Thursday, December 19, 2013

பாலுறவு குறித்து மனம் திறந்து பேசுங்கள்!

அன்னை ஆயிஷா ரலி அவர்கள் ஒரு மிகச் சிறந்த அறிவாளி! Super Intellect! நபி ஸல் அவர்கள் ஆயிஷா ரலி அவர்களை மிகவும் நேசித்ததற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். நபியவர்கள் ஒரு முறை சொன்னார்கள்:

“ஆயிஷாவின் படுக்கையில் (நான் இருக்கும் போதே தவிர) வேறெந்த மனைவியின் படுக்கையிலும் வஹீ (வேத வெளிப்பாடு) எனக்கு வருவதில்லை….” (புகாரி)

அன்னை ஆயிஷா ரலி அவர்கள் வடிகட்டிப் பேசுவதில் வல்லவர்கள். எதைப் பேச வேண்டும்; எதனை மறைத்து விட வேண்டும். எதனை சூசகமாக உணர்த்திட வேண்டும் என்பதில் கை தேர்ந்தவர்கள்.




இரண்டு சான்றுகள்:

ஓன்று:

ஒரு நீண்ட நபிமொழியில் இவ்வாறு வருகிறது:

“…..ஆகவே, அவர்கள் (தம் சார்பாக) ஸைனப் பின்த்து ஜஹ்ஷ் அவர்களை அனுப்பி வைத்தார்கள். அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, (சற்று) கடுமையாகப் பேசி, உங்கள் மனைவிமார்கள் – அபூபக்ருடைய மகளான ஆயிஷாவின் விஷயத்தில் தாங்கள் நடந்து கொள்வது போன்றே பிற மனைவிமார்களிடமும் நீதியுடன் நடந்து கொள்ளும்படி அல்லாஹ்வின் பெயரால் உங்களிடம் கேட்கின்றார்கள் என்று கூறினார்கள்.

நான் (ஆயிஷா) அமர்ந்து கொண்டிருக்க, அவரது குரல் உயர்ந்தது. அவர் என்னைக் குறை கூறித் திட்டினார். எந்த அளவுக்கென்றால், அல்லாஹ்வின் தூதர் நான் பதில் பேசுவேனா என்று எதிர்பார்ப்பது போல் என்னையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். உடனே, நான் ஸைனபுக்கு பதில் சொல்லி, இறுதியில் அவரை வாயடைக்கச் செய்து விட்டேன். நபி (ஸல்) அவர்கள் என்னைப் பார்த்து, இவள் (உண்மையிலேயே) அபூபக்ருடைய மகள் தான் என்று கூறினார்கள். (புகாரி)

ஆயிஷா அவர்கள் ஸைனப் பின்த்து ஜஹ்ஷ் அவர்களிடம் எப்படிப் பேசினார்கள்? என்ன சொன்னார்கள், எப்படி வாயடைக்கச் செய்தார்கள் – என்பதையெல்லாம் வெளிப்படையாகப் பேசாமல் மறைத்து விட்டார்கள் பார்த்தீர்களா?

இரண்டு:

இன்னொரு நீண்ட நபிமொழியின் ஒரு பகுதி இது:

அபூ பக்ர்(ரலி) (என்னருகே) வந்தபோது நபி(ஸல்) அவர்கள் தங்களின் தலையை என்னுடைய மடி மீது வைத்துத் தூங்கிக் கொண்டிருந்தார்கள். ‘நபி(ஸல்) அவர்களையும் மக்களையும் தங்க வைத்துவிட்டாயே? அவர்கள் தங்கிய இடத்திலும் தண்ணீர் இல்லை; அவர்களிடமும் தண்ணீர் இல்லை’ என்று கூறினார்கள். அவர்கள் எதைச் சொல்ல அல்லாஹ் நாடினானோ அதையெல்லாம் சொல்லிவிட்டு, தங்களின் கையால் என்னுடைய இடுப்பில் குத்தினார்கள்.(புகாரி)

அபூபக்ர் அவர்கள் அன்னை ஆயிஷாவை எப்படியெல்லாம் விமர்சித்தார்கள் என்பதை வெளிப்படையாகச் சொல்லாமல் – “அவர்கள் எதைச் சொல்ல அல்லாஹ் நாடினானோ அதையெல்லாம் சொல்லிவிட்டு” – என்கிறார்கள். எவ்வளவு அறிவு நுட்பம் பார்த்தீர்களா?

ஆனால் – அதே அன்னை ஆயிஷா அவர்கள் அண்ணலாருடன் தனது பாலுறவு வாழ்க்கையை பற்றிய குறிப்புகளை ஏன் மறைக்காமல் இந்த உம்மத்துக்கு வெளிப்படுத்திக் காட்டினார்கள் என்பது நாம் அனைவரும் சிந்திக்க வேண்டிய விஷயம்.

பின் வரும் நபிமொழிகளைக் கவனியுங்கள்:

அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அறிவிக்கிறார்கள்: “அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தம் மனைவியர்களில் ஒருவரை முத்தமிட்டுவிட்டு, ஒளூச்செய்யாமலே தொழச் சென்றார்கள். (ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடமிருந்து அறிவிக்கும்) உர்வா கூறுகிறார், “நான் ஆயிஷாவிடம் ‘அது நீங்களாகத்தான் இருக்கும்?’ என்றேன். அதற்கு அவர்கள் புன்னகைத்தார்கள்:.” (ஆதாரம் ஸுனன் திர்மிதீ, ஸுனன் அபூதாவூத்)

தன் கணவர் தன்னை முத்தமிட்டதை மறைமுகமாக ஏன் அறிவிக்கின்றார்கள்? உர்வா அவர்களும் விடாமல் அது அன்னை ஆயிஷா அவர்கள் தாம் என்பதை விளக்க வைத்து விட்டார்களே!

நபி அவர்கள் நோன்பு நோற்ற நிலையில் (தம் மனைவியை) முத்தமிடுவார்கள். மேலும், நோன்பு நோற்ற நிலையில் கட்டியணைப்பார்கள். ஆனால், அவர்கள் தம் இச்சையைக் கட்டுப்படுத்திக் கொள்ளும் சக்தியுடையவராக இருந்தார்கள் என, ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார்கள். புகாரி, முஸ்லிம்

நானும் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும்-எனக்கும் அவர்களுக்கும் இடையில் உள்ள ஒரு பாத்திரத்திலிருந்து குளிக்கக் கூடியவர்களாக இருந்தோம். எனக்காக கொஞ்சம் தண்ணீரை விட்டு வையுங்கள் எனக்காக கொஞ்சம் விட்டு (தண்ணீரை) வையுங்கள் என நான் கூறுகின்ற வரை அவர்கள் என்னை முந்திக் கொள்வார்கள் என ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறியதாக மூஆதா ரளியல்லாஹு அன்ஹா அறிவிக்கிறார்கள். அவ்விருவரும் கடமையாகக் குளிக்க வேண்டியவர்களாக இருந்தனர் எனவும் கூறுகிறார்கள்.

நான் மாதவிடாய் வந்த நிலையில் (ஒரு பாத்திரத்தில்) பருகிவிட்டு பிறகு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அப்பாத்திரத்தைக் கொடுப்பேன். நான் எங்கு வாய் வைத்தேனா அதே இடத்தில் தங்களது வாயை வைத்து குடிப்பார்கள். எலும்புடன் ஒட்டியிருக்கும் இறைச்சியை நான் கடித்துவிட்டு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கொடுப்பேன். நான் எங்கு வாய் வைத்திருந்தேனோ அங்கேயே வாயை வைப்பார்கள் என ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறுகிறார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா (முஸ்லிம்)

அன்னை ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்களிடம் ‘அதா’வு என்பவர் கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா என்று நேரடியாக கேட்ட போது, பார்ப்பதற்கு அனுமதி உள்ளதாக சூசகமாக உணர்த்தினார்கள் என்ற ஹதீஸ் இப்னு ஹப்பானில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அண்ணலார் அவர்கள் – தம்மை முத்தமிடுவது பற்றி, கட்டியணைத்துக் கொள்வது பற்றி, உடலுறவு கொள்வது பற்றி, குளிப்பது பற்றி, மாத விலக்கு நேரத்தில் நபியவர்களின் செயல்கள் பற்றியெல்லாம் ஏன் அவர்கள் வெளிப்படையாகப் பேசிட வேண்டும். இவை அனைத்தும் அவர்களது தனிப்பட்ட “இல்லற விஷயங்கள்” என்று மூடி மறைத்திருக்கலாமே? ஆனால் அப்படி செய்யவில்லை! அதற்குக் காரணம் இருக்கின்றது!

இந்த உம்மத் – பாலுறவு குறித்து அலட்சியம் செய்து விடக்கூடாது என்பதே அதற்கான வலுவான காரணமாக இருக்க முடியும்.

ஆனால் நமது நிலை என்ன? பாலுறவு குறித்து வெளிப்படையாகப் பேசிட நமக்கு மிகப்பெரிய தயக்கங்கள் உண்டு!

நமது இறையச்சம் தான் இதற்குக் காரணமா என்றால் நிச்சயமாக இல்லை! நாம் ஒன்றும் நமது அன்னையர்களை விட இறையச்சம் உடையவர்களா என்ன?

அடுத்து நமது வெட்க உணர்ச்சி தான் காரணமா என்றால் – அதனை நாம் உடைத்துத் தான் ஆக வேண்டும்.

“பெண்களில் அன்ஸார்களின் பெண்களே நல்லவர்கள். அவர்கள் மார்க்கத்தைக் கேட்டு தெளிவு பெறுவதிலிருந்து அவர்களது வெட்கம் அவர்களை தடுக்கவில்லை” என ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

அல்லது – சொல்லித்தெரிவது அல்ல இந்தக் கலை – என்ற அலட்சியமா என்றால் – ஆம்! அந்த அலட்சியம் தான்!

ஆனால் இந்த அலட்சியம் தான் நமது சமூகத்தின் கணவன் மனைவியர் உறவுகளை மிகுந்த அளவுக்கு பாதித்திருக்கின்றது! இதனை நாம் உணர்ந்து தான் ஆக வேண்டும்.

நாம் ஒன்றும் பாலியல் கல்வியை “சொற்பொழிவு மன்றங்களில்” ஒலிபெருக்கி வைத்து பரப்புங்கள் என்று சொல்லவில்லை! அது தேவையும் இல்லை. நாம் சொல்ல வருவது – இது குறித்த “கல்வியறிவை” மஸ்ஜித்களில் வைத்து நமது இளைய சமூகத்துக்கு ஊட்டுங்கள் என்பது தான்.

இதன் அடுத்த கட்டம் தான் – கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் தங்களின் பாலுறவுத் தேவைகள் குறித்து மனம் திறந்துப் பேசிட வேண்டிய கட்டமாகும். கணவனும் தன் தேவைகளை மனைவியிடம் பேசிட வேண்டும். மனைவியும் கணவனிடத்தில் பேசிட வேண்டும். இதுவே நாம் நமது இளைய தலைமுறை கணவன்மார்களுக்கும், மனைவியருக்கும் வலியுறுத்திச் சொல்வதாகும்.

இது விஷயத்தில் – பெண்கள் தயங்குவதற்குக் காரணம் இருக்கிறது. அது அவர்களின் இயல்பான வெட்க உணர்ச்சி. இந்த வெட்கத்தையும் கணவன்மார்களே உடைத்தெறிந்திட வேண்டும். இதனை நாம் வலியுறுத்துவதற்குக் காரணம் – மனைவியின் பாலுறவுத் தேவைகள் சரிவர நிறைவேறாத நிலையில் தமது அளவுக்கு மீறிய வெட்க உணர்ச்சியினால் அது குறித்துக் கணவனிடம் பேசத் தயங்கியதால் ஏற்பட்ட விளைவுகள் என்ன?

மண முறிவு! அல்லது திருப்தியற்ற இல்லற வாழ்க்கை! அல்லது கணவனுக்கே துரோகம்!

ஆனால் இன்றைய பெண்களோ – இந்த விஷயத்தை வெளியே கொண்டு வரத் தொடங்கி விட்டார்கள். அவர்கள் பெண் கவுன்ஸலர்களை அணுகுகிறார்கள். ஒரு இஸ்லாமியப் பெண் அறிஞரே இது குறித்து விரிவாக – குறிப்பாக இளைஞர்களுக்கு பாலியல் அறிவுரைகளை விரிவாகவும் வெளிப்படையாகவும் எழுதியிருக்கிறார்கள். அவர் பெயர்: ருகையா வாரிஃத் மக்ஸூத் அவர்கள்.

விழித்துக் கொள்ள வேண்டியது இளைய ஆண் வர்க்கமே!

குறிப்பாக நாம் இங்கே கணவன்மார்களுக்கு வலியுறுத்தும் பாலுறவுப் பாடங்கள்:

1. முத்தமிடுங்கள் – உங்கள் மனைவியை! அடிக்கடி முத்தமிடுங்கள்! எத்தனை ஆண்டுகள் ஆனாலும் முத்தமிடுங்கள்! ஒரு ஐந்து வினாடியாவது தொடரட்டும் உங்கள் முத்தம்.

2. முன் விளையாட்டு இன்றி பாலுறவு வேண்டாம்! முத்தமும் இன்சொற்களும் – பாலுறவுக்கு முன் மிக அவசியம். முன் விளையாட்டின் மூலமே மனைவி நனைகிறார் (becoming wet). பாலுறவுக்குத் தயாராகிறார். முன் விளையாட்டு இன்றி பாலுறவைத் துவக்கினால் – மனைவியருக்கு அது சிரமம் ஆகி விடும். மேலும் மனைவியின் தேவை நிறைவேற்றபடாமலேயே கணவன் தன் தேவையை முடித்துக் கொண்டு விடுவான். எச்சரிக்கை!

3. நேரம் வாய்க்கும்போதெல்லாம் – மனைவியைக் கட்டிப்பிடித்துக் கொள்ளுங்கள். – அது சமையல் அறையாக இருந்தாலும் சரியே! தனிமை கிடைக்கும்போதெல்லாம் கட்டியணைத்துக் கொஞ்சுங்கள்!

4. பாலுறவில் உங்கள் துணைக்கு என்னென்னவெல்லாம் பிடிக்கும் என்பதை வெளிப்படையாகப் பேசித்தெரிந்து கொள்ளுங்கள். தயக்கம் வேண்டாம் என்று உங்கள் துணையை ஊக்கப் படுத்துங்கள்.

5. நான்கு மாதங்களுக்கு மேலாக உங்கள் மனைவியைப் பிரிந்து செல்ல வேண்டாம்! அது எவ்வளவு பெரிய வேலையாக இருந்தாலும் சரி! ஷரீஅத்தில் அதற்கு இடமில்லை!

6. சந்தேகங்களை – உடனுக்குடன் மார்க்க அறிஞர்கள் அல்லது திருமண ஆலோசகர்களை அணுகி – விளக்கம் பெற்றுக் கொள்ளுங்கள். பாலுறவு குறித்து பல தவறான “நம்பிக்கைகள்” குறிப்பாக கணவன்மார்களிடத்தில் உண்டு. இவை களையப்பட வேண்டும்.

7. ஆண்மைக்குறைவை ஏற்படுத்தும் உணவுப்பழக்கங்களைக் கை விடுங்கள். குறை ஏற்படின் தகுந்த மருத்துவரை மட்டும் அணுகுங்கள்.

8. உடலை எப்போதும் தூய்மையாக வைத்துக் கொள்ளுங்கள். மனைவியர் தம் கணவன்மார்களுக்காகத் தங்களை அலங்கரித்துக் கொள்ளுங்கள். எத்தனை வயதானாலும் சரியே! அலட்சியம் வேண்டாம்.

9. படுக்கையறையில் விவாதங்கள் வேண்டாம்! ஒரே ஒரு மிகச்சிறிய சொல் கூட ஒரு இரவையே வீணாக்கி விடும்.

10. பாலுறவு – உங்கள் இல்லறத்தின் பிரிக்க முடியாத ஒரு அங்கம் என்பதை எப்போதும் மறந்து விட வேண்டாம்.

11. அனைத்து விஷயங்களிலும் கணவன் மனைவி இருவரும் நெருக்கமான நண்பர்களாக வாழுங்கள். ஏனெனில் – பாலுறவு என்பது – இரண்டு உடல்கள் சேர்வது மட்டும் அல்ல! இரண்டு இதயங்களும் சேர்வது தான்!

No comments:

Post a Comment