Thursday, March 20, 2014

மனைவியின் உணர்வுகளை மதித்து நடந்து கொள்ளுங்கள்!

சுன்னத்தான இல்லறம்:

மனைவி என்பவள் ஒரு பொக்கிஷத்தைப் போல! பொக்கிஷம் என்றாலே அது பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்று!

அதாவது – உங்கள் மனைவியை நீங்கள் தான் பாதுகாத்திட வேண்டும். இந்த பாதுகாவல் அவரது உடலுக்கும் உடமைகளுக்கும் மட்டும் அன்று! அவர்களுடைய உணர்வுகளுக்கும் நீங்களே பாதுகாப்பு!

ஒரு தடவை நபியவர்கள் ரமளான் இஃதிகாஃபின் போது தம் மனைவியர் அனைவரையும் அவர்களின் பெற்றோர்கள் வீட்டுக்கு அனுப்பி விட்டார்கள். ஆனால் சஃபிய்யா பின்த் ஹுயை என்ற ஒரே ஒரு மனைவி மட்டும் செல்லவில்லை. காரணம் அன்னை சஃபிய்யா அவர்கள் யூதக் குடும்பத்தைச் சேர்ந்தவர்.


அன்னை சஃபிய்யா அவர்கள் எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடியவர்கள். மற்ற மனைவியர் அனைவரும் அவரவர் பெற்றோர் வீடுகளுக்குச் சென்று விட்ட பிறகு - தாம் அவ்வாறு செல்ல முடியவில்லையே என்று அவர்கள் வருத்தம் அடைந்து விடக்கூடாது என்பதற்காகவே – நபியவர்கள் – இஃதிகாஃபில் இருக்கும்போதே பள்ளிக்கருகில் மனைவியை வரவழைத்து நீண்ட நேரம் அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தார்களாம். பிறகு அவர்கள் வீடு வரை அழைத்துச் சென்று விட்டு விட்டு வந்தார்களாம்! (பார்க்க: புகாரி ஹதீஸ் எண் 3281)

புரிகின்றதா?

உங்கள் மனைவியின் முகம் வாடியிருக்கிறதா? சோகம் அப்பியிருக்கிறதா? வாய் திறக்கவில்லையா? உணவு உண்ணவில்லையா? தூங்கிடவில்லையா? மன உளைச்சலா? மன அழுத்தமா?

மன ரீதியாக அவருக்கு என்ன தேவை? அவருடைய முகத்தைக் கனிவுடன் உற்று நோக்க வேண்டும். அது உங்களுக்கு செய்தி சொல்லும்! அவர் ஏதோ ஒன்றைச் சொல்ல வருகின்றாரா? கூட அமர்ந்து அவரைப் பேச விட வேண்டும். அமைதியாக "இதயம்" கொடுத்துக் கேட்டிட வேண்டும். அவரது உணர்வுகளைப் புரிந்து கொள்ள வேண்டும். அந்த உணர்வுகளை நீங்கள் அங்கீகரித்திட வேண்டும். அதற்குத் தக நடந்து கொள்ளவும் வேண்டும்!

மனைவியின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு - அதற்குத் தக நடந்து கொள்ள வேண்டியதும் சுன்னத்தான இல்லறத்தின் தேட்டங்களுள் ஒன்று தான்!

No comments:

Post a Comment