Showing posts with label பாலுறவு. Show all posts
Showing posts with label பாலுறவு. Show all posts

Saturday, May 10, 2014

பாலுறவுக்கு மென்மை மிக மிக அவசியம்!

சுன்னத்தான இல்லறம்:

(Tips on Sex)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: “மென்மை ஒரு விஷயத்திலிருந்தால் அதை அலங்கரிக்கவே செய்யும். மென்மை எந்த விஷயத்தில் அகற்றப்பட்டுள்ளதோ அதைக் கோரப்படுத்திவிடும்.” (ஸஹீஹ் முஸ்லிம்)

மென்மை கடைபிடிக்கப்பட்டால் பாலுறவு கூட அலங்காரம் தான்!


**

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக ஜரீர் இப்னு அப்துல்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: “எவர் மென்மையை இழந்தாரோ அவர் நன்மையை இழந்தார்.” (ஸஹீஹ் முஸ்லிம்)

பாலுறவில் போய் நன்மையை இழப்பார்களோ?

**

முதலிரவில்....

குறிப்பாக - முதலிரவில் கணவன் மென்மையை அவசியம் கடைபிடிக்க வேண்டும். ஏனெனில் முதல் அனுபவமே கசந்து போய் விட்டால்? சற்றே சிந்தியுங்கள்.

திருமணம் செய்து வைக்கும் இமாம், திருமணம் முடிந்தவுடன் மாப்பிள்ளையை அழைத்து இது சம்பந்தமாக அறிவுறுத்தி அனுப்பி வைத்தல் மிக நன்று!

**

பாலுறவில் முரட்டுத் தனம் வேண்டாம்!

அனஸ்(ரலி) அறிவிக்க்கிறார்கள்: (ஒரு பயணத்தில் என் தாயார்) உம்மு சுலைம்(ரலி) அவர்கள் பயணப் பொருட்களுடன் (அவற்றின் காவலராக) இருந்தார்கள். நபி(ஸல்) அவர்களின் அடிமையான ‘அன்ஜஷா’ (நபியவர்களுடைய) துணைவியரின் ஒட்டகங்களைப் பாட்டுப் பாடி ஓடச் செய்து கொண்டிருந்தார்.

அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘அன்ஜஷ்! நிதானமாக ஓட்டிச் செல்! (ஒட்டகச் சிவிகைக்குள் இருக்கும்) கண்ணாடிக் குடுவைகளை (பெண்களை) உடைத்துவிடாதே!’ என்றார்கள். (புகாரி – 6202)

பாடம்: பெண்கள் மென்மையானவர்கள். அவர்களை மென்மையாகவே காயாண்டிட வேண்டும்:

**
பாலுறவில் அவசரம் வேண்டாம்!

ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவிக்கிறார்கள்: தபூக் போரிலிருந்து திரும்பிக் கொண்டிருந்த என்னிடம் நபி(ஸல்) அவர்கள், ‘நீ இரவில் மதீனாவுக்குள் நுழைந்த கையோடு உன் வீட்டாரிடம் சென்றுவிடாதே!

வெளியூர் சென்ற கணவரைப் பிரிந்திருக்கும் பெண் சவரக்கத்தியைப் பயன்படுத்தித் தன்னை ஆயத்தப்படுத்திக் கொள்ளும் வரை, தலைவிரி கோலமாயிருக்கும் பெண் தலைவாரிக்கொள்ளும் வரை பொறுமையாயிரு!” என்று கூறிவிட்டு, ‘புத்திசாலித்தனமாக நடந்து கொள்; புத்திசாலித்தனமாக நடந்துகொள்!” என்று கூறினார்கள். (புகாரி 5246)

கிணற்று நீரை வெள்ளமா கொண்டு போய் விடும்? எதற்கு அவசரம்?

**

பாலுறவில் நிதானமான அணுகுமுறை தேவை!

"நிதானம் என்பது அல்லாஹ்வின் புறத்திலிருந்து வருவது; அவசரம் என்பது ஷைத்தானிடமிருந்து வருவது!" (திர்மிதி)

பாலுறவுக்கும் நிதானம் தேவை தான்! இதில் உங்களை அவசரப்படுத்துவதெல்லாம் ஷைத்தான் தான்!

**

முன் விளையாட்டு – வலியுறுத்தப்பட்ட சுன்னத்!

இமாம் முனவி ரஹ்மதுல்லாஹி அலைஹி உரைக்கிறார்கள்: “பாலுறவுக்கு முன் – முன்விளையாட்டும் அழுத்தமான காதல் முத்தங்களும் வலியுறுத்தப்பட்ட நபிவழியாகும். (ஸுன்னா முஅக்கதா) .

அதற்கு மாற்றமாக நடப்பது விரும்பத்தகாததாகும் (மக்ரூஹ்)”. (ஆதாரம்: ஃபைழ் அல்-காதிர் ஷரஹ் அல்-ஜாமிஃ அல்-ஸகீர் 5:115)

முன் விளையாட்டு இல்லாத உறவில் கணவனின் தேவை விரைவில் நிறைவேறிவிடும்! ஆனால் மனைவியின் தேவை நிறைவேறவே செய்யாது! கவனம்!!

**

தேவை முழு திருப்தி!

பாலுறவில் திருப்தி என்பது உங்களுக்கு எந்த அளவு முக்கியமோ, அவர்களுக்கும் அதேபோன்று திருப்தி என்பது மிக முக்கியம்!

கணவர்களுக்குத் தம் மனைவியரிடம் இருக்கும் உரிமைகள் போன்றே, முறைப்படி அந்தக் கணவர்கள் மீது அவர்களின் மனைவியருக்கும் சமமான உரிமைகள் உண்டு; (2:228)

பாலுறவும் பெண்ணுரிமைகளுள் ஒன்று தான் என்பதை மறந்து விட வேண்டாம்!

பாலுறவு கசந்து போவதும் கூட – மன விலக்கு கோருவதற்கு ஒரு வலிமையான காரணமாக அமைந்து விடுவதுண்டு!

**

அனுபவியுங்கள்!

பாலுறவு என்பது குழந்தை பெற்றுக் கொள்வதற்கு மட்டும் அல்ல! பாலுறவின் முக்கியமான நோக்கமே இன்பம் அனுபவிப்பது தான்! அதற்கு வயது ஒரு தடையே கிடையாது!

இதனைப் புரிந்து கொண்டவர்களே புத்திசாலிகள்!

Monday, March 3, 2014

பாலுறவை - மிகச் சிறப்பான அனுபவமாக ஆக்கிக் கொள்வது எப்படி?

“வ ஆஷிரூஹுன்ன பில் ம'-ரூஃப்!”

- இது சூரத்துன் நிஸாவின் 19 வது வசனத்தின் ஒரு சிறிய பகுதி தான்!

இதன் பொருள்:

" நன்மையான காரியங்கள் அனைத்திலும் அவர்களுடன் மிக நெருங்கிய உற்ற நண்பர்களாக நடந்து கொள்ளுங்கள்"

ஆங்கிலத்தில்:

"behave with them as intimate companions in all the good things that are allowed in Islam "

இப்போது கேள்வி என்னவென்றால் –

நெருக்கம் என்றால் என்ன? – என்பது தான்!


நெருக்கம் என்பது உடலளவில் மட்டும் தான் என்றால் – அது கணவன் மனைவி உறவையே கொச்சைப் படுத்துவது போல் ஆகி விடும்.

கணவன் – மனைவியர் தங்களின் இல்லற வாழ்வின் அனைத்துப் பரிமாணங்களிலும் நெருங்கி வாழ்வதைத் தான் நெருக்கம் என்ற சொல் பொதுவாகக் குறிக்கின்றது.

அறிவு பூர்வமான நெருக்கம்,

ஆன்மிக விஷயங்களில் உணர்வு பூர்வமான நெருக்கம், 

அன்பு, காதல், இரக்கம் போன்ற விஷயங்களில் இதய பூர்வமான நெருக்கம், 

கணவன் மனைவி – இருவரிடமும் சிறப்பாக அமைந்திருக்கின்ற நற்குணங்களினால் (unique positive qualities) ஏற்படுகின்ற நெருக்கம், 

இறுதியாக – இவை அனைத்தும் ஒன்று சேர்வதால் ஏற்படுகின்ற உடல் ரீதியான நெருக்கம் 

 - இவை அனைத்திலும் ஏற்படுகின்ற நெருக்கமே பரிபூரணமான நெருக்கம் ஆகும்!

இப்படிப்பட்ட பரிபூரணமான நெருக்கம் கணவனுக்கும் மனைவிக்கும் எவ்வாறு ஏற்படும்?

இப்படிப்பட்ட நெருக்கம் ஏற்பட கணவன்மார்கள் செய்திட வேண்டியது என்ன?

மனைவி என்பவள் ஒரு பொக்கிஷம்! ஒவ்வொரு பெண்ணும் ஒரு பொக்கிஷம் தான்! பல அற்புதங்களைத் தனக்குள் புதைத்து வைத்திருக்கும் புதையல் தான்!

எனவே கணவன்மார்கள் செய்திட வேண்டியதெல்லாம் - தன் மனைவியின் “சிறப்பியல்புகளைப்” பட்டியல் போடத் துவங்கி விட வேண்டும்!

உங்கள் மனைவியின் தனித்தன்மைகள் என்னென்ன?

அறிவு சார்ந்த விஷயங்களில் - உங்கள் மனைவியின் தனித்தன்மை என்ன? 

அது போலவே ஆன்மிக விஷயங்களில் – உங்கள் மனைவியின் தனித்தன்மை என்னென்ன? 

அன்பு செலுத்துதல், பாசம் காட்டுதல், இரக்கப்படுதல் போன்ற உணர்வு சார்ந்த விஷயங்களில் உங்கள் மனைவி எப்படி? 

என்னென்ன நற்குணங்கள் உங்கள் மனைவியிடத்தில் குடி கொண்டிருக்கின்றன?

இவை அனைத்தையும் ஒரு சேரப் பெற்றிருக்கின்ற ஒரு பெண்ணை – “எனக்கே எனக்காக!” – என்று வல்லோன் அல்லாஹு வழங்கியிருக்கின்றான் என்று எண்ணும்போது – இரண்டு விஷயங்கள் ஏற்படும்!

ஒன்று: அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் உணர்வு!

இரண்டு: உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் அற்புதமான நெருக்கம் ஒன்று ஏற்பட்டு விடும்! அதுவும் இயல்பாகவே!

இவ்வாறு உங்கள் மனைவியின் “சிறப்பியல்புகளை” அனு தினமும் உங்கள் பேச்சின் மூலமாகவும், செயல்பாடுகள் மூலமாகவும் – கொண்டாடுங்கள்! கொண்டாடுங்கள்! கொண்டாடிக் கொண்டே இருங்கள்! 

இந்தக் கொண்டாட்டத்துக்கு நடுவிலே இயல்பாக - ஏற்படுகின்ற உடல் ரீதியான நெருக்கம் இருக்கின்றதே – அது –கணவன் மனைவி பாலுறவை அற்புதமான அனுபவமாக ஆக்கிக் காட்டி விடும்!

ஆனால் அதற்கு நேர் மாற்றமாக – மனைவியின் – குறைகளையே பட்டியல் போட்டுக் கொண்டிருந்தால் – கணவன் மனைவி நெருங்கி வாழவே முடியாது! உடல் நெருக்கம் கூட – சடங்காகிப் போய்விடும்!

அது போலவே மனைவியர்களும் தங்கள் கணவன்மார்களின் சிறப்பியல்புகளைப் பட்டியல் போடுங்கள்! அவைகளை சொல்லாலும் செயலாலும் கொண்டாடிக் கொண்டே இருங்கள்! கணவனின் நெருக்கத்தை உணர்வு பூர்வமாக அனுபவிக்கத் தவறி விடாதீர்கள்!

நபியவர்களின் இல்லற வாழ்வை சற்று நோக்கினால் இது இன்னும் தெள்ளென விளங்கும்!

சான்றுக்கு ஒன்று: 

அன்னை ஆயிஷா (ரலி) அவர்களை நபியவர்கள் எப்படிக் கொண்டாடினார்கள்?

”தரீத் என்னும் உணவு மற்ற உணவுகளை விட சிறப்பாக இருப்பது போன்று மற்ற பெண்களைவிட ஆயிஷா(ரலி) அவர்கள் சிறப்பானவர்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ” (திர்மிதி)

எழுதியவர்: S A மன்சூர் அலி

Saturday, December 21, 2013

மறுக்க வேண்டாம்!

நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்: "தன் உடலைக் கணவனுக்கு விலக்கி வைக்காமலிருப்பது ஒரு மனைவியின் கடமையாகும். அது சிறிய ஒட்டகப் பல்லக்கில் அமர்ந்திருந்தாலும் சரி. கடமையான நோன்பைத்தவிர. கணவனின் அனுமதியின்றி நோன்பு நோற்காதிருப்பதும் அவள் மீது கடமையாகும். அதாவது அவள் அவ்வாறு செய்தால் குற்றவாளி ஆவாள். அந்த நோன்பு அவளிடமிருந்து ஏற்றுக்கொள்ளப்படாது.


கணவனின் அனுமதி இல்லாமல் மனைவி அவனது வீட்டை விட்டு வெளியே செல்லக் கூடாது. அவள் அவ்வாறு செய்தால் அவள் பாவமன்னிப்பு கோரி திரும்பும் வரையில் அல்லாஹ்வும், வானவர்களும் சபித்துக் கொண்டே இருப்பார்கள். கணவன் ஓர் அநியாயக்காரனாக இருப்பினும் சரி." (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) - நூல்: அபூதாவூத்)

Thursday, December 19, 2013

பாலுறவு குறித்து மனம் திறந்து பேசுங்கள்!

அன்னை ஆயிஷா ரலி அவர்கள் ஒரு மிகச் சிறந்த அறிவாளி! Super Intellect! நபி ஸல் அவர்கள் ஆயிஷா ரலி அவர்களை மிகவும் நேசித்ததற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். நபியவர்கள் ஒரு முறை சொன்னார்கள்:

“ஆயிஷாவின் படுக்கையில் (நான் இருக்கும் போதே தவிர) வேறெந்த மனைவியின் படுக்கையிலும் வஹீ (வேத வெளிப்பாடு) எனக்கு வருவதில்லை….” (புகாரி)

அன்னை ஆயிஷா ரலி அவர்கள் வடிகட்டிப் பேசுவதில் வல்லவர்கள். எதைப் பேச வேண்டும்; எதனை மறைத்து விட வேண்டும். எதனை சூசகமாக உணர்த்திட வேண்டும் என்பதில் கை தேர்ந்தவர்கள்.




இரண்டு சான்றுகள்:

ஓன்று:

ஒரு நீண்ட நபிமொழியில் இவ்வாறு வருகிறது:

“…..ஆகவே, அவர்கள் (தம் சார்பாக) ஸைனப் பின்த்து ஜஹ்ஷ் அவர்களை அனுப்பி வைத்தார்கள். அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, (சற்று) கடுமையாகப் பேசி, உங்கள் மனைவிமார்கள் – அபூபக்ருடைய மகளான ஆயிஷாவின் விஷயத்தில் தாங்கள் நடந்து கொள்வது போன்றே பிற மனைவிமார்களிடமும் நீதியுடன் நடந்து கொள்ளும்படி அல்லாஹ்வின் பெயரால் உங்களிடம் கேட்கின்றார்கள் என்று கூறினார்கள்.

நான் (ஆயிஷா) அமர்ந்து கொண்டிருக்க, அவரது குரல் உயர்ந்தது. அவர் என்னைக் குறை கூறித் திட்டினார். எந்த அளவுக்கென்றால், அல்லாஹ்வின் தூதர் நான் பதில் பேசுவேனா என்று எதிர்பார்ப்பது போல் என்னையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். உடனே, நான் ஸைனபுக்கு பதில் சொல்லி, இறுதியில் அவரை வாயடைக்கச் செய்து விட்டேன். நபி (ஸல்) அவர்கள் என்னைப் பார்த்து, இவள் (உண்மையிலேயே) அபூபக்ருடைய மகள் தான் என்று கூறினார்கள். (புகாரி)

ஆயிஷா அவர்கள் ஸைனப் பின்த்து ஜஹ்ஷ் அவர்களிடம் எப்படிப் பேசினார்கள்? என்ன சொன்னார்கள், எப்படி வாயடைக்கச் செய்தார்கள் – என்பதையெல்லாம் வெளிப்படையாகப் பேசாமல் மறைத்து விட்டார்கள் பார்த்தீர்களா?

இரண்டு:

இன்னொரு நீண்ட நபிமொழியின் ஒரு பகுதி இது:

அபூ பக்ர்(ரலி) (என்னருகே) வந்தபோது நபி(ஸல்) அவர்கள் தங்களின் தலையை என்னுடைய மடி மீது வைத்துத் தூங்கிக் கொண்டிருந்தார்கள். ‘நபி(ஸல்) அவர்களையும் மக்களையும் தங்க வைத்துவிட்டாயே? அவர்கள் தங்கிய இடத்திலும் தண்ணீர் இல்லை; அவர்களிடமும் தண்ணீர் இல்லை’ என்று கூறினார்கள். அவர்கள் எதைச் சொல்ல அல்லாஹ் நாடினானோ அதையெல்லாம் சொல்லிவிட்டு, தங்களின் கையால் என்னுடைய இடுப்பில் குத்தினார்கள்.(புகாரி)

அபூபக்ர் அவர்கள் அன்னை ஆயிஷாவை எப்படியெல்லாம் விமர்சித்தார்கள் என்பதை வெளிப்படையாகச் சொல்லாமல் – “அவர்கள் எதைச் சொல்ல அல்லாஹ் நாடினானோ அதையெல்லாம் சொல்லிவிட்டு” – என்கிறார்கள். எவ்வளவு அறிவு நுட்பம் பார்த்தீர்களா?

ஆனால் – அதே அன்னை ஆயிஷா அவர்கள் அண்ணலாருடன் தனது பாலுறவு வாழ்க்கையை பற்றிய குறிப்புகளை ஏன் மறைக்காமல் இந்த உம்மத்துக்கு வெளிப்படுத்திக் காட்டினார்கள் என்பது நாம் அனைவரும் சிந்திக்க வேண்டிய விஷயம்.

பின் வரும் நபிமொழிகளைக் கவனியுங்கள்:

அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அறிவிக்கிறார்கள்: “அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தம் மனைவியர்களில் ஒருவரை முத்தமிட்டுவிட்டு, ஒளூச்செய்யாமலே தொழச் சென்றார்கள். (ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடமிருந்து அறிவிக்கும்) உர்வா கூறுகிறார், “நான் ஆயிஷாவிடம் ‘அது நீங்களாகத்தான் இருக்கும்?’ என்றேன். அதற்கு அவர்கள் புன்னகைத்தார்கள்:.” (ஆதாரம் ஸுனன் திர்மிதீ, ஸுனன் அபூதாவூத்)

தன் கணவர் தன்னை முத்தமிட்டதை மறைமுகமாக ஏன் அறிவிக்கின்றார்கள்? உர்வா அவர்களும் விடாமல் அது அன்னை ஆயிஷா அவர்கள் தாம் என்பதை விளக்க வைத்து விட்டார்களே!

நபி அவர்கள் நோன்பு நோற்ற நிலையில் (தம் மனைவியை) முத்தமிடுவார்கள். மேலும், நோன்பு நோற்ற நிலையில் கட்டியணைப்பார்கள். ஆனால், அவர்கள் தம் இச்சையைக் கட்டுப்படுத்திக் கொள்ளும் சக்தியுடையவராக இருந்தார்கள் என, ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார்கள். புகாரி, முஸ்லிம்

நானும் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும்-எனக்கும் அவர்களுக்கும் இடையில் உள்ள ஒரு பாத்திரத்திலிருந்து குளிக்கக் கூடியவர்களாக இருந்தோம். எனக்காக கொஞ்சம் தண்ணீரை விட்டு வையுங்கள் எனக்காக கொஞ்சம் விட்டு (தண்ணீரை) வையுங்கள் என நான் கூறுகின்ற வரை அவர்கள் என்னை முந்திக் கொள்வார்கள் என ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறியதாக மூஆதா ரளியல்லாஹு அன்ஹா அறிவிக்கிறார்கள். அவ்விருவரும் கடமையாகக் குளிக்க வேண்டியவர்களாக இருந்தனர் எனவும் கூறுகிறார்கள்.

நான் மாதவிடாய் வந்த நிலையில் (ஒரு பாத்திரத்தில்) பருகிவிட்டு பிறகு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அப்பாத்திரத்தைக் கொடுப்பேன். நான் எங்கு வாய் வைத்தேனா அதே இடத்தில் தங்களது வாயை வைத்து குடிப்பார்கள். எலும்புடன் ஒட்டியிருக்கும் இறைச்சியை நான் கடித்துவிட்டு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கொடுப்பேன். நான் எங்கு வாய் வைத்திருந்தேனோ அங்கேயே வாயை வைப்பார்கள் என ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறுகிறார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா (முஸ்லிம்)

அன்னை ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்களிடம் ‘அதா’வு என்பவர் கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா என்று நேரடியாக கேட்ட போது, பார்ப்பதற்கு அனுமதி உள்ளதாக சூசகமாக உணர்த்தினார்கள் என்ற ஹதீஸ் இப்னு ஹப்பானில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அண்ணலார் அவர்கள் – தம்மை முத்தமிடுவது பற்றி, கட்டியணைத்துக் கொள்வது பற்றி, உடலுறவு கொள்வது பற்றி, குளிப்பது பற்றி, மாத விலக்கு நேரத்தில் நபியவர்களின் செயல்கள் பற்றியெல்லாம் ஏன் அவர்கள் வெளிப்படையாகப் பேசிட வேண்டும். இவை அனைத்தும் அவர்களது தனிப்பட்ட “இல்லற விஷயங்கள்” என்று மூடி மறைத்திருக்கலாமே? ஆனால் அப்படி செய்யவில்லை! அதற்குக் காரணம் இருக்கின்றது!

இந்த உம்மத் – பாலுறவு குறித்து அலட்சியம் செய்து விடக்கூடாது என்பதே அதற்கான வலுவான காரணமாக இருக்க முடியும்.

ஆனால் நமது நிலை என்ன? பாலுறவு குறித்து வெளிப்படையாகப் பேசிட நமக்கு மிகப்பெரிய தயக்கங்கள் உண்டு!

நமது இறையச்சம் தான் இதற்குக் காரணமா என்றால் நிச்சயமாக இல்லை! நாம் ஒன்றும் நமது அன்னையர்களை விட இறையச்சம் உடையவர்களா என்ன?

அடுத்து நமது வெட்க உணர்ச்சி தான் காரணமா என்றால் – அதனை நாம் உடைத்துத் தான் ஆக வேண்டும்.

“பெண்களில் அன்ஸார்களின் பெண்களே நல்லவர்கள். அவர்கள் மார்க்கத்தைக் கேட்டு தெளிவு பெறுவதிலிருந்து அவர்களது வெட்கம் அவர்களை தடுக்கவில்லை” என ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

அல்லது – சொல்லித்தெரிவது அல்ல இந்தக் கலை – என்ற அலட்சியமா என்றால் – ஆம்! அந்த அலட்சியம் தான்!

ஆனால் இந்த அலட்சியம் தான் நமது சமூகத்தின் கணவன் மனைவியர் உறவுகளை மிகுந்த அளவுக்கு பாதித்திருக்கின்றது! இதனை நாம் உணர்ந்து தான் ஆக வேண்டும்.

நாம் ஒன்றும் பாலியல் கல்வியை “சொற்பொழிவு மன்றங்களில்” ஒலிபெருக்கி வைத்து பரப்புங்கள் என்று சொல்லவில்லை! அது தேவையும் இல்லை. நாம் சொல்ல வருவது – இது குறித்த “கல்வியறிவை” மஸ்ஜித்களில் வைத்து நமது இளைய சமூகத்துக்கு ஊட்டுங்கள் என்பது தான்.

இதன் அடுத்த கட்டம் தான் – கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் தங்களின் பாலுறவுத் தேவைகள் குறித்து மனம் திறந்துப் பேசிட வேண்டிய கட்டமாகும். கணவனும் தன் தேவைகளை மனைவியிடம் பேசிட வேண்டும். மனைவியும் கணவனிடத்தில் பேசிட வேண்டும். இதுவே நாம் நமது இளைய தலைமுறை கணவன்மார்களுக்கும், மனைவியருக்கும் வலியுறுத்திச் சொல்வதாகும்.

இது விஷயத்தில் – பெண்கள் தயங்குவதற்குக் காரணம் இருக்கிறது. அது அவர்களின் இயல்பான வெட்க உணர்ச்சி. இந்த வெட்கத்தையும் கணவன்மார்களே உடைத்தெறிந்திட வேண்டும். இதனை நாம் வலியுறுத்துவதற்குக் காரணம் – மனைவியின் பாலுறவுத் தேவைகள் சரிவர நிறைவேறாத நிலையில் தமது அளவுக்கு மீறிய வெட்க உணர்ச்சியினால் அது குறித்துக் கணவனிடம் பேசத் தயங்கியதால் ஏற்பட்ட விளைவுகள் என்ன?

மண முறிவு! அல்லது திருப்தியற்ற இல்லற வாழ்க்கை! அல்லது கணவனுக்கே துரோகம்!

ஆனால் இன்றைய பெண்களோ – இந்த விஷயத்தை வெளியே கொண்டு வரத் தொடங்கி விட்டார்கள். அவர்கள் பெண் கவுன்ஸலர்களை அணுகுகிறார்கள். ஒரு இஸ்லாமியப் பெண் அறிஞரே இது குறித்து விரிவாக – குறிப்பாக இளைஞர்களுக்கு பாலியல் அறிவுரைகளை விரிவாகவும் வெளிப்படையாகவும் எழுதியிருக்கிறார்கள். அவர் பெயர்: ருகையா வாரிஃத் மக்ஸூத் அவர்கள்.

விழித்துக் கொள்ள வேண்டியது இளைய ஆண் வர்க்கமே!

குறிப்பாக நாம் இங்கே கணவன்மார்களுக்கு வலியுறுத்தும் பாலுறவுப் பாடங்கள்:

1. முத்தமிடுங்கள் – உங்கள் மனைவியை! அடிக்கடி முத்தமிடுங்கள்! எத்தனை ஆண்டுகள் ஆனாலும் முத்தமிடுங்கள்! ஒரு ஐந்து வினாடியாவது தொடரட்டும் உங்கள் முத்தம்.

2. முன் விளையாட்டு இன்றி பாலுறவு வேண்டாம்! முத்தமும் இன்சொற்களும் – பாலுறவுக்கு முன் மிக அவசியம். முன் விளையாட்டின் மூலமே மனைவி நனைகிறார் (becoming wet). பாலுறவுக்குத் தயாராகிறார். முன் விளையாட்டு இன்றி பாலுறவைத் துவக்கினால் – மனைவியருக்கு அது சிரமம் ஆகி விடும். மேலும் மனைவியின் தேவை நிறைவேற்றபடாமலேயே கணவன் தன் தேவையை முடித்துக் கொண்டு விடுவான். எச்சரிக்கை!

3. நேரம் வாய்க்கும்போதெல்லாம் – மனைவியைக் கட்டிப்பிடித்துக் கொள்ளுங்கள். – அது சமையல் அறையாக இருந்தாலும் சரியே! தனிமை கிடைக்கும்போதெல்லாம் கட்டியணைத்துக் கொஞ்சுங்கள்!

4. பாலுறவில் உங்கள் துணைக்கு என்னென்னவெல்லாம் பிடிக்கும் என்பதை வெளிப்படையாகப் பேசித்தெரிந்து கொள்ளுங்கள். தயக்கம் வேண்டாம் என்று உங்கள் துணையை ஊக்கப் படுத்துங்கள்.

5. நான்கு மாதங்களுக்கு மேலாக உங்கள் மனைவியைப் பிரிந்து செல்ல வேண்டாம்! அது எவ்வளவு பெரிய வேலையாக இருந்தாலும் சரி! ஷரீஅத்தில் அதற்கு இடமில்லை!

6. சந்தேகங்களை – உடனுக்குடன் மார்க்க அறிஞர்கள் அல்லது திருமண ஆலோசகர்களை அணுகி – விளக்கம் பெற்றுக் கொள்ளுங்கள். பாலுறவு குறித்து பல தவறான “நம்பிக்கைகள்” குறிப்பாக கணவன்மார்களிடத்தில் உண்டு. இவை களையப்பட வேண்டும்.

7. ஆண்மைக்குறைவை ஏற்படுத்தும் உணவுப்பழக்கங்களைக் கை விடுங்கள். குறை ஏற்படின் தகுந்த மருத்துவரை மட்டும் அணுகுங்கள்.

8. உடலை எப்போதும் தூய்மையாக வைத்துக் கொள்ளுங்கள். மனைவியர் தம் கணவன்மார்களுக்காகத் தங்களை அலங்கரித்துக் கொள்ளுங்கள். எத்தனை வயதானாலும் சரியே! அலட்சியம் வேண்டாம்.

9. படுக்கையறையில் விவாதங்கள் வேண்டாம்! ஒரே ஒரு மிகச்சிறிய சொல் கூட ஒரு இரவையே வீணாக்கி விடும்.

10. பாலுறவு – உங்கள் இல்லறத்தின் பிரிக்க முடியாத ஒரு அங்கம் என்பதை எப்போதும் மறந்து விட வேண்டாம்.

11. அனைத்து விஷயங்களிலும் கணவன் மனைவி இருவரும் நெருக்கமான நண்பர்களாக வாழுங்கள். ஏனெனில் – பாலுறவு என்பது – இரண்டு உடல்கள் சேர்வது மட்டும் அல்ல! இரண்டு இதயங்களும் சேர்வது தான்!

மனைவியிடம் மென்மை!

பொதுவாகவே எல்லா விஷயங்களிலுமே மென்மையை வலியுறுத்துகின்றான் வல்லோன் அல்லாஹு தஆலா.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

“அல்லாஹ் மென்மையானவன். அனைத்து விஷயங்களிலும் மென்மையையே நேசிக்கிறான்.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)



“அல்லாஹ் மென்மையானவன். மென்மையையே நேசிக்கிறான். கடினத் தன்மைக்கும், வேறெந்த பண்புகளுக்கும் அளிக்காத நற்கூலியை மென்மைக்கு அளிக்கிறான். (ஸஹீஹ் முஸ்லிம்)

அதே நேரத்தில் குறிப்பாக இல்லற வாழ்க்கையிலும் மென்மையைக் கடைபிடிக்கும்படி மார்க்கம் நமக்கு போதிக்கிறது:

அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: “ஆயிஷாவே! மென்மையாக நடந்துகொள். அல்லாஹ் ஒரு குடும்பத்தினருக்கு நன்மையை நாடினால் அவர்களுக்கு மென்மையின்பால் வழிகாட்டுகிறான்.”

மற்றோர் அறிவிப்பில்: “ஒரு குடும்பத்தினருக்கு அல்லாஹ் நன்மையை நாடினால் அவர்களிடம் மென்மையைப் புகுத்துகிறான்” என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (முஸ்னத் அஹ்மத்)

பொதுவாகவே கணவன் மனைவியருக்குள் ஆயிரம் கருத்து வேறுபாடுகள் அனு தினமும் தோன்றும். சின்னச் சின்னப் பிரச்னைகளுக்கெல்லாம் சட்டென்று கோபப்பட்டு சீற்றத்தைக் கொட்டி விடுவார்கள் கணவன்மார்கள். எனவே மனைவியைக் கண்டிக்கும் சமயத்திலும் மென்மையைக் கடைபிடிக்க வேண்டும்.

“பெண், விலா எலும்பைப் போன்றவள். அவளை நீ நிமிர்த்தினால் ஒடித்து விடுவாய். அவளிடம் நீ இன்பத்தை அடைய நாடினால், அவளிடம் குறையுள்ள நிலையிலேயே இன்பத்தை அடைந்து கொள்வாய்.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

கடினமாக நடந்து கொண்டால் – அதாவது மென்மை போய் விட்டால்…கணவன் மனைவி உறவு முறிந்து விட வாய்ப்பளித்ததாக ஆகி விடும்!

பெண்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள் என உங்களுக்கு நான் உபதேசிப்பதை ஏற்றுக் கொள்ளுங்கள்! ஏனெனில், பெண், (வளைந்த) விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டுள்ளாள். விலா எலும்பின் மிகக் கோணலான பகுதி அதன் மேல் பகுதியாகும். அதை நீ நிமிர்த்திக் கொண்டே போனால், ஒடித்து விடுவாய். அதை அப்படியே நீ விட்டுவிட்டால் கோணல் உள்ளதாகவே நீடிக்கும். ஆகவே, பெண்கள் விஷயத்தில் உங்களுக்கு நான் உபதேசிப்பதை ஏற்றுக் கொள்ளுங்கள்.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

மனைவியிடத்திலே கடினமாக நடந்து கொண்டால் – மென்மை கடைபிடிக்கப்படவில்லை எனில் – அவர்கள் உறவு என்னவாகும்?

1. காதல் குறைந்து விடும். சிரிப்பு அரிதாகி விடும். வீட்டுக்கு வரும்போதும், வீட்டை விட்டு வெளியேறும்போதும் மயான அமைதி ஒன்று நிலவும்.

2. பாலுறவு பாதிப்புக்குள்ளாகும். ஒருவர் நெருங்கி வந்தால் கூட மற்றவர் தட்டி விட்டு விடுவார். பல இரவுகள் வீணடிக்கப்படும்

3. இரக்க உறவு மறைந்து விடும். மன்னிக்கும் மனப்பான்மை வராது. “ என் மீது என்ன தப்பு? குறை அனைத்தும் என் துணையிடத்திலே தான்!” – என்ற மன நிலையில் இருவருமே இருப்பார்கள்.

4. இருவருக்கிடையில் மனம் விட்டுப் பேசும் வாய்ப்புகள் குறைந்து விடும். பிரச்னை ஒரு முடிவுக்கு வராது. அது மேலும் சிக்கலாகி விட வாய்ப்பு ஏற்பட்டு விடும்.

5. துணை நம் வைத்திருக்கும் கண்ணியம் (respect) குறைந்து விடும். நம்மைப்பற்றிய நல்லெண்ணம் குறைந்து விடும். குறைகளை அடுக்கத் தொடங்கி விடுவார்கள்.

6. நம்பிக்கை (trust) குறைந்து விடும். இது தான் பெரிய ஆபத்து!

7. குழந்தைகளின் மன நலம் பாதிப்படையும். இதுவும் பெரிய ஆபத்தே!

அதே நேரத்தில் மென்மை கடைபிடிக்கப்பட்டால் நன்மைகள் என்னென்ன?

1. கணவன் மனைவி காதல் ஊற்றெடுக்கும். மகிழ்ச்சி பொங்கும். கண் குளிர்ச்சிக்கு வழி வகுக்கும்.

2. பாலுறவு சிறப்பாக அமையும்.

3. தவறுகளை மன்னித்துக் கொள்வார்கள். தனது குறைகளை ஒத்துக் கொள்வார்கள்.

4. கணவன் மனைவி உரையாடல்கள் (communication) ஒரு இனிமையான அனுபவமாக இருக்கும்.

5. துணையிடத்தில் உள்ள நிறைகளை மட்டுமே பார்த்துக் கொள்வார்கள். குறைகளைப் பெரிது படுத்த மாட்டார்கள்.

6. ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் நம்பிக்கை அதிகரிக்கும். ஒருவருக்கொருவர் தம் வாழ்வையே அர்ப்பணித்துக் (commitment) கொள்வார்கள்.

7. குழந்தைகள் சிறப்பாக வளர்வார்கள்.

அடுத்து – பாலுறவிலும் மென்மை கடைபிடிக்கப்பட வேண்டும்:

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: “மென்மை ஒரு விஷயத்திலிருந்தால் அதை அலங்கரிக்கவே செய்யும். மென்மை எந்த விஷயத்தில் அகற்றப்பட்டுள்ளதோ அதைக் கோரப்படுத்திவிடும்.” (ஸஹீஹ் முஸ்லிம்)

பாலுறவில் அவசரம் வேண்டாம்!

ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவிக்கிறார்கள்: தபூக் போரிலிருந்து திரும்பிக் கொண்டிருந்த என்னிடம் நபி(ஸல்) அவர்கள், ‘நீ இரவில் மதீனாவுக்குள் நுழைந்த கையோடு உன் வீட்டாரிடம் சென்றுவிடாதே! வெளியூர் சென்ற கணவரைப் பிரிந்திருக்கும் பெண் சவரக்கத்தியைப் பயன்படுத்தித் தன்னை ஆயத்தப்படுத்திக் கொள்ளும் வரை, தலைவிரி கோலமாயிருக்கும் பெண் தலைவாரிக்கொள்ளும் வரை பொறுமையாயிரு!”) என்று கூறிவிட்டு, ‘புத்திசாலித்தனமாக நடந்து கொள்; புத்திசாலித்தனமாக நடந்துகொள்!” என்று கூறினார்கள். (புகாரி 5246)

முன் விளையாட்டு – பாலுறவை மென்மையாக்கி விடும்!

இமாம் முனவி ரஹ்மதுல்லாஹி அலைஹி உரைக்கிறார்கள்: “பாலுறவுக்கு முன் – முன்விளையாட்டும் அழுத்தமான காதல் முத்தங்களும் வலியுறுத்தப்பட்ட நபிவழியாகும். (ஸுன்னா முஅக்கதா) அதற்கு மாற்றமாக நடப்பது விரும்பத்தகாததாகும் (மக்ரூஹ்)”. (ஆதாரம்: ஃபைழ் அல்-காதிர் ஷரஹ் அல்-ஜாமிஃ அல்-ஸகீர் 5:115)

குறிப்பாக முதலிரவில் கணவன் மென்மையைக் கடைபிடிக்க வேண்டும். ஏனெனில் முதல் அனுபவமே கசந்து போய் விட்டால்? சற்றே சிந்தியுங்கள்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக ஜரீர் இப்னு அப்துல்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: “எவர் மென்மையை இழந்தாரோ அவர் நன்மையை இழந்தார்.” (ஸஹீஹ் முஸ்லிம்)

எனவே திருமணமாகும் இளைஞர்களுக்கு இது குறித்து அறிவுறுத்துவது – இமாம்களின் கடமை. பாலுறவு கசந்து போவதும் கூட – மன விலக்கு கோருவதற்கு ஒரு வலிமையான காரணமாக அமைந்து விடுவதுண்டு!

பெண்கள் மென்மையானவர்கள். அவர்களை மென்மையாகவே காயாண்டிட வேண்டும்:

அனஸ்(ரலி) அறிவிக்க்கிறார்கள்: (ஒரு பயணத்தில் என் தாயார்) உம்மு சுலைம்(ரலி) அவர்கள் பயணப் பொருட்களுடன் (அவற்றின் காவலராக) இருந்தார்கள். நபி(ஸல்) அவர்களின் அடிமையான ‘அன்ஜஷா’ (நபியவர்களுடைய) துணைவியரின் ஒட்டகங்களைப் பாட்டுப் பாடி ஓடச் செய்து கொண்டிருந்தார். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘அன்ஜஷ்! நிதானமாக ஓட்டிச் செல்! (ஒட்டகச் சிவிகைக்குள் இருக்கும்) கண்ணாடிக் குடுவைகளை (பெண்களை) உடைத்துவிடாதே!’ என்றார்கள். (புகாரி – 6202)

Wednesday, November 6, 2013

தாம்பத்திய வாழ்வில் தடுமாற்றமா?

திருமறையின் 23 வது அத்தியாயத்தின் முதல் 11 வசனங்களின் தமிழ் மொழிபெயர்ப்பைக் கீழே தந்துள்ளேன் உங்கள் சிந்தனைக்கு.

இவ்வசனங்கள் எனக்குள் ஏற்படுத்திய சிந்தனைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். நீங்களும் சிந்தியுங்கள்.

ஈமான் கொண்டவர்கள் நிச்சயமாக வெற்றி பெற்று விட்டனர்.


அவர்கள் எத்தகையயோரென்றால், தங்கள் தொழுகையில் உள்ளச்சத்தோடு இருப்பார்கள்.

இன்னும், அவர்கள் வீணான (பேச்சு, செயல் ஆகிய)வற்றை விட்டு விலகியிருப்பார்கள்.

ஸகாத்தையும் தவறாது கொடுத்து வருவார்கள்.

மேலும், அவர்கள் தங்களுடைய வெட்கத் தலங்களைக் காத்துக் கொள்வார்கள்.

ஆனால், அவர்கள் தங்கள் மனைவிகளிடமோ அல்லது தங்கள் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களிடமோ தவிர – (இவர்களிடம் உறவு கொள்வது கொண்டும்) நிச்சயமாக அவர்கள் பழிக்கப்படமாட்டார்கள்.

ஆனால், இதற்கு அப்பால் (வேறு வழிகளை) எவர் நாடுகிறாரோ அ(த்தகைய)வர்கள் தாம் வரம்பு மீறியவர்களாவார்கள்.

இன்னும், அவர்கள் தங்கள் (இடம் ஒப்படைக்கப்பட்ட) அமானிதப் பொருட்களையும், தங்கள் வாக்குறுதிகளையும் காப்பாற்றுவார்கள்.

மேலும் அவர்கள் தம் தொழுகைகளை(க் குறித்த காலத்தில் முறையோடு) பேணுவார்கள்.

இத்தகையோர் தாம் (சுவர்க்கத்தின்) வாரிசுதாரர்கள்.

இவர்கள் ஃபிர்தவ்ஸ் (என்னும் சுவனபதியை) அனந்தரங் கொண்டு அதில் இவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள். (23:1-11)

இந்த இறை வசனங்களில் இடம் பெற்றிருக்கும் முக்கியமான விஷயங்கள் என்னென்ன?

வெற்றி, ஈமான், தொழுகை, உள்ளச்சம், ஸகாத், ”வீணானவை”, பாலியல், அமானத், வாக்குறுதி, சுவனம் - இவை தான்!

இவ்வசனங்களை நாம் இரண்டு கண்ணோட்டங்களில் வைத்து அணுகுவோம்.

ஒன்று: சமூக அளவில்; மற்றொன்று: குடும்ப அளவில்

முதலில் குடும்ப அளவில் வைத்து இவ்வசனங்களை ஆய்வோம்.

எங்கிருந்து துவங்கலாம்?

நான் “வீணானவை” என்பதிலிருந்து துவங்கிட விரும்புகிறேன்.

“இன்னும், அவர்கள் வீணானவற்றை விட்டு விலகியிருப்பார்கள்.”

வீணானவை என்பது எவற்றையெல்லாம் குறிக்கும்?

நமக்குப் பயனளிக்காத அனைத்தையும் குறிக்கும்!

இன்று மேற்குலகில் ஒரு விஷயம் மிக ஆழமாக விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப் பட்டிருக்கின்றது.

அந்த விஷயம் என்ன தெரியுமா?

அது தான் DISTRACTION! கவனச் சிதறல்!

இது எதனால் ஏற்படுகின்றது?

நமது கம்ப்யூட்டர் மற்றும் அது வழங்கும் இணைய தள வசதிகளால் ஒரு விதமான கவனச் சிதறலுக்கு நாம் ஆளாகி இருக்கின்றோம் என்கிறார்கள் வல்லுனர்கள்.

கம்ப்யூட்டரும், இணைய தள வசதியும் நமக்கு வழங்கி இருக்கின்ற வசதிகள் எதனையும் நாம் மறுத்திடவில்லை!

ஆனால் அதே நேரத்தில் – எந்த ஒரு பயனும் இல்லாமல் எந்த ஒரு குறிப்பிட்ட வேலைக்கு என்றில்லாமல் கம்ப்யூட்டருக்கு முன்னால் அமர்ந்து கொண்டு (இப்போது லேப்டாப், ஐபாட், ஐஃபோன் – இவையும் அடங்கும்) மணிக்கணக்கில் – உணர்வற்றுப் போய் – நேரத்தை நம்மில் பலர் வீணடித்துக் கொண்டிருக்கின்றோமே – இது ஏற்படுத்தியிருக்கும் நவீன நோய் தான் distraction – கவனச் சிதறல் என்கிறார்கள்.

அதனை நாம் நோய் என்று சொல்வதற்குக் காரணம் இருக்கின்றது.

சற்றே கவனமாக இதனைப் படியுங்கள்:

நமது மூளை இருக்கின்றதே – அது ஒரு அற்புதமான மனித உறுப்பு. அதன் அற்புதங்களில் இரண்டை மட்டும் இங்கே பார்ப்போம்.

ஒன்று:

மனிதனின் இதயமும் மனிதனின் மூளையும் – அவைகளின் இயல்பிலேயே மற்றவர்களுடன் நல்லுறவு வைத்துக் கொள்ளும் தன்மையைப் பெற்றிருக்கின்றன! அப்படித்தான் அவைகளை வடிவமைத்திருக்கின்றான் வல்லோன் அல்லாஹ்! ”we are wired to connect with others” என்கிறது neuroscience. அதாவது மூளை நரம்பியல்.

இரண்டு:

மனித மூளை – தனது மூளை நரம்புகளை (neurons) வைத்து பல நுணுக்கமான இணைப்புகளைத் தனக்குள் ஏற்படுத்திக் கொள்கின்றது.

சற்றே புரியுமாறு சொல்வோம். வீடு ஒன்றைக் கட்டுகின்றோம். அதில் மின் இணைப்புகளை நம் வசதிக்கு ஏற்றவாறு அமைத்துக் கொள்கிறோம். பின்னர் அந்த இணைப்புகளின் அமைப்பினை வைத்தே நமது வசதிக்கேற்றவாறு மின்சாரத்தை நாம் பயன்படுத்திக் கொள்கிறோம். அதுபோலத்தான் நமது மூளை நரம்புகள் தமக்குள்ளே ஏற்படுத்திக் கொள்ளும் இணைப்புகளும்.

அப்படியானால் நமது மூளையில் ஏற்படுத்தப்படும் அந்த நரம்பு இணைப்புகள் எதனை வைத்து அல்லது எவ்வாறு வடிவமைக்கப்படுகின்றன எனில் – ஒரு மனிதன் அவன் பார்க்கும் உலகம், அவனுக்கு ஏற்படும் அனுபவங்கள், அவனது சிந்தனை மற்றும் அவன் தேர்வு செய்கின்ற செயல்பாடுகள் (choices) – இவைகளை வைத்துத் தான்.

ஒரு தடவை ஒரு இணைப்பு ஏற்படுத்தப்பட்டால் – அவனுக்கு ஏற்படுகின்ற அதே போன்ற அனுபவங்கள் அல்லது சற்று ஆழமான அனுபவங்கள், அது அவனது மூளையில் ஏற்படுத்தும் தாக்கத்துக்குத் (impact) தகுந்தவாறு அவனது மூளையின் நினைவாற்றலில் பதிவு செய்யப்பட்டு – அதே போன்று அவன் சிந்திக்கவும் செயல்படவும் அந்த இணைப்பு அவனை வழி நடத்துகிறது. இது தொடரத் தொடர அந்த இணைப்பு வலிமை பெற்று விடுகின்றது! அந்த இணைப்பின் அடிப்படையிலேயே ஒருவன் தொடர்ந்து சிந்திக்கவும் செயல்படவும் செய்திடும்போது அதுவே அவனது பழக்கமாக மாறி விடுகின்றது. இதனைத் தான் habit formation என்கிறார்கள்.

அதே நேரத்தில் – மனித மூளை – அதனைப் பயன்படுத்தும் விதத்துக்குத் தகுந்தாற்போல் தன்னுடைய நரம்பியல் இணைப்புகளை நெகிழ்ச்சியுடன் (neural plasticity) மாற்றிக் கொள்ளும் தன்மையும் அதற்கு உண்டு!

இப்போது வலைதளங்களில் அளவுக்கு அதிகமாகத் தங்களின் கவனத்தையும் நேரத்தையும் செலவழிப்பவர்களின் நிலை என்ன என்று பார்ப்போம்.

பின் வரும் சொல்லாடல்கள் எல்லாம் வலைப்பிரியர்களுக்கு மிகவும் அத்துப்படியானவை: tweets, texts, notifications, blogs, shares, and tags….

இவ்வாறு தங்கள் முழுக் கவனத்தையும் வலையிலே தொலைத்து விட்டு நிற்கும் ஒரு மனிதனின் மூளை – தனது நரம்பியல் இணைப்புகளையே மாற்றிக் கொள்கிறதாம்! அதுவும் அதி விரைவாக! Our brain maps are rapidly changing!

இதன் தவிர்க்க முடியாத மாபெரும் விளைவு என்ன தெரியுமா?

செய்கின்ற ஒன்றையே திரும்பவும் திரும்பவும் செய்திடத் தூண்டுகின்ற ஒரு கெட்ட பழக்கம் (compulsion)

இயல்பான மனித வாழ்க்கையிலிருந்து திசை திரும்பி விடுதல் (distraction from mainstream life)

மாய வலைக்கு வெளியே, மற்றவர்களுடன் நாம் நேருக்கு நேர் நல்ல முறையில் பழகுவதற்குத் தேவைப்படும் அழகிய திறமைகள் (relationship skills) எல்லாம் அடிபட்டுப் போய்விடுதல்!

ஏனெனில் எந்த ஒன்றையும் குறித்து தெளிவாக சிந்திக்க இயலாத குழப்பமான மனநிலை (scattered thinking)

முடிவெடுக்கும் திறனில் தெளிவற்ற நிலை (difficulties in making good decisions)

ஆம்! நமக்கு பல்வேறு “வசதிகளை” அள்ளித்தந்த அதே வலை தான் இப்படிப்பட்ட பின் விளைவுகளையும் சேர்த்தே நமக்கு வழங்கியிருக்கின்றது!

இதனை இன்னும் சற்று ஆழமாகப் பார்ப்போம்.

எந்த ஒன்றையும் ஆழமாக சிந்திப்பதற்கு அமைதியான மனம் தேவை என்பது எப்படி ஒரு உண்மையோ அது போலவே நம்மைச் சுற்றியிருப்பவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்வதற்கும் அமைதியான மனநிலை ஒன்று அவசியம் தேவை!

ஆனால் அதீதமான மின்னணுத் தொடர்பு சாதனங்களைச் சார்ந்து தங்களை அதற்கு அடிமைப்படுத்திக் கொள்பவர்கள் – மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு தங்களின் உறவுகளை செம்மைப்படுத்திக் கொள்ளும் திறனை இழந்து கொண்டிருக்கின்றார்கள் – அவர்களை அறியாமலேயே!

Functional memory என்று ஒன்று சொல்வார்கள். இது என்னவென்றால் – குறிப்பிட்ட ஒரு செயலில் நாம் ஈடுபடும்போது அந்த உடனடிச் செயலைச் செய்வதற்கான நினைவாற்றலையே இது குறிக்கும். இது மிகவும் சிறப்பாகச் செயல்பட்டால் தான் – எந்த ஒரு செயலைச் செய்வதற்கும் தேவையான முழுமையான கவனமும் (attention), ஒருமுகப்படுத்தும் திறனும் (concentration) கைவரப் பெறும்.

இந்த உடனடி நினைவாற்றல் நமது மூளையின் எந்தப் பகுதியில் உள்ளது என்றால் நமது முன் நெற்றிக்கு சற்று உள்ளே உள்ள பகுதியில் தான். அதனை ஆங்கிலத்தில் pre-frontal lobe என்று சொல்வார்கள்.

வலை உலகத்தில் தம்மை மறந்து ஒரு மாய உலகத்தில் உலவிக்கொண்டிருப்பவர்களுக்கு இந்த உடனடி நினைவாற்றல் வெகுவாக பாதிப்படைந்து விடுகின்றது!

இதனால் ஏற்படுகின்ற மிகப்பெரும் நஷ்டம் – அவர்களால் மற்றவர்களுடன் நல்ல உறவை அமைத்துக் கொள்ளவே இயலாது என்பது தான்! இதன் பாதிப்பு குடும்பத்துக்குள்ளேயே எனில் கணவன் மனைவி உறவு என்னவாகும்?

சான்று ஒன்றுடன் விளக்குவோம்.

சற்று கற்பனை செய்து கொள்ளுங்கள். நீங்கள் எப்போது பார்த்தாலும் வலைதளத்துக்கு உள்ளேயே வாழ்ந்து கொண்டிருப்பவர் என்று வைத்துக் கொள்வோம். (மன்னியுங்கள்!)

உங்கள் மனைவி ஏதோ ஒன்றை (ஏங்க! வரும்போது குழந்தைக்கு “இது” வாங்கிட்டு வாங்க!) வாங்கி வரச் சொல்லியிருப்பார். அது “எது” என்று உங்கள் நினைவில் பதிந்தே இருக்காது! நீங்கள் தேமே என்று வந்து நிற்பீர்கள் வெறுங்கையுடன். வருமே கோபம் உங்கள் மனைவிக்கு!

இந்நிலை தொடர்ந்தால் கணவன் மனைவி உறவு என்னாகும்?

நாம் சொன்ன உதாரணம் நமக்குச் சாதரணமாகத் தோன்றலாம். அடிப்படையான விஷயத்தையே எடுத்துக் கொள்வோமே. கணவன் மனைவி பாலியலின் நிலைமை (sexual intimacy) என்னவாகும்? அடி வாங்கியிருக்கின்றது என்பது தான் அதிர்ச்சித் தகவல்!

மனைவி என்ன சொல்கிறாள் என்பதுவும் உங்கள் மூளையில் பதிவாகாது. நீங்கள் உங்கள் மனைவியுடன் என்ன பேசினீர்கள் என்பதுவும் உங்கள் நினைவில் தங்காது. தாம்பத்திய உறவுக்கும் கூட கவனக் குவிப்பு (excellent working memory) மிக மிக அவசியமாம்!

குழந்தைகளை பள்ளியிலிருந்து வீட்டுக்கு அழைத்து வந்து விடுங்கள் என்று சொல்வார் மனைவி. OK என்று மனைவியிடம் போனில் சொல்வார் கணவர். ஆனால் கவனம் இருந்திருக்காது. வீட்டுக்கு வந்து சேர்வார். குழந்தைகளின் நிலைமை? இது ஒரு சிறிய“வாக்குறுதி” (promise) தான்! இதனை கணவன் மறந்து விடும்போது கணவனின் சொற்களுக்கு என்ன மதிப்பு தருவாள் மனைவி? தன் மறதியை கணவன் நியாயப்படுத்தலாம். ஆனால் கணவன் தன் மனைவியின் “நம்பிக்கையை” (trust –அமானத்) இழந்து விடுவார்!

விளைவு? கணவன் மனைவியருக்குள் சண்டை சச்சரவு, வாக்குவாதம், அதிரடி விமர்சனங்கள், அவமானப்படுத்துதல், அமைதியாக ஒதுங்கிக் கொண்டு விடுதல்… இறுதியில் விவாக விலக்கு!

இவ்வளவு விளைவுகளுக்கும் அடிப்படைக் காரணம் வலை உலகம் நமக்களித்த distraction தான்!

இப்போது நாம் இறை வசனங்களுக்குச் செல்வோம்:

நாம் எடுத்துக் கொண்ட இறை வசனங்களில் இடம் பெற்றிருக்கும் முக்கியமான விஷயங்களை மீண்டும் நினைவுக்குக் கொண்டு வருவோம்.

அவை என்னென்ன?

வெற்றி, ஈமான், தொழுகை, உள்ளச்சம், “வீணானவை”, பாலியல், அமானத், வாக்குறுதி, சுவனம் – இவை தான்!

வெற்றியுடன் துவங்குகிறது இறைவசனம். வெற்றியை இறை நம்பிக்கையோடு சேர்த்துச் சொல்கிறான் வல்லோன் அல்லாஹ்!

ஈமான் தொழுகையுடன் இணைக்கப்படுகிறது.

தொழுகை உள்ளச்சத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த உள்ளச்சம் நமக்கு கவனக் குவிப்பை (concentration and mindfulness) வழங்குகிறது.

ஐந்து வேளை தொடர்ந்து தொழுபவர்கள் “வீணானவற்றில்” மூழ்கிட முடியாது.

அதாவது இறை நம்பிக்கையாளர்களை நவீன கால distraction – ஒன்றும் செய்து விட முடியாது.

தொழுகை தரும் கவனக் குவிப்பு – இறைநம்பிக்கையாளனின் தாம்பத்திய வாழ்க்கையைச் சிறப்பாக ஆக்கி விடுகின்றது. எனவே அவன் தன் திருமண பந்தத்தைத் தவிர்த்த வழிகளில் செல்வதில் இருந்து காக்கப்படுகின்றான்.

மனைவியிடம் தரும் வாக்குறுதிகளை அவை மிகச் சிறியதாக இருந்தாலும் தவறாது நிறைவேற்றுகிறான். மனைவி குளிர்ந்து போய் விடுகின்றாள். கணவன் எந்நேரத்திலும் தனக்காகவே இருக்கின்றான் என்று நம்புகிறாள்.

இது தான் உலகிலேயே அவர்களுக்குச் சுவர்க்கம்!

இவர்களே சுவனத்தின் வாரிசுதாரர்கள்!

சகோதரர்களைக் கேட்டுக் கொள்வது:

1. நீங்கள் வலைதளங்களில் மூழ்கிக் கிடக்கின்றீர்களா?

2. உங்கள் மனைவி உங்களுடன் அடிக்கடி வாக்குவாதங்களில் ஈடுபடுகின்றாரா?

3. உங்களுடைய தாம்பத்திய வாழ்வில் தொய்வு ஏற்பட்டிருக்கின்றதா?

இவை எல்லாவற்றுக்கும் உங்கள் பதில் “ஆம்!” எனில் – நீங்கள் மாறிட வேண்டிய தருணம் இப்போதே தான்!

நபிமொழி ஒன்றைக் கொண்டு நிறைவு செய்வோம்:

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ‘விடைபெறும் ஹஜ்’ஜின்போது ஆற்றிய பேருரையில், “பெண்கள் விஷயத்தில் அல்லாஹ்வை அஞ்சி நடந்துகொள்ளுங்கள். அல்லாஹ்விடம் உடன்படிக்கை செய்தே அவர்களைக் கரம் பிடித்துள்ளீர்கள்; அல்லாஹ்வின் ஆணையின்பேரிலேயே அவர்களின் கற்புக்கு உரிமை பெற்றுள்ளீர்கள்” என்று கூறினார்கள். (அபூதாவூத், இப்னு மாஜா)