நமது வாழ்க்கைத்துணையின் உள் உணர்வுகளைப் புரிந்து கொள்தல் சிறப்பானதொரு இல்லற வாழ்க்கைக்கு மிக அவசியம்.
நமது துணை – கோபமாக இருக்கின்றாரா?
கவலையுடன் இருக்கின்றாரா?
அவர் மனம் புண்பட்டிருக்கின்றதா?
- என்பதையெல்லாம் மிகத்துல்லியமாகக் கணித்து விடுதல் – கணவன் – மனைவி உறவை மிக அழகாக்கி விடும்.
அழகான நபிமொழி ஒன்றை வைத்து இதனைப் புரிந்து கொள்வோம்.
அன்னை ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
என்னிடம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , ‘எப்போது நீ என்னைக் குறித்து திருப்தியுடன் இருக்கிறாய்; எப்போது நீ என் மீது கோபத்துடன் இருக்கிறாய் என்று (உன்னைப் பற்றி) நான் நன்றாக அறிந்து வைத்துள்ளேன்” என்று கூறினார்கள்.
அதற்கு நான், ‘எப்படி நீங்கள் அறிந்துகொள்வீர்கள்?’ என்று கேட்டேன்.
அதற்கவர்கள், ‘என்னைக் குறித்து நீ திருப்தியுடன் இருக்கும்போது (பேசினால்), ‘முஹம்மதுடைய அதிபதி மீது சத்தியமாக’ என்று கூறுவாய்!
என் மீது கோபமாய் இருந்தால், ‘இப்ராஹீம்(அலை) அவர்களின் அதிபதி மீது சத்தியமாக’ என்று கூறுவாய்” என்று கூறினார்கள்.
நான், ‘அல்லாஹ்வீன் மீதாணையாக! ஆம் (உண்மைதான்,) இறைத்தூதர் அவர்களே! நான் தங்களின் பெயரைத்தான் கோபித்துக் கொள்வேன். (தங்களின் மீதுன்று)” என்று கூறினேன். (புகாரி – 5228)
இது ஆழமாக சிந்தித்திட வேண்டிய ஒரு நபிமொழியாகும்.
இந்த ஹதீஸ் நமக்கு உணர்த்தும் பாடம் என்னவெனில் – கணவன்-மனைவியர் ஒவ்வொருவரும் – தம் துணையின் உள் மனத்து உணர்வுகளை மிகச்சரியாக புரிந்து வைத்திருக்க வேண்டும் என்பதுதான்!
இவ்வாறு புரிந்து கொள்வதை ஆங்கிலத்தில் attunement என்று சொல்கிறார்கள். தமிழில் “புரிந்துணர்வு” என்று சொல்லலாம்.
உணர்வுகளைப் புரிந்து கொள்வது தான் புரிந்துணர்வு!
நாம் இங்கே சொல்ல வருவது – உங்கள் கணவருக்குப் பிடித்த கலர் எது? உங்கள் மனைவிக்குப் பிடித்த உணவுப் பண்டம் எது? என்பன போன்ற சாதாரண விஷயங்கள் குறித்து அன்று.
நாம் இங்கே வலியுறுத்திச் சொல்ல வருவது – “உணர்வுகள்” சம்பந்தப்பட்ட ஒரு சூழலை – உங்கள் துணைவர் எவ்வாறு எதிர்கொள்வார்? அவர் எப்படி நடந்து கொள்வார் என்பது குறித்துத் தான்.
உணர்வு சம்பந்தப்பட்ட ஒரு குறிப்பிட்ட சூழலில் உங்கள் துணைவர் ஒன்றைப் பேசிட நினைக்கிறார். அவர் என்ன பேசுவார் என்பது உங்களால் ஊகித்து விட இயல வேண்டும்.
ஒரு விஷயம் உங்கள் துணையை எவ்வாறு பாதிக்கும் என்பதைத் தெளிவாகத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
ஒரு தோல்வியை அவர் எவ்வாறு எடுத்துக் கொள்வார்?
ஒருவரால் அவமானப்படுத்தப் படுவதை (hurt) எவ்வாறு எதிர்கொள்வார்?
எந்த விஷயங்கள் எல்லாம் அவரைக் கோபப்படுத்தும்? – இவை எல்லாம் உங்களுக்குத் தெள்ளெனத் தெரிந்து இருக்க வேண்டும்.
ஆனால் பெரும்பாலான கணவன் மனைவியருக்கு இப்படிப்பட்ட புரிதல் இல்லை என்பது கசப்பான ஒரு உண்மை.
கணவன் மனைவியருக்கு இடையே இப்படிப்பட்ட புரிந்துணர்வு இல்லாமல் போய் விட்டால் – அது அவர்களின் உறவில் விரிசலை நிச்சயம் ஏற்படுத்தும்!
சரி, அப்படியானால் ஒருவர் தன் துணையின் உள் மன உணர்வுகளை புரிந்து கொள்ள என்ன செய்திட வேண்டும்?
அடுத்து வரும் கட்டுரையில் பார்ப்போமே! – இன்ஷா அல்லாஹ்
No comments:
Post a Comment