Sunday, November 9, 2014

பாடம் படித்துக் கொள்ள வேண்டியது கணவன் மனைவி இருவரும் தான்!

கணவன் மனைவி குடும்பத்துடன் வெளியே சென்று விட்டு வீட்டுக்குத் திரும்பும் நேரம்.

"ஏங்க! லேட்டாயிடுச்சுங்க! ஏதாவது ஹோட்டலில் டின்னர் சாப்பிட்டு விட்டுப் போயிடலாங்க!" - இது மனைவி.

"ஓக்கே!" - ஒரே வார்த்தையில் பதில்! - இது கணவன்.

"எந்த ஹோட்டல் போகலாம்னு நீங்களே சொல்லுங்க!" - இது மனைவி.

"எதுவானாலும் பரவாயில்லை!" -  நீயே முடிவு பண்ணு!"


"சரிங்க! பிள்ளைகளை அழைச்சிக்கிட்டு "அந்த" ஹோட்டலுக்குப் போகலாம்னு ரொம்ப நாளா எனக்கு ஆசைங்க. அங்கே போகலாமா?"

"ஓக்கே!" - மறுபடியும் ஒரே வார்த்தையில் பதில்.

ஹோட்டலுக்குப் போய் சாப்பிட்டு விட்டு வீட்டுக்குத் திரும்பியும் ஆகி விட்டது!

இப்போது தான் வேடிக்கை ஆரம்பம்.

***

கணவன் நேரே சமையல் கட்டுக்குச் செல்கிறார்.

பாத்திரம் ஒன்றை அடுப்பில் வைத்து "நூடுல்ஸ்" ஒரு ப்ளேட் சமைக்கத் தொடங்குகிறார்.

மனைவிக்கு ஆச்சரியம்.

"ஏங்க! இந்த வேலையெல்லாம் வேண்டாம்னு தானே ஹோட்டலில் சாப்பிட்டோம்; மறுபடியும் இங்கே வந்து என்னங்க பண்ணிகிட்டு இருக்கீங்க?"

"எனக்கு அங்கு சாப்பிட்டது போதவில்லை!!"

மனைவிக்கு இது எப்படி இருக்கும்?

***

இந்த சம்பவத்தை கொஞ்சம் அலசுவோமா?

இதற்கு முன் எழுதிய கட்டுரையில் கணவன் மனைவி கலந்துரையாடலில் மூன்று பாடங்களைச் சொல்லியிருந்தது நினைவுக்கு வருகிறதா?

அதில் மூன்றாவது பாடம் என்ன?

"உள்ளத்தில் உள்ளதைச் சொல்லுங்கள்; உள்ளத்தில் இல்லாததைச் சொல்லாதீர்கள்!"

இங்கே அந்தக் கணவன் செய்த தவறு இது தான்!

ஹோட்டலில் சாப்பிடுவது என்பது அப்போது அவருக்குப் பிடிக்கவில்லை!

அடுத்தது: மனைவி தேர்ந்தெடுத்த ஹோட்டலிலும் அவருக்கு உடன்பாடில்லை!

அவருடைய உள்ளத்தில் இருந்தது இது தான்!

ஆனால் அதனை அவர் சொல்லவில்லை!

அவர் சொன்னது என்ன?

"ஓக்கே!"

ஆனால் அவர் உள்ளத்தில் இருந்தது அதுவல்ல!

ஹோட்டலில் சாப்பிடலாமா என்று மனைவி ஆலோசனை கேட்ட போது கணவன் என்ன சொல்லியிருக்க வேண்டும்?

"வேண்டாம் டியர்! வீட்டுக்கே போய் சாப்பிட்டுக் கொள்ளலாம்!"

அது தானே அவர் உள்ளத்தில் இருந்தது! ஆனால் அவர் அதனைச் சொல்லிடவில்லையே!

ஏன்? ஏன்? ஏன்?

**

பெரும்பாலான கணவன் மனைவியர் பிரச்னைகளுக்கு அடிப்படைக் காரணமே - இந்த அடிப்படைப் பாடத்தைக் இருவருமே கற்றுக் கொள்ளாததால் தான்!

****

கணவன் என்ன சொல்வார் தெரியுமா?

"நான் ஒரு ஒப்புக்குத் தானே சொன்னேன்! என் முகத்தைப் பார்த்தாலே உனக்குத் தெரியலையா எனக்குப் பிடிக்கவில்லைன்னு!

"அது எப்படிங்க எனக்குத் தெரியும்?" - இது மனைவி

***

இங்கே மனைவி சொன்னது தான் உண்மை!

சில நேரங்களில் மனைவியரும் இது போல் நடந்து கொள்வதுண்டு!

பாடம் படித்துக் கொள்ள வேண்டியது கணவன் மனைவி இருவரும் தான்!

அந்தப் புதிய பாடம் என்ன தெரியுமா?

ஒருவர் உள்ளத்தில் உள்ளதை இன்னொருவர் அறிந்து கொள்ள முடியாது;
அவர் வாய் திறந்து சொன்னாலே தவிர!

***

சில கணவன் மனைவியர் அடிக்கடி வாக்குவாதம் செய்வார்கள்; இரண்டு பேருமே தாம் சொல்வது தான் சரி என்று விவாதித்துக் கொண்டே இருப்பார்கள். முடிவு ஒன்று எட்டப்படாமலேயே அதனை அப்படியே விட்டு விடுவார்கள்.

மீண்டும் மீண்டும் இது தொடரும். அவர்களுக்குள் அடிக்கடி சண்டை நடக்கும். விவாதம் சூடேறும். ஆனால் முடிவு மட்டும் ஏற்படவே ஏற்படாது;

காரணம் அதுவே தான்!

உள்ளத்தில் ஒன்றை வைத்துக் கொண்டு இன்னொன்றைப் பேசுவது தான் அது!

No comments:

Post a Comment