Tuesday, May 13, 2014

ஒரு குழந்தையின் வருகைக்குப் பின்...

சுன்னத்தான இல்லறம்:

குழந்தை ஒன்று வீட்டுக்குள் வருவது மிகவும் குதூகலமான ஒரு நிகழ்வு தான். அந்த இளந்தாயும் தந்தையும் தங்களுக்கு புதிய பொறுப்புகள் வந்து விட்டதாக எண்ணத் தொடங்குகின்றனர். தாங்கள் சிறந்த பெற்றோர்களாக விளங்கிட வேண்டும் என்று எண்ணுகின்றனர். குழந்தைக்காக இருவரும் மனம் உவந்து சிரமங்களை ஏற்றுக் கொள்கிறார்கள்.


ஆனால் அந்த மகிழ்ச்சிக்கிடையே இன்னொன்றும் அரங்கேறி விடுகிறது பல இளம் பெற்றோர்களுக்கு. கணவன் மனைவியருக்கிடையே முன்பு இருந்த நெருக்கத்தில் இப்போது ஏற்படுகின்ற ஒரு நெருடல் தான் அது!

கணவன் மனைவி உறவில் குறிப்பிடத் தக்க மாற்றத்தை இப்போது காண முடியும்! அதாவது குழந்தை வருவதற்கு முன் அவர்கள் உறவின் தன்மை வேறு; குழந்தை வந்த பின் அவர்கள் உறவின் தன்மை வேறு!

குழந்தை ஒன்று பிறந்ததும் - மனைவி முற்றிலும் ஒரு தாயாக மாறி விடுகிறார். கைக்குழந்தைக்குத் தேவை - தாயின் தொடர்ந்த கவனம்! Frequent and Immediate Attention. இதனால் அந்த இளந்தாயின் தூக்கம் கெட்டுப் போகின்றது; சில நேரங்களில் எரிச்சல் ஒன்றும் சேர்ந்து கொள்கிறது! தாய் தன் குழந்தைக்கென அதிக கவனமும் நேரமும் தர வேண்டியிருப்பதால் - அவர் சோர்ந்து போய் விடுகிறார்.

அதனால் அவரால் தன் கணவனைக் கவனித்துக் கொள்ளவோ, கணவனின் உணர்வறிந்து செயல்படவோ  இயலாமல் போய் விடுகிறது. போதாக் குறைக்கு - குழந்தை பிறந்ததுமே - தாய்க்கு உதவி செய்திட அவரைச் சுற்றி ஒரு உறவு வட்டம் சூழ்ந்து கொள்வதையும் நாம் பார்க்கலாம்.

இவை அனைத்தையும் கணவன் (பாவமான அந்த இளந்தந்தை) சற்று தூரவே நின்று கவனிக்கத் தொடங்குகிறார். தாம் ஒதுக்கப்பட்டு விட்டோமோ என்ற அச்சம் மேலிட அவர்கள் தாங்களாகவே தாயிடமிருந்தும், குழந்தையிடமிருந்தும் ஒதுங்கிக் கொள்ளத் தொடங்கி விடுகின்றார்!

மனைவிக்கோ ஒரு ஆண்டு வரை மனைவியின் பாலுறவு ஆசை கணிசமாகக் குறைந்து விடுகிறது. பாலுறவின் எண்ணிக்கையும் கணிசமாகக் குறைந்து விடுகிறது. குறிப்பாக குழந்தைக்குத் தாய்ப்பால் ஊட்டும் காலமெல்லாம்!

கணவன் முகத்தை சோகத்துடன் வைத்துக் கொள்கிறார். புதிய சூழ்நிலையில் எவ்வாறு நடந்து கொள்வது என்று கணவனுக்குத் தெரிவதில்லை! சில நேரங்களில் மனைவியுடன் "விவாதம்" செய்து பார்க்கிறார். அது சண்டையாக மாறி விடுகிறது. சில சமயங்களில் சண்டையைத் தவிர்த்திட கணவன் வீட்டை வீட்டு வெளியே அதிக நேரம் செலவிடுகின்றார். இந்த கணவன் மனைவி சண்டை சச்சரவு என்பது - குழந்தை பிறந்த அந்த ஆண்டு முழுவதும் தொடர்கிறது.

கணவன் தன் சூழ்நிலையைப் புரிந்து கொள்ளவில்லையே என்று மனைவியையும் சோகம் தொற்றிக் கொள்கிறது!
இப்படிப்பட்ட சூழ்நிலை ஒன்று உருவாகும் என்று இதனை அவர்கள் இருவருமே எதிர்பார்த்திடவில்லை! புதிய சூழ்நிலையைப் புரிந்து கொள்ளாமல் தேவையில்லாமல் சண்டை போட்டுக் கொண்டு சோகத்தை வரவழைத்துக் கொள்கின்றார்கள்!

இதனை "குழந்தை பிறந்த பிறகு ஏற்படும் சோகம்" (postpartum depression) - என்று அழைக்கின்றார்கள். இது ஒரு மனச்சோர்வு ஆகும்!  அவர்கள் முன்பு போல் மகிழ்ச்சியாக வாழ்ந்திட இயலவில்லை! இதனை பல இளம் பெற்றோர்கள் அனுபவிக்கிறார்களாம்!

இந்த நிலைக்குக் காரணம் குழந்தையின் வருகை கணவன் மனைவியருக்குள் கொண்டு வந்திருக்கும் புதிய யதார்த்தத்தை அவர்கள் இருவருமே புரிந்து கொள்ளத் தவறி விடுவதால் தான்! .

இந்த சோகத்தின் விளைவுகள் என்னென்ன?

ஹார்மோன் சுரப்பதில் மாறுதல்கள்; தூங்கும் நேரங்களில் மாற்றம்; பசி உணர்ச்சியில் மாற்றம்; சோகமான தோற்றம்; எதிலும் மகிழ்ச்சியடைய முடியாத மன நிலை; தன்னையே நொந்து கொள்தல்; தண்டித்துக் கொள்தல்; குழந்தையையும் தண்டித்தல் - இவை எல்லாமே இந்த சோகத்தின் விளைவுகள் தான்!

இந்த சோகம் தாயுடன் நின்று விடுவதில்லை! அது குழந்தையையும் தொற்றிக் கொள்கிறது! ஏனெனில் சோகமான தாய் சோகமான குழந்தையையே உருவாக்குகிறார்!

இதோ ஒரு மோசமான சுழற்சி: கணவன் மனைவி சண்டையிட்டுக் கொள்கிறார்கள்; அது குழந்தைக்கு எரிச்சலைத் தருகிறது;  எனவே அது அழுகின்றது; இதனை வைத்து தாயும் தந்தையும் மேலும் சண்டையிட்டுக் கொள்கிறார்கள்! குழந்தை இப்போது மேலும் அதிகமாக அழுகின்றது! என்னவாகும் இந்தக் குழந்தை??

மன அழுத்தம் இருவரையும் வாட்டி வதைக்கும்; இளம் தந்தை செய்வதறியாது விழிப்பார்; ஆனால் இளந்தாய் அப்படியல்ல! அவர் தன் மன அழுத்தத்தில் இருந்து விரைவில் விடுபட்டு விடுகிறார்! காரணம் அவர் தாய்ப்பால் கொடுக்குபோது கூடவே சுரக்கின்ற ஆக்ஸிடோசின் (oxytocin) எனும் ஹார்மோன் தாய்மார்களை அமைதிப்படுத்தி விடுகிறது! இது ஒன்றே சற்று ஆறுதல் அந்தத் தாய்க்கு! சுப்ஹானல்லாஹ்!!  


தீர்வு என்ன?

இப்படிப்பட்ட இளம் பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டிய விஷயங்கள் என்னென்ன?

1 கணவன் மனைவி நல்லுறவைப் பேணுவது எப்படி?  
2 மன அழுத்தத்தை எதிர்கொள்வது எப்படி?  
3 கருத்து வேறுபாடுகளைத் தீர்த்துக் கொள்வது எப்படி?  
4 துணையின் மனச்சோர்வைப் போக்குவது எப்படி?  
5 குழந்தையின் மன நலத்தேவைகளை நிறைவேற்றித்தருவது எப்படி?
6 குழந்தை வளர்ப்பில் இருவருமே சேர்ந்து ஈடுபடுவது எப்படி?

சற்று விளக்கமாக இன்ஷா அல்லாஹ் அடுத்த பதிவில்.. ..

No comments:

Post a Comment