ளுங்கள்!"

சுன்னத்தான இல்லறம்: 

திருக் குர்ஆனை நாம் ஆழமாக புரிந்து கொள்ள - அதன் மொழிபெயர்ப்புகள் போதாது என்பது ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு கருத்தாகும்.

ஒரு எடுத்துக் காட்டு: வ ஆஷிரூஹுன்ன பில் ம'-ரூஃப்! - இது சூரத்துன் நிஸாவின் 19 வது வசனத்தின் ஒரு சிறு பகுதி மட்டுமே. இதற்கு எப்படி மொழிபெயர்க்கப் படுகிறது என்று பார்ப்போமா?

"இன்னும், அவர்களுடன் கனிவோடு நடந்து கொள்ளுங்கள் - இது தமிழில் குர்ஆன் வலை தளத்தின் மொழிபெயர்ப்பு. ஜான் ட்ரஸ்ட் மொழிபெயர்ப்பும் இதுவே.

"மேலும் அவர்களுடன் அழகான முறையிலும் நடந்து கொள்ளுங்கள்" - இது சவூதி அரசால் வெளியிடப்பட்டுள்ள சங்கைமிக்க குர் ஆன் மொழிபெயர்ப்பில் இருந்து.


"அவர்களோடு நல்ல முறையில் வாழ்க்கை நடத்துங்கள்." - இது IFT - யின் திருக்குர் ஆன் மொழிபெயர்ப்பிலிருந்து.

"மேலும் அவர்களுடன் கண்ணியமான முறையிலும் (சகிப்புத்தன்மையுடனும்) நடந்து கொள்ளுங்கள்" - இது அல்லாமா ஆ.கா.அப்துல் ஹமீது பாகவி அவர்களின் மொழிபெயர்ப்பு.

திருமண ஃகுத்பா ஒன்றில் உரையாற்றும் போது - இவ்வசனத்துக்கு - "உங்கள் இல்லறத்தை நல்லறமாக ஆக்கிக் கொள்ளுங்கள்!" என்று மொழியாக்கம் செய்தார் அறிஞர் ஒருவர்! ஆனால் இவ்வசனத்தில் இல்லறம் என்ற சொல்லும் இல்லை! நல்லறம் என்ற சொல்லும் இல்லை!

அரபி மூலத்தில். இந்த இரண்டு சொற்களுக்கும் என்ன பொருள் என்று பார்ப்போம்:

ஒன்று: ஆஷிர் (அய்ன் - ஷீன் - ரா)

இம்மூலச் சொல்லிலிருந்து பிரிகின்ற பல சொற்களுடன் திருமறை வசனங்கள் இடம் பெற்றுள்ளன.

முதலில் ஆங்கில அகராதி மொழிபெயர்ப்பை எடுத்துக் கொள்வோம்.

'Ashara - to divide into tenths; to be on intimate terms, associate (closely with someone). associate with one another

'Ishrah - (intimate) association, intimacy, companionship, relations, (social) intercourse. company. conjugal community, community of husband and wife

'Ishaar - with young, pregnant(animal)

'Asheer - companion, fellow, associate, friend, comrade

'Asheerah - clan, kinsfolk, closest relatives, tribe

அகராதியில் காணப்படும் அனைத்து பொருள்களையும் நாம் உற்று நோக்கினால் - ஆஷிர் என்ற சொல்லின் பொருள் - நெருக்கம், நெருங்கியிருப்பவை, நெருங்கிய தோழமை, நெருக்கமான நண்பன் - ஆகியவற்றைச் சுற்றியே இருக்கின்றன என்றே புரிகிறது. இது ஏன் மொழிபெயர்ப்புகளில் பிரதிபலித்திடவில்லை என்பதே எம் கேள்வி.

அடுத்து இச்சொற்றொடரில் இடம் பெற்றுள்ள இன்னொரு சொல்: ம'-ரூஃப்!

ம'-ரூஃப் - என்ற இச்சொல்லுக்கு "அறியப்பட்டது" என்பதே சரியான பொருளாகும்.

அதாவது - இஸ்லாம் கட்டளையிட்டுள்ள எல்லாவிதமான நன்மைகளையும் குறிக்கும் சொல் இது என்கிறது ஜவாஹிருல் குர்ஆன் எனும் திருக்குர்ஆன் விரிவுரை நூல்.

இவ்வாறு - இந்த இரு சொற்களின் விரிவான பொருள்களை கவனித்துப் பார்க்கும் போது

"அவர்களோடு கனிவோடு நடந்து கொள்ளுங்கள்" என்று பொத்தம் பொதுவாக மொழிபெயர்ப்பதை விடுத்து

" (மார்க்கம் அனுமதித்துள்ள) நன்மையான காரியங்கள் அனைத்திலும் அவர்களுடன் மிக நெருங்கிய உற்ற நண்பர்களாக நடந்து கொள்ளுங்கள்"

- என்று மொழிபெயர்க்கலாமோ என்று தோன்றுகிறது.

"behave with them as intimate companions in all the good things that are allowed in Islam "

- என்று ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பதில் என்ன தவறு இருக்க முடியும் என்றும் தெரியவில்லை.

ஆனால் முஹம்மத் அஸத் அவர்கள் மட்டுமே ஆங்கிலத்தில் மிக அழகாக மொழிபெயர்ப்பு செய்துள்ளார்கள்:

"And consort with your wives in a goodly manner;"

Consort - என்பதற்கு companion என்று ஒரு பொருள் உண்டு.

கணவன்மார்களே! மனைவிமார்களே! நாம் கேட்க விரும்பும் கேள்வி இது தான்:

நாம் நமது வாழ்க்கைத் துணையுடன் நெருங்கிய நண்பர்களாகத் தான் வாழ்க்கை நடத்துகின்றோமா?

நாம் அனைவருமே சிந்திக்க வேண்டிய கேள்வி இது?

Friday, March 28, 2014

"உனக்கு விருப்பம் இல்லாவிட்டால் வேண்டாமம்மா!"

சுன்னத்தான இல்லறம்: 

ஒரு ஆணாக இருக்கட்டும் அல்லது ஒரு பெண்ணாக இருக்கட்டும். ஒரு சிலரைப் பார்க்கிறோம்; கொஞ்சமே அவர்களைப் பற்றிக் கேள்விப் படுகிறோம்; அவர்களை நமக்கு அப்படியே பிடித்துப் போய் விடுகிறது.

ஆனால் வேறு சிலரைப் பார்த்தால் நமக்கு அறவே பிடிப்பதில்லை! அவர்களாகவே நெருங்கி வந்தாலும் ஒதுங்கிப் போய் விடுகிறோம்! இது ஏன்?

நபி மொழி ஒன்று அற்புதமாக இதனை விளக்குகிறது!

‘Aa’ishah (may Allaah be pleased with her) said: “I heard the Prophet (peace and blessings of Allaah be upon him) saying: ‘Souls are like conscripted soldiers; those whom they recognize, they get along with, and those whom they do not recognize, they will not get along with.’” (Bukhaari and Muslim).
அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: " ஆன்மாக்கள் என்பவை பணிக்கு அமர்த்தப்பட்ட படை வீரர்களைப் போல. அவர்களில் யாரெல்லாம் ஒருவரை ஒருவர் இலகுவாக புரிந்து கொள்கிறார்களோ, அவர்கள் மிக இலகுவாக நண்பர்களாகி விடுகிறார்கள்; அவர்களில் யாரெல்லாம் முன்பின் தெரியாதவர்கள் போல் தெரிகிறாகளோ, அவர்கள் விலகிப்போய் விடுகின்றார்கள்." (புகாரி, முஸ்லிம்)

ஆழமாக ஆய்வு செய்திட வேண்டிய நபிமொழி இது!

இந்த நபிமொழியிலிருந்து நமக்குத் தெரிய வருவது என்னவெனில், நம்மில் சிலர், நம்மை ஒத்த சிலருடன் பழகுவதும், நண்பர்களாகி விடுவதும், வேறு சிலரை நமக்குப் பிடிக்காமல் போய் அவர்களிடமிருந்து நாம் விலகி விடுவதும் - இவையெல்லாம் - வல்லோன் இறைவனின் இயல்பான படைப்பின் இரகசியங்களில் உள்ளவையாகும்.

இது திருமண உறவில் இணையும் ஆண் - பெண்ணுக்கும் பொருந்தும் தானே!

அதனால் தானோ என்னவோ அண்ணல் நபியவர்கள் நீங்கள் திருமணம் முடிக்க விரும்பும் பெண்ணைப் பார்த்துக் கொள்ளுங்கள் என்று நம்மை அறிவுறுத்தியிருக்கின்றார்கள்.

நபித்தோழர் முகீரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

“நான் ஒரு பெண்ணை மணமுடித்துக்கொள்ள பேசியிருந்தேன். இதனை அறிந்த ரசூல் , நீர் அப்பெண்ணைப் பார்த்துக் கொள்ளும், ஏனெனில் அது உங்களிருவருக்கிடையில் உவப்பையும், நட்பையும், இணக்கத்தையும் ஏற்படுத்தக்கூடும் என் அறிவுரை பகன்றார்கள்.” ஆதாரங்கள்: நஸயீ, திர்மிதி, முஸ்னத் அஹ்மத்.

சுப்ஹானல்லாஹ்! எப்படிப்பட்ட மார்க்கம் நமது மார்க்கம்!

ஆனால் சில பெற்றோர்கள் தங்களுக்குப் பிடித்த ஒரு பையனையே தங்கள் மகளுக்கும், தங்களுக்குப் பிடித்த ஒரு பெண்ணையே தங்கள் மகனுக்கும் திருமணம் முடித்து விட முயற்சிக்கிறார்கள்.

வாப்பா! எனக்குப் பிடிக்கவில்லை என்று பிள்ளைகள் சொன்னால் கூட - "திருமணம் செய்து கொண்டால் எல்லாம் சரியாகிப் போய் விடும்" என்று போலிச் சமாதானம் செய்து திருமணத்தையும் செய்து வைத்து விடுகிறார்கள்.

எப்படிச் சரியாகப் போகும்?

என்ன சொல்கிறார்கள் அந்தப் பெற்றோர்கள்?

"நாங்கள் எல்லாம் பெண்ணை அல்லது மாப்பிள்ளையைப் பார்த்துத் தானா திருமணம் செய்து கொண்டோம்! பெற்றோர்கள் யாரைக் கட்டிக் கொள்ளச் சொன்னார்களோ அவர்களைக் கட்டிக் கொண்டு குடும்பம் நடத்திடவில்லையா? என்ன எங்களுக்குக் குறைந்து போய் விட்டது?"

ஆனால் இங்கே பாருங்கள் ஒரு தந்தையை!

ஒரு பெண்! படித்த பெண்! மார்க்கமான பெண்! இறையச்சம் உள்ள பெண்! தந்தையும் இறையச்சம் மிக்கவர் தான்; தந்தை தன் மகளுக்கு மாப்பிள்ளை பார்க்கிறார்; ஒரு இளைஞர் - இக்குடும்பத்தைப் பற்றிக் கேள்விப்பட்டு பெண் கேட்டுத் தூது அனுப்புகிறார்;

அந்த இளைஞரும் நன்றாகப் படித்தவர்; நல்ல வேலையில் இருக்கிறார்; நல்ல வருமானம்; அந்த இளைஞரைப் பற்றி அவர் தொழும் பள்ளி இமாமை அணுகி விசாரிக்கிறார்.

அந்த இமாம் சொல்கிறார்: "அந்த இளைஞனைத் திருமணம் செய்து கொள்ளும் பெண் மிகவும் கொடுத்து வைத்த பெண்ணாகத் தான் இருக்க வேண்டும்! அந்த அளவுக்கு மிக நல்ல இளைஞர் அவர்!"

தந்தைக்குத் திருப்தி ஏற்படவே - தன் மகளிடம் விவரங்கள் அனைத்தையும் சொல்லி அவரது விருப்பத்தைக் கேட்கிறார்; ஆனால் அப்பெண் அந்த இளைஞரைத் திருமணம் செய்து கொள்வதில் விருப்பம் இல்லை என்று சொல்லி விட்டார்!

இவ்வளவு நல்ல பையனை ஏன் அந்தப் பெண் திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை?

அது ஆன்மாக்கள் சம்பந்தப்பட்ட விஷயம்! மேலே குறிப்பிட்ட நபிமொழி இதனைத் தான் உணர்த்துகிறது! அதனால் தான் இறையச்சம் மிக்க அந்தத் தந்தை - மகளுக்குப் பிடிக்கவில்லை என்று தெரிந்ததும் அந்த வரனை விட்டு விட்டார்!

"உனக்கு விருப்பம் இல்லாவிட்டால் வேண்டாமம்மா!" என்று விட்டு விட்டார் தந்தை!

இப்படிப்பட்ட பெற்றோர்களைப் பெற்றவர்கள் தான் உண்மையிலேயே கொடுத்து வைத்தவர்கள்!

Thursday, March 27, 2014

உண்மையான காதலுக்கு இஸ்லாம் என்றுமே தடை விதித்ததில்லை!

சுன்னத்தான இல்லறம்:

ஆணாகவும் பெண்ணாகவும் மனித இனத்தைப் படைத்த இறைவன் அவர்களுக்குள் இயல்பாகவே ஒரு ஈர்ப்புத் தன்மையை உண்டாக்கியிருக்கிறான்.

ஆனால் அந்த ஈர்ப்பு என்பது வெறும் உடலளவில் மட்டுமே என்று இருந்து விட்டால், அதற்குப் பெயர் காதல் அல்ல! காமம்! அந்த உறவுக்கு ஆயுள் கொஞ்ச நாட்களே! இதனை ஆங்கிலத்தில் - short term connection -
என்கிறார்கள். அதாவது குறுகிய கால இணைப்பு!

உடல் இச்சை தீர்க்கப்பட்ட பின் தூக்கியெறிந்து விட்டுப் போய் விடுவார்கள் - குறிப்பாக ஆண்கள். ஏமாறுவது அப்பாவிப் பெண்களே! (இதற்கு உவமானம் வேறு ஒன்று சொல்வார்கள்: "சப்பி துப்பிப் போடப்பட்ட மாங்கொட்டையைப் போல!")


ஆனால் நாம் இங்கே இத்தகைய காதலைப் பற்றிப் பேச வரவில்லை!

ஆணுக்கும் பெண்ணுக்கும் வல்லோன் அல்லாஹு தஆலா ஏற்படுத்தியிருக்கும் அந்த இயல்பான ஈர்ப்புத்தன்மை வெறும் உடலளவில் என்று மட்டும் இல்லாமல், இருவரின் அறிவிலும் (minds), இருவரின் இதயங்களிலும்(hearts), இருவரின் ஆன்மாக்களிலும் (souls) - ஒரு நெருக்கத்தை, ஒரு நட்பை, ஒரு இனம் புரியாத பிரியத்தை ஏற்படுத்தினால் அதுவே உண்மையான காதல்!

இந்தக் காதல் - அவர்கள் இருவரையும் ஒரு நீண்ட கால உறவுக்கு இட்டுச் செல்கிறது, அந்த இருவரும் நீண்ட கால நண்பர்களாக (soul-mates) ஆகி விடுகிறார்கள்.

இதனை ஆங்கிலத்தில் - long term relationship - என்று அழைக்கிறார்கள்.

இந்த நீண்ட கால உறவுக்கு வழி வகை செய்வதே திருமணம்!

இதுவே உண்மையான காதல்! இதுவே உண்மையான காதல் திருமணம்!

இந்த நபிமொழியைக் கேள்விப்பட்டிருக்கின்றீர்களா?

"There has not been a better choice for lovers but to marry." (Ibn Majah)

காதலர்கள் இருவருக்கும் - "திருமணம் செய்து கொள்வது" என்பதை விட சிறந்த முடிவு வேறு எதுவும் இல்லை! (இப்னு மாஜா)

இப்போது காதலர்களுக்கு ஒரு வேண்டுகோள்:

உங்கள் காதல் உடலால் ஈர்க்கப்பட்ட காதலா? உள்ளத்தால் ஈர்க்கப்பட்ட காதலா?

சுய பரிசோதனை செய்து கொள்ளுங்கள்!

ஏனெனில் இரண்டின் விளைவுகளுமே வெவ்வேறானவை:

ஒன்று: குறுகிய கால "இணைப்பு"; மற்றது நீண்ட கால பிரிக்க முடியாத உறவு!

எது வேண்டும் உங்களுக்கு?

Wednesday, March 26, 2014

நமது முக நூல் பக்கத்துக்கு வந்த ஒரு செய்தி!

சுன்னத்தான இல்லறம்: 

நமது முக நூல் பக்கத்துக்கு செய்தி ஒன்றை அனுப்பியிருந்தார் ஒரு சகோதரர். அது இதோ:

அஸ்ஸலாமு அலைக்கும்! எனக்குத் தெரிந்த ஒரு மனிதர். அவர் மனைவியிடம் பேசுவது கிடையாது; ஏன் அவரது ஒரு வயதே ஆன அந்த பிஞ்சு குழந்தையையும் கண்டு கொள்வது கிடையாது. இவர்களுக்குத் திருமணம் ஆகி இரண்டு வருடம் ஆகப் போகிறது. அந்தப் பெண்ணையும் குழந்தையையும் ஆதரிப்பது அந்த பெண்ணின் தாய் தந்தை ஆவார்கள்.

அவருக்கு நாம் எழுதியிருந்த பதில்:

அந்தக் கணவனும், மனைவியும் ஒரு இஸ்லாமிய கவுன்ஸலரை அணுகுவது அவர்களுக்கும் நல்லது; அந்தப் பிஞ்சுக் குழந்தைக்கும் நல்லது!

அல்லாஹ் - இவர்களின் திருமண வாழ்வையும் அவர்களது குழந்தையையும் பாதுகாப்பானாக!

க்ஹைர்!

இந்தச் செய்தியில் திருமணம் ஆனவர்களுக்கும், திருமணம் ஆகாதவர்களுக்கும், பெண்ணைப் பெற்ற பெற்றோர்களுக்கும், ஏன் ஒட்டு மொத்த சமூகத்துக்கும் ஏராளமான படிப்பினைகள் இருக்கின்றன.

ஒவ்வொன்றாக பார்ப்போம்:

முதல் பாடம்:

தேவை - உடனடி திருமண சீர்திருத்தம்!

நாம் இங்கே வலியுறுத்திச் சொல்ல விரும்புவது இதனைத்தான்!

இன்று வழக்கத்தில் நாம் பார்க்கின்ற திருமண முறைகள் இரண்டு:

1. பெற்றோர் செய்து வைக்கின்ற பாரம்பரியத் திருமணம் (arranged marriage)

2. காதல் திருமணம் (love marriage)

இந்த இரண்டு முறைகளுமே மிகத் தவறானவை!

பெற்றவர்கள் ஒரு மாப்பிள்ளையைப் (அல்லது பெண்ணை) பார்த்திட - ஒருவரைப் பற்றி மற்றவர் அறிந்து கொள்ளாமலே - "என் பெற்றோர் யாரைத்திருமணம் செய்து கொள்ளச் சொல்கிறார்களோ அவரே என் துணைவர்!" என்று கண்ணை மூடிக்கொண்டு செய்யப் படுகின்ற பாரம்பரியத் திருமண முறையில் - அடிப்படையில் ஒரு மிகப்பெரிய கோளாறு இருந்து வந்துள்ளதை - நமது புதிய தலைமுறையின் கவனத்துக்குக் கொண்டு செல்ல வேண்டிய அவசியமும், அவசரமும் இப்போது ஏற்பட்டுள்ளது என்றால் அதில் மிகை இல்லை!

ஏனெனில் இன்றைய நமது முஸ்லிம்களின் இல்லற வாழ்க்கை முறையில்.....

பல குளறுபடிகள் காணப்படுகின்றன. ஒரு நெருக்கடியின் நிமித்தமாகவே கணவனும் மனைவியும் சேர்ந்து வாழ்கிறார்கள்! அவர்களுக்குள் அன்பு, காதல், நேசம், பரிவு, இரக்கம், கருணை, அனுசரித்துப் போகும் பண்பு (adjustment), மன்னிக்கும் பண்பு - இவைகளெல்லாம் அரிதாகி விட்டன!

அது போலவே பெற்றோர் ஆலோசனைகள் ஏதுமின்றி நடக்கின்ற காதல் திருமணமும் வெற்றி பெறுவதில்லை! உடற் கவர்ச்சியினால் காதலில் விழுந்து தனது வாழ்க்கைத் துணை எப்படிப்பட்டதாய் இருந்திட வேண்டும் என்பதைப் பற்றிக் கொஞ்சமும் கவலைப் படாமல் திருமணம் செய்து கொண்டு பின்னர் வருந்துகின்ற இல்லற ஜோடிகளையும் நாம் பார்த்தே வருகின்றோம்.

இரண்டு சகோதரிகள். மூத்த சகோதரிக்கு வயது இருபத்தி ஐந்து. காதலித்தார் ஒருவனை; வீட்டை விட்டு ஓடிப்போய் திருமணம் செய்து கொண்டார்; மனைவியின் ஐந்து பவுன் நகையை செலவு செய்து வாழ்க்கை நடத்தினார்கள்; ஒரே ஒரு ஆண்டு தான் வாழ்க்கை; பணம் தீர்ந்தது; காதல் கணவன் ஓடிப்போய் விட்டான்! பெண்ணின் கையில் ஒரு ஆண் குழந்தை! அந்தப் பெண் அந்த ஆண் குழந்தையை ஒரு அனாதை விடுதியில் சேர்த்து விடுகிறார்! அந்தப் பெண்ணின் எதிர்காலம்? இதில் வேதனை என்னவென்றால் அவரது தங்கையும் காதலித்தார் ஒருவனை; வீட்டை விட்டு.... மேலே உள்ள பத்து வரிகளை அப்படியே CUT & PASTE செய்து கொள்ளுங்கள்! EXACTLY தங்கை விஷயத்திலும் அது தான் நடந்தது! இன்னா லில்லாஹி....

எனவே தான் சொல்கிறோம்:

உடற்கவர்ச்சியினால் உருவாகின்ற காதல் திருமணமும் வேண்டாம்! இன்று வழக்கத்தில் உள்ள பாரம்பரியத் திருமணமும் (arranged marriage) வேண்டாம்!

பின் எப்படித் தான் வாழ்க்கைத் துணையைத் தேடுவது என்று கேட்கிறீர்களா?

அடுத்த பதிவுகளில் - இன்ஷா அல்லாஹ்!

Tuesday, March 25, 2014

திருமணத்துக்குப் பின்னர் அசையவும் கூடாது! அலையவும் கூடாது!

சுன்னத்தான இல்லறம்: 

மவத்தத் மற்றும் ரஹ்மத் ஆகிய இரண்டு பண்புகளைத் தொடர்ந்து அடுத்து நாம் பார்க்க இருப்பது - இறை வசனம் 30:21 ல் இடம் பெற்றுள்ள சகீனத் என்ற சொல். அதனை இப்போது ஆய்வுக்கு எடுத்துக் கொள்வோம்.

இன்னும், நீங்கள் அவர்களிடம் மன அமைதி பெறுதற்குரிய (உங்கள்) மனைவியரை உங்களிலிருந்தே உங்களுக்காக அவன் படைத்திருப்பதும்; உங்களுக்கிடையே  அன்பையும், கருணையையும் உண்டாக்கியிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும்; சிந்தித்து உணரக்கூடிய சமூகத்திற்கு நிச்சயமாக, இதில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன. (30:21)

லி தஸ்குனூ இலைஹா - என்பது இவ்வசனத்தில் உள்ள ஒரு சிறு சொற்றொடர்.

இதன் பொருள் என்ன?


So that you might find contentment (sukoon) with them,

அவர்களிடத்தில் நீங்கள் ஆறுதல் பெறுவதற்காக - என்பது ஒரு தமிழ் மொழிபெயர்ப்பு.

அவர்களிடத்தில் மன நிம்மதி பெறுவதற்காக என்பது இன்னொரு மொழிபெயர்ப்பு.

அவர்களிடம் அமைதி பெற வேண்டும் என்பதற்காக என்பது இன்னுமொரு மொழிபெயர்ப்பு.

சகீனத் என்ற அரபிச் சொல்லுக்கு நாம் இன்னும் ஆழமாக பொருள் காண வேண்டியிருக்கின்றது.

சகீனத் என்பதன் பொருள் என்ன?

சகீனத் என்பதன் மூலச்சொல் - சுகூன்.

சுகூன் என்பது நாம் அடிக்கடி கேள்விப்பட்ட சொல் தான். நாம் அரபி பாடசாலையில் குர் ஆன் ஓதக் கற்றுக் கொள்ளும்போது - முதலில் அரபி எழுத்துக்களைக் கற்றுத் தருவார்கள் அல்லவா?

அப்போது எந்த ஒரு எழுத்தை எடுத்துக் கொண்டாலும் அந்த எழுத்துக்கு மேலேயோ அல்லது கீழேயோ ஃபதஹ்,  ஜர், ளம் (அல்லது ஜபர், ஜேர், பேஷ்) போன்ற ஏதாவது சிறு குறியீடு ஒன்றை எழுதும் போது - அந்த எழுத்தை எப்படி உச்சரிப்பது என்று சொல்லிக் கொடுப்பார்கள்.

சான்றாக "த அல்லது தே" என்ற எழுத்தின் மேலே ஃபதஹ் எனும் குறியைப் போட்டால் "த" என்றும்; எழுத்தின் கீழே ஜர் எனும் குறியைப் போட்டால் "தி" என்றும் உச்சரிக்க வேண்டும். ஆனால் அதே "தே" எழுத்துக்கு மேலே சுகூன் எனும் குறியைப் போட்டால் அந்த எழுத்தை அசைத்திடாமல் "த்" என்றே உச்சரித்திட வேண்டும்.

இங்கே நாம் கவனித்திட வேண்டியது என்னவெனில் இந்த ஃபதஹ், ஜர், ளம் போன்ற குறியீடுகளுக்கு "ஹரகத்" என்று பெயர். ஹரகத் என்றால் அசைத்தல் என்று பொருள். ஹரகத் எனும் சொல்லுக்கு எதிர்ப்பதம் தான் சுகூன். அதாவது அசைக்காமல் இருத்தல்!

இப்போது ஆங்கில மொழிபெயர்ப்புகளுக்குச் செல்வோம்.

சகன என்பதன் பொருள்: to be still, to become still, peaceful, to calm down, repose, rest, to be vowel-less, to remain calm,

சுகூன் என்பதன் பொருள்: calm, tranquility, peace, silence, quiet.

இப்பொது உங்களுக்கு புரிந்திருக்கும் சுகூன் என்று அல்லாஹு தஆலா எதனைச் சொல்ல வருகிறான் என்று.

"அசையாமல் நிறுத்தப்படுதல்" என்ற பொருளை சகீனாவுக்கு நாம் எடுத்துக் கொண்டால் கணவன் மனைவி இருவருமே - திருமணத்துக்குப் பின்னர் எவ்வாறு நடந்து கொண்டால் அமைதியும் ஆறுதலும் கிடைக்கும் என்பதுவும் புரிந்து விடும்.

அதாவது -  திருமணத்துக்குப் பின் கணவனது கண்கள் வேறு எங்கும் அசைந்திடக் கூடாது!

தனது கண்களால் மனைவியை மட்டுமே ரசித்திட வேண்டும். கண் பார்வையை வேறெங்கும் அசைய விட்டு விடக் கூடாது. மனைவியும் அப்படித்தான். தமது கண்களால் கணவனின் அழகை மட்டுமே ரசித்திட வேண்டும். திருமணம் கண்பார்வையைத் தாழ்த்துகிறது என்பது நபிமொழி.

கால்கட்டு என்று தமிழில் சொல்வார்கள்!

ஆனால் அது அப்படி அல்ல! எல்லாவற்றுக்குமே கட்டுப்பாடு தான்!

கைகள் - உங்கள் துணையை மட்டுமே தொட வேண்டும்!

கால்கள் உங்கள் துணையை நோக்கியே ஓடிட வேண்டும்!  

இதயத்தில் உங்கள் துணைக்கு மட்டுமே இடம் அளித்திட வேண்டும்!

இவ்வாறு இல்லற வாழ்வின் அனைத்துத் தேட்டங்களுக்கும் - நாம் நமது துணையை மட்டுமே நாடிட  வேண்டுமே தவிர வேறு எங்கும் அசைய விட்டு விடக் கூடாது. அலைய விட்டு விடக் கூடாது.

பாலுறவையே எடுத்துக் கொள்வோம். அது உங்கள் துணையுடன் மட்டும் தான்! வீட்டுக்கு வெளியே நீங்கள் இருக்கும்போது பாலுணர்வால்  தூண்டப்பட்டால் உடனே நீங்கள் உங்கள் மனைவியிடம் சென்று விடுங்கள் என்பதும் நபிமொழி.

ஒரு தடவை அண்ணல் நபியவர்களுக்கும் இந்நிலை ஏற்பட அவர்கள் தமது மனைவி ஒருவரிடம் உடனே  சென்றார்கள் என்பதும் நபிமொழி நூல்களில் காணக் கிடைக்கின்ற செய்தி தான்.

உங்கள் கணவன் உங்களை அழைத்தால் நீங்கள் என்ன நிலையில் இருந்தாலும் கணவனின் அழைப்பை மறுக்காமல் ஏற்றுக் கொண்டு விடுங்கள் என்ற நபிமொழியின் அற்புதமான நுட்பம் இப்போது புரிகின்றதா?

அது போலவே வாழ்வில் கணவனோ மனைவியோ உணர்ச்சிச் சிக்கலில் சிக்கித் தவிப்பார்கள் சில பொழுதுகளில். அந்த சமயங்களில் எல்லாம் உங்கள் துணையை மட்டுமே நீங்கள் நாடிட வேண்டும்! துணைவி தக்க துணை புரிந்திட வேண்டும். அன்னை கதீஜா (ரலி) அவர்கள் இதற்கு ஈடு இணையற்ற ஒரு முன்மாதிரி!

இப்படி உங்கள் துணையை மட்டுமே முன்னிறுத்தி உங்கள் இல்லறத்தை அமைத்துக் கொண்டால் - அல்லாஹு தஆலா உங்களுக்கு வழங்குவது சகீனத் எனும் மன நிம்மதி! மன அமைதி!

திருமணம் முடிந்ததும் – புதுக் கணவன் மனைவியர் என்ன செய்திட வேண்டும்?

சுன்னத்தான இல்லறம்: 

புதுக் கணவன்மார்களே! உங்கள் புது மனைவியைப் பேச விடுங்கள்!

இது தான் நீங்கள் செய்திட வேண்டிய முதல் வேலை. பல புதுக் கணவன்மார்கள் – தங்கள் புது மனைவியைச் சந்தித்ததும் – தங்களைப் பற்றிய பெருமைகளை, தங்கள் சாதனைகளை அள்ளிக் கொட்டத் தொடங்கி விடுகிறார்கள்.


நீங்கள் முந்திக் கொள்ள வேண்டாம். மாறாக – அவர்கள் பேசட்டும் முதலில்.

எப்படிப் பேச வைப்பது?

கேள்விகளைக் கேளுங்கள்!

எதைப் பற்றிக் கேட்க வேண்டும்?

உங்கள் மனைவியைப் பற்றித் தான்!

கேள்விகள் கேட்பதன் நோக்கம் என்ன?

உங்கள் மனைவியைப் பற்றி நீங்கள் அறிந்து கொள்வதற்காக! தெரிந்து கொள்வதற்காக! புரிந்து கொள்வதற்காக!

எப்படிக் கேட்க வேண்டும்?


ஒரு வரியில் அல்லது ஒரு சொல்லில் பதில் சொல்லி விடுகின்ற கேள்விகள் வேண்டாம்;

எடுத்துக்காட்டு: உனக்கு தேநீர் பிடிக்குமா? காபி பிடிக்குமா?

ஒரு கேள்வி கேட்டால் – அவர்கள் அதற்கு விரிவாக பதில் அளித்திடுமாறு கேள்விகளைத் தேர்வு செய்யுங்கள்!

ஹனி! உனக்கு என்னவெல்லாம் பிடிக்கும் சொல் பார்க்கலாம்?

கேள்வி கேட்டு விட்டு கணவன்மார்கள் செய்யக் கூடாதது என்ன?

அவர்கள் பதில் சொல்லும்போது உங்கள் கவனத்தை வேறு பக்கம் திருப்புதல்!

இது கூடவே கூடாது! அவர்கள் முகத்தை நேருக்கு நேர் பார்த்து அவர்கள் தருகின்ற பதில்களை நீங்கள் ரசித்துக் கேட்டிட வேண்டும்!

வேறு எது பற்றியெல்லாம் கேட்டிட வேண்டும்?

உங்கள் மனைவியின் குடும்பத்தைப் பற்றி, அவருடைய உறவினர்கள் பற்றி; அவர் வளர்ந்த சூழல் பற்றி, அவருடைய கல்வி பற்றி, அவருடைய சிறு வயது அனுபவங்களைப் பற்றி, அவருடைய சாதனைகள் பற்றி, அவருடைய ஆர்வங்களைப் பற்றி, எப்படிப்பட்டவர்களை அவருக்குப் பிடிக்கும் என்பது பற்றி, அவர் எதிர்காலத்தில் தான் என்ன செய்திட விரும்புகிறார் என்பது பற்றியெல்லாம்!

அது போலவே – உங்கள் மனைவியரும் உங்களிடம் கேள்விகள் கேட்பார்கள்!

அப்போது நீங்களும் பேசுங்கள்! உங்களைப் பற்றி நீங்கள் பேசிடத் தான் வேண்டும்; உங்களைப் பற்றி புரிய வைத்திட வேண்டும்!

ஆனால் நீங்கள் பேசும்போது கடைபிடிக்க வேண்டிய நுட்பங்கள் கொஞ்சம் இருக்கின்றன!

அது என்ன நுட்பங்கள்?

மிகக் குறைவாகவே நீங்கள் பேசிட வேண்டும்!

விலாவாரியாக நீங்கள் பேசிடவே கூடாது! (இது ஒரு நுட்பமான சுன்னத்!)

உங்களைப் பற்றி நீங்கள் தம்பட்டம் அடித்துக் கொள்ளக் கூடாது! உங்கள் குடும்பத்தைப் பற்றிய தற்பெருமை கூடவே கூடாது! எதனையும் மிகைப்படுத்திடக் கூடாது! மனைவியை impress செய்வதற்காக - செய்யாத சாதனைகளை செய்து காட்டியதாக பொய் சொல்லி விடக் கூடாது! சுருக்கமாகச் சொன்னால் சற்றே அடக்கி வாசியுங்கள்!

இவ்வாறு கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் புரிந்து கொள்ள முயற்சிப்பது என்பது ஒரே நாளில் நடந்து விடுவது அல்ல!

கொஞ்சம் கொஞ்சமாக ஒருவர் துணையைப் பற்றி மற்றவர் அறிந்து கொள்தல் அவசியம்;

இது தான் இளம் கணவன்மார்கள் திருமணத்துக்குப் பின்னர் செய்திட வேண்டிய மிக முக்கியமான வேலை முதல் வேலை என்று நான் சொல்வேன்.

இதனால் ஏற்படும் நன்மைகள் அளப்பரியது! நம்புங்கள்!

நபித்தோழியர் வரலாறுகள் எல்லாம் கதை போல் கேட்பதற்குத் தானா?

சுன்னத்தான இல்லறம்: 

"தீய்ந்து போன ரொட்டி!" - கதையில் ஒரு கணவனின் இரக்க குணத்தைப் பற்றிப் பார்த்தோம் அல்லவா? அது கதை தான்! ஆனால் ஒரு உண்மைச் சம்பவமே நமது இஸ்லாமிய வரலாற்றில் இடம் பெற்றுள்ளது. இங்கே ஒரு மனைவி தான் ஹீரோயின்!

ஒரு மனைவி தன் கணவனிடம் இந்த அளவுக்கு இரக்க உணர்வுடன் நடந்து கொள்வாரா என்று வியக்கும் அளவுக்கு நடந்து கொண்ட வரலாற்றுச் சம்பவம் அது! நீங்கள் நிச்சயம் கேள்விப்பட்டிருப்பீர்கள்!

யாரைப்பற்றி நாம் இங்கே சொல்ல வருகின்றோம் என்பதை உங்களால் ஊகிக்க முடிகின்றதா?

CLUE: அவர் ஒரு சஹாபியப் பெண்மணி!

நாம் சொல்ல வந்தது உம்மு சுலைம் (ரலி) அவர்களைப் பற்றித்தான். அவரைப் பற்றிய நபிமொழி ஒன்றைப் படியுங்கள்!

அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவிக்கிறார்கள்:

என் தாயார் உம்மு சுலைம் அவர்களின் இரண்டாவது கணவரான) அபூ தல்ஹா(ரலி) அவர்களின் புதல்வர் ஒருவர் நோய்வாய்ப்பட்டு இருந்தார். ஒரு முறை அபூ தல்ஹா(ரலி) வெளியே செல்ல அப்போது அந்தப் பையன் இறந்துவிட்டான். அபூ தல்ஹா(ரலி) திரும்பி வந்தபோது 'என் மகன் என்ன ஆனான்?' என்று கேட்டார்கள்.

உம்மு சுலைம் துக்கத்தை வெளிக்காட்டாமல், 'அவன் முன்பைவிட நிம்மதியாக இருக்கிறான்' என்று பதிலளித்துவிட்டு, அவர்களுக்கு முன்னால் இரவு உணவை வைத்தார். அபூ தல்ஹா(ரலி) இரவு உணவை அருந்தினார்கள்.

பிறகு உம்மு சுலைம் அவர்களுடன் அன்றிரவு தாம்பத்திய உறவுகொண்டார்கள். உறவு கொண்டு முடித்தபோது, உம்மு சுலைம் அவர்கள் தம் கணவரிடம் 'பையனை அடக்கம் செய்ய ஏற்பாடு செய்யுங்கள்' என்று கூறினார்கள்.

விடிந்ததும் அபூ தல்ஹா(ரலி) இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் சென்று நடந்ததைத் தெரிவித்தார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'இன்றிரவு தாம்பத்திய உறவுகொண்டீர்களா?' எனக் கேட்டார்கள். அபூ தல்ஹா(ரலி), 'ஆம்' என்றார்கள்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'இறைவா! அவர்களின் இரவில் அவர்கள் இருவருக்கும் சுபிட்சம் வழங்குவாயாக' என்று பிரார்த்தித்தார்கள்......(புஹாரி எண் 5470 ஹதீஸ் சுருக்கம்)

நாம் கேட்பது இது தான்:

நபித்தோழியர் வரலாறுகள் எல்லாம் கதை கேட்பதற்குத் தானா?

அன்புச் சகோதரிகளே! உம்மு சுலைம் (ரலி) அவர்களின் - "மனநிலையைக்" - கொஞ்சமேனும் உங்கள் இல்லற வாழ்வில் பிரதிபலித்துக் காட்டிட மாட்டீர்களா?

Sunday, March 23, 2014

திருமண வாழ்வில் தினசரிப் போராட்டமா?

சுன்னத்தான இல்லறம்:

இனிமையான இல்லற வாழ்க்கைக்கு இரக்க குணம் மிக அவசியம். கணவன் மனைவியருக்கிடையே இரக்க உணர்வு குறைந்து போய் விட்டால் என்னவாகும்?

தன் துணை மீது இரக்கம் காட்டுவதில் குறை ஏற்பட்டால் - கணவன் மனைவி நல்லுறவே பாதிக்கப்பட்டு விடும்.


குறைகளை துணைவரிடமிருந்து மறைக்கத் தொடங்குவர். தனது குறைகள் பற்றி மனம் திறந்து இருவரும் பேசிட இயலாது!

ஒருவரின் குறைகளை இன்னொருவர் ஆராயத்தொடங்குவர்; சிறிய குறைகள் எல்லாம் பெரிது படுத்தப்படும்!

திருமண வாழ்வு என்பது தினசரிப் போராட்டமாக வெடிக்கும்!


சில நேரங்களில் அது சோகமயமாக (depression) மாறும்! மன அழுத்தத்துக்கு (chronic stress) வழி வகுக்கும்! நிம்மதி பறந்து போய் விடும்!

இன்னும் உடல் நலமும் பாதிக்கப்படும்!

குறைகளைச் சுட்டிக்காட்டினால் அதனை ஒத்துக் கொள்ளாமல் மறுக்கின்ற நிலை ஏற்பட்டு விடும். பின்னர், எவ்வாறு ஒருவர் குறையைக் களைந்திட இன்னொருவர் உதவி செய்திட முடியும்?

என்னைப் புரிந்து கொள்ளும்போதும் என் பலவீனங்களை சகித்துக் கொள்ளும்போதும் தான் வீடு அமைதிப் பூங்காவாகத் திகழ்கிறது. இது என் மனைவிக்கும் பொருந்தும்!

என்னை அப்படியே எனது நிறைகளுடனும் குறைகளுடனும் எனது துணை ஏற்றுக் கொண்டால் தான் நான் முழுமையாக வளர்வேன்! இது என் மனைவிக்கும் பொருந்தும்!

இரக்க உணர்வுக்குப் பஞ்சம் ஏற்பட்டு விட்டால் அது விவாக விலக்குக்கு வழி வகுத்து விடும்! எச்சரிக்கை!!

சரி! இந்தக் கருணை உணர்வை இல்லற வாழ்வில் கணவனும் மனைவியும் எவ்வாறு வெளிப்படுத்துவது?

சிறிய சிறிய குறைகளா? கண்களை மூடிக் கொண்டு விடுங்கள்! அவைகளைக் கண்டு கொள்ளாதீர்கள்! (உங்களுக்கு ஒரு கதை இருக்கிறது அடுத்த பதிவில் - இன்ஷா அல்லாஹ்)

மனைவியின் தேவைகளை நீங்கள் நிறைவேற்றுங்கள்! உங்கள் மனைவியின் தேவைகளை நிறைவேற்றுவதில் ஆர்வம் செலுத்துவதும் கருணையே!

விட்டுக் கொடுத்து நெகிழ்ச்சியுடன் நடந்து கொள்ளுங்கள்.

உங்கள் துணை களைத்துப் போயிருக்கின்றாரா? புரோட்டாவும் சிக்கன் ரோஸ்ட்டும் தான் வேண்டும் என்று அடம் பிடிக்க வேண்டாம்! "மதியம் என்ன உணவம்மா? அதை நானே சூடு காட்டி சாப்பிட்டுக் கொள்கிறேன்; உனக்கென்ன வேண்டும் அதைச் சொல்!" என்று சொன்னால் அது தான் இரக்க உணர்ச்சியின் வெளிப்பாடு!

இந்த விட்டுக் கொடுக்கும் தன்மை உணவுக்கு மட்டுமல்ல! கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் எல்லாவிதமான கருத்து வேறுபாடுகளுக்கும் இதுவே அருமருந்து!

உங்கள் மனைவிக்கு ஒரு பிரச்சனை! ஆனால் அது குறித்து தாமே பேசுவதற்கு அவர் அஞ்சுகிறார் எனில் அவருக்காக நீங்களே குரல் கொடுங்கள்! குறிப்பாக உங்கள் தாய் மூலமாகவோ அல்லது உங்களின் சகோதரிகள் மூலமாகவோ உங்கள் மனைவி பாதிக்கப் பட்டிருந்தால் உங்கள் மனைவிக்காகக் குரல் கொடுப்பவர் யார்? அது நீங்கள் தான்! உங்கள் மனைவியை உங்களின் தாய்க்கோ உங்கள் சகோதரிகளுக்கோ அடிமையாக்கி விடாதீர்கள்!

உங்கள் மனைவியின் குடும்ப விஷயங்களில் அக்கரை செலுத்துவதும் உங்களின் கருணைப் பண்புக்கு அடையாளமாகும்.

சுருக்கமாகச் சொல்வதென்றால் கருணை என்ற ஒரே ஒரு நற்பண்பு இருந்தால் போதும். குடும்பத்தின் எல்லாப் பிரச்சனைகளையும் அதனைக் கொண்டே தீர்த்துக் கொண்டு விடலாம்!

ஆம்! இரக்க குணம் இருந்தால் போதும்! இல்லறம் தானே இனிக்கும்!

இரக்க உணர்வும் இல்லற உறவும்!

23 மார்ச், 2014

சுன்னத்தான இல்லறம்:

சென்ற வாரம் - நாம் - சுன்னத்தான காதலைப் (மவத்தத்) பற்றி சற்றே கவனம் செலுத்தினோம். அடுத்து அதனுடன் மிக நெருக்கமான தொடர்புடைய இன்னொரு உணர்வு பற்றி இப்போது கவனம் செலுத்துவோம்.

அது தான் கணவன் மனைவியருக்கிடையே இறைவன் ஏற்படுத்தியுள்ள இரக்க உணர்வு! திருமறை 30:21 வசனம் காதல் உணர்வையும் இரக்க உணர்வையும் இணைத்தே தான் குறிப்பிடுகின்றது. (மவத்தத் வ ரஹ்மத்)


இன்னும், நீங்கள் அவர்களிடம் மன நிம்மதி பெறுவதற்குரிய (உங்கள்) மனைவியரை உங்களிலிருந்தே உங்களுக்காக அவன் படைத்திருப்பதும்; உங்களுக்கிடையே காதல் உணர்வையும், இரக்க உணர்வையும் உண்டாக்கியிருப்பதுவும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும்; (30:21)

ரஹ்மத் - இரக்கம் - என்பது அல்லாஹு தஆலாவுடைய அரும்பண்புகளுள் ஒன்று!

இதே இரக்க உணர்வைத்தான் - திருமணத்தின் மூலம் கணவன் மனைவியருக்கிடையே பதிய வைத்திருக்கின்றான் வல்லோன் அல்லாஹு தஆலா!

இரக்க சிந்தனை வரும்போது மனிதனுக்கு பொறுப்புணர்ச்சி தானாக வந்து விடும். திருமண உறவைப் பொறுத்தவரை இந்த இரக்க உணர்ச்சி, கணவன் மனைவியருக்குள் கொண்டு வருவது பொறுப்புணர்ச்சியைத் தான்! கணவன் மனைவிக்குப் பொறுப்பேற்றுக் கொள்கிறான்! மனைவி கணவனுக்குப் பொறுப்பேற்றுக் கொள்கிறாள்!

இரக்க உணர்வு ஏற்படுத்தும் இன்னொரு அதிசயம் - துணைவர் தனது துணைவிக்குச் செய்திட வேண்டிய கடமைகளைச் செய்திட இயலாத சூழ்நிலையில் கூட, துணைவர் மீது துணைவி இரக்கம் காட்டுகிறார். கருணை என்பது கொடுப்பது மட்டுமே! அது பதிலுக்கு திரும்பவும் எதனையும் எதிர்பார்க்காதது! ஏனெனில் கொடுப்பதில் கிடைக்கின்ற இன்பம் ஒன்றைத் திரும்பப் பெறுவதில் இல்லை!

கணவன் மனைவி உறவில் - இரக்கம் என்பது இன்னும் பல ஆழ்ந்த அர்த்தங்களைக் கொண்டது.

துணைவி அல்லது துணைவரின் தவறுகளையும் பலவீனங்களையும் மன்னித்து அவைகளை மற்றவர் பார்வையிலிருந்து மறைக்கவும் செய்கிறது இரக்க உணர்வு!

ரஹ்மத் எனும் சொல்லின் வேர்ச்சொல் "ரஹ்ம்" ஆகும். ரஹ்ம் என்பது தாயின் கருவறையைக் குறிக்கும் சொல்லாகும். இது கருணை என்பதன் பொருளை இன்னும் விரிவாக்கி விடுகிறது.

கருவறை பாதுகாப்பானது; அது குழந்தையைப் பாதுகாக்கிறது! அது குழந்தையை வளர்க்கிறது! அது போலவே கணவன் மனைவி - இருவரும் ஒருவருக்கொருவரைப் பாதுகாக்கிறார்கள்! ஒருவரின் வளர்ச்சிக்கு இன்னொருவர் பொறுப்பேற்கிறார்! கருவறையில் குழந்தைக்கு எந்த பயமும் இல்லை! அது போலவே துணையின் நெருக்கத்தில் இன்னொரு துணை பயமின்றி பாதுகாப்புடன் வளர்கிறது!

கணவனும் மனைவியும் அல்லும் பகலும் சேர்ந்தே வாழ்வதால், கணவனின் குறைகள் மனைவிக்கும், மனைவியின் குறைகள் கணவனுக்கும் வெள்ளிடை மலை! அதாவது அவை வெளிப்படையாகத் தெரிந்து விடுகிறது! அவைகளை ஒருவருக்கொருவர் மறைத்துக் கொண்டிடவும் முடியாது! மறைத்திடவும் தேவையில்லை! ஏனெனில் முகமூடி அணிந்து கொண்டு இருவரும் இல்லறத்தை இனிமையாகக் கொண்டு செல்ல இயலாது!

கருணை உணர்வு மட்டும் இருவரிடத்திலும் இல்லை என்றால் நிலைமை என்னவாகும்?

தொடர்ந்து பார்ப்போம் - இன்ஷா அல்லாஹ்!

Friday, March 21, 2014

மூன்று காதல் மொழிகள்! - 3

சுன்னத்தான இல்லறம்:

மூன்றாவது: என்னைத் தொடு! (TOUCH ME!)

கணவன் மனைவியர் தொடுதலைப் பற்றி சொல்லியா தெரிய வேண்டும் என்று கேட்பீர்கள்! ஆம்! நிறைய சொல்ல வேண்டியிருக்கின்றது!

ஏனெனில் - திருமணமான புதிதில் இருக்கும் தொடுதல்கள் எல்லாம் நாட்களாக ஆக படிப்படியாகக் குறைந்து போய் விடுகிறது பலருக்கு! பெரும்பாலும் இதில் ஏமாற்றத்துக்கு ஆளாவோர் மனைவியர்களே!


எத்தனை ஆண்டுகள் ஆனாலும், கணவன் மனைவியருக்குள் தொடுதல் என்பது கொஞ்சமும் குறைந்து போய் விடக்கூடாது என்பதற்கே இப்பதிவு!

இனி அன்றாடம் இதனை செயல்படுத்துவது பற்றி கொஞ்சம் எழுதுவோம். தவறாக எண்ண வேண்டாம்!

உங்கள் கணவர் வேலைக்குப் புறப்படுமுன்பு, அவரை அப்படியே அணைத்து ஒரு முத்தம் கொடுத்து அனுப்புங்களேன்! இது உங்கள் வழக்கமாகவே ஆகி விட வேண்டும்!!

வேலையை விட்டு வீட்டுக்குத் திரும்பி விட்டால், கை கால்களைப் பிடித்து விட்டு, கழுத்துப் பகுதியிலும், முதுகிலும் மஸாஜ் (massage) செய்து விடுங்களேன். நாள் முழுவதும் ஏற்படுத்திய களைப்பு அடியோடு பறந்து போய் விடுமே!

ஏன்? ஒரே பாத்திரத்தில் இருவரும் குளிக்கலாம் தானே! ஒரே குவளையில் வாய் வைத்து அருந்தலாம் தானே! இவைகளும் நபிவழிகள் தானே!

மனைவியுடன் பேசும்போது கூட கையைப் பிடித்துக் கொண்டு பேசுங்களேன்!

உறவுக்கு முன் - முன் விளையாட்டு (FOREPLAY) கூட நபி வழிதானே!

நபிமொழிகள் நிறைய இருக்கின்றன; விரிவஞ்சி - சமீபத்தில் படித்த ஒன்றை மட்டும் பகிர்ந்து கொள்வோம்:

அண்ணலார் (ஸல்) அவர்களின் நபித்துவப் பணியின் சுமையை நாமெல்லாம் அறிவோம்.

அழைப்புப்பணி, ஷரீஅத் சட்டங்களை நிலைநிறுத்துதல், நபித்தோழர்களுக்குக் கல்வி, இஸ்லாமிய அரசைப் பாதுகாத்தல் - இவை மட்டுமல்லாமல் - அவர்களுடைய தொழுகை, நோன்பு, மற்றும் குர்ஆன் ஓதுதல், கால் வலிக்க இரவில் எழுந்து தொழுதல்... இவை எல்லாவற்றுக்கும் நேரம் ஒதுக்கியது போக தம் மனைவியருக்கென்று ஒதுக்கிட என்ன நேரம் மிச்சமிருந்திருக்கும் நபியவர்களுக்கு?

இது குறித்து இமாம் இப்னுல் கைய்யும் அவர்கள் பின் வருமாறு குறிப்பிடுகின்றார்கள்:

When he prayed `Asr he used to pass by his wives and be informed of their affairs, and when night came he would go to the one whose turn it was.

`A'ishah said, 'He never stayed with any of us more than the others, and it rarely happened that he did not visit all of us and come closer to each of us without touching until he reached the one who had the turn so he would stay overnight with her.'

நபியவர்கள் அஸ்ர் தொழுகை தொழுததும் - தம் மனைவியர் அனைவரிடமும் அவர்கள் செல்வார்கள்; அவர்களின் நலன் குறித்து கேட்டுத் தெரிந்து கொள்வார்கள்; இருள் சூழ்ந்ததும் - எந்த மனைவி வீட்டில் அன்று தங்க வேண்டுமோ அங்கே சென்று தங்குவார்கள்!

ஆயிஷா அவர்கள் சொல்கிறார்கள்: நபியவர்கள் எந்த ஒரு மனைவியிடமும் மற்றவர்களை விட சற்றே அதிகமாக தங்கி விட மாட்டார்கள்; எங்கள் அனைவரையும் (மனைவியரையும்) சந்திக்காமல் அவர்கள் ஒருநாளும் இருந்ததில்லை! எங்கள் ஒவ்வொருவரிடமும் மிக நெருக்கமாக இல்லாமல் அவர்கள் செல்வதே இல்லை! எங்கள் ஒவ்வொருவரையும் தொடாமலும் அவர்கள் சென்றது கிடையாது! இவ்வாறு அனைத்து மனைவியரிடமும் நேரத்தைச் செலவிட்ட பிறகே - அன்று எந்த மனைவியின் வீட்டில் தங்க வேண்டுமோ அங்கே சென்று தங்குவார்கள்!

இதில் கவனிக்க வேண்டியது இது தான்:

எங்கள் ஒவ்வொருவரையும் அவர்கள் தொடாமல் சென்றதே இல்லை!

அப்படியானால் ஒவ்வொரு நாளும் மனைவியைத் தொடுவது என்பது சுன்னத் என்றல்லவா ஆகிறது!

ஒரு நிமிடம் - மேலே படிப்பதை நிறுத்து விட்டு - இது விஷயத்தில் உங்களை நீங்களே - எடை போட்டு விட்டு மேலே தொடருங்கள்.

அடுத்து நடந்த சம்பவம் ஒன்று - சற்றே கற்பனையுடன்!

ஒரு பெண் - மண விலக்கு கேட்டு (ஃகுலா) விண்ணப்பிக்கிறார்; ஜமாஅத்தில் விசாரிக்கிறார்கள்; கொடுக்கல் வாங்கலில் பிரச்னையாம்; வெளிநாட்டிலிருந்து ஊர் திரும்பிய கணவன் - மனைவியைத் தொடக்கூடாது என்று "அம்மா" உத்தரவு போட்டு விட்டார்களாம்;

அந்த இளம் மனைவி சொல்கிறார்: அவர் பயணம் வந்து பதினைந்து நாட்கள் ஆகி விட்டன! அவருடைய விரல் நுனி கூட இன்னும் என் மீது படவில்லை!!! இவருடன் நான் எப்படி வாழ்வது?

நீங்கள் - இந்தத் தொடுதல் குறித்து இன்னும் நிறைய சிந்திக்க வேண்டும்!

Thursday, March 20, 2014

மூன்று காதல் மொழிகள்: 2

சுன்னத்தான இல்லறம்:

மூன்று காதல் மொழிகள்:

இரண்டாவது: எனக்குப்புரிய வை! (SHOW ME!)

நீங்கள் உங்கள் கணவரை (அல்லது) மனைவியை நேசிப்பது என்பது உண்மையே! அதனை நீங்கள் உங்கள் துணைக்கு எப்படி புரிய வைப்பீர்கள்? ஆயிரக்கணக்கான வழிகள் இருக்கின்றன!

ஒரு அன்பளிப்பை பரிசாக வழங்குங்கள் உங்கள் துணைக்கு! அது அப்படி ஒன்றும் பெரிதாக இருந்திட வேண்டும் என்ற அவசியம் இல்லை!


அவர்களுக்கு எது மகிழ்ச்சியூட்டுமோ அது போதும். ஒரு முழம் பூ, அல்லது அவர்களுக்குப் பிடித்த ஒரு இனிப்பு அல்லது பண்டம், அவர்களுக்குப் பிடித்த கலரில் ஒரு கைக்குட்டை, அல்லது அவர் விரும்பிப் படிக்க விரும்பும் ஒரு புத்தகம்.....

"அன்பளிப்புகளைப் பரிமாறிக் கொள்ளுங்கள், அது அன்பை வளர்க்கும்" என்பது நபிமொழி.

ஏதாவது ஒன்றை அன்பளிப்பாக வழங்குவது என்பது வேறு; உங்கள் துணைக்குப் பிடித்த ஒன்றை – அவர் எதிர்பார்க்காத நேரத்தில் வாங்கிக் கொடுத்து அவரை அசத்துவது என்பது வேறு! இதற்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் – உங்கள் துணைக்குப் பிடித்ததெல்லாம் என்னென்ன என்பதை முன்பேயே நீங்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

எப்படித் தெரிந்து கொள்வது என்று கூட சில அப்பாவிக் கணவன்மார்கள் கேட்பார்கள். துணையின் அன்றாட செயல்களை சற்றே கூர்ந்து நீங்கள் கவனித்தாலே போதும்! அவர்கள் சாதாரணமாக உங்களிடம் பேசும்போது சற்றே கவனமாகக் காது கொடுத்துக் கேட்டால் போதும். தெரிந்து கொண்டு விடலாம்.

அடுத்து -

உங்கள் துணைவரை நீங்கள் பார்க்கும்போதெல்லாம் புன்சிரிப்பு ஒன்றைத் தவழ விடுங்களேன்!

"உங்கள் சகோதரரை புன்புறுவலுடன் சந்திப்பதும் ஒரு தர்மம்" என்பதும் நபிமொழி தானே!

"மிகச் சிறிய நற்செயல்தானே என்று குறைத்து மதிப்பிட்டு விட வேண்டாம்; அது உங்கள் சகோதரரைப் புன்முறுவலுடன் பார்ப்பதாயினும் சரியே!" (ஸஹீஹ் முஸ்லிம்)

புன்புறுவல் காட்டுவது, மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது, நகைச்சுவை உணர்வுடன் நடந்து கொள்வது - இவையெல்லாம் வீட்டுக்கு வெளியே மட்டுமே என்று எண்ணிக் கொண்டிருக்கின்றோம் நாம்! வீட்டில் கலந்துரையாடல்கள் எல்லாம் பெரிய சீரியஸ் சமாச்சாரமாக ஆக்கி விட்டிருக்கின்றோம்!

நபியவர்கள் தங்கள் மனைவியருடன் இருக்கும்போதெல்லாம் வீடே “கலகலப்பாகத் தான்” இருக்கும்! நாமும் கொஞ்சம் மாறி விடலாம் தானே!

அடுத்து -

மனைவி, வீட்டு வேலைகள் அனைத்தையும் தானே சுமந்து கொண்டு கஷ்டப்படுகின்றாரா? நீங்கள் அவற்றுள் ஏதாவது ஒன்றை எடுத்துக் கொள்ளலாம் தானே?

பாத்திரங்களைக் கழுவுவது ஒன்று போதுமே!

இங்கே ஒரு கணவன். தன் மனைவி சமையலறையில் படும் கஷ்டங்களைப் பார்த்து - பாத்திரங்களைக் கழுவும் வேலையை நாமே எடுத்துக் கொண்டால் என்ன என்று முடிவு செய்து “களத்தில்” இறங்கி விட்டாராம்! என்ன நடந்தது? ஒரே நாளில் பாதி சோப் காலி! சமையலறை முழுவதும் தண்ணீர் தெளித்தது போல் தான்! ஆனால் அவர் விடுவதாக இல்லை; தொடர்ந்து காரியமாற்றி இப்போது அது அவருக்குக் கை வந்த கலையாம்! அவர் என்ன சொல்கிறார் என்றால் – பாத்திரங்களைக் கழுவுவது என்பது அலுவலக வேலை தருகின்ற மன அழுத்தத்திலிருந்து விடுபடும் வழியாக தனக்கு இருக்கின்றது என்கிறாராம்.

அடுத்து -

உங்கள் துணைக்கு உடல் நலம் இல்லையா? உங்கள் அன்பை வெளிப்படுத்திடும் அருமையான வாய்ப்பு அது!

அருகில் அமர்ந்து கொண்டு ஆதரவாகக் கரம் பிடித்து, “கண்ணே! இன்று நன்றாக ஓய்வெடுத்துக் கொள்; மற்ற எல்லா வேலைகளையும் நானே பார்த்துத் தருகின்றேன்!” என்று சொல்லி அலுவலகத்துக்கு விடுப்பு போட்டு விட்டு மனைவியைக் கவனித்துக் கொள்ளுங்கள்! அப்போது வெளிப்படும் காதல் உணர்வுகளுக்கு ஈடு இணையே கிடையாது!

உடல் நலமின்மை என்பது ஒரு சோதனை தான்! ஆனால் அந்த சோதனையிலும் ஒரு வாய்ப்பு (opportunity) என்பது மனைவியைக் கவனித்துக் கொள்வது தான்! இந்த வாய்ப்பை சரிவரப் பயன்படுத்திக் கொண்டால் என்னென்ன நடக்கும்? நோய் குணமாகி யிருக்கும். காதல் மலர்ந்திருக்கும். வல்லோன் இறைவனுக்கு நன்றி சொல்வீர்கள்!

மூன்று காதல் மொழிகள்! - 1

சுன்னத்தான இல்லறம்:

மூன்று காதல் மொழிகள்!

முதலாவது: என்னிடம் சொல்! (TELL ME!)

கணவன்-மனைவியர் காதலை ஒரு பூஞ்செடியுடன் ஒப்பிட்டுவோம். எந்த ஒரு பூஞ்செடியும் தானாகவே வளர்ந்து, தானாகவே மொட்டு விட்டு, தானாகவே மலர்ந்து வாசனை பரப்புவதில்லை!

ஒரு பூஞ்செடி வளர்ந்து பூத்துக் குலுங்குவதற்கு - அது அழகாக வளர்வதற்கேற்ற சூழல் ஒன்றை நாம் உருவாக்கித் தந்திட வேண்டும். அந்தச் செடிக்கு அனு தினமும் நாம் நீரூற்ற வேண்டும். அதனைத் தொடர்ச்சியாக நாம் பராமரித்திட வேண்டும்.

அது போலத்தான் கணவன்-மனைவியர் காதலும்! அந்தக் காதல் வளர்வதற்கேற்ற சூழல் ஒன்று நிச்சயம் தேவை! பராமரிப்பு தேவை! அனு தினமும் அதற்குக் கண்காணிப்பும் அவசியம்!


நீரூற்றுவது நிறுத்தப்பட்டால், எவ்வாறு ஒரு பூஞ்செடி வாடி வதங்கி விழுந்து விடுமோ, அது போலவே கணவன் மனைவி காதலுக்குப் புத்துயிர் ஊட்டுதல் நிறுத்தப்பட்டால், இல்லற வாழ்வும் வாடி வதங்கி வெறுமையானதாக ஆகி விடும்.

அல் குர்ஆன் ஒரு அழகிய உவமையை நமக்குச் சொல்லித் தருகிறது.

"அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள்!" (2:187)

ஆடை என்றால் அப்படியே அது நமக்குக் கிடைத்து விடுவதில்லை! அதற்கான துணி என்பது ஒவ்வொரு இழையாக நெய்யப்பட வேண்டும். நெய்வதிலும் நேர்த்தி ஒன்று அவசியம். அது போலத்தான் - கணவன் மனைவி காதலும். ஒவ்வொரு இழையாக அது நெய்யப் படுதல் அவசியம்!

இப்படிப் பார்க்கும்போது - கணவன் மனைவி காதல் என்பது கூட ஒரு கலை தான்! அது ஒரு திறமையும் கூட (SKILL)! அதனை கணவன் மனைவியர் வளர்த்துக் கொண்டு தான் ஆக வேண்டும்!

இந்தத் திறமையை எவ்வாறு வளத்துக் கொள்வது?

அண்ணலார் வாழ்விலிருந்து மூன்று காதல் மொழிகளை - three languages of love - கற்றுக் கொள்வோம்!

ஒவ்வொன்றாகப் பார்ப்போமே!

என்னிடம் சொல்! (TELL ME!)

உங்கள் துணையிடம் நீங்கள் அடிக்கடி சொல்லிக் கொண்டே இருங்கள்! நீங்கள் எந்த அளவுக்கு அவரை
நேசிக்கிறீர்கள் என்பதை!

காதல் என்பது உங்கள் இதயத்தில் இருந்தால் மட்டும் போதாது! அது உங்கள் வார்த்தைகளால் வெளிப்படுத்தப்பட வேண்டியதும் அவசியம்.

உங்களில் யாராவது ஒருவர் தனது சகோதரரை நேசித்தால், அதனை அவரிடம் தெரிவித்து விடுங்கள்." (அபூ தாவூத்)

ஆனால் நமது சமூகத்தில் இவ்வாறு கணவன் மனைவியரிடையே அன்பை ஒருவருக்கொருவர் வெளிப்படுத்திக் கொள்வதற்கு நாம் இன்னும் கற்றுக்கொள்ளவே இல்லை! அதிலும் குறிப்பாக கணவன்மார்கள்!

நபியவர்களின் வாழ்க்கையில் இருந்தாவது பாடம் கற்போமே!

நபியவர்கள் தம் மனைவி ஆயிஷா (ரலி) அவர்கள் மீது தமக்கிருக்கும் அன்பை வெளிப்படுத்திக் காட்டிட சிறப்பான பெயரொன்றைச் சூட்டி அவர்களை அழைப்பார்கள்.

நீங்கள் உங்கள் மனைவிக்கும், உங்கள் மனைவி உங்களுக்கும் இவ்வாறு அழகிய பெயர்களை சூட்டி அவர்களை அழைத்து உங்கள் அன்பை பரஸ்பரம் வெளிப்படுத்திக் கொள்ளலாம் தானே!

உங்கள் துணை உங்களுக்கு ஒரு உதவி செய்து விட்டாரா? "ஜஸாகல்லாஹ் க்ஹைர்" சொல்லலாம் தானே!

அதுவும் உங்கள் உள்ளத்திலிருந்து!

என்னது? கணவன் மனைவிக்கும், மனைவி கணவனுக்கும் நன்றி சொல்லிக் கொண்டிருப்பார்களா, என்ன?" என்று கேட்காதீர்கள்!

இதுவும் சுன்னத் தான்!

“அல்லாஹ்வின் தூதருக்கு யாரேனும் ஏதாவது அன்பளிப்பை வழங்கினால் நபி (ஸல்) அவர்கள் அவருக்கு நன்றி தெரிவிப்பார்கள். இறைத் தூதரின் காரியமொன்றை யாரேனும் நிறைவேற்றினால் தன்னுடைய திருப்தியை மனப்பூர்வமாக தெரிவிப்பார்கள்.” (அத் திர்மிதி)

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “மனிதர்களுக்கு நன்றி
செலுத்தாதவன் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்த மாட்டான்.” (அஹ்மத், அபூ தாவுத்)

அட! மனைவியும் ஒரு மனுஷி தானே!

நன்றி சொல்லிப்பாருங்கள்! காதல் வெளிப்படுகிறதா என்றும் சோதித்துப் பாருங்கள்! அதிசயம் நடக்கும் உங்கள் இல்லற வாழ்வில்!

உங்கள் துணைவர்/ துணைவி எங்காவது பயணம் புறப்படுகிறாரா? ஃபீ அமானில்லாஹ், அல்லது ஃபீ
ஹிஃப்ஸில்லாஹ் என்று முகம் மலர்ந்து சொல்லி அனுப்புங்களேன்!

நீங்கள் வேலை நிமித்தம் வெளியே சென்றிருக்கும்போது தொலைபேசியில் அழைத்து விசாரியுங்களேன்! அவரை நீங்கள் பிரிந்திருப்பது உங்களை எவ்வளவு வாட்டுகிறது என்று அழகிய வார்த்தைகளால் தெரிவியுங்களேன்! ஒரு SMS அனுப்புங்களேன், உங்கள் துணைவரை நீங்கள் எந்த அளவுக்கு நேசிக்கிறீர்கள் என்பதை அதன் மூலம் சொல்லுங்களேன்!

என்ன? இன்றே செயல்படுத்தலாம் தானே!

சுன்னத்தான காதல்!

சுன்னத்தான இல்லறம்:  

இன்னும், நீங்கள் அவர்களிடம் மன அமைதி பெறுதற்குரிய (உங்கள்) மனைவியரை உங்களிலிருந்தே உங்களுக்காக அவன் படைத்திருப்பதும்; உங்களுக்கிடையே மவத்தத் எனும் அன்பையும், இரக்கத்தையும் உண்டாக்கியிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும்; சிந்தித்து உணரக்கூடிய சமூகத்திற்கு நிச்சயமாக, இதில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன. (30:21)

மேற்கண்ட இறைவசனத்தில் "மவத்தத்" என்ற ஒரு சொல் இடம் பெற்றுள்ளதைக் கவனியுங்கள்.

மவத்தத் என்பதற்கு தமிழில் "அன்பு", "உவப்பு", "நேசம்" என்று மொழிபெயர்த்திருக்கின்றார்கள்.

ஆங்கிலத்தில் மவத்தத் என்பதற்கு "Love" என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அதாவது "காதல்!"


மேலும் அகராதியில் "wadda" என்ற மூலச்சொல்லுக்கு - to love, to like, be fond, to make friends, to show love or affection, to attract, to love each other, be on friendly terms etc., - என்றெல்லாம் பொருள் தருகிறார்கள்.

அப்படியானால் இந்தக் காதல் என்பதை எப்படி விளக்குவது? விளக்குவது சற்றே கடினமாம். இமாம் இப்னுல் கைய்யும் அவர்கள் இந்தக் காதலை விளக்குவதற்கு தனது நூல் ஒன்றில் 464 பக்கங்கள் ஒதுக்கியுள்ளார்களாம்.

அரபி மொழியில் மட்டும் காதல் என்பதைக் குறித்திட அறுபது சொற்களுக்கு மேல் இருக்கின்றனவாம்!

நாம் இங்கே சுருக்கமாக காதல் என்பது எது என்பதைப் பார்ப்போம். அதற்கு முன்னர் - காதல் என்றால் அது எதனையெல்லாம் குறிக்காது என்பதைப் பார்த்து விடுவோம்!

உடற்கவர்ச்சியினால் ஏற்படுவது காதல் அல்ல!

அழகு, பொன், பொருள், சமூக அந்தஸ்து இவற்றால் விளைவது காதலே அல்ல!

ஒருவர் இன்னொருவரின் பேச்சுக்குக் கட்டுண்டு கிடப்பதற்குப் பெயர் காதல் அல்ல!

இரண்டு பேர் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்பதைக் காதல் என்று சொல்லிவிட முடியாது!

இருவருக்குள் சண்டையோ சச்சரவோ வருவதே இல்லை என்றால் அதற்குப் பெயரும் காதல் அல்ல!

அவர் நான் கேட்டதை எல்லாம் எனக்குச் செய்து தருகிறார் என்றால் அது காதல் என்று எண்ண வேண்டாம்!

பலன் எதனையும் எதிர்பார்க்காமல் ஒருவர் இன்னொருவரின் தேவைகளை நிறைவேற்றுவதற்குப் பெயரும் காதல் அல்ல!

தங்களைக் காதலர்கள் என்று சொல்லிப் பெருமைப்பட்டுக் கொள்கிறார்களே! அவர்களுக்கு மத்தியில் இருப்பது உண்மையான காதலே அல்ல!

காதலர் தினத்தன்று ஏற்படுவதும் காதலே அல்ல!

அப்படியானால் உண்மையான காதல் என்பது என்ன?

affection - இதயபூர்வமான அன்பு

appreciation - உயர்வாக மதித்தல்

attention - கவனம் (எந்நேரத்திலும்)

commitment - அர்ப்பணிப்பு

joy - மகிழ்ச்சி

respect - கண்ணியம்

responsibility - பொறுப்பு

sacrifice - தியாகம்

security - பாதுகாவல்

trust - நம்பிக்கை

intimacy - நெருக்கம்

இவை அனைத்தும் ஒன்று சேர்ந்தது தான் காதல்!

சுப்ஹானல்லாஹ்! அண்ணலார் (ஸல்) அவர்களின் இல்லற வாழ்வை நுணுகி ஆய்வு செய்து பார்த்தோம் எனில் - காதல் என்பதின் இந்த அனைத்துப் பரிமாணங்களையும் உள்ளடக்கிய ஆழமான, உண்மையான காதலை நம்மால் புரிந்து கொள்ள முடியும்!

அதுவே சுன்னத்தான காதல்!

மனைவியின் உணர்வுகளை மதித்து நடந்து கொள்ளுங்கள்!

சுன்னத்தான இல்லறம்:

மனைவி என்பவள் ஒரு பொக்கிஷத்தைப் போல! பொக்கிஷம் என்றாலே அது பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்று!

அதாவது – உங்கள் மனைவியை நீங்கள் தான் பாதுகாத்திட வேண்டும். இந்த பாதுகாவல் அவரது உடலுக்கும் உடமைகளுக்கும் மட்டும் அன்று! அவர்களுடைய உணர்வுகளுக்கும் நீங்களே பாதுகாப்பு!

ஒரு தடவை நபியவர்கள் ரமளான் இஃதிகாஃபின் போது தம் மனைவியர் அனைவரையும் அவர்களின் பெற்றோர்கள் வீட்டுக்கு அனுப்பி விட்டார்கள். ஆனால் சஃபிய்யா பின்த் ஹுயை என்ற ஒரே ஒரு மனைவி மட்டும் செல்லவில்லை. காரணம் அன்னை சஃபிய்யா அவர்கள் யூதக் குடும்பத்தைச் சேர்ந்தவர்.


அன்னை சஃபிய்யா அவர்கள் எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடியவர்கள். மற்ற மனைவியர் அனைவரும் அவரவர் பெற்றோர் வீடுகளுக்குச் சென்று விட்ட பிறகு - தாம் அவ்வாறு செல்ல முடியவில்லையே என்று அவர்கள் வருத்தம் அடைந்து விடக்கூடாது என்பதற்காகவே – நபியவர்கள் – இஃதிகாஃபில் இருக்கும்போதே பள்ளிக்கருகில் மனைவியை வரவழைத்து நீண்ட நேரம் அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தார்களாம். பிறகு அவர்கள் வீடு வரை அழைத்துச் சென்று விட்டு விட்டு வந்தார்களாம்! (பார்க்க: புகாரி ஹதீஸ் எண் 3281)

புரிகின்றதா?

உங்கள் மனைவியின் முகம் வாடியிருக்கிறதா? சோகம் அப்பியிருக்கிறதா? வாய் திறக்கவில்லையா? உணவு உண்ணவில்லையா? தூங்கிடவில்லையா? மன உளைச்சலா? மன அழுத்தமா?

மன ரீதியாக அவருக்கு என்ன தேவை? அவருடைய முகத்தைக் கனிவுடன் உற்று நோக்க வேண்டும். அது உங்களுக்கு செய்தி சொல்லும்! அவர் ஏதோ ஒன்றைச் சொல்ல வருகின்றாரா? கூட அமர்ந்து அவரைப் பேச விட வேண்டும். அமைதியாக "இதயம்" கொடுத்துக் கேட்டிட வேண்டும். அவரது உணர்வுகளைப் புரிந்து கொள்ள வேண்டும். அந்த உணர்வுகளை நீங்கள் அங்கீகரித்திட வேண்டும். அதற்குத் தக நடந்து கொள்ளவும் வேண்டும்!

மனைவியின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு - அதற்குத் தக நடந்து கொள்ள வேண்டியதும் சுன்னத்தான இல்லறத்தின் தேட்டங்களுள் ஒன்று தான்!

ஆணின் வெற்றிக்குப் பின் ஒரு பெண்! பெண்ணின் வெற்றிக்குப் பின் ஒரு ஆண்!

சுன்னத்தான இல்லறம்:

பொதுவாக கணவனின் திறமைகளுக்கு மனைவி ஊக்கமளிக்கும் நிலையை நாம் பரவலாகக் காண முடியும். ஆனால் மனைவியின் திறமைகளை அங்கீகரித்து ஊக்கப்படுத்தும் கணவன்மார்களைக் காண்பது தான் அரிதினும் அரிதாக இருக்கின்றது!

நபி வழியைக் கடைபிடிக்கும் கணவன்மார்களே!

உங்கள் துணைவியின் சிறப்பியல்புகளை, அறிவுத்திறனை, குணநலன்களை, திறமைகளை முதலில் அங்கீகரியுங்கள்! அவர்களை மனம் திறந்து பாராட்டுங்கள். அவர்களை ஊக்கப்படுத்துங்கள்!


உங்கள் துணைவி ஒரு சுரங்கம்! அந்தச் சுரங்கத்திலிருந்து பொன்னையும் வெள்ளியையும் இன்னும் அவைகளைவிடவும் சிறந்தவற்றை வெளியே கொண்டு வர வேண்டியது உங்கள் கரங்களில் தான் இருக்கிறது!

உங்கள் மனைவி ஒரு பொக்கிஷம்! 'பொக்கிஷங்களை' விட மதிப்பு மிக்க உங்கள் மனைவியின் திற்மைகளைக் கண்டுணர்ந்து அவற்றை மெருகேற்றி அவர்களை வெற்றிபெறச் செய்திட வேண்டியது உங்கள் கரங்களில் தான் இருக்கிறது!

அதில் தான் உங்கள் மகிழ்ச்சி அடங்கியுள்ளது! அதில் தான் உங்கள் உறவின் பலமும் அடங்கியுள்ளது!

எனவே கணவன்மார்களே! உங்கள் மனைவியின் சிறப்பியல்புகளை, திறமைகளை, நற்குணங்களை - இன்றே உட்கார்ந்து பட்டியலிடுங்கள்.

அது போலவே மனைவியரும் தங்கள் கணவன்மார்களின் திறமைகளை உட்கார்ந்து பட்டியல் இடட்டும்!

"ஆணின் வெற்றிக்குப் பின் ஒரு பெண்! பெண்ணின் வெற்றிக்குப் பின் ஒரு ஆண்!" என்பதே சுன்னத்தான இல்லறத்தின் இன்னும் ஒரு இலக்கணமாகும்!

இதனைத் தான் ஆங்கிலத்தில் இப்படிச் சொல்கிறார்கள்:

"Bring out the best in each other!"

அண்ணலாரின் நபித்துவ ஆளுமைக்குப் பின்புலமாக நின்றவர்கள் அன்னை கதீஜா (ரலி) அவர்களே!

அன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் அறிவாற்றலை அங்கீகரித்து அவ்வறிவை முஸ்லிம் சமூகம் அள்ளிப்பருகிட வழியமைத்துத் தந்தவர்கள் அண்ணலார் அவர்களே!

அன்னை பாத்திமா (ரலி) வாழ்ந்த முறை உனக்குத் தெரியுமா?

சுன்னத்தான இல்லறம்:

அன்னை பாத்திமா (ரலி) வாழ்ந்த முறை உனக்குத் தெரியுமா?

பாத்திமா (ரலி) அவர்கள் எப்பொழுதும் பொறுமையுடையவராகவும், படைத்தவனுக்கு நன்றியுடைய நல்லடியாராகவும் வாழ்ந்து காட்டினார்கள். எத்தகைய கஷ்டமான சூழ்நிலையிலும் கூட எந்த முனுமுனுப்பும் காட்டாதவர்களாக இருந்தார்கள். இந்த உலகமும், அதன் அலங்காரங்களும் எந்த வகையிலும் அவரது வாழ்வை திசை மாற்றிடவில்லை.

ஒரு தடவை – அலீ அவர்கள் மனைவி பாத்திமா அவர்களைப் பார்த்து, “ஏன் பாத்திமா? உன் முகமெல்லாம் மஞ்சனித்து இருக்கின்றது? -என்று கேட்டார்களாம்.

“நான் சாப்பிட்டு மூன்று நாட்களாகி விட்டன!” – என்றார்கள் அன்னை பாத்திமா அவர்கள்.

“ஏன், என்னிடம் இதனைச் சொல்லவில்லை? நான் ஏதாவது உணவுக்கு ஏற்பாடு செய்திருப்பேனே!”

“அலீ அவர்களே! நீங்கள் கேட்டதனால் சொல்கிறேன்; நம் திருமணத்தின் போது – என் தந்தை எனக்கு உபதேசம் ஒன்றைச் செய்திருந்தார்கள். அது என்ன தெரியுமா? “பாத்திமா! அலீயிடம் எதனையும் கேட்காதே! கொடுத்தால் மட்டும் வாங்கிக் கொள்!” – என்பது தான் அந்த உபதேசம்!

இதுவே சுன்னத்தான இல்லறத்தின் மிக முக்கியமானதொரு இலக்கணம்!

மனைவியின் சிறப்பியல்புகளைக் கொண்டாடுங்கள்!

சுன்னத்தான இல்லறம்: 

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் பற்றி இவ்வாறு குறிப்பிட்டார்கள்:

”தரீத் என்னும் உணவு மற்ற உணவுகளை விட சிறப்பாக இருப்பது போன்று மற்ற பெண்களைவிட ஆயிஷா(ரலி) அவர்கள் சிறப்பானவர்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ” (திர்மிதி)

அண்ணலார் (ஸல்) அவர்களின் இந்த வழிமுறையை நாம் பின்பற்றுவது எப்படி?


உங்கள் மனைவியின் “சிறப்பியல்புகளை இன்றே பட்டியல் போடத் துவங்கி விடுன்கள்!

உங்கள் மனைவியின் தனித்தன்மைகள் என்னென்ன?

ஒவ்வொரு பெண்ணும் ஒரு பொக்கிஷம் தான்! பல அற்புதங்களைத் தனக்குள் புதைத்து வைத்திருக்கும் புதையல் தான்!

அறிவு சார்ந்த விஷயங்களில் - உங்கள் மனைவியின் தனித்தன்மை என்ன? அது போலவே ஆன்மிக விஷயங்களில் – உங்கள் மனைவியின் தனித்தன்மை என்னென்ன? அன்பு செலுத்துதல், பாசம் காட்டுதல், இரக்கப்படுதல் போன்ற உணர்வு சார்ந்த விஷயங்களில் உங்கள் மனைவி எப்படி? என்னென்ன நற்குணங்கள் உங்கள் மனைவியிடத்தில் குடிகொண்டிருக்கின்றன?

இவை அனைத்தையும் ஒரு சேரப் பெற்றிருக்கின்ற ஒரு பெண்ணை – “எனக்கே எனக்காக!” – என்று வல்லோன் அல்லாஹு வழங்கியிருக்கின்றான் என்று எண்ணும்போது – இரண்டு விஷயங்கள் ஏற்படும்!

ஒன்று: அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் உணர்வு!

இரண்டு: உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் அற்புதமான நெருக்கம் ஒன்று ஏற்பட்டு விடும்! அதுவும் இயல்பாகவே!

இவ்வாறு உங்கள் மனைவியின் “சிறப்பியல்புகளை” அனு தினமும் உங்கள் பேச்சின் மூலமாகவும், செயல்பாடுகள் மூலமாகவும் – கொண்டாடுங்கள்! கொண்டாடுங்கள்! கொண்டாடிக் கொண்டே இருங்கள்!

இந்தக் கொண்டாட்டத்துக்கு நடுவிலே இயல்பாக - ஏற்படுகின்ற உடல் ரீதியான நெருக்கம் இருக்கின்றதே – அது –கணவன் மனைவி பாலுறவை அற்புதமான அனுபவமாக ஆக்கிக் காட்டி விடும்!

ஆனால் அதற்கு நேர் மாற்றமாக – மனைவியின் – குறைகளையே பட்டியல் போட்டுக் கொண்டிருந்தால் – கணவன் மனைவி நெருங்கி வாழவே முடியாது! உடல் நெருக்கம் கூட – சடங்காகிப் போய்விடும்!

அது போலவே மனைவியர்களும் தங்கள் கணவன்மார்களின் சிறப்பியல்புகளைப் பட்டியல் போடுங்கள்! அவைகளை சொல்லாலும் செயலாலும் கொண்டாடிக் கொண்டே இருங்கள்! கணவனின் நெருக்கத்தை உணர்வு பூர்வமாக அனுபவிக்கத் தவறி விடாதீர்கள்!

இது நுட்பம் நிறைந்த ஒரு சுன்னத் ஆகும்!

Saturday, March 15, 2014

கவிதை ஒன்று எழுதத் துவங்குங்கள்! உங்கள் கணவருக்காக!!

சுன்னத்தான இல்லறம்:

நாம் அடிக்கடி கேட்கின்ற துஆக்களும் ஒன்று தான் இது:

“எங்கள் இறைவா! எங்கள் மனைவியரிடமும், எங்கள் சந்ததியரிடமும் இருந்து எங்களுக்குக் கண்களின் குளிர்ச்சியை அளிப்பாயாக!” (குர் ஆன் 25: 74)

இங்கே கண்களுக்குக் குளிர்ச்சி –என்பதன் பொருளை சற்றே ஆழமாகப் பார்ப்போம்:

நபியவர்கள் மக்காவிலே தோன்றுவதற்கு முன்னர் – அரபுக்களிடம் ஒரு பழக்கம் இருந்ததாம். யாரையாவது அவர்கள் கடுமையாகத் திட்ட வேண்டும் என்றால் -   அத்ஃகனல்லாஹு ஐனஹு (adkhanallahu ‘ainahu) என்று திட்டுவார்களாம்.

இதனை எப்படி எடுத்துக் கொள்ளலாம் என்றால் அவன் கண்கள் புகையை வெளிப்படுத்தட்டும் என்று திட்டுவதாக சொல்லலாம். அதாவது அவன் கண்கள் சோகக் கண்ணீர் சொரியட்டும் என்று திட்டுவதாக பொருளாம். அப்படியானால் இதற்கு நேர் எதிர்ப்பதம் தான் “குர்ரத ஐன்!” அதாவது  உன் கண்கள் ஆனந்தக் கண்ணீரை சொரியட்டும் (tears of joy)!    

“குர்ரத ஐன்” – என்பதற்கு இன்னொரு பொருளும் உண்டு. அந்தக் கால அரபுக்கள் - பாலைவனத்தில் பயணிக்கும்போது மணல் புயல் வீசினால் தங்களைக் காத்துக் கொள்ள ஏதாவது குகை போன்ற ஒதுங்குமிடம் கிடைத்து விட்டால்  - குர்ரத ஐனைய! “qurrata ‘ainayya” – என்பார்களாம். அதாவது என் கண்கள் குளிர்ந்து விட்டது என்று பொருள்!

இந்தப் பின்னணியில் நாம் மேலே சுட்டிக்காட்டிய துஆவை எடுத்துக் கொண்டோம் என்றால் – கண்களுக்குக் குளிர்ச்சி என்பது எதனைக் குறிக்கின்றது?

கணவன் மனைவியையோ, மனைவி கணவனையோ, குழந்தைகள் பெற்றோர்களையோ அல்லது பெற்றோர்கள் குழந்தைகளையோ பார்க்கும்போது என்ன கிடைக்க வேண்டும்?

ஒன்று: அவர்களின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் வெளிப்பட வேண்டுமே தவிர சோகக் கண்ணீர் வந்து விடக்கூடாது.

இரண்டு: குழந்தைகளையும் துணைவர் அல்லது துணைவியையும் கண்ட மாத்திரத்திலேயே – தங்களுக்கு “அடைக்கலம்” கிடைத்து விட்டது போன்று அவர்கள் உணர வேண்டும்!

இதனை – இன்றைய சூழலோடு ஒப்பிட்டுப் பார்ப்போம். கணவன் பொருள் ஈட்டவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ வெளியே செல்கிறார். வெளி உலகம் என்பது “பாலைவனப் புயல்” போன்றது எனில் அவர் வீட்டுக்குத் திரும்பும் போது – தனக்கு அடைக்கலம் தரும் இல்லத்துக்கு வந்து விட்டதாக  அவர் உணர வேண்டும். இதனை மனைவியர் புரிந்து கொள்வது நலம்.

அது போலவே - மனைவியர் வீட்டிலிருக்கும்போது - சில உறவுகள் - வீட்டிலேயே ஒரு பாலைவனப் புயலைக் கிளப்பி விட்டுப் போயிருப்பார்கள். மனைவி சோர்ந்து போயிருப்பார். கணவர் வரட்டும் என்று காத்திருப்பார். கணவனைக் கண்ட மாத்திரத்திலேயே - தனது உணர்வுகளைக் கொட்டித் தீர்க்க முன் வருவார். கணவன் அடைக்கலம் தந்து அரவணைத்துக் கொள்ள வேண்டும் மனைவியை!

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் வீட்டுக்கு வரும்போது ஆயிஷா (ரலி) அவர்கள் ஒரு கவிதை வாசிப்பதுண்டாம்! கேள்விப்பட்டிருக்கின்றீர்களா?

அந்தக் கவிதையின் வரிகளில் சில இதோ..

அல்லாஹ் வானத்தில் ஒரு சூரியனைப் படைத்திருக்கிறான்!
அல்லாஹ் எனக்கென்றே ஒரு சூரியனையும் தந்திருக்கின்றான்!

எனது சூரியன் வானத்தில் உள்ள சூரியனை விட மிகச் சிறந்தது!

வானத்துச் சூரியன் ஃபஜ்ருக்கு பின்னால் உதிக்கும்!
ஆனால் எனது சூரியனோ இஷாவுக்குப் பின்னால் தான் என் பக்கமாக  உதிக்கும்!!

எப்படி இருக்கின்றது அன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் கவிதை வரிகள்?

இப்படிக் கவிதை பாடி கணவனை வரவேற்றால் – எந்தக் கணவனுக்குத்தான் தன் மனைவி “கண் குளிர்ச்சியாகத்” தெரிய மாட்டாள்?  

கணவனை வரவேற்க கவிதை பாடுவதும் ஒரு சுன்னத் தான்!

எழுதத் துவங்குங்கள் – உங்கள் கவிதைகளை – உங்கள் கணவருக்காக!

பின் குறிப்பு:

ஆனால் நமது நிலை என்னவெனில் நமது வீடுகள் – “பாலைவனப் புயலால்” சூழப்பட்டுள்ளதோ என்று எண்ணத் தோன்றுகிறது! கணவனோ அடைக்கலம் தேடி வீட்டை விட்டு வெளியேறி விடுகிறார்! அல்லாஹ் – இப்படிப்பட்ட நிலையிலிருந்து நம்மைக் காப்பானாக!

Friday, March 7, 2014

திருமணத்துக்கு முன் - வழிகாட்டும் ஆலோசனை!

திருமணத்துக்கு முன் - வழிகாட்டும் ஆலோசனை!
(Premarital Counselling)

திருமணம் ஆகாத ஒரு இருபது மாணவிகளுக்கு திருமணத்துக்கு முன் - வழிகாட்டும் ஆலோசனை (Premarital Counselling) கடந்த 13 - 05 - 2012 அன்று வழங்கப்பட்டது.

அதில் கலந்து கொண்ட மாணவிகள், வழங்கப்பட்ட ஆலோசனைகள் பற்றி தங்கள் கருத்துகளைப் பதிவு செய்து தந்தார்கள். அவற்றில் சில் இதோ:

நீங்கள் சொன்ன அனைத்து ஆலோசனைகளும் பயன் உள்ளதாக இருந்தன. எங்கள் சந்தேகங்கள் அனைத்தையும் தீர்த்தீர்கள். எங்கள் வாழ்க்கையில் எதையும் யோசித்து செயல் படுத்தும் முறையை நீங்கள் சொன்னீர்கள். இன்ஷா அல்லாஹ், நாங்கள் அவை அனைத்தையும் கடைபிடிப்போம். - ஒரு மாணவி  


இந்தப் பருவத்தில் எப்படி இருக்க வேண்டும் என்பது எனக்குத் தெரியும். இருந்தாலும் எல்லாரும் சொல்கிற மாதிரி தான் நீங்களும் சொல்வீர்கள் என்று நினைத்தேன். ஆனால் புது மாதிரியாக இருந்தது உங்கள் ஆலோசனை.    - ஒரு மாணவி

எனக்கு கல்யாணம் அப்படின்னா ரொம்ப பயமா இருந்தது. ஆனா இப்போ ஓரளவுக்கு அந்த பயம் போயிடுச்சு. - ஒரு மாணவி

இந்த தலைப்பை எப்படி இஸ்லாத்தோடு இணைத்து சொல்வீர்கள் (?) என்று நினைத்தேன். மாஷா அல்லாஹ்! நினைத்ததை விட அருமையாக வகுப்பு எடுத்தீர்கள். - ஒரு மாணவி

கல்யாணத்துக்கு முன்னாடி எப்படி உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தணும் என்பதை அருமையாகச் சொன்னீர்கள். - ஒரு மாணவி

இந்த வயதில் எங்களுக்கு அவசியமான ஆலோசனைகளையும், காதல் (love) பற்றியும், இந்த வயசில் நாங்கள் தவறு செய்யாமல் இருக்க அதற்கு அல்லாஹ் கூறியுள்ள வழிகளையும் சரியான நேரத்தில் எங்களுக்கு தந்ததற்கு நன்றி. - ஒரு மாணவி

இந்த தலைப்பில் நீங்கள் வெளிப்படையாக பேசியது மிகவும் பயனுள்ளதாக இருந்தது. - ஒரு மாணவி

இந்த வகுப்பில் நான் அதிகமான விஷயங்களை புரிந்து கொண்டேன். வாழ்க்கையின் முக்கியமான பகுதியை பற்றி தெரிந்து கொண்டேன். என்னுடைய குழப்பமான கேள்விக்கு தீர்வு கிடைத்தது. மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. யாரும் இதைப்பற்றி என்னிடம் சொன்னது இல்லை. முதன் முதலாக நீங்கள் நடத்தியது எனக்கு பயனாக இருந்தது. - ஒரு மாணவி

Monday, March 3, 2014

சகீனா வழங்கும் பயிலரங்கங்கள்

1 மனைவி ஒரு பொக்கிஷம்! (Wife is a Treasure!)

இது இல்லறத்தை இனிமையாக்கிட விரும்பும் கணவன் – மனைவி இருவருக்கும் ஒரு சேரப் பயிற்சி அளித்திடும் பயிலரங்கம். நவீன ஆய்வுகளின் உதவியோடு, இறை வழிகாட்டுதலின் அடிப்படையில் அளிக்கப்படும் பயிற்சி இது!

2.  குழந்தைகள் சுரங்கங்கள்! (Children are Mines!) 

குழந்தை வளர்ப்பு ஒரு பெரிய பொறுப்பு. இன்றைய காலகட்டத்தில் குழந்தை வளர்ப்பு என்பது ஒரு பெரிய சவால்! இப்பொறுப்பை செவ்வனே நிறைவேற்றிட பெற்றோர்களுக்காக வடிவமைக்கப்பட்ட பயிற்சியே – 'குழந்தைகள் சுரங்கங்கள்!'   பயிலரங்கம்.

3. உனக்குள் ஒரு சுரங்கம்! (You are a Mine! Explore Yourself!) 

ஒவ்வொரு தனி மனிதனின் எல்லாவிதமான திறமைகளையும் ஆற்றல்களையும் வளங்களையும் ஒரு சேர வளர்த்திடுவற்காக இஸ்லாமிய வழிகாட்டுதல்களின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட மனித வள மேம்பாட்டுப் பயிற்சியே (Human Resource Development) 'உனக்குள் ஒரு சுரங்கம்!'

4. உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவது எப்படி? (Emotional Wisdom) 

உணர்ச்சிகளால் மனிதன்  அலைக்கழிக்கப்படும்போது பொறுமையுடனும், சற்று நிதானத்துடனும் சிந்தித்து செயல் பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் பயிலரங்கமே  'உணர்ச்சிகளைக் கையாள்வது எப்படி?

5. திருமணத்துக்கு முன் வழிகாட்டும் ஆலோசனை! (Premarital Counselling) 

தங்களின் திருமண வாழ்வு குறித்து மிகச் சரியான முடிவெடுத்திட – இளைஞர்களுக்கும் இளைஞிகளுக்கும் அவசியத் தேவை – திருமணத்துக்கு முன் வழிகாட்டும் ஆலோசனை! கேள்வி-பதில்,கலந்துரையாடல்களுடன் இது ஒரு புதுமையான பயிலரங்கம்!

6. வாழ்க்கை என்பது இவ்வளவு தானா? (Conviction in Faith)

சிந்தனையைத் தூண்டும் கேள்வி பதில்களுடன் நமது நம்பிக்கைகளை புதுப்பித்துக் கொள்ளும் ஒரு ஆய்வு அரங்கமே -  'வாழ்க்கை என்பது இவ்வளவு தானா?' பயிலரங்கம்.

7. உண்மையான வெற்றி – தொழுகை மூலமே! (Success Through Salat) 

தொழுகைக்கும் வெற்றிக்கும் என்ன உறவு? வெற்றி என்பது இவ்வுலகிலா? மறு உலகிலா? அல்லது இரண்டு உலகிலுமா? – போன்ற ஆழமான கேள்விகளுக்கு விடை தேடிடும் முயற்சியே – 'உண்மையான வெற்றி – தொழுகை மூலமே!' பயிலரங்கம்!

நமது பயிலரங்கங்கள் அனைத்தும் – முற்றிலும் புதுமையானவை!

நவீன ஆய்வுகளின் உதவியோடு,இறை வழிகாட்டுதலின் அடிப்படையில் அமைக்கப்பட்டவை!

சிந்தனையைத் தூண்டும் கேள்வி-பதில்கள், அழகிய விவாதங்கள், மற்றும் கலந்துரையாடல்களுடன் அளிக்கப்படும்  பயிற்சிகள் இவை!

மேலும் விவரங்களுக்கு:  

sakeenatun@gmail.com

கணவன் மனைவியரே! வாங்க பேசலாம்!!

இல்லற வாழ்வில் மகிழ்ச்சியே இல்லையா?

குழந்தை பிறந்த பிறகு குறைந்து விட்டதா இல்லற சுகம்?

நச்சரித்துக் கொண்டே இருக்கிறாள் என் மனைவி என்ற புலம்பலா?

இவளை இனி திருத்தவே முடியாது என்றா முடிவு செய்து விட்டீர்கள்?

நான் பேசுவதை இவர் காது கொடுத்துக் கேட்பதே இல்லை என்ற கவலையா?

சின்ன பிரச்னைகள் கூட பெரிதாக வெடித்து விடுகிறதா?

ஆளுக்கொரு பக்கமாகத் திரும்பிப் படுத்துக் கொள்கிறீர்களா?

மண விலக்கு செய்து விட்டால் என்ன? - என்ற நினைப்பு அடிக்கடி வருகின்றதா?

தலாக் என்று முடிவெடுத்து விட்டால் அதனைத் தடுத்து விட முடியுமா என்ன?

வாங்க பேசலாம்!

விரைவில் எதிர்பாருங்கள்!

மனைவி ஒரு பொக்கிஷம்! பயிலரங்கம் குறித்த அறிவிப்பை!  

பாலுறவை - மிகச் சிறப்பான அனுபவமாக ஆக்கிக் கொள்வது எப்படி?

“வ ஆஷிரூஹுன்ன பில் ம'-ரூஃப்!”

- இது சூரத்துன் நிஸாவின் 19 வது வசனத்தின் ஒரு சிறிய பகுதி தான்!

இதன் பொருள்:

" நன்மையான காரியங்கள் அனைத்திலும் அவர்களுடன் மிக நெருங்கிய உற்ற நண்பர்களாக நடந்து கொள்ளுங்கள்"

ஆங்கிலத்தில்:

"behave with them as intimate companions in all the good things that are allowed in Islam "

இப்போது கேள்வி என்னவென்றால் –

நெருக்கம் என்றால் என்ன? – என்பது தான்!


நெருக்கம் என்பது உடலளவில் மட்டும் தான் என்றால் – அது கணவன் மனைவி உறவையே கொச்சைப் படுத்துவது போல் ஆகி விடும்.

கணவன் – மனைவியர் தங்களின் இல்லற வாழ்வின் அனைத்துப் பரிமாணங்களிலும் நெருங்கி வாழ்வதைத் தான் நெருக்கம் என்ற சொல் பொதுவாகக் குறிக்கின்றது.

அறிவு பூர்வமான நெருக்கம்,

ஆன்மிக விஷயங்களில் உணர்வு பூர்வமான நெருக்கம், 

அன்பு, காதல், இரக்கம் போன்ற விஷயங்களில் இதய பூர்வமான நெருக்கம், 

கணவன் மனைவி – இருவரிடமும் சிறப்பாக அமைந்திருக்கின்ற நற்குணங்களினால் (unique positive qualities) ஏற்படுகின்ற நெருக்கம், 

இறுதியாக – இவை அனைத்தும் ஒன்று சேர்வதால் ஏற்படுகின்ற உடல் ரீதியான நெருக்கம் 

 - இவை அனைத்திலும் ஏற்படுகின்ற நெருக்கமே பரிபூரணமான நெருக்கம் ஆகும்!

இப்படிப்பட்ட பரிபூரணமான நெருக்கம் கணவனுக்கும் மனைவிக்கும் எவ்வாறு ஏற்படும்?

இப்படிப்பட்ட நெருக்கம் ஏற்பட கணவன்மார்கள் செய்திட வேண்டியது என்ன?

மனைவி என்பவள் ஒரு பொக்கிஷம்! ஒவ்வொரு பெண்ணும் ஒரு பொக்கிஷம் தான்! பல அற்புதங்களைத் தனக்குள் புதைத்து வைத்திருக்கும் புதையல் தான்!

எனவே கணவன்மார்கள் செய்திட வேண்டியதெல்லாம் - தன் மனைவியின் “சிறப்பியல்புகளைப்” பட்டியல் போடத் துவங்கி விட வேண்டும்!

உங்கள் மனைவியின் தனித்தன்மைகள் என்னென்ன?

அறிவு சார்ந்த விஷயங்களில் - உங்கள் மனைவியின் தனித்தன்மை என்ன? 

அது போலவே ஆன்மிக விஷயங்களில் – உங்கள் மனைவியின் தனித்தன்மை என்னென்ன? 

அன்பு செலுத்துதல், பாசம் காட்டுதல், இரக்கப்படுதல் போன்ற உணர்வு சார்ந்த விஷயங்களில் உங்கள் மனைவி எப்படி? 

என்னென்ன நற்குணங்கள் உங்கள் மனைவியிடத்தில் குடி கொண்டிருக்கின்றன?

இவை அனைத்தையும் ஒரு சேரப் பெற்றிருக்கின்ற ஒரு பெண்ணை – “எனக்கே எனக்காக!” – என்று வல்லோன் அல்லாஹு வழங்கியிருக்கின்றான் என்று எண்ணும்போது – இரண்டு விஷயங்கள் ஏற்படும்!

ஒன்று: அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் உணர்வு!

இரண்டு: உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் அற்புதமான நெருக்கம் ஒன்று ஏற்பட்டு விடும்! அதுவும் இயல்பாகவே!

இவ்வாறு உங்கள் மனைவியின் “சிறப்பியல்புகளை” அனு தினமும் உங்கள் பேச்சின் மூலமாகவும், செயல்பாடுகள் மூலமாகவும் – கொண்டாடுங்கள்! கொண்டாடுங்கள்! கொண்டாடிக் கொண்டே இருங்கள்! 

இந்தக் கொண்டாட்டத்துக்கு நடுவிலே இயல்பாக - ஏற்படுகின்ற உடல் ரீதியான நெருக்கம் இருக்கின்றதே – அது –கணவன் மனைவி பாலுறவை அற்புதமான அனுபவமாக ஆக்கிக் காட்டி விடும்!

ஆனால் அதற்கு நேர் மாற்றமாக – மனைவியின் – குறைகளையே பட்டியல் போட்டுக் கொண்டிருந்தால் – கணவன் மனைவி நெருங்கி வாழவே முடியாது! உடல் நெருக்கம் கூட – சடங்காகிப் போய்விடும்!

அது போலவே மனைவியர்களும் தங்கள் கணவன்மார்களின் சிறப்பியல்புகளைப் பட்டியல் போடுங்கள்! அவைகளை சொல்லாலும் செயலாலும் கொண்டாடிக் கொண்டே இருங்கள்! கணவனின் நெருக்கத்தை உணர்வு பூர்வமாக அனுபவிக்கத் தவறி விடாதீர்கள்!

நபியவர்களின் இல்லற வாழ்வை சற்று நோக்கினால் இது இன்னும் தெள்ளென விளங்கும்!

சான்றுக்கு ஒன்று: 

அன்னை ஆயிஷா (ரலி) அவர்களை நபியவர்கள் எப்படிக் கொண்டாடினார்கள்?

”தரீத் என்னும் உணவு மற்ற உணவுகளை விட சிறப்பாக இருப்பது போன்று மற்ற பெண்களைவிட ஆயிஷா(ரலி) அவர்கள் சிறப்பானவர்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ” (திர்மிதி)

எழுதியவர்: S A மன்சூர் அலி