Thursday, December 19, 2013

கணவன் மனைவியருக்குள் அசைக்க முடியாத நம்பிக்கை! எவ்வாறு?

உங்கள் துணையைப் பற்றிய சந்தேகம் துளிர் விடத் தொடங்கியுள்ளதா?

என் துணையை நான் இனியும் நம்புவதா? நான் ஏமாற்றப் படுகின்றேனா? அல்லது என் சந்தேகம் வீணான கற்பனையா? அதனை நான் எப்படி உறுதிப் படுத்திக் கொள்வது? – என்றெல்லாம் – கவலை உங்களை வாட்டிக் கொண்டிருக்கின்றதா? உங்களுக்காகவே இந்தக் கட்டுரை.



பொதுவாகவே – கணவன் தன் மனைவியையும், மனைவி தன் கணவனையும் மேலோட்டமாக சந்தேகப் பட்டுக் கொள்வது என்பது அரிதான ஒன்று கிடையாது! இந்த மேலோட்டமான சந்தேகம் என்பது பெரும்பாலான கணவன் மனைவியருக்கு ஏற்படுகின்ற ஒன்றுதான்!

ஆனால் கணவன் மனைவியருக்குள் உண்மையிலேயே சந்தேகம் எனும் பேய் ஒன்று வந்து புகுந்து கொண்டு விட்டால் அவ்வளவு தான்! கவலை வந்து விடும்! நிம்மதி குலைந்து விடும். தூக்கம் வராது. விளைவு? தொடர்ந்த மன அழுத்தம்!

கணவன் மனைவியரின் நம்பகத் தன்மை குறைந்து விடுவதால் என்ன விளைவுகள் ஏற்படுகின்றன என்பதைப் பார்ப்போம் முதலில்.

கணவன் மனைவியர் சந்தேகம் – உடல் நலத்தையும் கெடுக்கின்றது! மன நலத்தையும் கெடுக்கின்றது. சந்தேக விதை மட்டும் விதைக்கப் பட்டு விடும்போது ஏற்படுகின்ற மன அழுத்தம் – ஒரு தொடர்கதையானால் அது நமது மூளையில் ஏற்படுத்தும் பாதிப்பு லேசானதல்ல!

ஹார்மோன்கள், இதயம், இதய நாளங்கள், நரம்பு மண்டலம் அனைத்தையும் பாதிப்புக்குள்ளாக்கி விடுகிறது இந்த மன அழுத்தம். வாழ்நாள் அருகி விடுகிறது அவர்களுக்கு.

அதே நேரத்தில் இன்னொரு உண்மையையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். நம்பிக்கைக்குரிய கணவன் மனைவியர் – உடல் நலமும் பாதுகாக்கப்படுகிறது; மன நலமும் பாதுகாக்கப்படுகிறது என்பது தான் அது. நீண்ட நாள் வாழ்கிறார்கள் அவர்கள் – அதுவும் மகிழ்ச்சியுடன்.

எனவே நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவெனில் – என் துணையின் நம்பிக்கையை நான் பெறுவது எப்படி? நம்பிக்கை மோசம் எப்படி உருவாகிறது? அப்படி ஒன்று உருவானால் அதனை முளையிலேயே கிள்ளி எறிவது எப்படி? – ஆகியவற்றைத்தான்!

நல்ல செய்தி என்னவென்றால் – தன்னை ஏமாற்ற நினைக்கின்ற துணையைத் திருத்தி நம் வழிக்குக் கொண்டு வந்திட நிறைய வழிகள் இருக்கின்றன என்பது தான்!

பொதுவான பட்டியல் ஒன்றை இங்கே முன் வைக்கிறோம். பின்னர் தனித்தனியே ஒவ்வொன்றாக விரிவாகப் பார்ப்போம்.

ஒன்று: நிறையப் பேசிட வேண்டும். மனம் திறந்து பேசிட வேண்டும். பேசுவதைக் காது மட்டும் அல்ல – இதயத்தையும் கொடுத்துக் கேட்டிட வேண்டும். கருத்து வேறுபாடுகள் வரும்போது கூட நம் துணையின் கண்ணோட்டம் என்ன என்பதை– தெளிவான முக பாவத்துடனேயே – கேட்கத் தயாராக இருக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் பேச்சு (communication) தடைபடக்கூடவே கூடாது.

இரண்டு: ஒருவரை ஒருவர் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். நம் துணை எப்படிப்பட்டவர்? நம் துணையின் விருப்பங்கள் என்னென்ன? அவரது கவலைகள் என்ன? அவரது எதிர்காலத் திட்டங்கள் என்ன? அவர் எதனை சாதிக்க விரும்புகிறார்? அவருக்கு மகிழ்ச்சி அளிக்கக் கூடிய விஷயங்கள் என்னென்ன? பாலுறவு விஷயம் உட்பட! எல்லாவற்றையும் தெரிந்து கொள்வது அவசியம்.

மூன்று: உங்கள் துணையின் சிறப்புகளை நீங்களும் அங்கீகரிக்க வேண்டும். பாராட்ட வேண்டும். ஊரே பாராட்டும் உங்கள் துணையை! ஆனால் நீங்கள் பாராட்டா விட்டால்? இதற்கு நேர் மாற்றமாக – “என்ன இதுவெல்லாம் ஒரு பெரிய்ய விஷயமா?” – என்றாலோ அல்லது ஊருக்கு என்ன தெரியும் உங்களைப்பற்றி எனக்கல்லவா தெரியும் உங்கள் வண்டவாளம் என்று தனது துணையின் குறைகளை நேரடியாக – அவமானப் படுத்தும் விதமாக – பேசினால் நம்பகத்தன்மை பறிபோய் விடும்!

நான்கு: உங்கள் துணைக்குச் செய்திட வேண்டிய “கடமைகளை” நிறைவேற்றினால் மட்டும் போதாது. “வீடு கொடுத்தேன்; உணவு கொடுத்தேன்; உடை கொடுத்தேன்; அப்புறம் செக்ஸ் – வேறென்ன வேண்டும்?” என்று கணவனோ, “சமைத்துப் போட்டேன்; பிள்ளைகளைக் கவனித்துக் கோண்டேன்; செக்ஸும் கொடுத்தாகி விட்டது – வேறென்ன? என்று மனைவியோ – சொல்வது அபத்தம்! சின்னச் சின்ன ஆசைகள் ஒவ்வொரு கணவனுக்கும் உண்டு! மனைவிக்கும் உண்டு! அன்றாடம் உண்டு! துணையின் ஒவ்வொரு ஆசையையும் தெரிந்து வைத்துக் கொண்டு – அதனை இருவரும் போட்டி போட்டுக் கொண்டு நிறைவேற்றுவதில் ஆர்வம் காட்டிட வேண்டும். அதுவும் அன்றாடம்!

ஐந்து: கருத்து வேறுபாடுகள் தலை தூக்கும் தான்! அதனை எப்படிக் கையாள்வது என்று அறிந்து கொள்வது ஒரு புறம் இருக்கட்டும். எப்படியெல்லாம் கையாளக் கூடாது என்பதனை ஒவ்வொரு கணவனும் மனைவியும் தெள்ளத்தெளிவாக புரிந்து வைத்திருக்க வேண்டும். கடுமையான திட்டல்கள் கூடாது (harse criticism); அவமானப்படுத்தும் சொற்கள் கூடவே கூடாது; பேசிப் பயனில்லை என்று பேசாமல் ஒதுங்கி விடவும் கூடாது! நேரம் காலம் பார்த்து – பொறுமையைக் கையாண்டு, சொற்களைத் தேர்வு செய்து பேசி, உங்கள் துணையின் நிலையில் உங்களை வைத்து சிந்தித்து, விட்டுக் கொடுக்க வேண்டியவற்றை விட்டுக் கொடுத்து – நகைச்சுவை உணர்வுடன் ஒரு முடிவுக்கு வருவதே சாலச் சிறந்தது!

இவைகளையெல்லாம் உளவியல் அறிஞர்கள் ஒரு பக்கம் அழுத்தி அழுத்திச் சொல்லிக் கொண்டிருந்தாலும் – வருத்ததுடன் ஒன்றை நாம் சொல்ல வேண்டியுள்ளது:

மருத்துவம் படித்தோம், பொறியியல் படித்தோம். வணிகம் படித்தோம். நம் பிள்ளைகளை படிக்க வைக்கிறோம். அடுத்த தலைமுறையையும் படிக்க வைப்போம். ஆனால் கணவன் மனைவியாக மகிழ்ச்சியாக இல்லறம் நடத்துவது எப்படி என்று படித்துக் கொடுக்காமலேயே – பொருள் பார்த்து, அழகு பார்த்து, “படிப்பையும்” பார்த்து – திருமணம் செய்து கொடுத்து விடுவோம். கஷ்டப் படுவோம்.

நிலைமை எப்போது மாறும்?

No comments:

Post a Comment