Thursday, November 6, 2014

இவர் கிட்ட பகிர்ந்து கொள்ளாமல் நான் யாரிடம் பகிர்ந்து கொள்வது?

இன்னொரு சம்பவம்.

கணவனுக்கு டின்னர் பரிமாறுகிறார் மனைவி. தோசை தான். மனைவி பேசத்தொடங்குகிறார். கணவன் சாப்பிட்டுக் கொண்டே – மனைவி பேசுவதைக் காதில் வாங்குகிறார்.

“ஏங்க, சம்சாத் மச்சி வந்திருந்திச்சா? எல்லாத்தையும் மச்சி கிட்ட நான் சொன்னேங்க. அவங்க நேரா அம்மாகிட்ட போய், “ஏம்மா, மச்சி தான் உங்களை நல்லா கவனிச்சுக்குதே; ஏங்க, அவங்க கொஞ்சம் ரெஸ்ட் எடுக்க வேண்டாமா? ஏன் இப்படி அவங்கள தொந்தரவு பண்ணுகிறாயாம்?" - என்று கேட்டாங்களாம். அதுக்கு உங்க அம்மா சொல்றாங்களாம்…


கணவன் மனதுக்குள் - "ஆரம்பிச்சாச்சா! அவ்வளவு தான்! எப்படி தப்பிப்பது இதிலிருந்து?"

கணவனின் முகத்தில் அதிருப்தியின் ரேகைகள் தெரிந்தாலும், மனைவி "கதையைத்" தொடர்ந்து கொண்டே செல்ல....

கணவன் (கையிலே கறிவேப்பிலையை வைத்துக் கொண்டு): ஏம்மா, அந்த வேஸ்ட் ப்ளேட்டை எடுத்து வையேன் இங்கே!”- என்று சொல்ல.... அவ்வளவு தான்! கோபம் வந்து விட்டது மனைவிக்கு!

பேச்சைத் திசை திருப்பிடத்தான் கணவன் இப்படி இடை மறிக்கிறார் என்று - “உங்க கிட்ட போய் சொல்ல வந்தேனே?" – என்று சொல்லி விட்டு – அடுத்த தோசையை சற்றே வேகமாக தட்டில் போட்டு விட்டுப் போய் விடுகிறார் மனைவி: .

இங்கே மனைவி பேசிக் கொண்டிருக்கும் போதே கணவன் இடை மறித்துப் பேசியது நமக்கொன்றும் பெரிய தவறாகத் தெரிய வாய்ப்பில்லை. கணவன் பேசியது நமக்கு யதார்த்தமாகவே தெரியும்.

ஆனால் மனைவி என்ன நினைக்கிறார்?

“நான் பேசுவதைக் கொஞ்சம் காதில் வாங்கினால் தான் என்ன? என்னை முழுசாகப் பேச விடாமல் – இடைமறித்தால் என்ன அர்த்தம்? இதையெல்லாம் என்கிட்ட வந்து சொல்லாதே என்று தானே அர்த்தம்? இவர் கிட்ட பகிர்ந்து கொள்ளாமல் நான் யாரிடம் பகிர்ந்து கொள்வது?”

மனைவியின் இந்த நினைப்பில் வெளிப்படுவது என்ன தெரியுமா?

“என் உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் என் கணவர் மதிப்பதே இல்லை!” – என்பது தான்!

எனவே தான் சொல்கிறோம்: மனைவி பேசினால் – அவர்களை முழுமையாகப் பேச விடுங்கள்!

இதுவும் ஒரு சுன்னத் என்பதை மறந்து விட வேண்டாம். நபியவர்களிடம் யாராவது பேச்சுக் கொடுத்தால் – அவர் பேசி முடிக்கும் வரை – வாய் திறக்கவே மாட்டார்களாம். அவரை விட்டுத் திரும்பவும் மாட்டார்களாம்.

மற்றவர்கள் பேச்சை மணிக்கணக்கில் கேட்டுக் கொண்டிருப்போம். மனைவி பேசும்போது மட்டும் ஏன் குறுக்கிட வேண்டும்?

மனைவி பேசுவதை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருப்பது என்பது வீணான ஒன்று அல்ல! அது உங்கள் மனைவியின் காதல் கணக்கில் நீங்கள் சேமித்து வைக்கும் வைப்பு நிதி! அது உங்களுக்கே திரும்பவும் வந்து சேரும்!

இதில் இன்னொரு விஷயமும் உண்டு. அதனை வெளிப்படையாகவே இங்கே எழுதிட வேண்டியுள்ளது.

டின்னர் முடிந்து விட்டது. படுக்கச் சென்று விட்டார்கள் கணவனும் மனைவியும். இந்த இரவில் அவர்களுக்குள் பாலுறவுக்கு சாத்தியம் இருக்கிறதா?

நாம் மேலே விவரித்தது போன்ற சூழ்நிலைகளில் - கணவன் மனைவி பாலுறவுக்கு சாத்தியமே இல்லை என்று அடித்துச் சொல்கிறது உளவியலும், ஆய்வுகளும்!

இந்த ஆய்வுகளின் முடிவுகளைப் பார்த்து விட்டு, நாம் நபியவர்களின் இல்லற வாழ்வை ஆய்வு செய்திடும்போது - நபியவர்கள் தங்களின் கடுமையான நபித்துவப் பணிகளுக்கு மத்தியிலும், மனைவியின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவர்களுக்கு நேரம் ஒதுக்கியிருப்பதைக் கண்டு வியந்து போகின்றோம்!

ஆனால் நம் சகோதரர்கள் சொல்வதென்ன?

மனைவியிடம் கதை கேட்டுக் கொண்டிருந்தால் வேலைக்கு யார் போவது என்று!

கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள்:

மனைவிமார்களே!

ஒரு விஷயத்தைப் பற்றிப்பேச விரும்பினால் தொடர்ச்சியாக நீங்களே பேசிக் கொண்டு செல்லாதீர்கள். உங்கள் கணவரையும் கொஞ்சம் பேச விடுங்கள். அதாவது மாறி மாறிப் பேசுங்கள்! கருத்துக்களுடன் சேர்ந்து உணர்வுகளையும் பரிமாறிக் கொள்ள இதுவே சிறந்த வழி!

சூழ்நிலை அறிந்து பேச்சைத் துவக்குங்கள்! கணவன் பசியுடன் இருக்கும்போது பேச்சைத் துவக்க வேண்டாம்; களைப்புடன் இருக்கும்போதும் பேச வேண்டாம்; முக்கிய வேலை ஒன்றில் அவர் ஈடுபட்டிருக்கும்போதும் வேண்டாம்; தூங்கப் போவதற்கு முன்பும் வேண்டாம்.

கணவன்மார்களே! மனைவியிடம் வரும்போது கலகலப்பான முகத்துடன் வாருங்கள். இன்றைக்கு என்ன நடந்தது டியர்? - என்று நீங்களே அவர்களைப் பேச வையுங்கள். மகிழ்ச்சியுடன் தன் உணர்வுகளையெல்லாம் அவர் உங்களிடம் கொட்டுவார். அவர் பேசுவதை மனம் வைத்துப் பொறுமையாகக் கேளுங்கள்.

Listen! Listen!Listen!

அவர் கொண்டு வரும் செய்தி ஒன்றும் அப்படி முக்கியம் இல்லாமல் இருக்கலாம் தான். ஆனால் அந்தச் செய்தி உங்கள் மனைவியை எப்படி பாதித்திருக்கிறது என்பது தான் முக்கியம்.

பேச்சினூடே, உங்கள் மனைவியின் உணர்வுகளை நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள் என்பதை அவர்களுக்கு உங்கள் முக பாவனையால் புரிய வைத்திடத் தவறாதீர்கள். இப்படிப்பட்ட மகிழ்ச்சிகரமான உரையாடல்கள் தான் (communication) உணர்வுரீதியாக உங்கள் இருவரையும் பிணைத்து விடும். இப்படிப்பட்ட உணர்வுப் பிணைப்பு ஒன்று இல்லாவிட்டால் - கணவன் மனைவி உறவே சடங்குரீதியான உறவாகிப் போய்விடும். பாலுறவு உட்பட!

வல்லோன் அல்லாஹு தஆலா நம் அனைவரின் இல்லற வாழ்க்கையையும் - சுன்னத்தான இல்லறமாக ஆக்கி வைப்பானாக! ஆமீன்! ஃதும்ம ஆமீன்!

No comments:

Post a Comment