Thursday, November 6, 2014

உங்க கிட்ட எதையுமே ஷேர் பண்ணிக்க முடியாதே!

பொதுவாக ஆண்களைப் பொருத்தவரை - அவர்கள் எந்த ஒரு விஷயத்திலும் அதன் முடிவுக்கே (result) முக்கியத்துவம் அளிப்பார்கள். அந்த முடிவுக்கு முன்னால் நடக்கின்ற எந்த விஷயமும் ஆண்களுக்கு அவ்வளவாக இனிப்பதில்லை! 

சான்றாக - குடும்பத்தினர் - ஊர் போய்ச் சேர்ந்து விட்டார்களா என்பதை அறிந்திட மட்டுமே ஆவல். எப்படிப்போய்ச் சேர்ந்தார்கள் என்பது அவர்களுக்கு முக்கியம் அல்ல. 

ஆனால் பெண்களைப் பொருத்தவரை அது அப்படியல்ல! எந்த ஒரு விஷயத்திலும் அவர்களுக்கு முக்கியமானது எல்லாம் - அந்த விஷயம் எவ்வாறு நடந்தது என்கின்ற வழிமுறை தான் (process). முடிவு அவர்களுக்கு முக்கியம் அல்ல!

இதனால் ஒவ்வொரு விஷயமும் எவ்வாறு நடந்தது என்பதை அவர்கள் விவரிக்கும்போது அவர்கள் விலாவாரியாகத் தான் பேசுவார்கள். சுருக்கமாக அவர்களுக்குப் பேசத் தெரியாது.

பயணம் புறப்பட்ட இடத்திலிருந்து ஊர் போய் சேர்ந்தது வரை நடந்த அத்தனையையும் பிட்டுப் பிட்டு வைத்தால் தான் அவர்களுக்கு நிம்மதி!

இதனை எல்லாக் கணவன்மார்களும் மிக நன்றாகப் புரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

மனைவி ஒரு விஷயத்தை எடுத்துக்கொண்டு கணவனிடம் வருவார். கணவனும் காது கொடுத்துக் கேட்பார். ஆனால் மனைவி விவரித்துக் கொண்டே போவார். கணவனுக்கு அது bore அடிக்கும். சுருக்கமாகச் சொல் என்பார் கணவர். "இதைக் கேளுங்க!" என்று தொடர்வார் மனைவி.

கணவனுக்கு இருப்புக் கொள்ளாது. அங்கும் இங்கும் பார்ப்பார். தான் சொல்வதை கணவன் சரியாகக் காதில் வாங்கவில்லை என்று தெரிந்தால் கோபம் வந்து விடும் மனைவிக்கு.

இங்கே என்ன நடந்தது என்று பாருங்கள்.

மனைவி கொல்லைப்புறத்தில் நிற்கிறார். தண்ணீர் மோட்டாரைப் போட்டு விட்டு டாங்க் நிறைவதற்காகக் காத்திருக்கிறார். ஆட்டோமாடிக் ஸ்விட்ச் கிடையாது. நாம் தான் ஸ்விட்சை அடக்க வேண்டும். தொழுது விட்டு வீடு திரும்பிய கணவன், மனைவியைப் பார்த்து விட்டு அவரும் கொல்லைப்புறத்துக்குச் செல்கிறார்.

மனைவி, “இங்க பாருங்க…. உங்க கிட்ட சொல்லனும்னு நினைச்சிட்டு இருந்தேன். நீங்களே வந்துட்டீங்க… பெரிய மச்சி வந்திருந்தாங்களா? (மருமகள்) பர்வீன் வந்து மச்சி கிட்ட பர்மிஷன் வாங்காமயே அம்மா வீட்டுக்குக் கிளம்பிடுச்சாங்க… மச்சி உடனே ஃபோன் பண்ணி சம்பந்தி கிட்ட சொன்னாங்களாம்…. அவங்க என்ன நடந்ததுன்னு கேட்காமயே மச்சியையே குறை சொல்றாங்களாம்; அவங்க எப்போதுமே….”

இந்தச் செய்தியில் கணவனுக்கு சற்றும் விருப்பம் கிடையாது! காதில் வாங்குவது போல் "ம்.....ம்.." என்று சொல்கிறார். பேச்சைத் திசை திருப்பிட தருணம் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

கணவன் திடீரென சற்றே இடைமறித்து, “டாங்க் நிரம்பி விட்டது போல் இருக்கே; ஸ்விட்சை அடக்கி விடவா?” என்று கேட்கிறார்.

பேச்சைக் கணவன் திசை திருப்புகிறார் என்பதைத் துல்லியமாகக் கவனித்து விடுகிறார் மனைவி.

"ஏங்க? நான் இங்கே எதற்கு நின்று கொண்டிருக்கிறேன்? எனக்குத் தெரியாதா டாங்க் நிரம்பி விட்டதா, இல்லையா என்று? உங்க கிட்ட எதையுமே ஷேர் பண்ணிக்க முடியாதே!” – என்று சொல்லி விட்டு விருட்டென்று வீட்டுக்கு உள்ளே சென்று விடுகிறார்.

அடுத்த வினாடியே – டாங்க் நிரம்பி தண்ணீர் வழியத் தொடங்குகிறது! கணவன் ஸ்விட்சை அடக்கி விட்டு அமைதியாக உள்ளே திரும்புகிறார்.

ஆனால் மனைவியின் மனநிலை இப்போது எப்படி இருக்கும்? சிந்தியுங்கள்!

இன்ஷா அல்லாஹ் தொடர்வோம்.

No comments:

Post a Comment