Showing posts with label பேசுவது எப்படி?. Show all posts
Showing posts with label பேசுவது எப்படி?. Show all posts

Thursday, December 19, 2013

மனைவியைக் கொஞ்சம் பேச விடுங்களேன்!

மனைவி கொல்லைப்புறத்தில் நிற்கிறார். தண்ணீர் மோட்டாரைப் போட்டு விட்டு டாங்க் நிறைவதற்காகக் காத்திருக்கிறார். ஆட்டோமாடிக் ஸ்விட்ச் கிடையாது. நாம் தான் ஸ்விட்சை அடக்க வேண்டும். தொழுது விட்டு வீடு திரும்பிய கணவன் மனைவியைப் பார்த்து விட்டு அவரும் கொல்லைப்புறத்துக்குச் செல்கிறார்.




மனைவி, “இங்க பாருங்க…. உங்க கிட்ட சொல்லனும்னு நினைச்சிட்டு இருந்தேன். நீங்களே வந்துட்டீங்க… பெரிய மச்சி வந்திருந்தாங்களா? (மருமகள்) பர்வீன் வந்து மச்சி கிட்ட பர்மிஷன் வாங்காமயே அம்மா வீட்டுக்குக் கிளம்பிடுச்சாங்க… மச்சி உடனே ஃபோன் பண்ணி சம்பந்தி கிட்ட சொன்னாங்களாம்…. அவங்க என்ன நடந்ததுன்னு கேட்காமயே மச்சியையே குறை சொல்றாங்களாம்; அவங்க எப்போதுமே….”

கணவன் சற்றே இடைமறித்து, “டாங்க் நிரம்பி விட்டது போல் இருக்கே; ஸ்விட்சை அடக்கி விடவா?” என்று கேட்கிறார்.

மனைவி உடனே – “உங்க கிட்ட எதையுமே ஷேர் பண்ணிக்க முடியாதே!” – என்று சொல்லி விட்டு விருட்டென்று வீட்டுக்கு உள்ளே சென்று விடுகிறார்.

அடுத்த வினாடியே – டாங்க் நிரம்பி தண்ணீர் வழியத் தொடங்குகிறது. கணவன் ஸ்விட்சை அடக்கி விட்டு அமைதியாக உள்ளே திரும்புகிறார்.

இப்போது கேள்வி என்னவெனில் – மனைவி தன் கணவனைக் கோபித்துக் கொண்டது எதனால்?

@@

இன்னொரு சம்பவம்.

கணவனுக்கு டின்னர் பரிமாறுகிறார் மனைவி. தோசை தான். மனைவி பேசத்தொடங்குகிறார். கணவன் சாப்பிட்டுக் கொண்டே – மனைவி பேசுவதைக் காதில் வாங்குகிறார்.

“ஏங்க! ஷம்சாத் வந்திருச்சா? எல்லாத்தையும் ஷம்சாத் கிட்ட நான் சொன்னேங்க. அவங்க நேரா அம்மாகிட்ட போய், “ஏம்மா, மச்சி தான் உங்களை நல்லா கவனிச்சுக்குதே; ஏங்க, அவங்க கொஞ்சம் ரெஸ்ட் எடுக்க வேண்டாமா? ஏன் இப்படி அவங்கள தொந்தரவு பண்ணுகிறாயாம்? அதுக்கு உங்க அம்மா சொல்றாங்களாம்…

கணவன் (கையிலே கறிவேப்பிலையை வைத்துக் கொண்டு): ஏம்மா, அந்த வேஸ்ட் ப்ளேட்டை எடுத்து வையேன் இங்கே!”

மனைவி: “உங்க கிட்ட போய் சொல்ல வந்தேனே? – என்று சொல்லி விட்டு – அடுத்த தோசையை சற்றே வேகமாக தட்டில் போட்டு விட்டுப் போய் விடுகிறார்.

அதே கேள்வி: இங்கேயும் மனைவி தன் கணவனைக் கோபித்துக் கொண்டது எதனால்?

இந்த இரண்டு சம்பவங்களிலும் – மனைவி பேசிக் கொண்டிருக்கும் போது கணவன் இடை மறித்துப் பேசியது நமக்கொன்றும் பெரிய தவறாகத் தெரிய வாய்ப்பில்லை. இரண்டு சம்பவங்களிலுமே – கணவன் பேசியது யதார்த்தமாகவே தெரியும்.

ஆனால் மனைவி என்ன நினைக்கிறார்?

“நான் பேசுவதைக் கொஞ்சம் காதில் வாங்கினால் தான் என்ன? என்னை முழுசாகப் பேச விடாமல் – இடைமறித்தால் என்ன அர்த்தம்? இதையெல்லாம் என்கிட்ட வந்து ஏன் சொல்கிறாய் என்று தானே அர்த்தம்? இவர்கிட்ட பகிர்ந்து கொள்ளாமல் நான் யாரிடம் பகிர்ந்து கொள்வது?”

மனைவியின் இந்த நினைப்பில் வெளிப்படுவது என்ன தெரியுமா?

“என் உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் என் கணவர் மதிப்பதே இல்லை!” – என்பது தான்!

எனவே தான் சொல்கிறோம்:

மனைவி பேசினால் – அவர்களை முழுமையாகப் பேச விடுங்கள்!

இதுவும் ஒரு சுன்னத் என்பதை மறந்து விட வேண்டாம். நபியவர்களிடம் யாராவது பேச்சுக் கொடுத்தால் – அவர் பேசி முடிக்கும் வரை – வாய் திறக்கவே மாட்டார்களாம். அவரை விட்டுத் திரும்பவும் மாட்டார்களாம்.

மற்றவர்கள் பேச்சை மணிக்கணக்கில் கேட்டுக் கொண்டிருப்போம். மனைவி பேசும்போது மட்டும் ஏன் குறுக்கிட வேண்டும்?

மனைவி பேசுவதை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருப்பது என்பது வீணான ஒன்று அல்ல! அது உங்கள் மனைவியின் காதல் கணக்கில் நீங்கள் சேமித்து வைக்கும் வைப்பு நிதி! அது உங்களுக்கே திரும்பவும் வந்து சேரும்!

தொடர்ந்து சேர்க்கலாம் தானே?

என்னிடம் திரும்பு! என்னைக் கவனி! நான் சொல்வதைக் கேள்! அது போதும் எனக்கு!

சின்னச் சின்ன எதிர்பார்ப்புகள் மனைவியருக்கு நிறைய இருக்கும். கணவன்மார்களுக்கோ – “இது ஒரு பெரிய விஷயமா? இதற்குப் போய் ஏன் இவள் இப்படி அலட்டிக் கொள்கிறாள்?” என்றே எண்ணத் தோன்றும்.

ஆனால் தமது சின்னச் சின்ன ஆசைகள் – கணவனால் – தொடர்ச்சியாக அலட்சியப்படுத்தப் படும்போது மனைவி என்ன நினைக்கிறாள்? “நான் இவ்வளவு சொல்லியும் இவர் கேட்கவில்லை என்றால் என்ன பொருள்? எனது உணர்வுகளை இவர் மதிப்பதே இல்லை!” என்பது தான்!



அடுத்து என்ன செய்வார் மனைவி? கடுமையான சொற்களால் வசைபாடத் தொடங்கி விடுவார்.

இங்கே ஒரு மனைவி தன் கணவனைத் திட்டி விடுகிறார் – கடுமையாக! அதுவும் கணவனின் தம்பி மனைவி அருகில் இருப்பதைக்கூட கவனிக்காமல்!

கணவனுக்குக் கோபம் தலைக்கேறுகிறது!

“ஏன்? என் தம்பி மனைவி அருகில் இருக்கும்போது தான் என்னை இப்படி திட்டுவியா?

மனைவிக்கு – தனது தவறை ஒத்துக் கொள்ள மனம் இடம் கொடுக்காது! சமாளித்து விடுவார்.

“ஆமாம், அவங்க நாம பேசுறத எல்லாம் காதில வாங்கிக்கிட்டுத் தான் உட்கார்ந்து இருக்கிறாங்களாக்கும்!”

இவளிடம் இனியும் பேசினால் இன்னும் என்னென்ன பதில்கள் எல்லாம் அவள் வாயிலிருந்து வருமோ என்று அஞ்சியவனாக “அமைதி வழி” ஒதுங்க ஆரம்பிக்கிறான்! பின் வாங்கி விடுகிறான் கணவன்!

He wants to withdraw!

கணவன் – “ஒரு பாவமும் அறியாத சூழ்நிலைக் கைதி” (innocent victim!) என்று தன்னை நினைத்துக் கொள்கிறார்!

ஆனால் மனைவி?

கணவனிடம் பதில் இல்லை! சுவர் போல! தனக்கு பதில் ஏதும் சொல்லாமல் சுவர் போல் நிற்கும் கணவன் இந்த அமைதி மூலம் தன்னை அவமானப் படுத்துவதாகவும் தன்னை தன் கணவன் தண்டிப்பதாகவும் எண்ணுகிறாள்.

இவ்வாறு கணவன் ஒதுங்கிப் போனால் – மனைவி விட மாட்டார். தனது உணர்வுகளை சற்றும் மதிக்காத கணவன் மீது கோப உணர்ச்சி கொப்பளிக்கிறது! குரலை உயர்த்தி மேலும் திட்டுகிறாள் கணவனை! “ஏன், இப்படி ஓடி ஒளியறீங்க?”

She wants to engage!

பொதுவாக – பெண்களே அதிமாக கணவன்மார்களைக் கடுமையான சொற்களால் வசை பாடுகிறார்கள். (harsh criticism)

அது போல – ஆண்களே அதிகமாக “அமைதி வழி பின்வாங்குதலை” (stonewalling) நாடுகிறார்கள்!

மனைவியின் கடுமையான விமர்சனங்களும், கணவனின் அமைதி வழிப் பின்வாங்கலும் தொடர்ந்து கொண்டிருக்குமானால் – இல்லற வாழ்க்கை அறுபட்டுப் போய்விடும் என்பதே ஆய்வுகளின் தீர்க்கமான முடிவாக உள்ளது!

தீர்வு எதிலே இருக்கின்றது?

மனைவியின் சின்னச் சின்ன ஆசைகளை நிறைவேற்றுவதை – கணவன்மார்கள் – தன் இல்லற வாழ்வின் ஒரு மிக முக்கியமான அங்கமாகக் கொள்ள வேண்டும்!

“இதப்பாருங்க, இன்னிக்கு உங்க அம்மா படுத்துன பாட்டை உங்களிடம் நான் சொல்லியே ஆக வேண்டும். உட்காருங்க!” – இது மனைவி.

“அதை எல்லாம் கேட்டுக் கொண்டிருப்பதறகு எனக்கு நேரமில்லை!” என்று நீங்கள் சொல்ல வேண்டாம்.

மாறாக – “இப்போது வேண்டாமே! நாளை காலையிலே பேசிக் கொள்வோமே!” – என்று சொல்லிப்பாருங்கள்.

சொன்னபடியே மறுநாள் காலையில் உட்கார்ந்து பொறுமையாக உங்கள் மனைவி சொல்வதை அப்படியே கேட்டுக் கொண்டிருங்கள். இதுவே அவர்களின் பெரிய எதிர்பார்ப்பு உங்களிடம்.

(எச்சரிக்கை: அவர்கள் பேசும்போது நீங்கள் குறுக்கிடக்கூடாது; விமர்சிக்கக் கூடாது! புத்திமதி சொல்லிடக்கூடாது!)

“என்னிடம் திரும்பு! என்னைப் பார்! என்னைக் கவனி! நான் சொல்வதைக் கேள்! அது போதும் எனக்கு!” – இதுவே மனைவியரின் தாரக மந்திரம்!

இதனை செய்து கொடுக்காமல் போவதால் தான் – மனைவியின் கடுமையான சொற்களும், அதனைத் தொடர்ந்து – கணவனின் பின்வாங்குதலும்!

நபியவர்களின் முன்மாதிரி நமக்கெல்லாம் தெரியும் தானே? தம் மனைவியரின் சின்னச் சின்ன ஆசைகளையெல்லாம் – அவர்களின் ஆசை தீர நிறைவேற்றிக் கொடுப்பவர்கள் தானே அண்ணலார் அவர்கள்!

பின்பற்றிப்பாருங்கள்! பன்மடங்கு பலனை அனுபவிப்பீர்கள்!!

உணர்ச்சிகரமான சூழ்நிலைகளை எதிர்கொள்வது எவ்வாறு ?

அறிவுரை முதலில் கணவன்மார்களுக்கு -

பொதுவாகவே பெண்கள் “உணர்வுகளுக்கு” அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்கள் என்பதை கணவன்மார்கள் புரிந்து கொள்ள வேண்டும்!

பெண்கள் உணர்ச்சிகளைப் புரிந்து கொள்வதில் ஆண்களை விட மிகச் சிறப்பானவர்கள். அது போலவே அந்த உணர்ச்சிகளுக்கு சொல் வடிவம் தந்து விலாவாரியாக வர்ணிப்பதிலும் பெண்கள் கெட்டிக்காரர்கள்.



ஆனால் பரிதாபம்! ஆண்களின் நிலை இதற்கு நேர் மாறானது! அவர்களால் உணர்ச்சிகளைச் சரிவர புரிந்து கொள்ளவே முடியாது! அது போல உணர்ச்சிகளை அவர்களால் விவரித்துச் சொல்லிடவும் முடியாது!

எனவே, மனைவி ஒரு பிரச்னையை உங்களிடம் கொண்டு வந்தால் – அந்தப் பிரச்னைக்குப் பின்னணியில் உள்ள அவளின் உணர்வை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

நாம் முதலில் குறிப்பிட்டது போல் பிரச்னை மிக அற்பமானது என்று கணவன் நினைக்கலாம். ஆனால் அது மனைவியை உறுத்துகிறது எனில், ஒன்று – மனைவியின் கோரிக்கையில் நியாயம் இருந்தால் மனைவியின் எதிர்பார்ப்பை நிறைவேற்றி விட வேண்டியது தானே! “என் கணவர் என் பேச்சுக்கு (உணர்வுக்கு) மதிப்பளித்து விட்டாரே!” – என்று மனம் குளிர்ந்து போய் விடுவார் அவர்!

ஆனால் உங்கள் மனைவியின் கோரிக்கையில் நியாயம் இல்லை எனில் – அமைதியான சூழல் ஒன்றில் வைத்து மனைவியிடம் உங்கள் நிலையை எடுத்துச் சொல்லலாம். உணர்ச்சிவசப்பட்ட சூழலில் விவாதங்கள் எடுபடாது என்பதால் சற்றே ஒத்திப்போட்டு பின்னர் பேச்சைத் தொடங்குவது நல்லது!

மிக முக்கியமாக கணவன் இங்கே புரிந்து கொள்ள வேண்டிய விஷயம் என்னவெனில் – மனைவி தன் உணர்வுகளை வெளிப்படுத்திப் பேசத்தொடங்கினால் – அவசரப்பட்டு – ஒரு தீர்வை (solution) வழங்கி விடக்கூடாது! அப்படி மனைவியின் பேச்சை இடைமறித்து ஒரு முடிவை முன்வைப்பதை மனைவி எப்படி எடுத்துக் கொள்கிறார் எனில், “நம்மை இவர் பேசவே விட மாட்டேன் என்கிறாரே! முழுமையாக காதில் வாங்கினால் என்ன குறைந்தா போய்விடும்?”

ஆனால் அமைதியாக முகம் பார்த்து காது தாழ்த்திக் கணவன் கேட்கும்போது மனைவி என்ன நினைக்கிறார்: “இவர் என்னைப் புரிந்து கொள்கிறார்! என் உணர்வுகளை மதித்து நான் சொல்ல வருகின்ற அனைத்தையும் பொறுமையாகக் கேட்கின்றார்! என் நிலைமையில் தன்னை வைத்து என் கண்ணோட்டத்தில் இருந்து பிரச்சனையைப் பார்க்கிறார்! அது போதும் எனக்கு!”

இதில் வேடிக்கை என்னவென்றால் – தாங்கள் சொல்வதை முழு மனதுடன் தங்களின் கணவன்மார்கள் காதில் வாங்கிக் கொண்டாலே போதும் என்று நினைக்கிறார்கள் மனைவிமார்கள்! கணவன்மார்கள் தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்ள மறுத்தாலும் அது அவர்களுக்கு உறுத்துவதில்லை!

“என் கணவன் என்னை மதிக்கிறாரா? நான் சொல்ல வருவதைப் புரிந்து கொள்கிறாரா? – இதுவே அவர்களுக்கு மிக முக்கியம்!

மனைவிக்கு என்ன அறிவுரை?

கணவனின் எந்த செயல் உங்களுக்குப் பிடிக்கவில்லையோ, உங்களுக்கு எது உறுத்தலாக இருக்கிறதோ – அந்த செயலை மட்டுமே விமர்சியுங்கள்!

கணவனின் அந்தச் செயலால் நீங்கள் எப்படி பாதிக்கப்படுகிறீர்கள் என்பதை உணர்த்திடுங்கள்! ஆனால் – அதனை விமர்சிக்கும்போது அந்தச் செயலைச் செய்திட்ட உங்கள் கணவனை விமர்சித்திட வேண்டாம்! அது உங்கள் கணவனை அவமானத்துக்கு உள்ளாக்குகிறது!

சுற்றுலா ஒன்றுக்குத் திட்டமிடுகிறார் கணவர். மனைவி எல்லா முன்னேற்பாடுகளையும் செய்து விடுகிறார். ஆனால் எதிர்பாராத விதமாக பயணம் மேற்கொள்ள இயலாமல் போய் விடுகிறது!

ஊர் முழுவதும் ஒரே அரசியல் போராட்டம். வாகனங்களின் மீது கல்லெறிகின்றார்கள்! ஒரு பயணி இறந்தும் போய் விடுகின்றார். பலருக்குக் காயம். பேருந்துகள் எரிக்கப்படுகின்றன! ஒரு பதற்றமான சூழ்நிலையில் வேண்டாமே ஒரு சுற்றுலா என்று கணவன் தன் முடிவை மாற்றிக் கொண்டு விடுகிறார்!.

அவ்வளவு தான்! மனைவிக்கு வந்ததே கோபம்.

“போடுகின்ற எந்த திட்டத்தையாவது நீங்கள் உருப்படியாகச் செய்து முடித்ததுண்டா? எத்தனை தடவை இது போல ஏற்பாடு செய்து பின்பு அதனை கேன்ஸல் செய்திருக்கிறீர்கள்! உங்களை நம்பி நான் எல்லா ஏற்பாடுகளையும் செய்தேனே! எனக்கு வேண்டும்! – என்று பேசுவதற்கு பதிலாக,

“ஏங்க! பிள்ளைகள் எல்லாம் ஆசையாக ரெடியாகி விட்டார்கள்; நானும் எல்லா ஏற்பாடுகளையும் செய்து விட்டேன்; ஊரில் போராட்டங்கள் நடந்து கொண்டு தான் இருக்கும்; மற்றவர்கள் எல்லாம் போய்க் கொண்டு தானே இருக்கிறார்கள்! இப்படி திடீரென்று நீங்கள் வேண்டாம், பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று சொல்வது எனக்குச் சரியாகப் படவே இல்லைங்க! உங்கள் முடிவை மாற்றிக் கொண்டு நீங்கள் புறப்பட்டால் எனக்கும் பிள்ளைகளுக்கும் மகிழ்ச்சி தானே!” – என்று பேசிடலாம் அல்லவா?

எனவே தான் சொல்கிறார்கள் – செயலை விமர்சியுங்கள்! செய்தவரை விமர்சிக்க வேண்டாம்! அது உறவுகளைக் கெடுத்து விடும்!

சுருக்கமாகச் சொல்வதென்றால் – உணர்ச்சிகரமான சூழ்நிலை கணவன் மனைவியருக்குள் ஏற்படும்போது

1. இருவருமே அமைதி காத்தல் அவசியம் (calm down)

2. ஒருவர் மற்றவரின் கண்ணோட்டதிலிருந்து பிரச்சனையைப் பார்த்திட முன் வர வேண்டும். (empathy)

3. ஒருவர் மற்றவரின் கருத்துக்களை காது தாழ்த்திக் கேட்டிட வேண்டும். குறுக்கீடுகள் கூடாது! (மனைவிமார்கள் சற்று சுருக்கமாகப் பேசிட கற்றுக்கொள்தல் அவசியம்) (active listening)

4. நமக்குப் பழகி விட்ட எந்த ஒரு “பழக்கமும்” ஒரே நாளில் மாறி விடாது. பயிற்சி தேவை (practice)! அதற்குப் பொறுமை தேவை! பொறுமையுடன் பயிற்சி செய்து அதன்படி நம் செயல்பாடுகளை நாம் மாற்றிக் கொண்டால் இல்லறம் பாதுகாக்கப்படும் – அது முறிக்கப்படுவதிலிருந்து!

இப்படிப் பேசினால் எப்படி இருக்கும்?

ஒரு தடவை நபி (ஸல்) அவர்கள் பெண்களுக்கு உபதேசம் செய்திடும்போது இவ்வாறு கூறினார்கள்: ‘பெண்கள் சமூகமே! தர்மம் செய்யுங்கள்! ஏனெனில், நரக வாசிகளில் அதிகமாக இருப்பது நீங்களே என எனக்குக் காட்டப்பட்டது’ என்று கூறினார்கள். அது ஏன் என்று அப்பெண்கள் கேட்டதற்கு, அதற்கான காரணங்களில் ஒன்றாக பெண்கள் அதிகமாகச் சாபமிடுவதைக் குறிப்பிட்டார்கள் நபியவர்கள். (புகாரி) .



பொதுவாகவே கணவன்மார்களை விட மனைவிமார்களே – கடுமையான சொற்களால் வசை பாடுவதில் (harsh criticism) முன்னணியில் நிற்கிறார்கள். பெண்களின் கடுமையான விமர்சனம் எப்படி இருக்கும் எனில் தவறு எதுவோ அதனை விமர்சிப்பதற்கு பதிலாக தவறு செய்த கணவனை நோக்கியே விமரிசனம் அமைந்திருக்கும்.

சான்றுக்காக சில கற்பனை உரையாடல்கள்:

ஒன்று:

கணவர் இன்னும் வீட்டுக்குத் திரும்பவில்லை. “வீட்டுக்கு வரத் தாமதமாக ஆகும்; நீ சாப்பிட்டு விட்டு ஓய்வெடு; நான் வந்து விடுகிறேன், என்று செல்பேசியில் ஒரு சேதி சொல்லியிருக்கலாம். மனைவி தொலைபேசியில் அழைத்தால் அழைப்பை ஏற்க மறுப்பு. மிகவும் தாமதமாக வீட்டுக்கு வருகிறார் கணவர். மனைவிக்கு கஷ்டம் தான். ஆனால் இதனை எப்படிப் பேசுவது கணவனிடத்தில்?

“வீட்டுக்கு வர தாமதமாக ஆகும் என்றால் ஒரு ஃபோன் பண்ணி சொல்லியிருக்கலாமில்ல? எவ்வளவு நேரம் நான் வருவீங்க, வருவீங்க என்று காத்திருப்பது?” – என்று சொல்வது அழகானது;

சாரி டார்லிங்! பிசியிலே மறந்து விட்டேன், இனி அப்படி நடக்காது. ஓக்கே? – இது கணவன்.

ஆனால் பின் வரும் உரையாடலை கவனியுங்கள்:

“ஏங்க, இப்படி டார்ச்சர் பண்றீங்க? வர முடியலைன்னு சொன்னா ஒரு ஃபோன் பண்ணித் தொலைக்கிறதுக்கென்ன?

உனக்கென்ன தெரியும் என்னோட கஷ்டம்? டயர்டா வீட்டுக்கு வர்ர புருஷன்கிட்ட இப்படித்தான் பேசுவியா?

என்னோட கஷடத்தை நீங்கள் என்னைக்காவது நினைச்சுப் பார்த்ததுண்டா? என்னைக்காவது நீங்க நேரத்துக்கு வந்ததுண்டா? நீங்க ஒரு படு சுயநலக்காரர்தானே?

சற்றே அமைதி. அடுத்தது….

ஆளுக்கொரு பக்கம் திரும்பிப் படுத்துக் கொள்கின்றனர்!

இரண்டு:

வாங்கி வைத்த பேரிச்சம் பழங்களை சாப்பிடுகின்றான் கணவன், அதில் ஒரு விதமான வாடை வருகின்றது.

கணவன் மனைவியிடம்: “பேரிச்சம் பழத்தில் ஒரு விதமான வாடை (smell) வருகின்றது! சாப்பிட்டுப் பாரேன்…

மனைவி: நீங்க வாங்கி வச்சது தானே! என்றைக்கு நீங்க ஒழுங்கா பார்த்து வாங்கிக் கொண்டு வந்திருக்கிறீர்கள்? – என்பதற்கும் -

“ஆமாங்க! நானே உங்க கிட்ட சொல்லனும்னு நினைச்சிக்கிட்டு இருந்தேன். நாளைக்கு நானே போய் மாற்றி வாங்கி வந்து விடுகிறேன்.’ என்பதற்கும் வித்தியாசம் உண்டு தானே?

மூன்று:

கணவனிடம் ஒரு கெட்ட பழக்கம். பல் இடுக்கில் உள்ள உணவை சுண்டு விரலை விட்டு எடுக்கும் பழக்கம் தான் அதுவும் பிறர் முன்னிலையிலேயே!

தனிமையில், “ஏங்க இது நல்லாவாங்க இருக்கு? “ஏன் உன் புருஷன் இப்படி இருக்கார்னு என்னைக் கேட்டா நான் என்னங்க பதில் சொல்வேன்?” – என்று தனிமையில் சொல்லி உணர்த்துவதற்கும், -

“ஏங்க! திருந்தவே மாட்டீங்களா? உங்களுக்கும் சுத்தத்துக்கும் சம்பந்தமே கிடையாதுங்க! ” என்று திட்டுவதற்கும் வித்தியாசம் உண்டு தானே!

நன்றாகக் கவனியுங்கள். தவறைக் கண்டிப்பது என்பது வேறு. தவறு செய்பவரைக் கடுமையான சொற்களால் விமர்சிப்பது என்பது வேறு!

இப்போது நபிமொழியைக் கவனியுங்கள்:

அந்தப்பெண்களின் ஒருத்திக்கு காலம் முழுக்க உபகாரம் செய்து, பின்பு உங்களில் ஒரு தவறை அவள் கண்டுகொண்டால், நான் உன்னிடத்தில் எந்த நலவையும் கண்டதில்லை என்று கூறிவிடுவாள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)

இப்படிப்பட்ட – கடுமையான விமர்சனங்கள் தொடருமானால் – அது கணவன் மனைவி உறவை மிகவும் பாதித்து விடும்!

எனவே பேசுகின்ற முறையை சற்றே மாற்றி ஒருவருக்கொருவர் ஆறுதல் அளிக்கும் வகையில் பேசிக்கொள்வது கணவன் மனைவி உறவை சீராக்கும் என்பதே ஆய்வுகளின் முடிவு ஆகும்.

இங்கே கணவன்மார்களுக்கும் நாம் ஒன்றைச் சொல்ல வேண்டியுள்ளது.

திட்டுவது என்பது எப்போது மனைவியின் பழக்கமாக மாறுகிறது தெரியுமா?

அவர்களின் உணர்வுகளுக்கு நீங்கள் தொடர்ந்து மதிப்பளிக்காமல் போய் விடும்போது தான். அதாவது நீங்கள் உங்கள் மனைவியை அலட்சியப் படுத்துவதாக அவர் உறுதியாக நம்பத்தொடங்கும்போது தான்! எனவே மனைவியின் சின்னச் சின்ன ஆசைகளையெல்லாம் நிறைவேற்றிப் பாருங்கள். மனைவி நிச்சயம் மாறுவார். முயற்சியுங்களேன்!

சூழ்நிலை அறிந்து பேசுங்கள்!

கணவன் மனைவி இருவருக்கும் ஏதோ ஒரு விஷயத்தில் கடுமையான கருத்து வேறுபாடு. கோப உணர்ச்சி கொப்பளிக்கிறது.

அது குறித்துப் பேசி விடலாம் என்று கணவனோ அல்லது மனைவியோ நினைக்கிறார்கள். ஆனால் அதற்குத் தகுந்த சூழல் ஒன்றை அவர்கள் உருவாக்கிக் கொள்ள வேண்டும். எல்லாச் சூழ்நிலைகளிலும், எல்லா இடங்களிலும் அவர்கள் தங்கள் பேச்சைத் துவங்கி விடக்கூடாது.


ஒரு சூழ்நிலை.

கணவனும் மனைவியும் வீட்டில்…

“ஏம்மா! சாயங்காலம் அஞ்சு மணிக்கு ரெடியாக இரு! பீச்சுக்குப் போகலாம்! இது கணவன்.

ஆமா! அது ஒண்ணு தான் குறைச்சல்!” இது மனைவி.

ஆமாம்மா! உன் கிட்ட கொஞ்சம் பேச வேண்டியிருக்கு; பீச்சிலே பேசுவதற்கு வசதியாக இருக்கும்ல!

ஆமாம்! நீங்க பேசிக் கிழிச்சதெல்லாம் போதும்!

உடனே கணவன் தன் மனைவியைக் கோபமாகத் திட்ட மனைவியும் பதிலுக்குத்திட்ட இந்த இந்த “அழகிய உரையாடலைக்” காதில் வாங்குவது யார் யார்?

அவர்களுடைய பன்னிரெண்டு வயது மகள்! ஹாலில் அமர்ந்து கொண்டு பாடம் படித்துக் கொண்டிருக்கின்றாள்.

கணவனின் தம்பி மனைவி! தம்பியின் அறையிலிருந்து சமையலைக்குச் செல்லும் சமயத்தில் அவர் காதிலும் விழுகிறது!

இங்கே கணவனின் ஈகோ தலையெடுக்குமா எடுக்காதா?

சுர்ர்ரென்று கோபம் தலைக்கேறிய கணவன் என்ன செய்வான்?

“உன்னிடம் பேச நினைத்தேனே! என்னைச் செருப்பால் தான் அடித்துக் கொள்ள வேண்டும்!”

“ஆமா! அது ஒன்னு தான் பாக்கி!”

***

எனவே தான் சொல்கிறோம்: சூழ்நிலை அறிந்து பேசுங்கள்!

எந்தெந்தச் சூழலிலெல்லாம் அவர்கள் பேசிடக் கூடாது?

வீட்டில் மற்ற உறவினர்கள் இருக்கிறார்களா? அவர்களுக்கு மத்தியில் கணவன் மனைவி கருத்து வேறுபாடுகள் குறித்து வாய் திறக்க வேண்டாம். அங்கே ஈகோ தலையெடுக்கத் துவங்கி விடும்.

குழந்தைகளை அருகில் வைத்துக் கொண்டு உங்கள் விவாதங்களைத் தொடங்கிட வேண்டாம். அது அவர்களை மிகவும் பாதிக்கும்.

வீட்டில் குழந்தைகளும் இல்லை; உறவினர்களும் இல்லை. நீங்கள் இருவர் மட்டும் தனியே என்றாலும் கூட உரத்தக் குரலில் இருவரும் பேசிட வேண்டாம். அக்கம்பக்கத்தார் இருக்கிறார்கள்.

கணவன் மனைவி இருவரும் பஸ் அல்லது ரயிலில் பயணிக்கிறீர்களா? சுற்றிலும் பயணிகள் சூழ்ந்திருக்க நீங்கள் உங்கள் பாட்டுக்கு உங்கள் கருத்து வேறுபாடுகளைப் பேசிடத் துவங்கி விடாதீர்கள்.

அல்லது நீங்கள் இருவருமாக காரில் செல்கிறீர்களா? நீங்களே ஓட்டுனர் என்றால் பரவாயில்லை. ஆனால் காரை ஓட்டுவது ஒரு டிரைவர் எனில் உங்கள் குடும்ப விஷயங்களைப் பேசாதீர்கள். அங்கே டிரைவர் நீங்கள் பேசுவதை உற்றுக் கேட்கக்கூடும்.

வெளியே இருவரும் நடந்து செல்கிறீர்களா? முன்னும் பின்னும் யாருமே இல்லை என்று நினைத்துக் கொண்டு பேச்சைத் துவக்கி விடாதீர்கள். “ஆமா! யாரு நாம பேசுறத கேட்டுக்கிட்டு இருக்காங்க?” என்று உங்கள் துணை பேசத் தொடங்கினால் பதில் பேசாதீர்கள்.

குடும்ப விஷயங்களை கடைகளில் பொருட்கள் வாங்கும் சமயத்திலும் பேச வேண்டாம்!

கணவன் – மனைவி கருத்துரையாடலுக்கு மேற்கண்ட சூழ்நிலைகளை நாம் தவிர்க்கச் சொல்வதற்குக் காரணம் – ஒருவர் மானத்தை மற்றவர் காத்திட வேண்டும் என்பதற்காகத் தான்.

சூழ்நிலைகளைக் கருத்தில் கொள்ளாமல் பேசத் தொடங்கினால் என்னவாகும்? சாதாரணமாகத் தான் பேச்சு தொடங்கும். ஒரே ஒரு வார்த்தை உங்கள் உரையாடலை – விவாதமாக மாற்றி விடும்! அடுத்து என்ன நடக்கும் என்று நாம் சொல்லத் தேவையில்லை.

கணவனோ அல்லது மனைவியோ – இருவரில் ஒருவர் எதற்கெடுத்தாலும் “சண்டை போடக்கூடிய” மனிதராக இருந்து விட்டால் கேட்கவே வேண்டியதில்லை. மேற்கண்ட சூழ்நிலைகளில் எதுவாக இருந்தாலும் – பேசுவதைத் தவிர்த்திடா விட்டால் அது கணவன் மனைவி உறவை மேலும் சிக்கலாக்கி விடும்.

எனவே தான் சொல்கிறோம்: சூழ்நிலை அறிந்து பேசுங்கள்!