Showing posts with label இரக்க உணர்வு. Show all posts
Showing posts with label இரக்க உணர்வு. Show all posts

Tuesday, March 25, 2014

நபித்தோழியர் வரலாறுகள் எல்லாம் கதை போல் கேட்பதற்குத் தானா?

சுன்னத்தான இல்லறம்: 

"தீய்ந்து போன ரொட்டி!" - கதையில் ஒரு கணவனின் இரக்க குணத்தைப் பற்றிப் பார்த்தோம் அல்லவா? அது கதை தான்! ஆனால் ஒரு உண்மைச் சம்பவமே நமது இஸ்லாமிய வரலாற்றில் இடம் பெற்றுள்ளது. இங்கே ஒரு மனைவி தான் ஹீரோயின்!

ஒரு மனைவி தன் கணவனிடம் இந்த அளவுக்கு இரக்க உணர்வுடன் நடந்து கொள்வாரா என்று வியக்கும் அளவுக்கு நடந்து கொண்ட வரலாற்றுச் சம்பவம் அது! நீங்கள் நிச்சயம் கேள்விப்பட்டிருப்பீர்கள்!

யாரைப்பற்றி நாம் இங்கே சொல்ல வருகின்றோம் என்பதை உங்களால் ஊகிக்க முடிகின்றதா?

CLUE: அவர் ஒரு சஹாபியப் பெண்மணி!

நாம் சொல்ல வந்தது உம்மு சுலைம் (ரலி) அவர்களைப் பற்றித்தான். அவரைப் பற்றிய நபிமொழி ஒன்றைப் படியுங்கள்!

அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவிக்கிறார்கள்:

என் தாயார் உம்மு சுலைம் அவர்களின் இரண்டாவது கணவரான) அபூ தல்ஹா(ரலி) அவர்களின் புதல்வர் ஒருவர் நோய்வாய்ப்பட்டு இருந்தார். ஒரு முறை அபூ தல்ஹா(ரலி) வெளியே செல்ல அப்போது அந்தப் பையன் இறந்துவிட்டான். அபூ தல்ஹா(ரலி) திரும்பி வந்தபோது 'என் மகன் என்ன ஆனான்?' என்று கேட்டார்கள்.

உம்மு சுலைம் துக்கத்தை வெளிக்காட்டாமல், 'அவன் முன்பைவிட நிம்மதியாக இருக்கிறான்' என்று பதிலளித்துவிட்டு, அவர்களுக்கு முன்னால் இரவு உணவை வைத்தார். அபூ தல்ஹா(ரலி) இரவு உணவை அருந்தினார்கள்.

பிறகு உம்மு சுலைம் அவர்களுடன் அன்றிரவு தாம்பத்திய உறவுகொண்டார்கள். உறவு கொண்டு முடித்தபோது, உம்மு சுலைம் அவர்கள் தம் கணவரிடம் 'பையனை அடக்கம் செய்ய ஏற்பாடு செய்யுங்கள்' என்று கூறினார்கள்.

விடிந்ததும் அபூ தல்ஹா(ரலி) இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் சென்று நடந்ததைத் தெரிவித்தார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'இன்றிரவு தாம்பத்திய உறவுகொண்டீர்களா?' எனக் கேட்டார்கள். அபூ தல்ஹா(ரலி), 'ஆம்' என்றார்கள்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'இறைவா! அவர்களின் இரவில் அவர்கள் இருவருக்கும் சுபிட்சம் வழங்குவாயாக' என்று பிரார்த்தித்தார்கள்......(புஹாரி எண் 5470 ஹதீஸ் சுருக்கம்)

நாம் கேட்பது இது தான்:

நபித்தோழியர் வரலாறுகள் எல்லாம் கதை கேட்பதற்குத் தானா?

அன்புச் சகோதரிகளே! உம்மு சுலைம் (ரலி) அவர்களின் - "மனநிலையைக்" - கொஞ்சமேனும் உங்கள் இல்லற வாழ்வில் பிரதிபலித்துக் காட்டிட மாட்டீர்களா?

Sunday, March 23, 2014

திருமண வாழ்வில் தினசரிப் போராட்டமா?

சுன்னத்தான இல்லறம்:

இனிமையான இல்லற வாழ்க்கைக்கு இரக்க குணம் மிக அவசியம். கணவன் மனைவியருக்கிடையே இரக்க உணர்வு குறைந்து போய் விட்டால் என்னவாகும்?

தன் துணை மீது இரக்கம் காட்டுவதில் குறை ஏற்பட்டால் - கணவன் மனைவி நல்லுறவே பாதிக்கப்பட்டு விடும்.


குறைகளை துணைவரிடமிருந்து மறைக்கத் தொடங்குவர். தனது குறைகள் பற்றி மனம் திறந்து இருவரும் பேசிட இயலாது!

ஒருவரின் குறைகளை இன்னொருவர் ஆராயத்தொடங்குவர்; சிறிய குறைகள் எல்லாம் பெரிது படுத்தப்படும்!

திருமண வாழ்வு என்பது தினசரிப் போராட்டமாக வெடிக்கும்!


சில நேரங்களில் அது சோகமயமாக (depression) மாறும்! மன அழுத்தத்துக்கு (chronic stress) வழி வகுக்கும்! நிம்மதி பறந்து போய் விடும்!

இன்னும் உடல் நலமும் பாதிக்கப்படும்!

குறைகளைச் சுட்டிக்காட்டினால் அதனை ஒத்துக் கொள்ளாமல் மறுக்கின்ற நிலை ஏற்பட்டு விடும். பின்னர், எவ்வாறு ஒருவர் குறையைக் களைந்திட இன்னொருவர் உதவி செய்திட முடியும்?

என்னைப் புரிந்து கொள்ளும்போதும் என் பலவீனங்களை சகித்துக் கொள்ளும்போதும் தான் வீடு அமைதிப் பூங்காவாகத் திகழ்கிறது. இது என் மனைவிக்கும் பொருந்தும்!

என்னை அப்படியே எனது நிறைகளுடனும் குறைகளுடனும் எனது துணை ஏற்றுக் கொண்டால் தான் நான் முழுமையாக வளர்வேன்! இது என் மனைவிக்கும் பொருந்தும்!

இரக்க உணர்வுக்குப் பஞ்சம் ஏற்பட்டு விட்டால் அது விவாக விலக்குக்கு வழி வகுத்து விடும்! எச்சரிக்கை!!

சரி! இந்தக் கருணை உணர்வை இல்லற வாழ்வில் கணவனும் மனைவியும் எவ்வாறு வெளிப்படுத்துவது?

சிறிய சிறிய குறைகளா? கண்களை மூடிக் கொண்டு விடுங்கள்! அவைகளைக் கண்டு கொள்ளாதீர்கள்! (உங்களுக்கு ஒரு கதை இருக்கிறது அடுத்த பதிவில் - இன்ஷா அல்லாஹ்)

மனைவியின் தேவைகளை நீங்கள் நிறைவேற்றுங்கள்! உங்கள் மனைவியின் தேவைகளை நிறைவேற்றுவதில் ஆர்வம் செலுத்துவதும் கருணையே!

விட்டுக் கொடுத்து நெகிழ்ச்சியுடன் நடந்து கொள்ளுங்கள்.

உங்கள் துணை களைத்துப் போயிருக்கின்றாரா? புரோட்டாவும் சிக்கன் ரோஸ்ட்டும் தான் வேண்டும் என்று அடம் பிடிக்க வேண்டாம்! "மதியம் என்ன உணவம்மா? அதை நானே சூடு காட்டி சாப்பிட்டுக் கொள்கிறேன்; உனக்கென்ன வேண்டும் அதைச் சொல்!" என்று சொன்னால் அது தான் இரக்க உணர்ச்சியின் வெளிப்பாடு!

இந்த விட்டுக் கொடுக்கும் தன்மை உணவுக்கு மட்டுமல்ல! கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் எல்லாவிதமான கருத்து வேறுபாடுகளுக்கும் இதுவே அருமருந்து!

உங்கள் மனைவிக்கு ஒரு பிரச்சனை! ஆனால் அது குறித்து தாமே பேசுவதற்கு அவர் அஞ்சுகிறார் எனில் அவருக்காக நீங்களே குரல் கொடுங்கள்! குறிப்பாக உங்கள் தாய் மூலமாகவோ அல்லது உங்களின் சகோதரிகள் மூலமாகவோ உங்கள் மனைவி பாதிக்கப் பட்டிருந்தால் உங்கள் மனைவிக்காகக் குரல் கொடுப்பவர் யார்? அது நீங்கள் தான்! உங்கள் மனைவியை உங்களின் தாய்க்கோ உங்கள் சகோதரிகளுக்கோ அடிமையாக்கி விடாதீர்கள்!

உங்கள் மனைவியின் குடும்ப விஷயங்களில் அக்கரை செலுத்துவதும் உங்களின் கருணைப் பண்புக்கு அடையாளமாகும்.

சுருக்கமாகச் சொல்வதென்றால் கருணை என்ற ஒரே ஒரு நற்பண்பு இருந்தால் போதும். குடும்பத்தின் எல்லாப் பிரச்சனைகளையும் அதனைக் கொண்டே தீர்த்துக் கொண்டு விடலாம்!

ஆம்! இரக்க குணம் இருந்தால் போதும்! இல்லறம் தானே இனிக்கும்!

இரக்க உணர்வும் இல்லற உறவும்!

23 மார்ச், 2014

சுன்னத்தான இல்லறம்:

சென்ற வாரம் - நாம் - சுன்னத்தான காதலைப் (மவத்தத்) பற்றி சற்றே கவனம் செலுத்தினோம். அடுத்து அதனுடன் மிக நெருக்கமான தொடர்புடைய இன்னொரு உணர்வு பற்றி இப்போது கவனம் செலுத்துவோம்.

அது தான் கணவன் மனைவியருக்கிடையே இறைவன் ஏற்படுத்தியுள்ள இரக்க உணர்வு! திருமறை 30:21 வசனம் காதல் உணர்வையும் இரக்க உணர்வையும் இணைத்தே தான் குறிப்பிடுகின்றது. (மவத்தத் வ ரஹ்மத்)


இன்னும், நீங்கள் அவர்களிடம் மன நிம்மதி பெறுவதற்குரிய (உங்கள்) மனைவியரை உங்களிலிருந்தே உங்களுக்காக அவன் படைத்திருப்பதும்; உங்களுக்கிடையே காதல் உணர்வையும், இரக்க உணர்வையும் உண்டாக்கியிருப்பதுவும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும்; (30:21)

ரஹ்மத் - இரக்கம் - என்பது அல்லாஹு தஆலாவுடைய அரும்பண்புகளுள் ஒன்று!

இதே இரக்க உணர்வைத்தான் - திருமணத்தின் மூலம் கணவன் மனைவியருக்கிடையே பதிய வைத்திருக்கின்றான் வல்லோன் அல்லாஹு தஆலா!

இரக்க சிந்தனை வரும்போது மனிதனுக்கு பொறுப்புணர்ச்சி தானாக வந்து விடும். திருமண உறவைப் பொறுத்தவரை இந்த இரக்க உணர்ச்சி, கணவன் மனைவியருக்குள் கொண்டு வருவது பொறுப்புணர்ச்சியைத் தான்! கணவன் மனைவிக்குப் பொறுப்பேற்றுக் கொள்கிறான்! மனைவி கணவனுக்குப் பொறுப்பேற்றுக் கொள்கிறாள்!

இரக்க உணர்வு ஏற்படுத்தும் இன்னொரு அதிசயம் - துணைவர் தனது துணைவிக்குச் செய்திட வேண்டிய கடமைகளைச் செய்திட இயலாத சூழ்நிலையில் கூட, துணைவர் மீது துணைவி இரக்கம் காட்டுகிறார். கருணை என்பது கொடுப்பது மட்டுமே! அது பதிலுக்கு திரும்பவும் எதனையும் எதிர்பார்க்காதது! ஏனெனில் கொடுப்பதில் கிடைக்கின்ற இன்பம் ஒன்றைத் திரும்பப் பெறுவதில் இல்லை!

கணவன் மனைவி உறவில் - இரக்கம் என்பது இன்னும் பல ஆழ்ந்த அர்த்தங்களைக் கொண்டது.

துணைவி அல்லது துணைவரின் தவறுகளையும் பலவீனங்களையும் மன்னித்து அவைகளை மற்றவர் பார்வையிலிருந்து மறைக்கவும் செய்கிறது இரக்க உணர்வு!

ரஹ்மத் எனும் சொல்லின் வேர்ச்சொல் "ரஹ்ம்" ஆகும். ரஹ்ம் என்பது தாயின் கருவறையைக் குறிக்கும் சொல்லாகும். இது கருணை என்பதன் பொருளை இன்னும் விரிவாக்கி விடுகிறது.

கருவறை பாதுகாப்பானது; அது குழந்தையைப் பாதுகாக்கிறது! அது குழந்தையை வளர்க்கிறது! அது போலவே கணவன் மனைவி - இருவரும் ஒருவருக்கொருவரைப் பாதுகாக்கிறார்கள்! ஒருவரின் வளர்ச்சிக்கு இன்னொருவர் பொறுப்பேற்கிறார்! கருவறையில் குழந்தைக்கு எந்த பயமும் இல்லை! அது போலவே துணையின் நெருக்கத்தில் இன்னொரு துணை பயமின்றி பாதுகாப்புடன் வளர்கிறது!

கணவனும் மனைவியும் அல்லும் பகலும் சேர்ந்தே வாழ்வதால், கணவனின் குறைகள் மனைவிக்கும், மனைவியின் குறைகள் கணவனுக்கும் வெள்ளிடை மலை! அதாவது அவை வெளிப்படையாகத் தெரிந்து விடுகிறது! அவைகளை ஒருவருக்கொருவர் மறைத்துக் கொண்டிடவும் முடியாது! மறைத்திடவும் தேவையில்லை! ஏனெனில் முகமூடி அணிந்து கொண்டு இருவரும் இல்லறத்தை இனிமையாகக் கொண்டு செல்ல இயலாது!

கருணை உணர்வு மட்டும் இருவரிடத்திலும் இல்லை என்றால் நிலைமை என்னவாகும்?

தொடர்ந்து பார்ப்போம் - இன்ஷா அல்லாஹ்!

Thursday, May 23, 2013

உங்கள் மனைவியின் நிலையில் நீங்கள் இருந்தால்...? Empathy

ஆங்கிலத்தில் Empathy என்று ஒரு அருமையான சொல்.

Empathy என்றால் என்ன?

To be empathic is having the ability to identify with and understand another person's situation, feelings, attitudes, or motives.

ஒருவர் - மற்ற இன்னொருவரின் நிலையிலிருந்து கொண்டு அவருடைய சூழ்நிலைகளையும், உணர்வுகளையும், மனோபாவத்தையும், எண்ணங்களையும் புரிந்து கொள்ளும் தன்மைக்கு empathy என்று பெயர்.
இந்தத் தன்மையை மிக அழகாக விளக்குகிறது ஒரு கதை.


இதோ அந்தக் கதை!

அது ஒரு குளிர்காலம். அது ஒரு சிறிய நகரம். அங்கே ஒரு சமூக நல மையம். அங்கே சிலர் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கின்றனர்! அந்நகரத்தில் வீடில்லாதோர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது குறித்தும், அதற்கு தாங்கள் என்ன செய்திடலாம் என்பது குறித்தும் தான் பேச்சு!

பல்வேறு கருத்துக்களை முன் வைத்து கவலையுடன் அவர்கள் பேசிக்கொண்டிருந்த போது, திடீரென்று கதவைத் திறந்து கொண்டு ஒரு வயதான மூதாட்டி உள்ளே நுழைந்தார். வளைந்து விட்ட முதுகு. முகத்தில் களைப்பு. கந்தல் துணிகளே அவருடைய ஆடைகள்.

சேவை மையத்தின் தலைவி வியப்புடன் கேட்டார்: "என்ன உதவி வேண்டும் உங்களுக்கு?"

"முதலில் நீங்கள் என்னை மன்னிக்க வேண்டும் - இவ்வாறு அனுமதி இன்றி உள்ளே நுழைந்து உங்களுக்குச் சிரமம் தந்ததற்காக! இங்கே மிக அருகில் உள்ள இராணுவ மையம் எங்கிருக்கின்றது என்று உங்களால் சொல்ல முடியுமா? எனக்கு அங்கே போய் ஒரு ஜோடி காலணிகள் கிடைக்குமா என்று பார்த்திட வேண்டும்?"

அந்த மையத்தின் தலைவி முதலிலேயே பார்த்து விட்டார் - அந்த மூதாட்டியின் பாத அணிகள் இரண்டிலும் நிறைய ஓட்டைகள்! எந்த நேரத்திலும் அவை பிய்ந்து விடும் நிலையில்.

"உங்கள் அளவு என்னம்மா?" - கேட்டார் அந்தத் தலைவி.

"எட்டரை அம்மா!' என்றார் மூதாட்டி.

உடனே அந்தத் தலைவி கீழே குனிந்து தனது காலணிகளைக் கழற்றி அவர் கையில் கொடுத்து, "இது உங்களுக்கு சரியாக இருக்கிறதா, பாருங்கள்", என்றார்.

"இதனை நான் எப்படி அணிந்திட முடியும்? இது விலை உயர்ந்த புத்தம் புதிதான காலணியாக அல்லவா இருக்கிறது!" என்றார் மூதாட்டி.

தலைவி, "பரவாயில்லை, போட்டுப் பாருங்கள்!" என்றார்.

அந்த மூதாட்டி அந்த புத்தம் புதிய காலணிகளை அணிந்து பார்க்கிறார். "என்ன ஒரு மிருதுவாக கதகதப்பாக இது இருக்கின்றது!" என்று வியக்கிறார். லேசான ஒரு புன்சிரிப்பு அவர் முகத்தில்.

தலைவி அம்மூதாட்டியின் கரம் பிடித்துச் சொன்னார்: "இவை உங்களுக்குத் தான்! எனக்கு வீட்டில் இன்னொன்று இருக்கின்றது!"

அந்த ஏழை மூதாட்டி நன்றி சொல்லி விட்டு அங்கிருந்து  புறப்பட்டார். "இறைவன் உங்களை வாழ்த்துவானாக!" என்று கூறியவராக.

அம்மூதாட்டி சென்றதும் அங்கே ஒரு பெரிய அமைதி! யாரும் வாய் திறக்கவே இல்லை! அனைவரும் நெகிழ்ந்து போய் விட்டனர்! ஒருவர் மட்டும் கேட்டார்:

"மேடம், ஆனால் நீங்கள் எப்படி வீட்டுக்குச் செல்வீர்கள்?" பனி கொட்டிக் கொண்டிருக்கின்றது; காலணிகள் இல்லாமல் எப்படி நீங்கள் செல்வீர்கள்?"

கருணை உள்ளம் படைத்த அந்தத் தலைவி சொன்னார்: "எனது காலுறைகள் சற்று கனமானவை தான்! பரவாயில்லை! மேலும் எனக்கு இங்கே ஒரு ஜோடி காலணியும் இருக்கத் தானே செய்கிறது!"

அந்த வயதான மூதாட்டி விட்டுச் சென்ற கந்தலான காலணியை அணிந்தவராக புறப்பட்டார் அவர் வீட்டுக்கு!

"மேடம், ஜாக்கிரதை! காலணிகள் ஓட்டையாக இருக்கின்றன! பனிப்பொழியும் பாதையில் எச்சரிக்கையுடன் செல்லுங்கள்! - என்றார் இன்னொருவர்.

புன்சிரிப்புடன் பதில் சொன்னார் அந்தத் தலைவி: "ஆமாம்! நான் பார்த்துக்கொள்கிறேன்; வயதான ஏழை மூதாட்டி ஒருவர் = ஓட்டைக் காலணிகளை அணிந்து கொண்டு எப்படித் தான் நடப்பார் என்பதை நான் அனுபவித்துப் பார்த்திட முடியும் அல்லவா?

ஆம்! இது தான் இரக்கமுள்ள இதயம்!

இந்தக் கதை கணவன் மனைவியருக்கு மிக அற்புதமான ஒரு பாடத்தைக் கற்றுக் கொடுக்கின்றது.

இல்லறத்தில் பிரச்னை! கணவனும் மனைவியும் ஆலோசனை கேட்க வருகின்றனர். அங்கே கணவனும் மனைவியும் ஆலோசகரிடம் என்ன சொல்வார்கள் தெரியுமா?

கணவன் என்ன சொல்வார்?

தனக்கும் தன் மனைவிக்கும் இடையே உள்ள கருத்து வேறுபாடுகளை அடுக்குவார்; தன் மீது தவறே இல்லை என்று அடித்துப் பேசுவார். மனைவி செய்கின்ற தவறுகளைப் பட்டியல் போடுவார். பேசுவார், பேசுவார், அடுக்கிக் கொண்டே போவார் மனைவியின் குறைகளை!


பதிலுக்கு மனைவி என்ன சொல்வார்?

கணவனுக்கு சற்றும் தான் சளைத்தவர் இல்லை என்பதை நிரூபித்திடும் வண்ணம் அவரும் அடுக்குவார் - கணவனின் குறைகளை!

ஆலோசகர் (counselor) கேட்பார்: "உங்கள் மனைவியின் நிலையில் நீங்கள் இருப்பதாக எண்ணிக் கோண்டு - உங்கள் மனைவியைப் பற்றிப் பேசுங்கள்" என்றாலோ... அல்லது "உங்கள் கணவனின் நிலையில் உங்களை வைத்துக்கொண்டு உங்கள் கணவரைப் பற்றிப் பேசுங்கள்" என்றாலோ.... பதில் சொல்வதற்குத் தடுமாறுகிறார்களாம். இருவருமே அமைதியாகி விடுகிறார்களாம்!

அங்கே பேசுவதற்கு ஒன்றும் இருப்பதில்லை! ஏனெனில் ஒருவர் மற்றவரின் மன நிலையில் இருந்து கொண்டு பிரச்சனைகளைப் பார்த்திடும் போது - அவைகளெல்லாம் பிரச்சனைகளே இல்லை என்றாகி விடுகின்றன!

எனவே தான் சொல்கிறோம். கணவன் மனைவியருக்குள் பிரச்சனைகள் தோன்றினால் - உடனே உங்கள் துணைவரின் நிலையில் உங்களை வைத்து சிந்தியுங்கள். உங்கள் கண்ணோட்டம் முழுவதும் மாறிப்போய் விடும்!

இரக்க உணர்வு மேலிடும்! குறைகளைப் பொறுத்துக் கொள்வீர்கள்! மன்னிக்கத்தொடங்கி விடுவீர்கள்! அன்பும் நேசமும் மேலோங்கும்!

அங்கே இருவரும் சேர்ந்தே பிரச்சனையைத் தீர்ப்பது எப்படி என்று பேசத் தொடங்குவார்கள். கருத்துக்கள் அங்கே தாராளமாக பரிமாறப்படும்!

ஒருவர் மற்றவரின் மன நிலையிலிருந்து கொண்டு பிரச்சனைகளைப் பார்த்திடும்போது கருணை தானாகவே சுரக்கும் - அந்த சமூக மையத்தின் தலைவியைப் போல!

இத்தகைய கருணை உள்ளம் கணவன் மனைவி இருவருக்கும் வேண்டும்!

"கருணை உணர்வு எதனையும் அழகாக்கி விடும்!" (முஸ்லிம்)

ஆம்! கருணை உணர்வு திருமண உறவையும் அழகாக்கிவிடும்! தேவை - Empathy மட்டுமே!