ஒருவர் தன் துணையின் உள் மன உணர்வுகளை புரிந்து கொள்ள என்ன செய்திட வேண்டும்?
உங்கள் துணையின் பக்கம் நீங்கள் முழுமையாகத் திரும்பிட வேண்டும்! அவர்களுக்கென்று நேரம் ஒதுக்கிட வேண்டும்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அஸ்ர் தொழுகை முடிந்தவுடன் தம் துணைவியரிடம் செல்வார்கள். அப்போது அவர்களில் சிலருடன் நெருக்கமாக இருப்பார்கள். அவ்வாறே (ஒருநாள்) தம் துணைவியாரான ஹஃப்ஸாவிடம் சென்று வழக்கமாகத் தங்கும் நேரத்தைவிட அதிக நேரம் தங்கினார்கள். (புகாரி – 5216)
உங்களவருடன் நீங்கள் அனுசரணையாகப் பேசிட வேண்டும். அவர் பேசுவதைக் காது கொடுத்துக் கேட்டிட வேண்டும்.
நபியவர்களிடம் யாராவது பேசினால் – அவர் பேசி முடியும் வரை – அமைதியாகக் காது கொடுத்துக்கேட்பார்கள் என்பது நபிமொழி;
உங்களவர் பேசும்போது – குறுக்கிட்டுப் பேசக்கூடாது. அவர் கருத்துக்களை மறுத்துப் பேசிடக்கூடாது. பேச்சைத் திசைத் திருப்பிடக் கூடாது.
உங்களவர் உங்களிடம் பகிர்ந்து கொள்ள எடுத்துக் கொள்ளும் விஷயம் உங்களுக்கு “அற்பமானதாக” இருக்கலாம்! ஆனால் அதனை அப்படியே அலட்சியப் படுத்தி விடக்கூடாது. “இதற்குப்போய் ஏன் அலட்டிக் கொள்கிறார் இவர்?” – என்று எண்ணி விடக் கூடாது.
மாறாக – அந்தச் சின்ன விஷயம் உங்கள் துணையை எப்படிப் பாதித்திருக்கின்றது என்பதையே நீங்கள் கவனித்திட வேண்டும்.
உங்களவருடைய உணர்வுகளை உதாசீனம் செய்திடக் கூடாது. அவர் நிலையில் உங்களை வைத்து (empathy) – அவர் தம் மன நிலையைப் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்.
உங்களவரின் முக பாவனை, பேச்சின் தொனி, கண்கள் சொல்லும் சேதி, உடல் மொழி (body language) – அனைத்தையும் உற்று கவனித்திட வேண்டும். அவருடைய உணர்வுகளுக்கு நீங்கள் மதிப்பளிப்பதை அவர் உணரச் செய்திட வேண்டும்.
இவ்வாறு தொடர்ந்து செய்திட்டால் – உங்கள் துணையின் உள் மனத்து உணர்வுகளை நீங்கள் துல்லியமாகக் கணித்திட முடியும். அதற்குத் தக நடந்து கொள்ளவும் முடியும்.
உங்களுக்குள் காதலை வளர்த்திடவும், நம்பிக்கையை (trust) உருவாக்கிடவும், உறவை சிறக்க வைத்திடவும் – இதுவே மிகச் சிறந்த வழியாகும்!
அடுத்து ஒரு சூழ்நிலையை முன் வைத்து இதனை மேலும் விளக்குவோம்.
No comments:
Post a Comment