Sunday, October 12, 2025

இஸ்லாத்தின் பெண்களின் நிலை!

 இஸ்லாம் ஓர் அழகியல் மார்க்கம்! “இஹ்ஸான்” - என்பது இஸ்லாத்தின் அடித்தளத்தில் இருந்து கட்டி எழுப்பப்படும் ஓர் அழகியல் கோட்பாடு! CONCEPT OF BEAUTY!

இஸ்லாத்தின் எந்தப் பகுதியை எடுத்துக் கொண்டாலும் - எந்த பாடத்தைப் படித்துப் பார்த்தாலும் - அங்கே அழகியலை நாம் காணலாம்!
பேச்சு வார்த்தையில் அழகு; பெற்றோர்களிடம் அழகு; மனித உறவுகளில் அழகு; தர்மம் செய்வதில் அழகு; நீதி செலுத்துவதில் அழகு; கோப உணர்வை அடக்கி வைப்பதிலும் அழகு; பிறரை மன்னிப்பதில் அழகு; கணவன் மனைவி உறவில் அழகு; கொடுக்கல் வாங்கலில் அழகு; வணிகத்தில் அழகு; சமூக உறவில் அழகு - என்று வாழ்க்கையின் எல்லா மட்டங்களிலும் இஸ்லாத்தின் அழகியல் கோட்பாடு மிக விரிவானது!
உண்பது முதல் உறங்குவது வரை - அண்டை வீட்டார் உறவு முதல் அகில உலக அரசியல் வரை - இஹ்ஸான் எனும் அழகியல் கோட்பாட்டை மிக விரிவாகவும், மிக ஆழமாகவும் தன்னகத்தே கொண்ட - ஓர் அழகியல் (RELIGION OF BEAUTY) மார்க்கத்தை - 1500 ஆண்டு கால நாகரிகத்துக்குச் சொந்தமான நமது மார்க்கத்தை - ஓர் அழகற்ற மார்க்கமாக, “அசிங்கமான” (UGLINESS) மார்க்கமாகக் கெடுத்து வைத்திருப்பது தான் வஹ்ஹாபியிஸம் என்று விமர்சிக்கிறார் ஷெய்ஃக் காலித் அபூ அல் ஃபள்ல் அவர்கள்!
அவர்கள் எழுதிய நூல்களுள் ஒன்று தான்: THE GREAT THEFT
இன்றைய சூழ்நிலையில் - நம்மில் ஒரு சிலராவது அவசியம் படித்திட வேண்டிய நூல் இது!

***

இஸ்லாமிய வெறுப்பாளர்கள் - இஸ்லாத்தைத் தாக்குவதற்கென்று - மிக அதிகமாக கவனம் எடுத்துக் கொள்கின்ற ஒரு பகுதி தான் - இஸ்லாத்தில் பெண்கள் நிலை!
அவர்களுக்கு மிக அழகிய முறையில் - இஸ்லாத்தில் பெண்களின் அந்தஸ்து - குறித்து எடுத்துச் சொல்வதற்கும், பொதுவாக மற்றவர்களிடம் நாம் கலந்துரையாடுவதற்கும், நம்மை நாம் தயார்படுத்திக் கொண்டிட வேண்டிய சூழலில் தான் நாம் இருக்கின்றோம்.
இது குறித்த ஆய்வுகளுக்கான நம்முடைய தயாரிப்புகள் என்னென்ன?
நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் சீரத் - வாழ்க்கை வரலாற்றில் - நபியவர்களின் வருகைக்கு முன்னர் - பெண்களின் நிலை குறித்த ஆய்வு.
மக்காவில் வைத்து நபி (ஸல்) அவர்களுக்கு இறக்கியருளப்பட்ட இறைமறை வசனங்களில் பெண்களின் நிலை குறித்து - அல் குர்ஆன் கூறுவது பற்றிய தெளிவு.
அதே போல மதினாவில் வைத்து - இறக்கியருளப்பட்ட இறைமறை அத்தியாயங்களின் அடிப்படையில் - இஸ்லாமிய சமூக அமைப்பில் - பெண்களின் அந்தஸ்து - படிப்படியாக எவ்வாறு உயர்த்தப்பட்டது என்பது குறித்த ஆய்வு.
இஸ்லாமிய நாகரிக வரலாற்றில் - ஆணாதிக்கத்தின் தாக்கம் பற்றியும், அதே வேளையில் திறன் மிக்க முஸ்லிம் பெண்மணிகளின் பங்களிப்பு குறித்த ஆய்வுகளையும் படித்துத் தெளிதல்.
வஹ்ஹாபியிஸம் பெண்களை - எவ்வாறு மிகத் தவறாகச் சித்தரித்துக் காட்டுகிறது என்பது குறித்தும், அவர்கள் அள்ளிக் கொட்டுகின்ற குளறுபடியான மார்க்கத் தீர்ப்புகள் குறித்தும் - இவை குறித்து இன்ன பிற மார்க்க அறிஞர்கள் கூறுவதென்ன என்பனவற்றையும் படித்துத் தெளிதல்.
இதனைத் தொடர்ந்து - இன்றைய இளம் முஸ்லிம் பெண்மணிகளுக்கு - இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியுள்ள கண்ணியம், உரிமைகள், குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சி செய்தல்.
பின்னர் - இஸ்லாமிய வெறுப்பாளர்களின் வெறுப்புக் கருத்துகளுக்கு அழகிய முறையில் பதிலளிப்பது எப்படி என்ற தயாரிப்பில் ஈடுபடுதல்.
இந்தத் திசையில் - துவக்கமாக நான் பரிந்துரைக்கும் நூல் தான் - ஷெய்ஃக் காலித் அபூ அல் ஃபள்ல் அவர்கள் எழுதிய - THE GREAT THEFT - எனும் நூல் ஆகும். இந்த நூலின் அத்தியாயங்களுள் ஒன்று தான்: THE NATURE AND ROLE OF WOMEN.
படிப்போம்.

***
இஸ்லாத்தில் பெண்களின் நிலை என்ன என்பதை ஆய்வு செய்வதற்கு முன்னர் - நபியவர்களின் இறைத்தூதுவக் காலத்துக்கு முன் அந்த அரபுலகத்தில் பெண்களின் நிலை எப்படியிருந்தது என்று ஆய்வு அவசியம்.
அந்தக்காலத்து பெண்களின் நிலையை உள்ளபடியே நாம் புரிந்து கொண்டால் தான் - இஸ்லாம் - பெண்களுக்கு அளித்த உயர்வை,கண்ணியத்தை, உரிமைகளை நாம் புரிந்து கொள்ள முடியும். அது எப்படிப்பட்ட “மாற்றம்” என்பதனையும் நாம் உணர்ந்து கொள்ளவும் முடியும்!
இது குறித்து இங்கே விரிவாக எதுவும் நான் எழுதப் போவதில்லை! ஒன்றே ஒன்றைத் தவிர!
அது என்ன? ஷெய்ஃக் காலித் அபூ அல் ஃபள்ல் அவர்கள் தனது சீரா உரையிலே ஒன்றைச் சொல்கிறார்கள்:
நபியவர்களின் இறைத்தூதுத்துவத்துக்கு முன்னரான காலப்பகுதியில் பலம் மிக்க ஒரு சில குலத்தவர்கள் - பலம் குறைந்த குல மக்களை (RAID) எதிர்த்துத் தாக்குவார்களாம். அவர்கள் பலம் குறைந்தவர்கள் என்பதுவன்றி வேறு எந்த காரணத்துக்காகுவும் தாக்கப் படுவதில்லை!
பொருள்களைக் கவர்ந்து கொள்வார்கள். ஆண்களை அடிமைப்படுத்தி அழைத்து வந்து விடுவார்கள். பெண்களையும் தள்ளிக்கொண்டு வந்து விடுவார்களாம்.
அந்த அடிமை ஆண்களை (மவ்லா) மற்றவர்களுக்கு பணி செய்திட அனுப்பி, அதில் கிடைக்கும் பொருளாதாரத்தைச் சுருட்டிக் கொள்வது!
அந்த அடிமைப் பெண்களை விபச்சாரத்துக்குத் தள்ளி, அதில் கிடைக்கும் வருமானத்தையும் அனுபவித்துக் கொள்வது!
எங்கே தம் பெண்மக்கள் கவர்ந்து செல்லப்பட்டு விபச்சாரத்தில் தள்ளப்பட்டு விடுவார்களோ என்று அஞ்சி - தம் குலத்தின் மானத்தைக் காத்துக் கொள்வதற்காகவே - பலம் குறைந்த குலத்தைச் சேர்ந்தவர்கள் தம் பெண் குழந்தைகளைக் கொன்று விடும் பழக்கம் - ஏற்பட்டு விட்டதாம்!
அன்றைய பெண்களின் நிலையை அறிந்து கொள்ள சீரத்தில் காணப்படும் இந்த ஒரு சான்று இப்போதைக்குப் போதும்…
இப்படிப்பட்டதொரு மோசமான கால கட்டத்தைத் தான் தனது இறுதி நபியை அனுப்பிடத் தேர்வு செய்கின்றான் இறைவன்!

இன்ஷா அல்லாஹ் தொடர்வோம்!

Tuesday, October 7, 2025

திருமணச் சிக்கல்கள் - தீர்வுகள்!

அக்டோபர் 07, 2025  


மாமியார் கொடுமை என்றால் அது எப்படியிருக்கும் என்று எனக்கு 12 வயதிலேயே தெரியும். அதனைக் கண்ணால் கண்டவன் நான். ஆனால் அந்தக் கொடுமைகள் - ஒரு ஐம்பதுக்கும் மேலான ஆண்டுகளுக்குப் பிறகு இன்றும் தொடர்வதை வேதனையுடன் கவனித்து வருகிறேன். 


அது போல - கணவன்-மனைவியர் இல்லற வாழ்விலும் ஏகப்பட்ட சிக்கல்கள். புரிந்துணர்வு என்பது மிகவும் குறைவே. பொதுவாக நற்பண்புகள் (akhlaq) குறித்தே என் முழுக் கவனத்தையும் செலுத்தி வந்து கொண்டிருந்த நான் - திருமண வாழ்வில்  நற்குணங்களைக் கடைபிடிப்பதில் நாம் ஏன் அலட்சியமாக இருகின்றோம் என்றும் சிந்தித்து வந்திருக்கின்றேன். 


மேலும் - நம் சமூகத்தில் நிலவுகின்ற விவாகரத்து குறித்த அணுகுமுறைகளையும் கவலையுடன் கவனித்துக் கொண்டு தான் வருகின்றேன். விவாக விலக்கு பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறதே தவிர - அதனைக் குறைக்கும் வழிதான் ஏனோ புலப்படவில்லை!  


நூல்கள் வாயிலாகவும், இணைய தளங்கள் வாயிலாகவும் - ஆன்மிக ரீதியான, உளவியல் ரீதியான (psycho-spiritual) இஸ்லாமிய வழிகாட்டுதல்களைத் தொடர்ந்து அறிந்து கொள்வதில் ஆர்வம் செலுத்தியிருக்கிறேன். மிகச் சிறந்த மார்க்க அறிஞர்கள் மற்றும் இஸ்லாமிய உளவியல் ஆய்வாளர்களின் கருத்துக்களையெல்லாம் சேகரித்து உள்வாங்கியிருக்கின்றேன்.  


திருமணத்துக்கு முன்னும் பின்னும் தேவைப்படுகின்ற வழிகாட்டுதல்கள் குறித்து சொற்பொழிவாற்றியிருக்கின்றேன். வகுப்புகள் நடத்தியிருக்கின்றேன். பயிலரங்கங்கள் நடத்தியிருக்கின்றேன். பல கட்டுரைகள் எழுதியிருக்கின்றேன். தனிப்பட்ட முறையில் பலருக்கு திருமண ஆலோசனைகளும் வழங்கியிருக்கின்றேன். 


ஆனாலும் - எனது அணுகுமுறையில் - எனக்கு திருப்தி ஏற்பட்டதே இல்லை! குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய அளவுக்கு எந்த ஒரு மாற்றத்தையும் என்னால்  ஏற்படுத்திட இயலவில்லை! 


ஆனால் அதற்கான காரணம் என்னவென்று புரிந்தது - ஒரு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தான்…..


தொடர்ந்து பேசுவோம்.