Monday, May 19, 2014

முதன் முதலாக உங்கள் மனைவியின் பெற்றோர் வீட்டுக்குச் செல்கிறீர்களா?


திருமணம் ஆனவுடன் உங்கள் மனைவியின் பெற்றோர் வீட்டுக்கு முதன் முதலாக நீங்கள் செல்கிறீர்கள். அங்கே நீங்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?


அங்கே உங்கள் மனைவியின் உறவினர்கள் உங்களுக்கு அறிமுகம் செய்து வைக்கப்படுவார்கள். அனைவருக்கும் உங்கள் புன்சிரிப்பு உரித்தாகட்டும்!

இயன்றவரை அவர்களது பெயர்களையும், உங்கள் மனைவிக்கு அவர்கள் என்ன உறவு என்பதையும் நினைவில் வையுங்கள்.

அவர்களிடம் பேசும்போது முகம் பார்த்துப் பேசுங்கள். செவி தாழ்த்திக் கேளுங்கள். பொதுவாகக் குறைவாகவே பேசுங்கள் அவர்களிடம்.

அங்கே உங்களுடைய தேவைகளைக் குறைத்துக் கொள்ளுங்கள். அங்கே போய் அது வேண்டும், இது வேண்டும் என்று கேட்டு அவர்களைச் சிரமப்படுத்தாதீர்கள்.

பெண்கள் இருக்கும் பகுதிக்கு அறவே செல்லாதீர்கள். அவர்களில் யாரேனும் வந்து உங்களிடம் பேச்சுக் கொடுத்தாலும் சற்று தூரத்திலேயே நின்று பேசுங்கள்.

கேள்விகளுக்கு பதில்களைச் சுருக்கமாக ஓரிரு வார்த்தைகளில் முடித்துக் கொள்ளுங்கள்.
தேவையற்ற பேச்சுக்களை நாகரிகமாகத் தவிர்த்து விடுங்கள்.

அங்கே குழந்தைகள் இருப்பார்கள். உங்களை சூழ்ந்து கொள்வார்கள். பாசத்துடன் அவர்களுடன் நடந்து கொள்ளுங்கள்.

அதே நேரத்தில் நேரம் அறிந்து அவர்களுக்கு நடந்திடத் தெரியாது. கடுகடுப்பான முகம் காட்ட வேண்டாம். அவர்கள் யாரையும் திட்டவும் வேண்டாம்.

அங்கு நடக்கும் எல்லாவற்றையும் உடனுக்குடன் விமர்சிக்காதீர்கள்.

மார்க்க விஷயத்தில் கூட உங்களுக்குப் பிடிக்காத ஏதாவது ஒன்று அங்கே நடந்தால் கூட சற்றே பொறுமை காக்கவும். பின்னர் பார்த்துக் கொள்ளலாம்.

உங்கள் வீட்டில் உள்ள வசதிகளில் சில அங்கே உங்களுக்கு இல்லாமல் போகலாம். அனுசரித்துக் கொள்ளுங்கள். முகத்தில் எரிச்சலைக் காட்டாதீர்கள்.

நம்பிக்கையாளர்கள் எப்படிப்பட்டவர்கள் என்றால் அவர்கள் மக்களுடன் இலகுவாகக் கலந்து பழகி விடுவார்கள். மக்களும் அந்த நம்பிக்கையாளர்களிடம் இதமான தன்மையையே கண்டு கொள்வார்கள். (நூல்: அஹ்மத்)

No comments:

Post a Comment