Friday, December 20, 2013

எதற்கெடுத்தாலும் அவசரப்படுகிறார்களா குழந்தைகள்?


ஏதாவது ஒன்றை அடைந்திட வேண்டும் என்று மனம் விரும்புகிறது! அந்த ஒன்றை உடனேயே அடைந்திடத் துடிக்கும் தன்மைக்குப் பெயர் தான் மனத் தூண்டல்!

மனத்தூண்டலை ஆங்கிலத்தில் Impulse என்றும் அதனைக் கட்டுப் படுத்துவதை Impulse control என்றும் அழைக்கிறார்கள். பின்விளைவைப் பற்றி யோசிக்காமல் ஒன்றை செய்து விடுவதைத் தான் ஆங்கிலத்தில் Impulsiveness என்று குறிப்பிடுகின்றார்கள்.


குழந்தைகள் இயல்பிலேயே இப்படிப்பட்ட மனத்தூண்டலுக்கு ஆளாகக்கூடியவர்கள் தான்! இந்த அவசரப்படும் தன்மை – குழந்தைக்குக் குழந்தை வேறுபடும்! பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் அவசரப்படும் தன்மை எத்தகையது என்பதைத் தெரிந்து கொள்தல் நல்லது.

மனத்தூண்டலுக்கு ஆளாகி அவசரப்பட்டு ஒன்றை உடனேயே அடைந்திடத் துடிக்கின்ற தன்மை – உங்கள் குழந்தைகளின் வளர்ச்சிக்கு உகந்ததல்ல! இத்தன்மை கட்டுப்படுத்தப் பட்டாக வேண்டும். ஏனெனில் மனதூண்டலின் படி செயல் படும் குழந்தைகளுக்கு தன்னம்பிக்கை சுத்தமாக இருக்காது. தான் எதற்கும் இலாயக்கில்லை என்ற தாழ்வு மனப்பான்மை தவறாது குடி கொண்டிருக்கும். எனவே மற்றவர் மீது இத்தகைய குழந்தைகள் பொறாமைப்படுவார்கள். இத்தகையவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுவது மிக மிகக் கடினம்!

மனக்கட்டுப்பாடு இல்லாத குழந்தைகள் – கல்வியிலும் பின் தங்கி நிற்கிறார்கள் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும் – இவர்கள் வளர்ந்து ஆளானதும் – வன்முறையாளர்களாக மாறுவதற்குக் காரணமே மனக் கட்டுப்பாடு இல்லாமல் போனது தான் என்றும் ஆய்வாளர்கள் கணக்கெடுத்துச் சொல்கிறார்கள்.

மனக் கட்டுப்பாடு மிக்க குழந்தைகள் துணிச்சல் மிக்கவர்களாக விளங்குவார்கள். எடுத்த காரியத்தை முடித்துக் காட்டுவார்கள். மற்றவர்களுடன் இனிமையாகப் பழகுவார்கள். இவர்களே வெற்றியாளர்கள். எனவே குழந்தைகளுக்கான மனக் கட்டுப்பாட்டுப் பயிற்சியினை குழந்தைப் பருவத்திலேயே தொடங்கி தொடர்ந்திட வேண்டியது அவசியமான ஒன்று. இதில், பெற்றோருக்கும், பள்ளிக்கூட ஆசிரியர்களுக்கும் பெரும் பொறுப்பு இருக்கின்றது. மனத்தைக் கட்டுப்படுத்தும் பயிற்சிகளை துவக்கப் பள்ளியிலேயே வைத்து அளித்திட வேண்டும் என்கிறார்கள் உளவியல் வல்லுனர்கள்.

குழந்தைகளின் மனதூண்டலைக் கட்டுப்படுத்த சில வழிமுறைகள்:

1. முதலில் பெற்றோர்கள் – தங்களை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். தாங்களே – குழந்தைகளுக்கு முன்மாதிரியாக – எவ்வித மனத்தூண்டலுக்கும் ஆளாகாதவர்களாக விளங்கிட முயற்சிக்க வேண்டும். எந்த ஒரு காரியத்தையும் அவசரப்பட்டு அவசரப்பட்டு செய்திடாமல் எந்த ஒன்றையும் நிதானமாக செயல் படுத்துகின்ற சூழ்நிலை இல்லங்களில் நிலவிட வேண்டும். குழந்தைகளும் அவ்வாறே செயல்படக் கற்றுக் கொண்டு விடுவார்கள். வீடுகளை ஒழுங்கு படுத்தி வைத்தால் மட்டுமே எந்த ஒன்றையும் நிதானமாக செய்திட முடியும். இன்ன நேரத்தில் இதைச் செய்திட வேண்டும், இன்ன இடத்தில் இது இருந்திட வேண்டும் என்பன போன்ற கட்டுப்பாடுகள் மிக்க இல்லங்களில் தான் (organized family) குழந்தைகள் மிக இலகுவாக மனக்கட்டுப்பாட்டைக் கற்றுக் கொள்கிறார்கள்.

2. மனத்தூண்டலைக் கட்டுப் படுத்திட தொழுகை ஒரு பயிற்சியாகும். ஏழு வயதிலிருந்தே நாம் குழந்தைகளைத் தொழுகைக்குப் பழக்கப் படுத்தக் கூடியவர்களாக விளங்கினால், குழந்தைகள் “கட்டுப்பாடு” (disciplined) மிக்கவர்களாக விளங்குவார்கள். ஐந்து வேளை அனுதினமும் தொழுது வந்தால் – மனோ இச்சையைக் கட்டுக்குள் வைத்திருக்கலாம் என்பதை எளிதில் நம்மால் புரிந்து கொள்ள முடியும். மனக்கட்டுப்பாட்டிற்கான மிகச் சிறந்த பயிற்சி தொழுகையாகும்!

3. சில குழந்தைகள் மனத்தூண்டலுக்கு ஆட்பட்டு விட்டால் அடம் பிடிக்கத் தொடங்கி விடுவார்கள். தொண்டையில் சதை வளர்ந்திருக்கும். மருத்துவர் ஐஸ் போன்ற குளிர் பொருட்களைக் கொடுத்திட வேண்டாம் என்று கட்டுப்பாடு விதித்திருப்பார். ஆனால் குழந்தையோ, ” எனக்கு ஐஸ்கிரீம் வேண்டும், அதுவும் இப்போதே வேண்டும்” என்று அடம் பிடிக்கும். அப்போது பெற்றோர்கள் உறுதியுடன் நடந்து கொண்டிட வேண்டும். எப்போதெல்லாம் குழந்தைகள் இச்சைப்படி நடக்க முயற்சிக்கிறார்களோ – அப்போதே அதனைத் தடுத்திடுவதில் உறுதி காட்டிட வேண்டும்.

No comments:

Post a Comment