Tuesday, May 13, 2014

உங்கள் மனைவி - குழந்தையையும் உங்களையும் சேர்த்தே கவனித்துக் கொள்கிறார்!!

சுன்னத்தான இல்லறம்: 

சென்ற பதிவில் "குழந்தை பிறந்த பிறகு ஏற்படும் சோகம்" (postpartum depression) - பற்றி எழுதியிருந்தோம்.  இப்படிப்பட்ட சோகத்துக்கு 67% இளம் பெற்றோர்கள் ஆளாகிறார்களாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.  

இந்த நிலைக்குக் காரணம் குழந்தையின் வருகை கணவன் மனைவியருக்குள் கொண்டு வந்திருக்கும் புதிய யதார்த்தத்தை அவர்கள் இருவருமே புரிந்து கொள்ளத் தவறி விடுவதால் தான்! எனவே  கணவன் மனைவி இருவருமே இந்தப் புதிய சூழ்நிலையை நன்கு புரிந்து கொண்டு பொறுப்புணர்ச்சியுடன் நடந்து கொள்ள வேண்டும். குறிப்பாக கணவன்மார்கள் சற்று அதிகமாகவே!

ஒரு உண்மையை கணவனும் மனைவியும் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்; அது என்னவெனில் - குழந்தை வந்ததற்குப் பிறகு - உங்கள் நேரம் என்பது உங்களுக்குச் சொந்தமானதே இல்லை என்பது தான்! குழந்தையின் கால அட்டவணை (time schedule) தான் உங்களுடையதும்.

குழந்தைக்கு அது பிறந்து ஒரு வருடம் ஆகும் வரை மிக முக்கியமான கால கட்டம் ஆகும். பெற்றவர்களிடமிருந்து அந்தக் குழந்தைக்குத் தேவை - நம்பகத்தன்மை (trust)!  இந்தக் கைக்குழந்தைப் பருவத்தில் குழந்தை என்ன உணர்வுகளுக்கு ஆளாகின்றதோ, எப்படிப்பட்ட உறவுகளை அது சந்திக்கின்றதோ - அதன் பாதிப்பு அக்குழந்தையின்  வாழ்நாள் முழுவதிலும் பிரதிபலிக்கின்றது. பெற்றோர்களிடம் அக்குழந்தை எப்படி நடந்து கொள்கிறதோ - முழுக்க முழுக்க அப்படியே தான் - அது மற்றவர்களிடமும் நடந்து கொள்ளும் எதிர்காலத்தில்!

இந்த யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளாத கணவன் மனைவியரே  ஒருவருக்கொருவர் பழியைத் தன் துணையின் மீதே போட்டு விடுகிறார்கள். குழந்தை வளர்ப்பில் ஒரு அலட்சியம் ஏற்படுகிறது. பெற்றவர்களுக்கு மனச்சோர்வு ஏற்பட்டால் அது குழந்தையை பாதிக்கிறது! பெற்றவர்கள் குழந்தைக்குத் தர வேண்டிய நேரத்தை சரியாக ஒதுக்குவதில்லை! குழந்தையின் மன வளர்ச்சி கேள்விக் குறியாகிறது.  

தாயிடம் மகிழ்ச்சி இல்லை என்றாலோ - குழந்தை ஒதுங்கிக் கொள்வதில்லை; ஆனால் தந்தை மகிழ்ச்சியாக இல்லை என்றால் - குழந்தை தந்தையிடமிருந்து ஒரேயடியாக விலகிக் கொண்டு விடுகிறது!

ஒரு சில விவேகமான தந்தையர் மட்டுமே - தங்கள் இல்லறத்தின் இந்த நுணுக்கமான சவாலை மிக நன்றாகக் கையாள்கின்றனர்.

இளந்தாய் புரிந்து கொள்ள வேண்டியது - "நடுநிலைமை!" அவர் தனது குழந்தையைக் கவனித்துக் கொள்ளும் அதே வேளையிலேயே - தன் துணையையும் கவனித்துக் கொள்ள வேண்டும் என்பது தான் அது.

இங்கே நாம் தந்தைமார்களுக்கு ஒன்று சொல்ல வேண்டியுள்ளது. அது - குழந்தை வளர்ப்பு என்பது - முழுக்க முழுக்க தாயின் பொறுப்பே என்று தனது பொறுப்பைத் தட்டிக் கழித்து விடுகின்றார்கள் பல தந்தையர்கள். இது சுன்னத்துக்கு மாற்றமானது!

குழந்தை வளர்ப்பில் தந்தைக்கும் மிகுந்த பொறுப்பு உண்டு என்பதைக் குறிக்கும் நபிமொழிகளை நாம் முன்பே பதிவு செய்துள்ளோம்.

இதில் ரகசியம் ஒன்று உண்டு: கணவன் குழந்தையைக் கவனித்துக் கொள்வதனால் ஏற்படும் நன்மை என்ன? தாய்க்குக் கொஞ்சம் அவகாசம் கிடைக்கிறது; தன்னை ஆசுவாசப் படுத்திக் கொள்கிறார் (she relaxes!) அந்த சமயங்களில். அந்த ஆசுவாசம் - அந்தத் தாயை சிறந்ததொரு தாயாகவும் ஆக்குகிறது; சிறந்ததொரு மனைவியாகவும் ஆக்கி விடுகிறது.

அதாவது நீங்கள் உங்கள் குழந்தையைக் கவனித்துக் கொள்கிறீர்கள்; உங்கள் மனைவி குழந்தையையும் உங்களையும் சேர்த்தே கவனித்துக் கொள்கிறார்!!  

ஆனால் பல தந்தையர்கள் செய்கின்ற மிகப்பெரிய தவறே - அவர்கள் குழந்தை வளர்ப்பிலிருந்து முற்றிலும் விலகிக் கொண்டு விடுவது தான்! அதாவது ஓடி ஒளிந்து கொள்கிறார்கள் பல இளம் தந்தையர்கள்!!

அதனை விடுத்து ஒரு கணவன்: குழந்தை வந்த பின் - என் மனைவியுடனான உறவை இன்னும் ஆழமாக ஆக்கிக் கொள்வது எப்படி என்று சிந்தித்திட வேண்டும். அதற்கு குழந்தை வளர்ப்பில் தனது பங்களிப்பை அளித்திடுவது ஒன்றே சரியான வழியாகும்!

குழந்தை வளர்ப்பிற்காக நான் எதனையும் அர்ப்பணிப்பேன் என்று சொல்லும் தந்தையரே - பொறுப்பு மிக்க தந்தையர் ஆவர்! அவர்கள் சோகத்தில் சிக்கிக் கொள்வதில்லை! மனைவியுடனான உறவில் சிக்கலை ஏற்படுத்திக் கொள்வதுமில்லை! குழந்தை வளர்ப்பில் எந்த ஒரு குறையையும் வைத்து விடுவதில்லை!

இளம் மனைவியருக்கும் சில ஆலோசனைகள்:

கணவருக்காக உங்களை அலங்கரித்துக் கொள்வதில் அலட்சியம் வேண்டாம். குழந்தை வளர்ப்பின் போது சில சங்கடங்கள் இருந்தாலும் - அலங்கரித்துக் கொள்ளத் தவறி விட வேண்டாம். உடல் தூய்மை மிக முக்கியம். மருத்துவரிடம் ஆலோசனை பெற்று உடற்பயிற்சி செய்து - அழகைத் தக்க வைத்துக்கொள்ளுங்கள்;

அவர் உங்களிடமிருந்து விலகிச் செல்வது உங்களை எப்படி வாட்டுகிறது என்பதை அவருக்கு உரிய முறையில் புரிய வைக்க வேண்டும். (register your feelings); ஆனால் பெரும்பாலான கணவன்மார்கள் மனைவியின் உணர்வுகளைப் புரிந்துகொள்வதில்லை! பொறுமை காட்டுங்கள்; அவர்கள் புரிந்து கொள்வார்கள்.

வாழ்த்துக்கள் - குழந்தை வந்த பின் சூழ்நிலை அறிந்து செயல்படும் இளம் பெற்றோர்கள் அனைவருக்கும்! 

No comments:

Post a Comment